அருகிலேயே கார் இருப்பதை காட்ட அதனை புக் செய்துவிட்டு கோவிலின் வாசலுக்கு வந்தவன் தேன்மொழியின் கையில் இருந்த பூவை பார்த்துவிட்டு,
“ஏன் கையிலையே வச்சிட்டு இருக்க மொழி? தலையில வைக்கலைன்னா ஒன்னும் பிரச்சனை இல்லை. இங்க ஏதாவது இடத்துல வச்சிடு. கீழே போட்டுடாத…” என சொல்லவும் பத்மாவை பார்த்தவள் இன்னும் தயக்கத்துடன் இருக்க,
“நான் வச்சுவிடவா தேனு?…” என்றார் அவர்.
“அட என்னத்துக்கு இப்பவே போட்டு சங்கட்டப்படுத்திட்டு? அதுவே வெசனத்தோட நிக்குது. விடுங்க…” என்ற தெய்வா,
“ஏன்ய்யா இப்ப அது கையில வச்சிருந்தா உனக்கு என்னவாம்? நீயா சொமக்கற?…” என ஜீவனையும் வாரிவிட,
“சரித்தேன். நீ ஒருத்தி போதும்த்தா…” என்றான் அவரை.
தாயும் மகனும் பேசுவதை சிரிப்புடன் பார்த்தபடி இருந்தவர்களுக்கு பார்க்க நிறைவாக இருந்தது.
பார்ப்பதிலேயே தெரிந்தது அவர்களின் வெளிப்படையான பேச்சும், பாசாங்கில்லாத நடத்தையும். இப்படிப்பட்ட குடும்பத்தை என்னவென்று அப்பெண் பழி சொல்லி அசிங்கப்படுத்தியதோ? என நினைத்தனர்.
“ஓகே அங்கிள். இன்னொரு நாள் பார்க்கலாம். என் நம்பர் மொழிட்ட குடுத்திருக்கேன். எப்போ வேணும்னாலும் பேசலாம்…” என ஜீவன் சொல்ல தேன்மொழி அமைதியாக நின்றாள்.
அவளிடம் பேச விரும்பியவன் பின் ஒன்றும் சொல்லாமல் இருந்துகொண்டான். தெய்வாவிடமும் சொல்லிக்கொண்டு அவர்கள் ஆட்டோவில் கிளம்ப மெதுவாய் திரும்பி பார்த்து தலையசைத்தவளிடம் போன் செய்வதாய் சைகையில் காண்பித்தான்.
“போதும்டா, அந்த பொண்ணு என்னமோ உம்முன்னே இருக்குது. என்னன்னு தெரியலை. இதுல நீ வேற….” என்று தங்களுக்கு வந்துவிட்ட காரில் ஏறியபடி தெய்வா சொல்ல,
“ம்மா, முதல்லையே அவ எனக்கு ப்ரெண்ட்ம்மா. பேசாம எப்படி இருக்க?…”
“இனி அவ உனக்கு பொண்டாட்டி. அப்படி பாரு…” என்றதற்கு சிரித்தவன்,
“சரி அதை விடுங்க. நான் வீட்டுக்கு போனதும் ஹாஸ்பிட்டல் கிளம்பிடுவேன். சாப்பிட்டு பேசாம ரெஸ்ட் எடு. நாளைக்கு தான ஊருக்கு. ஊருக்கு கிளம்பறேன்னு ஒரு மாசத்துக்கும் சேர்த்து எதையாச்சும் செஞ்சு வைச்சுட்டு இருக்காத. இட்லி தோசைக்கு பொடி மட்டும் போதும். விளங்குச்சா?…” என்றான் கறாராக.
அவன் சொல்லியதை காதில் வாங்காதது போலவே தெய்வா வெளியில் வேடிக்கை பார்த்தபடி வந்தார்.
“தாய்க்கிழவி ஏத்தம்த்தா உனக்கு. ரொம்ப பண்ணாத…” என அவனும் சொல்ல,
“போடா டேய்…” என்றார் தெய்வா.
“ம்மா, மொழி பத்தி சொல்றியா? என்ன ஆச்சு? அவ பெத்தவங்க கூட இல்ல. அவக்கிட்ட கேட்டா பொசுக்குன்னு கண்ணீரோட நிக்கறா. கஷ்டமா போச்சு…”
“பெத்தவங்க ஒரு விபத்துல போய்ட்டாங்க போல. சரின்னு அவ பெரியப்பா கூட்டிட்டு வந்து வச்சிருந்திருக்காரு. அந்த புள்ளயோட அம்மா வழி சொந்தமெல்லாம் காசுக்காக கூட்டிட்டு போயி வீட்டு வேலைக்கு ஆக்கிட்டீங்கன்னு பேச ரோசப்பட்டு ஒருத்தன் கையில புடிச்சு குடுத்து அவனும் பத்துநாளு ஆவமுன்ன போய் சேர்ந்துட்டான். அடுத்தடுத்து இழப்பு அலமலந்து போச்சு புள்ள…”
தெய்வா சொல்லியதை ஜீரணிக்கவே வெகு நேரம் ஆனது ஜீவனுக்கு. மனத்திற்குள் அவளின் பழைய முகமும் புன்னகையும், அப்பாவி களையும் வந்துபோக வேதனையுடன் அதனை கடந்தான்.
அதன் பின்னர் வீட்டுக்கு வந்து உடை மாற்றி தனது பைக்கில் ஹாஸ்பிட்டல் சென்றவன் அன்றைய வேலைகளை முடித்து சற்று ஓய்வெடுக்கும் நேரம் மொபைலில் தேன்மொழிக்கு அழைத்தான்.
இரண்டு அழைப்பிற்கு எடுக்காமல் போக அவளுக்கு ஒரு மெசேஜ் செய்தவன் மீண்டும் அழைக்கவும் அதன் பின்னரே அவள் எடுத்து பேசினாள்.
“என்ன மொழி, கால் பண்ணினேன். வேலையா இருந்தியா?…” என கேட்க,
“இல்லை, ஆமா. சொல்லுங்க…” என விட்டு விட்டு மாற்றி பேச,
“மொழி…”
“என்ன சொல்லனும்னு சொல்லுங்க. நான் போகனும்…” என்றாள் அவசரமாக.
“வேலை இருந்தா நீ முடிச்சுட்டு மெசேஜ் பண்ணு. நைட் கூப்பிடறேன்…” என்று வைக்க போக,
“இல்லை இல்லை. அதெல்லாம் வேண்டாம். இப்பவே சொல்லிருங்க. நைட்ல வேண்டாம்…” என்றாள் லேசான பதற்றத்துடன்.
“ஏன்? என்ன ஆச்சு?…” இவனின் கேள்வியின் தன்மையில் தேன்மொழிக்கு தான் வியர்த்தது.
“ஒன்னும் இல்லை. சும்மா தான்…” என்றவள் பின்,
“பாஸ், கல்யாணம் ஆகட்டுமே. இப்ப இப்படி பேசறது எல்லாம்…”
“தப்புன்னு சொல்ல வரியா நீ?…” குரலில் கடுமை ஏறி இருந்தது.
அவளறிந்த ஜீவன் கோபப்படுபவன் அல்லவே. எப்பொழுதும் புன்னகை முகமும், நேர்மறையான எண்ணங்களும் நிறைந்திருப்பவன்.
“பாஸ்…”
“நம்மளோடது செகெண்ட் மேரேஜ் தான். ஆனா அதுவும் மேரேஜ் தான் மொழி. நீ பயந்து பேசறதும், என்னை பேச வேண்டாம்னு சொல்றதும் என்னை வேற மாதிரி தின்க் பண்ண வைக்குது…” என்று சொல்லிவிட உடைந்து போனாள் அவள்.
“இன்னைக்கு தான் பார்த்தோம். உன்கிட்ட நார்மலா பேச கூட முடியலை…” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்க,
“தேனு, என்ன பன்ற?…” என யாரோ அவளை அழைக்கும் குரல் கேட்க,
“போன் அண்ணா…” என்றாள் அவள்.
ஜீவாவின் காதுகள் கூர்மையாகின. தேன்மொழியின் குரலில் அத்தனை நடுக்கம். பயமும் கூட. இது எதற்கென அவனுக்கு விளங்கவே இல்லை. மொபைல் கை மாறியிருக்க,
“ஹலோ நான் தியாகு பேசறேன்…” என்றான் தேன்மொழியின் அண்ணன். அதை எதிர்பார்க்காத ஜீவன் ஒரு கணம் தடுமாறி பின்,
“ஹாய் தியாகு, நான் ஜீவன். எப்படி இருக்கீங்க?…” என நலம் விசாரிக்க,
“ஹ்ம்ம், நல்லா தான் இருக்கோம். இங்க பாருங்க. அப்பா எல்லாம் சொன்னாங்க. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்குது. அதுக்குள்ள இப்படி போன்ல பேசறது…”
“மிஸ்டர் தியாகு, நான் தேன்மொழி ப்ரெண்ட். நாங்க ஏற்கனவே அறிமுகமானவங்க தானே…” ஜீவன் அவனுக்கு விளக்கம் தர முற்பட,
“இருக்கட்டும்ங்க. இப்போதைக்கு பேச வேண்டாம். கல்யாணம் முடியட்டும். உங்களை யாரும் கேட்க போறதில்லை…” என்று சொல்லி வைத்துவிட திகைப்புடன் அமர்ந்திருந்தான் ஜீவன்.
ஏதோ ஒரு வகையில் தியாகுவிற்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று தோன்ற ஆரம்பித்தது.
தேன்மொழியின் பயமும், தயக்கமும் கூட இதனால் தான் என்று இருக்கலாம் என நினைத்துக்கொண்டவன் அதன் பின்னர் அவளுக்கு அழைக்க முற்படவே இல்லை.
‘நான் என்னமோ வழிஞ்சுட்டு பேசறதுக்கு கூப்பிட்ட மாதிரி? நான் என்னை விடலைப்பையனா? தெரிஞ்ச பொண்ணுன்னு ரெண்டு வார்த்தை பேச நினைச்சது ஒரு தப்பா?’ மனம் எரிச்சலில் மிதந்தது.
ஆனால் நினைவுகள் அவளை சுற்றியே வந்தது. ஆச்சர்யமாகவும் கூட இருந்தது அவனுக்கு.
“என்னையெல்லாம் உங்களுக்கு புடிக்குமா? சும்மா சொல்லாதீங்க…” என சலுகையுடன் அவனிடம் சண்டைக்கு நின்றாள் தேன்மொழி.
“சத்தியமா உன்னை புடிக்கும் தூதர்ஷன். உன் தலையில அடிச்சு சத்தியம் செய்யவா?…” என சிரிப்புடன் அவளின் கையில் அடித்து சத்தியம் செய்ய,
“பொய்யி, வர்ஷாக்கா குடுத்த கிப்டை குடுக்க வந்தப்போ நீங்க அது நான் குடுக்க கொண்டுவந்ததுன்னு தான பர்ஸ்ட் நினைச்சீங்க?…” என பாயின்ட்டாக சொல்ல,
“எஸ், அது ஒரு கன்ப்யூஷன்ல. நீ சின்ன பொண்ணு, என்னடா இதுன்னு தோணுச்சு. மத்தபடி நீ ஸ்வீட் கேர்ள்…” அவளை சமாதானம் செய்யும் விதமாய் இவன் பேச,
“உங்களுக்கும் நான் பஃபூன் தான் பாஸ்…” என்றாள் மூக்கை சுருக்கியபடி தன்னை குனிந்து பார்த்துக்கொண்டு. அவளின் முகபாவனையே அத்தனை ரசனையாக இருந்தது.
“ஒரு ரகசியம் சொல்லவா? வர்ஷா எனக்கு ப்ரப்போஸ் பண்ணலைன்னா கண்டிப்பா நான் உன்னை தான் ப்ரப்போஸ் பண்ணியிருப்பேன்…” என்று அவளின் காதில் மெதுவாய் சொல்ல,
“இது தான் இருக்கறதுலையே பெரிய பொய்யி, பொய்யி. சும்மா எல்லாம் சொல்லாதீங்க பாஸ். எனக்கே தெரியும் நீங்க வர்ஷாக்காவுக்கு தான்…” என அவனின் கையில் கிள்ளி வைக்க,
“அட நம்புடா மொழி. உன்னை மாதிரி பொண்ணெல்லாம் அவ்வளவு ஈஸி இல்லை. எனக்கு லக் இல்லை போல. அடுத்த ஜென்மத்துல வேணா எனக்கு இன்னொரு சான்ஸ் கிடைக்கும்…” என்று அவளுடன் இணைந்து சிரித்த அந்த நாட்கள் இப்பொழுதும் கண்களை நிறைத்தது.
“நீ என்கிட்டே கேட்டப்போ தேவதைகள் தாதஸ்தூ சொல்லிட்டாங்க போல மொழி. அதான் நடந்திருக்குது. இந்த ஜென்மத்திலையே…” என சொல்லிக்கொண்டவன் மனமோ அவளின் இறந்த காலத்திற்காக பெரிதும் வருந்தியது.
‘கடைசியில இன்னைக்கு காலையில பாடின பாட்டு தான் பலிச்சிருக்குது’ என நினைத்து சிரித்துக்கொண்டான்.
ஜீவன் இந்த வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொள்ள தயாராகிவிட்டான். எப்படி நடந்ததை மாற்ற முடியாதோ அதே போல இதுதான் நடக்கும் என்பதையும் மாற்ற முடியாதே?
அவனின் மனதில் எந்தவித குழப்பமும் இல்லை. தெளிவாகவே இருந்தான். எப்படியும் தனக்கு திருமணம். பெண் தெரிந்தவள். அது ஒன்றே அவனின் ஆறுதல்.
“லவ் பண்ண தெரியலை. குடும்பம் நடத்த தெரியலை. ப்ரெண்ட்லி அப்ரோச் தான் வாய்க்குமோ? என்னவோ போடா ஜீவா. உனக்கும் கடலைக்கும் ராசியே இல்லை. மச்சான் கூட வகைதொகையா பேச குடுத்து வைக்கலை. அம்புட்டுத்தான்…” என தலையை கோதியபடி மொபைலில் தன்னுருவத்தை பார்த்து சொல்லிக்கொண்டான் ஜீவன்.
அடுத்து வேலை இழுத்துக்கொள்ள இதை நினைக்க முடியாமல் அதில் மூழ்கி போனான்.
மறுநாள் தெய்வா கிளம்பிவிட அக்காவிற்கு அழைத்து அவரை கவனித்துக்கொள்ளும்படி பேசிவிட்டு தேன்மொழியை பார்த்ததை பற்றியும் பேச,
“தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்ற. எனக்கு என்னமோ சுருக்குன்னு இருக்குதுடா தம்பி…” என்றாள் அகல்யா. ஜீவனின் அக்கா.
“மொழி ரொம்ப நல்ல பொண்ணுக்கா…”
“ஆனாலும் உனக்கு ஏத்த பொண்ணா தெரியலை. பொண்ணு கிடைக்கலையேன்னு கிடைச்ச பொண்ணை உன் தலையில கட்டுறதா நினைச்சிட கூடாதுல நீ. நிறம் மட்டுதேன். ஆனா நல்ல பொண்ணுன்னு நமக்கு தாக்கல் சொன்னவங்க பேசினாங்க. அவங்க சொன்னா சரியாத்தேன் இருக்கும்…”
“எனக்கே தெரியும் மொழி எப்படிப்பட்ட பொண்ணுன்னு. நீ சொல்லனும்னு இல்லை. ஆனா பாரு இப்படிலாம் வெசனத்த கட்டாதக்கா. எனக்கு தெரியாதா நீ என்ன நினைப்பன்னு? நிறத்துல என்ன இருக்குது?…”
“ஹ்ம்ம், நிறத்துல என்ன இருக்குது. பாக்க பளீருன்னு இருக்கற வெளிச்சம் கூட கண்ணை அவிச்சிடும் சில நேரத்துல…” என அகல்யா பேச அவரின் பேச்சு போகும் திசையை புரிந்தவன்,
“அகலு, என்ன பேசற நீ? மாமானுக்கு தெரிஞ்சா உனக்கு உன் தம்பி தான் முக்கியம்னு மூஞ்சியை தூக்கி வச்சுக்க போறாரு…” என்று அதட்டியவன்,
“அம்மா இங்க தான் கல்யாணத்தை வைக்கனும்னு சொல்லிருக்காங்க. மாமா வீட்டுல இதை பத்தி அம்மா பேசுவாங்க. நீ பாட்டுக்கு தனியா அனுப்பிடாத. கூட போ. அம்மாவை எதாச்சும் பேசினா உடனே எனக்கு போனை போடு. நான் பேசிக்கறேன்…”
“அடேய் உடனே கால்ல சலங்கையை கட்டிட்டு நிக்காத. எல்லாம் நானும் மாமாவும் பார்த்துக்கறோம்…” என அகல்யா அவனை அடக்கி வைக்க,
“பத்திரிக்கை எதுவும் அடிக்க வேண்டாம். சும்மா பாக்கு வெத்தலை வச்சு அழைச்சா போதும். கண்டிப்பா எல்லாரும் வரமாட்டாங்க…”
“நீ அங்க இருந்தே முடிவு பண்ணுவியா ஜீவா? வந்தாலும் சரி, வரலைனாலும் சரி செய்யறதை அம்மா செய்யத்தான் செய்யும்…” என்றவளை மறுக்கமுடியாமல் அமைதியாக இருந்தான்.
“சரி ப்ரெண்டுன்னு சொன்னியே பேசினியா நீ அந்த புள்ளைட்ட?…”
“அண்ணன்காரன் கேட் போடறான். என்னத்த பேச?…” என சலித்துக்கொள்ள,
“சரி நம்பரை அனுப்பிவிடு. நான் பேசறேன். அப்படியே அவங்க வீட்டையும் தெரிஞ்சுக்கிட்ட மாதிரி ஆவும்ல…” என்று அகல்யா சொல்ல,
“இப்பவே அனுப்பறேன்…” என்றவன்,
“இங்க பாருக்கா, அவ மனசுல எதையோ நினைச்சு மருவிட்டு இருக்கா. நீபாட்டுக்கு லொடலொடன்னு என்னத்தையாச்சும் மூக்கை நீட்டிடாம அடக்கிவாசி…”
“எல்லாம் தெரியும். உன் சோலிய பாரு…” என சொல்லி அகல்யா வைத்துவிட,
“டாக்டர் உங்களை பிரஷாந்த் ஸார் வர சொன்னாங்க…” என நர்ஸ் வந்து சொல்ல,
“யாஃப், கமிங்…” என்று எழுந்து சென்றான் ஜீவன்.