புன்னகை – 20
மறுநாள் பஸ் ஸ்டாப்பிற்கு வந்த தேன்மொழி வழக்கம் போல நாயர்கடையில் டீ வாங்கி குடித்தபடி பார்வையை சுழற்ற அங்கே ஜீவன் நிற்பதை கண்டதும் வேகமாய் கை அசைத்தாள்.
அப்போதுதான் அவளை அவனும் பார்த்திருக்க திடீரென தேன்மொழி கை ஆட்டியதும் ஒரு நொடி என்ன செய்வதென திகைத்தவன் அறிமுகமாய் ஒரு புன்னகையை சிந்த,
“டீ வேணுமா?…” என அங்கிருந்தே வாயசைத்து சைகையில் கேட்க சிரிப்பாய் வந்தது ஜீவனுக்கு.
“வேண்டாம்…” என அவனும் அவளை போலவே சொல்ல தேன்மொழியும் ஒவ்வொன்றாய் காண்பித்து கேட்க கேட்க சளைக்காமல் ஜீவனும் பதில் தர இதை பார்த்த மதிவாணன்,
“ஒன்னும் சரியில்ல. என்னடா நடக்குது இங்க?…” என ஜீவனை கேலி செய்தான்.
“அடி வாங்க போற நீ. அது சின்ன பொண்ணுடா. புரியாம பண்ணுது…”
“பார்க்கறவனுங்க அப்படி நினைக்க மாட்டானுங்களே. பாரேன், யாராச்சும் எதாச்சும் பேசுவாங்கலேன்ற அச்சமில்லாம மொக்கு மொக்குன்னு வடையை மொக்கறத…”
“வேணும்னா நீயும் போய் வாங்கி சாப்பிடறது. இதுக்கு பேரு அச்சமில்லாம இல்லை. கல்மிஷம் இல்லாம. எனக்கு அப்படித்தான் தோணுது. இத்தனை நாசூக்கு பார்க்கற பொண்ணுங்களுக்கு மத்தில இவ டிபரண்ட்…” என்றவன்,
“நேத்து கூட பேர் என்னவோ சொன்னாளே?…” என நெற்றியை ஒற்றை விரலால் நீவியபடி யோசித்து,
“ஆங், தேன்மொழி. மொழி. நல்லா இருக்குல. வாய்ஸ் கூட குட்டி பசங்க பேசற மாதிரி…” என ஜீவன் சொல்ல,
“இம்புட்டு நோட் பண்ணிருக்கியா நீ?…” என்ற மதியின் கேலியில்,
“ஏன் நோட் பண்ணாம? பஸ்லயோ, பைக்லையோ போகும் போது சிக்னல்ல நிக்கற அந்த சில நொடிகள்ல அக்கம்பக்கத்துல எதாச்சும் குட்டி குழந்தைங்க பலூனை வச்சுட்டு பொக்கை வாய் நிறைய சிரிப்போட நம்மளை பார்த்தா ஒரு பீல் வருமே. நம்மை அறியாமலே நம்ம முகத்துலையும் ஒரு ரசனை, ஒரு ஸ்மைல் வரும். எனக்கு மொழியை பார்க்கும் போது அப்படித்தான் தெரியறா…”
“போதும்டா, தாராளமா பாரு. ரசி. சைகைல பேசு. யார் வேண்டாம்ன்னா. அதுக்குன்னு இவ்வளவு பொழிய வேண்டாம் நீ. டாக்டருக்கு படிக்கிற மாதிரியா பேசற?…”
“இப்ப என்ன உனக்கு டாக்டருக்கு படிக்கிற மாதிரி பேசனுமா? காய்ச்சல் வந்தவனுக்கு பாராசிட்டமால் மாத்திரை போட்டா அந்த காய்ச்சல் குறையும் போது உடம்பு லேசா பறக்குமே அப்படி இருக்குது. போதுமா?…” என சொல்ல,
“உன் விளக்கத்துல…” என்று மதிவாணன் சொல்லும் பொழுதே,
“ஹாய் பாஸ்…” என வந்து டானென்று நின்றாள் தேன்மொழி.
“ஹாய்…” என இருவரும் சொல்ல,
“இந்தாங்க…” என அவனிடம் ஒரு பொட்டலத்தை நீட்டினாள். முதல் நாள் தினசரி நாளிதழில் சுற்றப்பட்டிருந்தது அது. நீட்டிய கையில் வடையின் துணுக்குகள் கலந்த எண்ணை சிதறல்கள் ஒட்டியிருந்தது.
“என்ன இது?…” என ஜீவன் கேட்க,
“வடை. சூடா பருப்பு வடை. நல்லா இருக்கும். சாப்பிடுங்க…” என சொல்ல,
“எங்களுக்கு எதுக்கு தூதர்ஷன்? இதுவும் உன் வர்ஷாக்கா குடுக்க சொன்னதா?…” என்றான் ஜீவன் சிரிப்புடன்.
“ம்ஹூம், நானே கொண்டு வந்தேன். உங்களை பார்க்க வச்சுட்டே சாப்பிட்டேன் தானே? அதான். ஷேரிங் நல்லது. வாங்கிக்கோங்க…” என்றவளின் கபடமில்லா பேச்சு அத்தனை பிடித்தது ஜீவனுக்கு.
“ஆமா அது என்ன சொன்னீங்க? தூதர்ஷன். அப்படின்னா?…” என சந்தேகம் கேட்க,
“அதுவா உன் வர்ஷாக்காவுக்காக புதுசா தூது வந்த நியூ வெர்ஷன் நீ. அதான் தூதர்ஷன்…” என ஜீவன் சொல்ல,
“போய் சொல்லாதடா. அப்படியே பஃபூன் மாதிரியே இருக்கா. ஆளும், ட்ரெஸ்ஸும். அதான பழங்காலத்து பொண்ணு மாதிரின்னு தானே சொன்ன?…” என மதிவாணன் கேலி செய்ய ஜீவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
“மதி…” என அவனை அடக்க அப்போதுதான் துடுக்காக பேசியதை உணர்ந்த மதிவாணன் தேன்மொழியை பார்த்தான்.
அவளின் செயல்களும், நடவடிக்கையும், பேச்சும் அவளை மிக சாதாரணமாக எளிதாய் நினைக்க வைத்துவிட்டது அவனை. அதனால் உண்டான அலட்சியத்தில் வார்த்தையை விட்டுவிட்டான்.
ஆனாலும் தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் சற்று தெனாவெட்டாக அவன் நிற்க ஜீவன் தேன்மொழியிடம் பேசும் முன்,
“பஃபூனா? நான் அப்படி இருந்தா அதுல உங்களுக்கென்ன பிரச்சனை அண்ணா? இது எங்கப்பா வாங்கி குடுத்தது. எனக்கு எப்படி இருந்தாலும் நான் போடுவேன். நீங்க என்னை பார்க்கனும்னு நான் உடனே உங்களுக்கு பிடிச்ச மாதிரியா போட்டுட்டு வர முடியும்? நீங்க யார் எனக்கு? என்னை பஃபூன்னு சொல்ல உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?…” என்று பொரிய,
‘அடிசக்கை’ என பார்த்து நின்றான் ஜீவன். மதிவாணன் முகம் தான் விளக்கெண்ணையை குடித்ததை போல ஆனது.
“எனக்கு கூட இப்ப நீங்க இந்த ஷர்ட்ல அசிங்கமா தெரியறீங்க. அதுக்குன்னு உடனே உங்களை நான் கமெண்ட் பண்ணினேனா? இல்லை இனி இப்படி போடாதீங்கன்னு சஜஷன் குடுத்தேனா?…” என்று சொல்ல,
“சஜஷன் குடுத்தேனா? கமென்ட் பண்ணினேனான்னு போற போக்குல சொல்லிட்டு கமெண்டும் பண்ணிட்டு பேச்சை பாரேன்…” என சிரித்தான் ஜீவன்.
“டேய் நீ அவ சைட்டா?…” என மதி பொங்க,
“என்னது சைட்டா?…” என்றாள் தேன்மொழி.
“ப்ச், எந்த பக்கம்ன்றத தான் அந்த லட்சணத்துல கேட்டுத்தொலைக்கான்…” என்றவன்,
“சைட் சைட்…” என்று அழுத்தமாய் சொல்லி நண்பனின் பக்கம் பார்த்து,
“உண்மையை யார் சொன்னாலும் அந்த சைட் தான் நான். இப்போ நம்ம தூதர்ஷன் சைட் தான்…” என்றவன் தேன்மொழியை பார்த்து கண்சிமிட்ட,
“அது…” என்று குதூகலத்துடன் அங்கிருந்து நகர்ந்த தேன்மொழி,
“இந்த வடையை அவங்களுக்கு குடுக்காதீங்க…” என சொல்லிவிட்டு மதிவாணனை முறைத்துவிட்டு செல்லவும் ஜீவனின் சிரிப்பு இன்னும் அதிகமாகியது.
அருகில் இருந்தவர்களுக்கும் இவர்களின் பேச்சு கேட்டிருக்க தேன்மொழி நகர்ந்ததும் அத்தனை பேரும் மதிவாணனை பார்த்து சிரித்தனர்.
அன்றிலிருந்து ஜீவன், தேன்மொழி நட்பு ஆரம்பித்தது. அங்கிருந்த ஒருவருக்கும் அவர்களை வேறு விதமாய் பார்க்க தோன்றவில்லை.
அது ஜீவனின் மீதான அபிப்ராயமாகவும் இருக்கலாம். தேன்மொழியின் வெகுளித்தனத்தாலும் இருக்கலாம். அவள் வந்துவிட்டால் யாரோ ஒருவர் கூட,
“ஜீவா தேனு என்ட்ரி…” என ஜீவனிடம் சொல்லும் அளவிற்கு இருந்தது. அத்தனைபேருக்கும் தேன்மொழியை பிடித்தது.
அவளால் நாயர்கடையின் வாடிக்கையாளர்கள் பெருகினார்கள் என்றும் சொல்லலாம்.
ஜீவனோடு படிக்கும் மாணவர்களில் அதிகமானோர் அவனை போலவே வெளியூரில் இருந்து படிப்பவர்களாக இருந்தார்கள். வழக்கமாக வரும் சண்டைகள், அநாவசிய பார்வையிடல் என்று கூட இல்லாதவர்களாக மிகவும் பொறுப்புடன் இருந்தார்கள்.
வர்ஷாவுமே மதுரை தான். ஜீவனிற்காகவே அவன் படிக்கும் ஊரில் வந்து படிக்க ஆரம்பித்தாள். பள்ளி காலத்தில் பனிரெண்டாம் வகுப்பில் வேறு பள்ளிக்கு மாற்றலாகி ஜீவன் படிக்கும் பள்ளிக்கு வந்திருக்க அப்போதிருந்தே ஜீவன் என்றால் அப்படி பிடித்தம்.
பார்க்க அமைதி, அழுத்தமான பெண் என்னும் பெயர் அவளுக்கு. யாரிடமும் அத்தனை இலகுவில் பேசிவிடமாட்டாள், தனக்குள்ளேயே ஒரு வட்டம் போட்டு இருப்பவளுக்கு தோழிகளும் ஒரு எல்லை தான்.
நெருக்கமாக யாரிடமும் பழகாத குணாதிசயம், எண்ணங்களை கூட அத்தனை எளிதில் பகிர்ந்துகொள்வதில் பிடித்தமில்லாதவள்.
ஏதோ ஒரு வகையில் ஜீவனுக்கு ஹாஸ்டலில் இருந்து அவனின் விடுதிக்கு அன்பளிப்புகள் அனுப்புவதும் க்ரீடிங் கார்ட்ஸ் அனுப்புவதுமாகவே இருந்தவள் தினமும் ஜீவனை பார்ப்பதையும் தவறவிடுவதில்லை.
அவன் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருக்க, அதே வருடம் பொறியியல் கல்லூரியில் இவள் சேர்ந்துவிட்டாள். இன்னும் வெளிப்படையாக பேசாதவள் தன் விருப்பத்தை அவனுக்கு தெரிவிக்க மட்டும் தாமதம் செய்யவில்லை.
ஜீவனுக்கும் முதலில் எரிச்சலும், கோபமும் தான் வந்தது. முதலில் மறுத்து இருந்தவன் பரிசுகளை ஏற்காமல் திருப்பி அனுப்பியிருந்தவன் சிறிது நாட்களாக தன்னுடைய மறுப்பை அவளிடத்தில் சொல்லாமல் பரிசுகளை ஏற்க ஆரம்பித்திருந்தான்.
இப்படியான சூழ்நிலையில் தான் தேன்மொழி வர்ஷா பயிலும் கல்லூரியில் சேர்ந்தது. அவளின் வெகுளித்தனமும், தோற்றமும் தன் சுயநலத்திற்கு பயன்படுத்த நினைத்தாள்.
வர்ஷாவை பார்க்கும் தேன்மொழி எப்போதும் ஒரு பிரமிப்போடே தான் அவளை பார்ப்பாள்.
“எவ்வளோ அழகுல இவங்க…” என தோழி கயலிடம் சொல்லி சொல்லி சில்லாகிப்பாள் தேன்மொழி.
தேன்மொழிக்கு குண்டான தோற்றம். இறுக்கமான உடைகள் அணிந்தால் மற்றவர்கள் பார்வையும் படுமே என கொஞ்சம் லூசான உடைகளையே எப்போதும் அணிவாள். அது அவளை இன்னும் பெரிதாக காட்டினாலும் அதனை பற்றிய கவலை என்றும் அவளிடத்தில் இருந்ததில்லை.
“ம்மா, இதான் காத்தோட்டமா இருக்குது…” என தாயிடம் அதற்கும் காரணம் சொல்வாள்.
மற்றபடி தன்னை, தன் தோற்றத்தை கேலி செய்பவர்கள் எவரையும் கண்டுகொள்ளமாட்டாள். எப்போதும் பட்டாம்பூச்சியாய் துறுதுறுவென பழகும் அவளின் குணம் பிடித்தே நிறையப்பேர் அவளிடம் நட்பு பாராட்டினார்கள்.
கல்லூரியில் சேர்ந்ததும் இறுதி வருட மாணவ, மாணவிகள் என்றாலே தனி மரியாதை அங்கே. அப்படி இருக்க தேன்மொழியை வர்ஷா தானாக தேடி வர தலைகீழாய் தான் குதித்தாள்.
“சீனியர் அதுவும் காலேஜ் குயின் என்கூட பேசிட்டாங்க தெரியுமா? இன்னைக்கு அவங்க கூட தான் வெளில போறேன்…” என சொல்லி சொல்லி கயலின் காதில் புகை வரவழைப்பாள்.
அத்தனை அப்பாவித்தனம் அவளிடத்தில். எந்த வருத்தங்களையும், சங்கடத்தையும் பார்த்திராத பெண். வீட்டினர் கூட கடிந்து ஒருவார்த்தை கேட்டிராத பெண். வர்ஷாவின் பேச்சையும் அப்பட்டமாய் நம்பியது.
“நீ ரொம்ப க்யூட்டா இருக்க…” வர்ஷா தன்னை சொல்லும் விதத்திலேயே லயித்து போவாள்.
தன்னுடைய ஆதர்ச நாயகியான வர்ஷாவின் காதலுக்கு தூது போவதையும் கூட பெருமையாக நினைத்தாள்.
“இங்க பாரு தேனு, இந்த கிப்ட் எல்லாம் யார் குடுத்தான்னு வீட்டுல கேட்டா என்ன செய்வ?…” என முதல்முறை வர்ஷா தேன்மொழியிடம் ஜீவனுக்கான பரிசை தரும் போதே கேட்க,
“என்னோட பேக் எல்லாம் செக் பண்ண மாட்டாங்க. எங்க வீட்டுல எல்லாரும் ரொம்ப நல்லவங்க வர்ஷாக்கா…” என்பாள் தேன்மொழி.
“நல்லது…” என்றவள்,
“யாருக்கும் தெரிய வேண்டாம். எங்க படிப்பு முடியவும் தான் வீட்டுல சொல்லனும். இப்பவே தெரிஞ்சா என்ன பண்ணுவாங்களோ?…” என்று அவளை லேசான பயத்தில் வைத்திருந்தாள்.
சொல்லியதை போலவே வர்ஷாவின் குடும்பத்தை நினைத்து கொஞ்சம் பயமும் தான் வர்ஷாவிற்கு. அதற்காகவே யாருக்கும் தெரிந்துவிடாதபடி தனது காதலை வைத்திருந்தாள்.
படிப்பு முடியவும் திருமணத்தை பற்றி பேசிக்கொள்ளலாம், அதற்கு முன்பே என்றால் ஜீவனின் படிப்பும் போய் அவனையும் ஏதாவது செய்ய முயலலாம் என கணக்கிட்டவள் அமைதியாய் இருந்து கொண்டாள்.
முன்பே அழுத்தம், இப்பொழுது இன்னும் வார்த்தைகளை குறைத்தாள். அவளின் அந்த அமைதியும், பார்வையுமே ஜீவனை அவள் பக்கம் திருப்பியது.
அதிலும் தான் மறுத்தும் தன்னை விடாமல் அவள் விரும்பியதும் அவனுக்கு ஒருவித மயக்கத்தை விளைவித்தது. விளைவு அவனுக்குமே வர்ஷாவை பிடித்தது.
வடை கொடுத்து சென்ற அன்று கல்லூரியில் வைத்து வர்ஷா தேன்மொழியிடம் கேட்க நினைத்து பின் முடிவை மாற்றிக்கொண்டாள்.
மீண்டும் அடுத்த வாரத்தில் இன்னொரு பரிசை அவளிடம் கொடுத்தனுப்ப தேன்மொழியும் கர்மசிரத்தையாக அதை பெற்றுக்கொண்டு வந்து ஜீவனிடம் தர மதிவாணனின் கேலி எல்லை கடந்திருந்தது.
ஏற்கனவே மதிவாணன் ஜீவனை தேன்மொழியை வைத்து அதிகமாய் ஓட்டியிருந்தான்.
“விரும்பறது ஒரு பொண்ணை. ஆனா கரிசனம் மொத்தமும் இன்னொருத்திக்கு. ஆனா ரெண்டு பேரும் ஒரு பொண்ணை நல்லாவே யூஸ் பண்ணிக்கறீங்கடா. அதுக்கு அது கூட தெரியலை பாவம்…” என்று முதல் நாள் பேசியிருக்க ஜீவனுக்கு எரிச்சலானது அந்த பேச்சு.
வழக்கம் போல அங்கே தேன்மொழி வந்து அவனுக்கு வணக்கம் வைத்துவிட்டு பரிசை தர,
“ப்ச், இங்க பார் மொழி. இனி கிப்ட் குடுத்தா வாங்க வேண்டாம். நீ ஏன் இதை செய்யற?…” என்றான் அவனும்.
“ஏன் செஞ்சா என்ன? நீங்க, வர்ஷாக்கா ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப புடிக்கும் தெரியுமா?…” என சொல்ல ஜீவன் சுற்றிலும் பார்வையை ஓட்டியவன்,
“மெதுவா பேசு மொழி…” என்றான் அவளிடத்தில்.
தேன்மொழியை கடிந்து பேச அவனுக்கு வரவே இல்லை. அவளின் சிரித்த முகம் பூவாய் மனதில் பதிந்தது.
“வர்ஷாக்கா எவ்வளவு பீல் பண்ணுவாங்க. நீங்க இப்படி சொல்றீங்க. நான் ஒன்னும் அவங்க சொல்றாங்கன்னு செய்யலை…” என சொல்ல முதல்நாள் எரிச்சல் மறைந்து லேசான புன்னகையுடன்,
“பின்ன ஏன் செய்யற?…” என்றான் ஜீவன்.
“நமக்குன்னு ஒரு பொறுப்பெல்லாம் குடுத்திருக்காங்கலேன்னு தான் உங்கள ப்ரப்போஸ் பண்ண அவங்களுக்கு ஹெல்ப் பண்ணேன்…” என சொல்ல இன்னும் சிரிப்பானது அவனுக்கு.
“அதை ஒரு பொறுப்புன்னு நினைச்சிருக்க பாரு. அங்க நிக்கற நீ…” என ஜீவா சிரிக்க,
“கிண்டல் பண்ணாதீங்க பாஸ். வீட்ல எப்பவுமே திட்டு, எதுலையும் பொறுப்பில்லை. உன்னை நம்பி ஒன்னும் பண்ண முடியாதுன்னு. அதான் என்னையும் ஒருத்தவங்க நம்பினதும் ஜிவ்வுன்னு ஆகிடுச்சு…” என்று தேன்மொழி வெட்கத்துடன் அவள் சொல்லவும் புன்னகையுடன் பார்த்தான்.
“உடனே தூதர்ஷன் கிளம்பியாச்சு…” என சொல்லியவன்,
“சரி நீ போ. வர்ஷாக்கிட்ட போன் இருக்குது தானே?…” என கேட்க,
“நிஜமாவா? பேச போறீங்களா?…” என விழிவிரித்து தேன்மொழி கேட்க,
“நீ ஏன் இவ்வளவு எக்சைட் ஆகற?…” என கேட்டவன்,
“போ…” என அவளை அனுப்பிவிட்டு சற்று தள்ளி வந்து வர்ஷாவிற்கு அழைத்தான்.
அவனிடம் பரிசை கொடுத்துவிட்டு வந்த தேன்மொழியிடம் என்னவென்று கேட்டுக்கொண்டு இருந்தாள் வர்ஷா. ஜீவன் அழைத்ததும் ஒரு நொடி இன்பமாய் அதிர்ந்தவள் படபடப்புடன் போனை அட்டன் செய்து காதில் வைத்தாள்.
அவளின் முகத்தில் வந்துபோன மாற்றங்களை தேன்மொழி அதிசயமாக பார்த்தபடியே நிற்க,
“வர்ஷா…” என்றவனின் மெல்லிய குரல் வர்ஷாவினுள் இதமாய் பரவியது. தேன்மொழி தன்னையே பார்த்தபடி நிற்க அவளை,
“நீ போ பஃபூன்…” என்றவளின் குரல் ஜீவனின் காதில் ஸ்பஷ்டமாய் விழுந்தது.
“வாட்? பஃபூனா? யூ மீன்…” என்றான் எடுத்த எடுப்பில் சற்று அழுத்தமான குரலில்.
“அது வந்து நான் செல்லமா அப்படித்தான் கூப்பிடுவேன்…” என்றாள் அவனை சமாளிக்கும் பொருட்டு.