தன்னை வர்ஷா என அழைத்த குரலுக்கும், அடுத்ததாய் பேசிய குரலுக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்ததில் சுதாரித்தவள் அவனை கூல் செய்யும் விதமாய் பேசினாள்.
முதலில் அவன்தான் அழைக்கவேண்டும் என்றே இதுவரை பேசாமல் இருந்தவள் முதல் பேச்சிலேயே தேன்மொழியால் தேவையில்லாத பிரச்சனை வேண்டுமா என்றே தழைந்து போனாள்.
“செல்லமா கூப்பிட ஆயிரம் பேர் இருக்கே. நீ அப்படி தான் கூப்பிடனுமா?…” என கேள்வியெழுப்ப அவள் அமைதியாய் இருந்தாள்.
“ஓகே, கூல்…” என்றவன்,
“இதென்னதிது சின்ன பொண்ணுட்ட போய் இப்படி கிப்ட் குடுத்துவிட்டுட்டு. பார்க்கறவங்க மொழியை தானே பேசுவாங்க…” என சொல்ல அவனின் மொழி என்ற அழைப்பில் துணுக்குற்றாள்.
“இல்லை, அது. நீங்க ரெஸ்பான்ட் பண்ணலை. அதான்…” என மெல்லிய குரலில் சொல்ல,
“ரெஸ்பான்ட் பண்ணலைன்னா பிடிக்கலைன்னு அர்த்தமா?. அக்சப்ட் பண்ணினதால தான் உன்னோட கிப்ட்ஸ் என்கிட்டே பத்திரமா இருக்குது. புரியுதா?…” என சொல்ல அவனின் குரலை கேட்க கேட்க அதுவும் தன்னிடம் அவன் பேசியதில் இன்னும் பித்தானாள் அவன் மீது.
“பாஸ் வேர்க்கடலை…” என வேகமாய் தேன்மொழி அவனிடம் சென்று ஒரு பொட்டலத்தை நீட்ட தான் போக சொல்லியதும் விலகாமல் இப்படி அவனிடம் சென்று நிற்கிறாளே என கோபத்துடன் தேன்மொழியை பார்த்தபடி வர்ஷா நிற்க,
“நான் கேட்டேனா மொழி? ஏன் வாங்கிட்டு வந்த?…”
“கிளாஸ் எடுக்கும் போது தூக்கம் வராம இருக்க ஒண்ணொண்ணா போட்டுக்கோங்க…” என சொல்லிவிட்டு இன்னும் இரண்டு பொட்டலங்களை தனது பைக்குள் வைத்தவள் அவனுக்கு கை அசைத்துவிட்டு தோழி கயலை தேடி சென்றாள்.
“ஸ்வீட் கேர்ள்…” என்றவனின் மெல்லிய சிரிப்பும், சில்லாகிப்பும் வர்ஷாவை அனலில் நிற்கவைத்தது.
“ஓகே வர்ஷா, நான் இன்னொரு நாள் பேசறேன். பை…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
வர்ஷாவிற்கு ஜீவன் தன்னிடம் பேசியதும், தனது காதலை ஒப்புக்கொண்டதாய் கூறியதும் தலையில் ஏறவே இல்லை. அது சந்தோஷத்தை அளிக்கவில்லை. மாறாக தேன்மொழியை பார்த்தபடி நின்றாள்.
ஆனாலும் அவளை தவிர்க்க முடியவில்லை. சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் வேறு யாரையும் ஜீவனை அணுகவிடுவதில் நம்பிக்கை இல்லை. தேன்மொழியே பெட்டர் என்று நினைத்தாள். அதன் பொருட்டே அவளை சகிக்க வேண்டிய கட்டாயத்தில் நின்றாள்.
பாதி வருடம் சென்றிருந்தது. ஊரில் ஒரு விசேஷமென வர்ஷா விடுமுறையில் சென்றிருக்க தேன்மொழி இப்போதெல்லாம் வர்ஷா இல்லை என்றாலும் ஜீவனிடம் பேசுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.
அவள் ஊருக்கு சென்றிருந்த சமயம் பஸ் ஸ்டாப்பிற்கு வந்த தேன்மொழி சோர்ந்து தெரிய எப்போதும் தன்னை தேடி வருபவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொள்ள தானே தேடி சென்றான்.
“என்னாச்சு மொழி? டயர்டா இருக்க. லேட்டா வேற வந்திருக்க?…” என கேட்க,
“கொஞ்சம் காய்ச்சல் கலர்க்குருவி…” என்றாள் அவளுக்கே உரித்தான துள்ளல் குரலில்.
முகமும், உடலும் சோர்வாக இருந்தாலும் குரலில் அந்த உற்சாகம் கொஞ்சமும் குறையவில்லை அவளுக்கு. ஜீவன் அவ்வப்போது ஊரிலிருந்து தாய் எடுத்துத்தரும் உடைகளை தவறாமல் போட்டு வருவான் கல்லூரிக்கு.
அதை வைத்து அவனின் விதவிதமான அடிக்கும் நிறத்திலான சட்டைகளை பார்த்து அவனை கேலி செய்வாள். அடிக்கும் நிற சட்டைகளாக இருந்தாலும் அவனுக்கு பொருந்தியே போகும்.
“அதென்ன காய்ச்சல்ல கொஞ்சம் காய்ச்சல், நிறைய காய்ச்சல்?. ஹாஸ்பிட்டல் போனியா?…” என கேட்க,
“ஹூம் போய்ட்டு வந்துட்டோம். இன்னைக்கு முக்கியமான கிளாஸ். அவாய்ட் பண்ண முடியாது. அதான் வந்துட்டேன்…” என சொல்ல,
“டீ குடிக்கிறியா மொழி?…” என கேட்க,
“அண்ணா அவ சாப்பிடவே இல்லை. அப்படியே கிளம்பி வந்துட்டா…” என கயல் எடுத்துக்கொடுக்க,
“ஏன் அவங்க வீட்டுல ஒன்னும் சொல்லலையா?…” என்றான் கயலிடம்.
“அவங்க சாப்பிட்டு தான் போக சொல்லி வேலைக்கு போய்ட்டாங்க. இவ தான் வந்துட்டா…” என போட்டுக்கொடுக்க,
“இரு டீ வாங்கிட்டு வரேன்…” என்றவன் அவளுக்கு பிடித்த மசாலா டீயும், இரண்டு பன்னும் வாங்கி வந்து தந்தான்.
“இதை சாப்பிட்டு முடி. இப்போ வந்திடறேன்…” என்றவன் வேகமாய் அருகில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் காய்ச்சலுக்கான மாத்திரையை கேட்டு வாங்கி வர தேன்மொழி கிளம்பும் பஸ் வந்துவிட்டது.
“ஐயோ பஸ்…” என எழுந்துகொள்ள பார்க்க,
“அடிங், உக்கார் பேசாம. முதல்ல டீயை குடி. முடியலைன்னா வீட்டுல இருக்கனும். அதை விட்டுட்டு கிளம்பி வந்துட்ட. உடம்பு நல்லா இருந்தா தானே படிக்க முடியும்?…” என அதட்ட,
“ஓகே, நான் போறேன்…” என கயல் கிளம்பிவிட்டாள்.
அடுத்தடுத்த இரண்டு பேருந்துகள் வந்து செல்ல ஜீவன் கிளம்பும் பேருந்தும் வந்து விட்டது.
தேன்மொழி வந்ததில் இருந்தே மதிவாணன் பார்த்துக்கொண்டு தானே இருந்தான். உடனே நண்பன் ஒருவனுக்கு அழைத்து பைக்கை கொண்டு வர சொல்லிவிட்டு,
“ஜீவா நாங்க கிளம்பறோம். நீ பைக்ல வந்துடு…” என சொல்லிவிட்டு செல்ல தலையசைத்தவன் தேன்மொழியை பார்த்தது.
“குடி, என் மூஞ்சில என்ன எழுதி ஒட்டிருக்கு?…” என அதட்ட,
“இல்லை ஒரு மாதிரி உமட்டுது. முடியலை…” என சொல்ல,
“ஏதாவது சாப்பிட்டா தான் டேப்லட் போட முடியும் மொழி. பாதி பன் கூட சாப்பிடலை…” என சொல்ல,
“ம்ஹூம், முடியலை. நான் வீட்டுக்கே போறேன்…” என எழுந்தவள் குடித்த டீ மொத்தத்தையும் வெளியேற்றினாள் சற்று ஓரமாக.
“ஹேய் பார்த்து பார்த்து…” என்று பின்னால் ஓடியவன் அவளை ஆதரவாய் பிடித்துக்கொள்ள முடியாமல் ஒரு நிமிடம் தயங்கி பின் வாட்டர் பாட்டிலை வாங்கிக்கொண்டு ஓடினான்.
“மௌத் வாஷ் பண்ணிட்டு இதை குடி…” என தந்துவிட்டு,
“எப்படி வீட்டுக்கு போவ?…” என கேட்க,
“இல்லை, பஸ் வரும். போய்டுவேன். அங்க இருந்து ஒரு அஞ்சு நிமிஷ நடை தான். நீங்க கிளம்புங்க. காலேஜ்க்கு லேட் ஆகுதுல…” என அனுப்ப நினைத்தாள்.
ஜீவனுக்கு தான் அவளை அங்கேயே விட்டுவிட்டு செல்ல மனதில்லை. முகத்தை கழுவிவிட்டு சுடிதார் துப்பட்டாவால் முகத்தை துடைத்தவள்,
“இன்னும் போகலையா? பனிஷ் பண்ண போறாங்க…” என கேலி போல சொல்ல,
“என்னோட பைக்ல வருவியா மொழி? நான் ட்ராப் பண்ணட்டா?…” என்றான் தயக்கமாக. சற்றும் யோசிக்காமல்,
“ஓஹ், போலாமே. ஆனா காலேஜ்…” என கேட்க அவள் உடனே சரி என்றது இன்னும் வியப்பானது.
“அதை பார்த்துக்கலாம். நான் ட்ராப் பண்ணினா உங்க வீட்டுல எதுவும் சொல்லமாட்டாங்களா?…”
“என்ன சொல்லுவாங்க? ஏன் சொல்லனும்?…” இன்னுமே அவள் அப்படியே பேச அவளை இன்னும் இன்னும் பிடித்தது அவனுக்கு.
“ஏன் என்னோட வந்தன்னு கேட்பாங்க…”
“ப்ரென்ட் தானே நீங்க? அப்பா ஒன்னும் சொல்லமாட்டாங்க. அப்பாவுக்கு தான் உங்களை தெரியுமே…” என சொல்ல,
“வாட்?…”
“ஆமா, நீங்க எனக்கு ப்ரெண்ட்ன்னு சொல்லிருக்கேன் அப்பாக்கிட்ட…” என சொல்ல ஜீவனுள் எதுவோ உருகியது அவள்பால். பேச பேச அசையாது பார்த்து நின்றவன்,
“வா…” என்ற அழைப்புடன் முன்னால் நடந்தான்.
என்ன பெண் இவள் என இன்னுமே அவனுக்கு தேன்மொழி மீதான பிரமிப்பு அகலவில்லை.
வீட்டில் கொண்டு இறக்கிவிட்டவன் சரியான பின்பு வந்தால் போதும் எனவும் சொல்லிவிட்டே பைக்கை ஸ்டார்ட் செய்ய குதித்துக்கொண்டு வீட்டை திறந்து சென்றாள் தேன்மொழி.
தன்னை வாவென்றும் அழைக்கவில்லை, போகிறானா இல்லையா என்றும் பார்க்கவில்லை. வீட்டிற்கு வந்துவிட்டோம் என்று துள்ளிக்கொண்டு அவள் செல்வதை பார்த்தவனின் மனதில் ஆழமாய் பதிந்தாள் அவள். அவனாகவே அவளை தோழி என்ற ஸ்தானத்தில் உருவகித்துக்கொண்டான்.
ஒட்டுமொத்த உறவுகளின் நேசத்தையும் ஒருங்கே கொண்டவள் போல, கரிசனம், அன்பு, பரிவு, வரவில்லை என்றால் தேடல், சொல்லாமல் சென்றால் கண்டிப்பு என அவளின் உரிமையான பேச்சுக்களில் ஜீவன் தான் தேன்மொழியின் அன்பில் மெய்மறந்தான்.
அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் வர்ஷாவுடன் வெளியே செல்ல தேன்மொழியும் உடன் வர வெளியே எங்கேயும் அவர்களின் பேச்சுக்கள் வர்ஷாவிற்கு சகிக்க முடியாதவையாக இருந்தது.
ஆனாலும் ஜீவனிற்காக தேன்மொழியை பொறுத்து வந்தாள். வர்ஷாவும் ஜீவனும் கொஞ்சம் நெருங்கி பழக ஆரம்பிக்கவும் தான் அவளிடம் இருந்த முரண்பாடுகள் ஜீவனுக்கு புரிய ஆரம்பித்தது.
முரண்பாடுகள் இருந்தாலும் தன்னை நேசிக்கும் பெண் என்பதாலேயே மிகவும் பொறுமையாய் போனான் ஜீவன்.
சில நேரங்களில் வெடுக்கென்றும் அவன் பேசிவிடுவான். அப்படியான சமயங்களில் எல்லாம் உடனடியாக வர்ஷா மன்னிப்பை கேட்டு அவனின் அந்த கோபத்தை ஆறச்செய்வாள்.
எந்த சூழ்நிலையிலும் ஜீவனை மட்டும் விட்டுவிட அவள் தயாராக இல்லை. அந்தளவிற்கு ஜீவ் ஜீவ் என்று பைத்தியமாக இருந்தாள்.
“என்ன ட்ரெஸ் இது ஜீவ்? என்ன உன்னோட ஸ்லாங்?…” என கேட்டு அவனிடம் முறைப்பை வாங்கும் நேரங்களில் ஒன்றுமட்டும் விளங்கும் எந்த விதத்திலும் ஜீவன் தன்னை மாற்றிக்கொள்ளமாட்டான் என்று. அவனின் அந்த ஆளுமையும், பிடிவாதமும் கூட அவளுக்கு பிடித்திருந்தது.
ஜீவனுக்கும் இத்தனை பழகியும் வர்ஷா ஜீவனை தன் நுனிவிரலை கூட தீண்ட அனுமதித்ததில்லை என்பதில் மிகவும் பெருமை.
“ஹேய், நான் சும்மா கையை தானே பிடிச்சேன். இது கூடவா கூடாது?…” என கேட்டு சிரிக்கும் போது அவனின் சிரிப்பு மனதை அள்ளினாலும் உள்ளுக்குள் பயந்துகொண்டு இருப்பாள். ஆனாலும் ஜீவன் வேண்டும். திருமணமாகிவிட்டால் போதும். இப்படித்தான் தன் நினைவுகள் படியே வாழ்ந்து வந்தாள்.
கல்லூரியிலோ, விடுதியிலோ உடன் படிக்கும் தோழிகள் யார் கேட்டாலும் தேன்மொழியுடன் வெளியே செல்வதாகவே காட்டிக்கொண்டாள். அந்த ஒரு வருடமும் அப்படியே இருக்க கடைசியாக அவர்கள் சென்றது விவேகானந்தர் பாறை பார்ப்பதற்கு.
முதலிலேயே வர்ஷாவிடம் மறுத்திருந்தாள் தேன்மொழி. தனக்கு பயம் என்று சொல்ல சொல்ல கேட்காமல் தேன்மொழியை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள் வர்ஷா.
“இங்க பாரு பஃபூன், வேற யாரையும் என்னால கூட்டிட்டு போக முடியாது. இன்னைக்கு தான் லாஸ்ட். நாளைக்கு நான் ஊருக்கு கிளம்பறேன். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்னோட வா. எனக்காக வரமாட்டியா? ஜீவ் வெய்ட் பண்ணுவான். ப்ளீஸ்…” என கெஞ்சி கெஞ்சி அழைத்து வந்திருந்தாள்.
சமீபமாக தேன்மொழிக்கு வர்ஷாவின் சில பேச்சுக்களில் அவளுக்கு தன்னை ஏதோ ஒரு விதத்தில் பிடிக்காமல் போய்விட்டதென உணர துவங்கி இருந்தாள் தேன்மொழி.
அதன்பொருட்டே அவர்களுக்கிடையில் தான் எதற்கு என மறுப்பு சொல்ல அதற்கும் வர்ஷா விடவில்லை.
‘என் தலையெழுத்து இவக்கிட்ட எலாம் கெஞ்ச வேண்டியதா இருக்குதே?’ என பொருமியபடி தான் அழைத்து சென்றாள்.
அங்கே செல்லும் வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருந்த தேன்மொழி ஜீவனை பார்த்ததும் முகம் மலர மகிழ்ச்சியுடன் தாவிக்கொண்டு அவனிடம் சென்றாள். அதிலேயே முகம் கடுத்தது வர்ஷாவிற்கு.
இருவரின் அன்பிலும் சந்தேகம் இல்லை என்றாலும் தன்னை விட ஜீவனுக்கு தேன்மொழியை பிடிக்கிறதே என்கிற எண்ணமே தேன்மொழி மீது வெறுப்பை காட்ட போதுமானதாய் இருந்தது.
அவளின் பயம் தெரிந்தவன் கை தாங்கலாக அழைத்து செல்ல பொறுக்கமுடியாமல் கத்திவிட்டாள் வர்ஷா.
“நீ என்ன குழந்தையா? இத்தனை வருஷம் இந்த ஊர்லையே பிறந்து வளர்ந்துட்டு இப்ப நீ பிஹேவ் பன்றது நம்பற மாதிரி இல்லையே. ஏன் தனியா உன்னால வரமுடியாதா பஃபூன்?…” என கடுப்புடன் சொல்லி அதற்கும் ஜீவனிடத்தில் திட்டு வாங்கினாள்.
வர்ஷாவை ஜீவன் திட்டுவதை பொறுக்கமாட்டாமல் தன்னால் சண்டையிடுகின்றனரே என்ற வேகத்தில் அந்த சூழ்நிலையை மாற்ற,
“நோ ஜீவ், ஜீவ்…” என கிண்டலாய் பேசினாள் தேன்மொழி.
அவள் சொல்லியவிதத்தில் ஜீவன் வாய்விட்டு சிரிக்க கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் வர்ஷா இன்னும் ஆக்ரோஷமாய் கத்திவிட்டாள்.
“இன்னொருவாட்டி நீ ஜீவ்ன்னு சொன்ன அறைஞ்சிடுவேன்….” என்று கை ஓங்கிவிட மழுக்கென்று தேன்மொழியின் கண்களில் கண்ணீர் வர,
“ஸ்டாப்பிட் வர்ஷா, திஸ் இஸ் டூ மச்…” என ஒற்றை விரல் நீட்டி அவன் அவளை அதட்டிவிட என்றுமே இந்தளவுக்கு கோபப்பட்டிறாத ஜீவனின் கோபத்தில் அதிர்ந்து போன வர்ஷா,
“இவளுக்காக என்னை பேசிட்டல ஜீவ். நான் போறேன். இன்னைக்கு உன்னோட கூடவே இருக்கலாம்னு பார்த்தேன். இவளால மொத்தமும் போச்சு…” என்று வர்ஷா அங்கு வைத்து சண்டையிட,
“இல்லை, இல்லை வர்ஷாக்கா. நான் இனிமே அப்படி கூப்பிடமாட்டேன். நான் போய்டறேன். நானே போய்டறேன்…” என்று அவர்களை விட்டு வேகமாய் ஓடிவிட்டாள் தேன்மொழி.
“உன்னை என்னவோன்னு நினைச்சேன். உன்கிட்ட இப்படி ஒரு பிஹேவியர் சுத்தமா நான் எதிர்பார்க்கலை வர்ஷா. போகனும் தானே? போகனும்னா போய்க்கோ…”
“ஜீவ்…”
“அதான் கிளம்பறேன்னு சொன்னேல. கிளம்பிடு…” என்றவன் தேன்மொழியை அந்த கூட்டத்தில் தேட அவளை காணவில்லை.
அதுவே ஜீவனுக்கு டென்ஷன் ஆகியது. இப்படி கூட்டிக்கொண்டு வந்துவிட்டு விட்டுவிட்டோமே என்று.
சொந்த ஊர், கையில் பணம், விவரம் அறிந்த பெண் என எல்லாம் இருந்தாலும் அவளின் பயம், நடுக்கம் இப்பொழுது தனது கைகளில் உணர்ந்தான் ஜீவன். மனது நடுங்கியது.
“மொழி…” என முணுமுணுத்த இதழ்கள் கூட நடுங்க சுற்றிலும் பார்வையை ஓட்டியவன் படகு இருக்கும் திசைக்கு செல்ல அங்கே கடலை வெறித்தபடி நின்றவளை நோக்கி ஓடியவன்,
“மொழி…” என அவளின் தோளில் கை வைத்ததுமே திடுக்கிட்டு திரும்பியவள் கண்கள் கலங்கி இருந்தது.
“மொழி, என்னடா?….” என பரிதவிப்புடன் கேட்க,
“எனக்கு பயமா இருக்கு பாஸ். என்னை இந்த ஒருவாட்டி மட்டும் அங்க கொண்டு போய் விடறீங்களா ப்ளீஸ். இனி உங்க கூட பேசவோ, எதுவும் கேட்கவோ மாட்டேன்…” என கெஞ்சலுடன் கேட்டவளை இருக்கும் இடமோ, சூழலோ எதையும் பார்க்காமல் தோள் சாய்த்துக்கொண்டான் அவன்.
“உன்னை நானே வீட்டுல கொண்டு போய் விடறேன். கண்டிப்பா. வா போவோம்…” என சொல்ல தேன்மொழியின் உள்ளங்கை அப்படி வியர்த்திருந்தது பயத்தில்.
“நிஜமாவே எனக்கு கடல்னா பயம் தான். நிஜமாவே. நம்புறீங்களா பாஸ் நீங்க?…” என கேட்க ஜீவனுக்கு தாளமுடியவில்லை. அவளின் கண்ணீரும் தவிப்பும் ஏனோ அவனால் ஏற்கமுடியவில்லை.
“நான் தான் இருக்கேனே. நீ ஏன் அப்படி விட்டுட்டு வந்த? அப்படித்தான் இருப்பேன்னு இருந்திருக்கனும்…” என அதட்ட லேசாய் சிரித்தாள்.
“நீங்க எதுவும் பார்க்கலை…” என கேட்க,
“இங்க பசங்களோட அடிக்கடி வந்திருக்கேன்…” என்றவன் படகு இருக்கும் திசைக்கு திரும்ப,
“ஜீவ்…” என்று வந்து நின்றாள் வர்ஷா.
“நாங்க கிளம்பறோம் வர்ஷா. நீ இருந்து பார்த்துட்டு வா…” என கடினமான குரலில் சொல்ல உள்ளுக்குள் உதறியது அவளுக்கு.