புன்னகை – 22
மதிய உணவிற்கு எளிமையாக ரசமும், முட்டையும் பொரித்து இருவரும் உணவை முடித்துக்கொள்ள ஜீவனுக்கு மறுநாள் தேன்மொழியை செக்கப்பிற்கு அழைத்துசெல்வதை பற்றிய யோசனைகள் தான் மனதிற்குள் வலம் வந்தது.
“என்ன யோசனை?…” என தேன்மொழி ஈரமாகிய கையை துடைத்துக்கொண்டு அவனருகே வந்து அமர,
“ஹ்ம்ம், உன்னை பத்தி தான். நாளைக்கு செக்கப் போய்ட்டு வரனும்…”
“ஆமா…”
“அதான், எங்க ஹாஸ்பிட்டல்ல ரெண்டு கைனாகாலஜிஸ்ட் டாக்டர் இருக்காங்க. யார்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கலாம்னு யோசிக்கறேன்…” என சொல்ல,
“பெரிம்மாட்ட போன் பண்ணி சொல்லனும். சொல்லட்டா?…” என்றவள்,
“அங்க வச்சு கேட்டுட்டே இருந்தாங்க உன்கிட்ட ஏதோ சேஞ்சஸ் தெரியுதே? என்னன்னு. நான் ஒண்ணுமில்லைன்னு சமாளிச்சுட்டேன். அதான்…”
“இல்லம்மா, இப்ப வேண்டாம். யார்க்கிட்டையும் இப்போ சொல்ல வேண்டாம். நாளைக்கு டெஸ்ட் எடுத்துட்டு டாக்டர்க்கிட்ட பேசிட்டு சொல்லுவோம்…” என சொல்ல தேன்மொழியின் முகம் சற்று வாடியது.
“என்கிட்டே சொல்ல உனக்கு ரெண்டுநாள் தேவைப்பட்டுச்சு. ஆனா அவங்கட்டலாம் உடனே சொல்லிடனும். இல்ல?…” என கேட்க, கோபத்தில் கேட்கிறானோ என பார்க்க அவனின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
அதுவேறு அவளுக்கு இன்னும் வர்ஷாவை பற்றிய யோசனையாக இருக்குமோ என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.
“இன்னும் எத்தனை நாள் வர்ஷாக்கா இங்க இருப்பாங்க?…” என்றவளை இப்பொழுது முறைத்தவன்,
“இன்னும் என்ன அக்கான்னுட்டு?…” என வெளிப்படையாக கடுப்படித்தவன்,
“எனக்கு எதுவும் தெரியலை. நான் கேட்டுக்கவும் இல்லை. அன்னைக்கு நீ வரதுக்கு ஒரு டென் மினிட்ஸ் முன்ன தான் உள்ள போனேன். போனதும் என்னை பார்த்துட்டு குதிக்க ஆரம்பிச்சா. எனக்கு பார்க்க பிடிக்கலை. டாக்டர்க்கிட்ட மட்டும் என்னன்னு கேட்டுட்டு இருந்தேன். அவர் முழுசா சொல்லும் முன்ன நீ வந்துட்ட. நானும் உன் கோபத்துல அதை விட்டுட்டேன்…”
“ஓஹ்…” என்றதோடு தேன்மொழி அமைதியாக,
“என்ன அதுக்கப்பறம் அங்க போயிருப்பேன்னு நினைச்சியா நீ?…” என கேட்க ‘கண்டுபிடித்துவிட்டானே’ என திருதிருத்தப்படி அவள் பார்த்த பார்வையே அப்படித்தான் என காட்டி குடுத்தது.
“போகுதுபாரு புத்தி. அப்படியே போட்டேனா?…” என அவளின் தலையில் வலிக்காமல் குட்டியவன்,
“நான் போகலை. போகவே இல்லை. செபாஸ்டியன் வர சொன்னார். ஏன் அவளோட அம்மா கூட வந்தாங்க என்னை பார்க்க. ஆனாலும் நான் போகலை…”
“ஏன் நீங்க என்ன பண்ண முடியும்னு உங்களை கூப்பிடறாங்க…” இப்பொழுது புசுபுசுவென்று மூச்சு விட்டபடி எரிச்சலில் பொசுங்கினாள் தேன்மொழி.
கோபத்தில் கடுகடுத்த முகமும், பொறாமையில் விதைத்த மூக்கும், அவனை முறைத்து பார்த்த விழிகளும், இன்னும் நன்றாக பேசவேண்டும் என்ற எரிச்சலில் வார்த்தைகளை கட்டுப்படுத்தி தவிக்கும் இதழ்களுமாக ஜீவனின் ஜீவனை சோதித்தாள் பெண்.
“மொழி, இதென்ன உன் முகத்துல இது புதுசா?…” என கன்னத்தோடு கன்னம் இழைய சட்டென மாறிவிட்ட வானிலை போல அவனின் நெருக்கத்தில் துள்ளி விலகியவள்,
“பாப்பா இருக்குது…” என வயிற்றை பிடித்துக்கொண்டு நகர்ந்தமர அவளின் இந்த செயலில் இன்னும் நெருங்கினான்.
“ம்ஹூம், தள்ளி போங்க. உங்க பார்வையே தப்பு…” என அவனின் முகத்தை பிடித்து வேறுபக்கம் திருப்ப மீண்டும் அவளை பார்த்தவன்,
“நானே டாக்டர் தான்டி. ரொம்ப பண்ணாத. எனக்கு எல்லாம் தெரியும்…” என இன்னுமே அவளை சீண்ட இப்படி ஒரு சூழ்நிலையில் அவனுக்குள் அடங்குவதா என அலைகடலில் மிதக்கும் இறகை போல தள்ளாடினாள்.
“ரொம்ப படுத்தறேனோ?…” என அவளின் தடுமாற்றத்தில் கேட்டவன்,
“சும்மா உன்னை டென்ஷன் பண்ணி பார்த்தேன்…” என கண்ணடித்து சிரிக்க,
“போயா யோவ்…” என அவனின் முதுகில் இரண்டு அடி போட்டாள்.
“உன்னை விட்டு எங்க போறதாம்?…” என அணைத்துக்கொண்டவன்,
“நாளைக்கு ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்து எல்லார்ட்டயும் பேசிப்போம்…” என்றதற்கு மறுப்பின்றி தலையசைத்தாள் தேன்மொழி.
“ஓகே எனக்கு கொஞ்சம் வேலை இருக்குது. நீ ரெஸ்ட் எடு. நான் வந்திடறேன்…” என எழுந்துகொண்டவன் ஒரு டிஷர்ட்டை எடுத்து போட,
“வெளிலயா கிளம்பறீங்க?…”
“ஹ்ம்ம் ஆமா மொழி. பைக் சர்வீஸ் குடுக்கனும். பைக் செயின் மக்கர் பண்ணுது. எப்படியும் ரெண்டு நாள் ஹாஸ்பிட்டல் போக போறதில்லை. சோ, இப்பவே குடுத்திடலாம்னு பார்க்கறேன். அப்போதான் அதுக்குள்ளே வரும்…”
“பைக் ஹாஸ்பிட்டல்ல தானே இருக்குது? போய் எடுக்கனுமா?…”
“இல்லை, வரப்போ வார்ட் பாய்ட்ட சொல்லிட்டு தான் வந்தேன். கீழே கொண்டுவந்து நிறுத்திட்டு செக்யூரிட்டிட்ட கீயை குடுத்துட்டு போக சொல்லி. அவனும் மெசேஜ் பண்ணிருக்கான்…”
“பக்காவா வேலை…” என தேன்மொழி நொடிக்க,
“உன்னை மாதிரி ஒரு பொண்டாட்டியை வச்சுட்டு இது மாதிரிலாம் ஸ்டன்ட் பண்ணா தான் புருஷன் என் பிழைப்பு ஓடும்…” என அவளை கேலி பேச இப்போதும் அவனின் பேச்சில் சிரித்தவள்,
“நானும் வரட்டா?…” என்றாள்.
“லூஸாடி நீ? பைக்கை சர்வீஸ்க்கு விட போறேன்னு சொல்றேன். கூட வரேன்னு சொல்ற. அரைமணி நேரத்துல வந்திருவேன். உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லு வாங்கிட்டு வரேன்…” என தலையை வாரிக்கொண்டே பேச,
“ஒன்னும் வேண்டாம். நான் என்ன குழந்தையா?…” என வேகமாய் அவனை திருப்ப,
“என்னடி இது இத்தனை முரட்டுத்தனம்? எப்ப இருந்து மொழி இவ்வளவு ஹார்டா மாறின?…” என அவளின் தோளில் இரு கைகளையும் மாலையாய் கோர்த்தவன்,
“நீ பேபி இல்லைன்னு தான் எனக்கு முன்னவே தெரியுமே. ஆனா நான் கேட்டது உனக்குள்ள இருக்கற நம்ம பேபிக்கு. இப்ப ஏதாவது சாப்பிடனும்னு தோணும்னு சொல்லுவாங்கல்ல. இப்ப ஏதாவது சாப்பிடனும்னு டெம்ப்ட் ஆகுதா?…”
“ம்ஹூம், இல்லை. தோணலை…” என உதட்டை பிதுக்க,
“சரி நானே எதாச்சும் வாங்கிட்டு வரேன். முக்கியமா ப்ரூட்ஸ். வீட்ல எதுவும் இல்லை…” என சொல்லி வாட்சை மாட்ட,
“ம்ஹூம். ப்ளீஸ் இருங்க. போக வேண்டாம்…” என அவனை பின்னிருந்து கட்டிக்கொண்டாள் தேன்மொழி.
அவளுக்கு அவனின்றி அங்கிருக்க இருக்க முடியவில்லை. அவனின் வார்த்தைகளின் தாக்கம் இன்னும் அவளை விட்டு அகலவில்லை. அவனோடே இருக்கவேண்டும் என்ற உந்துதல் மொழியின் ஜீவனை இறுக்கி பிடிக்க செய்ய ஆரம்பித்தது.
“ஹேய் என்ன ஆச்சு மொழி?…” என பின்னிருந்து தன் முன்னால் அவளை கொண்டு வந்தவன்,
“இங்க பாரு…” என முகத்தை நிமிர்த்த,
“ப்ளீஸ் இருங்க. சர்வீஸ் நாளைக்கு குடுத்துக்கலாமே?…” என்று சொல்ல ஜீவனுக்கு இப்போது தான் மண்டையில் உரைத்தது.
அவசரப்பட்டு இவளிடம் எதையும் சொல்லியிருக்க கூடாதோ என எண்ணியவன், இதையே நினைத்து வருத்திக்கொள்வாளோ என பயந்துபோனான்.
“மொழி, நான் சொன்னதை மறந்துட்டு இப்போ நம்மளை, நம்மளை நம்பி பிறக்க இருக்கற குழந்தையை பத்தி யோசி. புரியுதா?…” என சிறுபிள்ளைக்கு சொல்வதை போல சொல்ல,
“அது ஒண்ணுமில்லை. கூட இருங்கண்ணா இருங்களேன். ஏன் ரெண்டு நாள் சர்வீஸ்க்கு குடுக்காம தானே இருந்தீங்க. இப்போ உடனே குடுக்கனுமா?…” என சண்டைக்கு தயாராக அவனுக்கு சிரிப்பு வந்தது.
“ஹேய், எப்ப இருந்து நீ இப்படி மாறின?…”
“என்னது மாறினேனா?…”
“ஆமா, கண்டிப்பா மாறிட்ட. போடி…” என்றான் விளையாட்டாய்.
அவன் என்ன நினைத்து சொல்கிறான் என்றே ஒரு நிமிடம் புரியாமல் விழித்தவள் குழப்பத்தை விடுத்து இப்பொழுது மீண்டும் பழையபடி முறைத்து,
“பரவாயில்லை, இப்படியே மாறியே இருக்கறேன். இதுதான் நல்லது. பழைய மொழியா இருந்தா எதுவும் புரியாம போய்டும். இந்த மொழி தான் எனக்கு பிடிச்சிருக்கு. உங்களுக்கு ஒத்துவருதோ, வரலையோ இதுதான், இப்படித்தான் இருப்பேன்…” என்று சொல்ல சொல்ல ஜீவனுக்கு இன்னும் சிரிப்பு பொங்கியது.
“ஓகே, என்ன புரிஞ்சது, என்ன புரியலை? அதை சொல்லு. கேட்போம்…” என சாவகாசமாக சாய்ந்து அமர்ந்துகொண்டவன் அவளையும் தன்னருகே அமர்த்திக்கொண்டான் கதை கேட்கும் பாவனையில்.
“போகலையா?…” என்று பொங்கிய உற்சாகத்துடன் கேட்க,
“ம்ஹூம், இத்தனை சொல்லும் போது போக மனசே இல்லை. அதுவும் உன்னோட இந்த கோபம், சண்டை, பிடிவாதம் அப்படியே கட்டி போடுது…” என அவளின் மூக்கோடு மூக்கை உரசியவன்,
“ஆனா எப்பவும் இப்படி பண்ணிட்டே இருக்காத. இது உனக்கு பிரஷரை குடுக்கும். அதனால இத்தனை கோபமும், பிடிவாதமும் வேண்டாம். பிள்ளையை பெத்துட்டு அப்றமா கோச்சுக்குவியாம்…” என அவளின் தலையில் லேசாய் முட்டியவன்,
“எங்கயும் போகலைல. இப்ப ரெஸ்ட் எடேன்…” என சொல்ல,
“ம்ஹூம், எதாச்சும் பேச்சிட்டு இருக்கலாம்…” என அவனை விட்டு அகலாமல் கையோடு கை கோர்த்துக்கொண்டாள் அவள்.
ஜீவனின் மொழி பேசினாள். பேசிக்கொண்டே இருந்தாள். அவளுக்கு தோன்றியதை எல்லாம் பேசினாள். ஏனோ பேச பேச அழத்தம் குறைந்து மனது இறகாய் பறப்பதை போல இருந்தது.
அதிலும் இடையிடையே ஜீவன் அவளின் பேச்சை கேலி செய்ய அவனின் பேச்சும், புன்னகையும் மனதை மயக்க இன்னுமே அவனை பேவைக்கவென பேசினாள்.
அன்றைய பொழுது அப்படியே செல்ல மறுநாள் காரில் ஹாஸ்பிட்டல் செல்ல தேன்மொழிக்கு தான் லேசாய் படபடப்பாய் இருந்தது.
ஜீவனுக்கும் அவளின் நிலை புரிந்தவனாக அமைதியாக வந்தான். அவனுக்குமே வர்ஷாவை பார்க்க நேரிடுமோ என்னும் எண்ணம் கொஞ்சம் இருந்தது தான்.
ஆனால் அதனால் எந்த பாதிப்பும் தனக்கில்லை என்ற எண்ணத்தில் தெளிவாய் இருந்தவன் அதே போல் தேன்மொழி நினைக்க வேண்டுமே என்ற கவலை தான் அவனுக்கு.
“இறங்கு மொழி…” என்றவனின் குரலில் தான் லேசாய் கலைந்தவள் ஹாஸ்பிட்டல் வந்துவிட்டதை உணர்ந்து கீழே இறங்கினாள்.
“பேசாம வேற ஹாஸ்பிட்டல் போய்டுவோமா?…” என கிண்டலாய் கேட்டவன்,
“டைம் ஆச்சு மொழி. அவங்க ரொம்ப பிஸி வேற. நமக்காக வெய்ட் பன்றாங்க…” எனவும் தான் மற்றதை பின்னுக்கு தள்ளி அவனோடு சேர்ந்து நின்றவள் அவனின் கையை பிணைத்துக்கொள்ள,
“உன்னோட பெரிய ரோதனைடி. ஓடியா போக போறேன்…” என முறைக்க,
“போய்ட கூடாதேன்னு தான் பிடிச்சிருக்கேன். போதுமா?…” என்றாள் பட்டென்று.
“என்னவோ பண்ணு…” என கூட்டிக்கொண்டு வந்தவன் நேராக மொழியை செக்கப்பிற்கு அழைத்துக்கொண்டு அந்த டாக்டரை பார்க்க வந்துவிட்டான்.
“ஹலோ டாக்டர்…” என இவன் கதவை தட்டி உள்ளே வரவுமே அவனை வரவேற்ற டாக்டர் கல்பனா,
“வாங்க மிஸஸ் ஜீவன்…” என்று தேன்மொழியையும் இன்முகமாய் வரவேற்றார்.
“உட்காருங்க…” என சொல்லிவிட்டு அவளிடம் பொதுவாய் பேசியவர் ஜீவனோடும் சிறிது நேரம் பேசிவிட்டு பின் அவளின் உடல்நிலை பற்றி பேச ஆரம்பித்தார்.
அதன் பின் செக்கப் செய்து முடித்தவர் ஜீவனுக்கு மீண்டும் ஒரு வாழ்த்தையும் சொல்லிவிட்டு அவளுக்கான மருந்து, மாத்திரைகளை எழுதி தந்தவர் வழக்கமாக சிறு அறிவுரைகளை சொல்லிவிட்டு எந்தெந்த தேதிகளில் வரவேண்டும் என்கிற விஷயத்தையும் சொல்லிவிட்டு அனுப்பினார்.
அவரிடம் கேட்கவேண்டிய சந்தேகத்தை கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டு வெளியே வந்த ஜீவனின் கையை பிடித்து கிள்ளினாள் மொழி.
“என்னையும் வச்சுட்டு என்ன பேசறீங்க நீங்க?…” என கூச்சத்தில் முகம் சிவந்தவளாய் சொல்ல,
“இதெல்லாம் பேஸிக் டவுட்ஸ் மொழி. தெரிஞ்சுக்கறது ஒரு அப்பாவா எனக்கும் நல்லது இல்லையா? எனக்குன்னு ஒரு ரெபுடேஷன் இருக்குதே…”
“ஆஹா, ரொம்பத்தான். உங்களை என்ன நினைப்பாங்க?…” என பேசிக்கொண்டே நடக்க,
“இதெல்லாம் எல்லா புருஷனும் கர்ப்பமா இருக்கற பொண்டாட்டியை செக் பன்ற டாக்டர்க்கிட்ட கேட்டுக்கறது தான். அஸ் எ டாக்டர் எனக்கே தெரிஞ்சாலும் இன்னும் கொஞ்சம் தெளிவு படுத்திக்கறது நல்லது தானே?. நெறத்து நோ சொன்ன மாதிரி நீ என்னை ஏமாத்திட்டா…” என பேசி பேசியே அவளை ஒரு வழி செய்தான்.
“ஜீவன் தம்பி…” என்ற குரலில் இருவருமே பின்னால் திரும்பி பார்க்க அங்க வர்ஷாவின் தாய் நின்றுகொண்டு இருந்தார். அவரை பார்த்ததுமே முகம் சுளித்தவன்,
“மொழி, வா போகலாம்…” என அவளை பிடித்துக்கொண்டு வேகமாய் நடக்க ஆரம்பிக்க,
“தம்பி தயவு செஞ்சு ஒரு நிமிஷம் கேளுங்க…”
“மொழி, நிக்காதன்னு சொல்றேன். நீ ஏன் ஸ்டாப் பன்ற?…” என அவரிடம் காண்பிக்க பிடிக்காத கோபத்தை தேன்மொழியிடம் காண்பிக்க,
“இருங்க, என்ன சொல்றாங்கன்னு பார்ப்போமே…” என்றாள் தேன்மொழி.
அவளுமே கோவிலில் வைத்து அவரை பார்த்தாள் தானே. அவருக்கும் தேன்மொழியை பார்த்ததும் தெரிந்துபோனது.
“இங்க பாரும்மா, ஒரே ஒரு உதவி வேணும்…” என கேட்டதுமே நன்றாக அவரை பார்த்து திரும்பி நின்றவள்,
“உதவின்னா? என் புருஷனையா கேட்கறீங்க?…” என கேட்க,
“மொழி…” என அதட்டினான் ஜீவன்.
“நீங்க கொஞ்சம் பேசாம இருக்கீங்களா?…” என அவனுக்கு மேல் அவனை அதட்டியவள்,
“இல்ல உதவின்னு கேட்டீங்களே. அதான் என் புருஷன் தான் அந்த உதவியை செய்யனுமான்னு கேட்டேன்…” என்றவளின் பேச்சில் இப்போது ஜீவன் வாயை பிளந்து நிற்க,
“இல்லம்மா, அது வந்து…” என பேச முடியாமல் வர்ஷாவின் தாய் திணற,
“ஒன்னும் இல்லைன்னா ஏன் கூப்பிட்டு தொந்தரவு பன்றீங்க?…” என சொல்லி தேன்மொழி திரும்பிக்கொள்ள,
“அம்மாடி,நில்லும்மா. தம்பி நில்லுங்க…” என அவர்களின் பின்னால் வந்தவர்,
“எனக்குன்னு இருக்கறது என் பொண்ணு மட்டும் தான். தயவு செஞ்சு நில்லும்மா…” என்ற அவரின் அழுகை குரலில் தான் இருவருமே நின்றனர்.
அப்போது தான் அவரின் முகத்தில் கவனத்தை செலுத்த சிறு கருப்புநிற போட்டு மட்டும் தான் இருந்தது.
‘சந்தானத்திற்கு என்னவாகிற்று?’ என கேட்க நினைத்தாலும் வாயை திறக்கவில்லை ஜீவன்.
“வர்ஷாக்கா அப்பா?…” என தேன்மொழி கேட்க பல்லை கடித்தவன்,
“யாரோ என்னவோ பேசறாங்கன்னா நீயும் உரிமை கொண்டாடுவியா? தொலைச்சிடுவேன் ராஸ்கல். வா போகலாம். நமக்கு இது தேவையில்லாதது…” என தேன்மொழியை தன்னோடு இழுக்க,
“இல்லை இனி அப்படி கூப்பிடலை. ப்ளீஸ்…” என்றவளின் கெஞ்சலில் வேண்டாவெறுப்பாய் நின்றான் ஜீவன்.
“அவரு ஒரு வருஷம் முன்னாடியே தவறிட்டாரும்மா. தொழில் போட்டில அவரை கொன்னுட்டானுங்க. எங்களால அதை கூட கொலைன்னு நிரூபிக்க முடியலை. இப்ப சொந்தங்கள் சிலரோட ஆதரவோட எதோ இருக்கோம்…” என அழுதுகொண்டே சொல்ல ஜீவனுக்கு தன் தந்தையின் ஞாபகம் தான்.
முகம் இருக்க கேட்டுக்கொண்டு நின்றவன் மனதில் கிஞ்சித்தும் இரக்கமில்லை. கல் போலவே நின்றான்.
“சரி அதுக்கு இப்போ நாங்க என்ன செய்யனும்? நீங்க இன்னும் விஷயத்துக்கு வரவே இல்லை…” என தேன்மொழி பட்டென்று கேட்க,
“அது வந்தும்மா…” என ஜீவனை பார்த்து தயங்கியவர்,
“வர்ஷாவுக்கு கொஞ்சம் மனநிலை சரியில்லை. அவளோட ஞாபகத்துல இருக்கறது இவர் மட்டும் தான். நாங்க எத்தனையோ டாக்டர்ஸ் பார்த்துட்டோம். எந்த பிரயோஜனமும் இல்லை. யாரையும் அவ அனுமதிக்கவும் மாட்டேன்றா. தெய்வாதீனமா இந்த ஹாஸ்பிட்டல்ல ஜீவனையும் பார்த்துட்டோம்…”
அவர் அவனின் பேரை சொல்லவும் புருஷன் பொண்டாட்டி இருவருமே அவரை ஒரே சேர முறைக்க,
“இல்லை, டாக்டர் தம்பியை பார்த்துட்டோம். அதான் அவர் உதவி இருந்தா அவர் முயற்சி பண்ணினா என் பொண்ணை குணப்படுத்த முடியும்…” என கை கூப்ப,
“அடடா, ஆனா பாருங்க இவர் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கற படிப்பு படிக்கலை. காய்ச்சலுக்கு ஊசி போடற படிப்பு தான் படிச்சிருக்கார்…” என தேன்மொழி குத்தலாய் பதில் சொல்ல இப்போது மூக்கில் விரலை வைக்காத குறைதான் ஜீவனுக்கு.
வர்ஷாவின் தாய்க்கு தேன்மொழியின் இந்த பேச்சு கோபத்தை வரவழைத்தாலும் இது கோபத்திற்கான சமயமல்லவே. எப்படியாயினும் ஜீவனிடம் மன்றாடியேனும் தன் பொண்ணை காப்பாற்றவேண்டும் என்ற சுயநலம் மட்டுமே விஞ்சி இருந்தது.
“இன்னொருத்தவங்க கண்ணீர் உங்களுக்கு எப்படி இருக்குமோ? ஆனா எங்களுக்கு அப்படி இல்லை. என்ன செய்யனும்னு சொல்லுங்க. ஆனா அதை செய்யனுமா வேண்டாமான்னு அவரோட பொண்டாட்டியா நான் தான் முடிவு பண்ணுவேன்…” என்றாள் தேன்மொழி கறாராக.