புன்னகை – 3
“தேனு இங்க வா…” என்ற தியாகுவின் கண்டிப்பான பேச்சில் எழுந்து சென்று சுவற்றோடு ஒடுங்கி நின்றாள்.
“உன் நம்பரை நீ தான் குடுத்தியா?…” என கேட்க,
“அவங்க தான் கேட்டாங்க அண்ணா…” தேன்மொழி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே கார்மேகம் வந்துவிட,
“அப்பா நான் பேசிட்டு இருக்கேன்ல. இங்க ஏன் வந்தீங்க?…” என்று அவரையும் அவன் அதட்ட,
“இப்ப என்ன ஆகிடுச்சுன்னு அவளை மிரட்டிட்டு இருக்க?…”
“அந்த பையன்ட்ட இவ பேசிட்டு இருக்கா…” தேன்மொழியை குற்றம் சொல்வதை போல பேச,
“கல்யாணம்னு பேசி முடிவு பண்ணின பின்னால போன் பண்ணினா பேசாம என்ன செய்வா?…”
“அது மத்தவங்களுக்கு சரி. தேனு அப்படியா? நான் சொல்றது உங்களுக்கு புரியாது அப்பா. நீங்க ஒதுங்கி இருங்க…” என்றவன்,
“இங்க பாரு தேனு. ஏற்கனவே ஊருப்பட்ட பேச்சு வாங்கியாச்சு உனக்காக நாங்க. இப்ப நாங்க சொல்றதை கேட்டுட்டு பேசாம இரு. கல்யாணத்துக்கு பின்னாடி உன்னை யாரும் கேள்வி கேட்க போறதில்லை…” என வெடுக்கென்று பேச அப்படியே குறுகிப்போய் நின்றாள் தேன்மொழி.
“என்ன பேச்சுடா பேசற. இனி ஒரு வார்த்தை அவளை நீ பேசி பாரு…”
“எனக்கு உரிமை இல்லைன்னு சொல்றீங்களா? எல்லாம் அவ நல்லதுக்கும், நம்ம குடும்ப மானத்துக்காகவும் தான் பேசிட்டு இருக்கேன். போன் வந்தா கொண்டு வந்து உங்கக்கிட்ட குடுக்கவேண்டியது தானே? அதென்ன அதிகப்ரசங்கித்தனம்?…”
“தியாகு…” என்று பத்மா அவனை பிடித்து தேன்மொழி இருந்த அறையில் இருந்து வெளியே கூட்டிக்கொண்டு வந்தார்.
க்ரைண்டரில் மாவை தோண்டிக்கொண்டு இருந்திருப்பார் போலும். அப்படியே கையை கூட கழுவாமல் வந்துவிட்டவர் மகன் பேசிய பேச்சில் வெளியே செல்ல கிளம்பி இருந்தவன் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வர,
“அம்மா, என்ன பன்றீங்க? பாருங்க ஷர்ட் எல்லாம் மாவாகிடுச்சு…” என்று அவரை கத்தியவன் தனது சட்டையை எரிச்சலுடன் பார்க்க,
“இதை விட தேனு மனசு புண்ணாகிடுச்சு. உன் வாய்ல இருக்கறது என்ன நாக்கா? இல்லை தேள் கொடுக்கா? நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்க?…” என்று கண்கலங்க பத்மா கேட்க,
“ப்ச், இப்ப அவளை என்ன சொல்லிட்டேன்? கல்யாணத்துக்கு பின்னாடி பேசட்டும்னு தானே சொல்றேன். நான் கேட்க போறேனா? நல்லதுக்கு சொன்னாலும் காலமில்லை…” என்று கத்திவிட்டு அறைக்குள் சென்றவன் வேறு உடையை போட்டுக்கொண்டு வெளியே செல்ல,
“அப்பா…” என அவனின் காலை கட்டிக்கொண்டான் மகன் ஆதித்.
“ஆதி கண்ணா…” என மகனை தூக்கிகொண்டவன் மனைவியை பார்த்து,
“உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன். வெளில கிளம்பும் போது தடங்கலா காலை கட்டறது, வழி மறைக்கறது கூடாதுன்னு. போய் தண்ணி எடுத்திட்டு வா…” என்று சொல்ல,
“அவன் சின்ன குழந்தைங்க. உங்க சகுனத்தை எல்லாம் குழந்தைட்டையுமா காண்பிப்பீங்க? நல்லா இல்லை…” என்று முணுமுணுத்தபடி தண்ணீர் எடுத்துக்கொண்டு வர சென்றவள் திரும்பி வரும் பொழுது மகனுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்தான் தியாகு.
தியாகுவை பார்த்தபடி இன்னும் அங்கேயே பத்மா நிற்க அறைக்குள் பெரியப்பாவின் காலை கட்டிக்கொண்டு தலை சாய்த்து அமர்ந்திருந்தாள் தேன்மொழி.
“அப்பா சொன்னது புரிஞ்சதா ஆதி?…” என கேட்க மூன்று வயது குழந்தைக்கு என்ன புரிந்ததோ? தலையை மட்டும் ஆட்டியது.
“பேட் ஹேபிட் எல்லாம் கூடாது…” என்று மீண்டும் சொல்லியவன் தண்ணீரை குடித்துவிட்டு மனைவியிடம் தந்தவன் தாய் அங்கிருந்து அகன்றதை கண்டுவிட்டு மனைவியின் கன்னத்தை தட்டிவிட்டு,
“கத்துக்கோ…” என்று சொல்லிவிட்டு செல்லவும் அவனின் தலை மறைந்ததும் சுலோச்சனா குழந்தையுடன் தேன்மொழி இருந்த அறைக்குள் நுழைந்தனர்.
“தேனு…” என பத்மா அவளை தாங்கிக்கொண்டிருக்க,
“என்னை இங்க ஏன் கூட்டிட்டு வந்தீங்க பெரிம்மா?…” என அவரிடம் உரிமையாக கோபிக்க,
“நீ இங்க வராம எங்க போவியாம்? என்ன பேச்சு இது தேனு…” சுலோச்சனா அதட்ட,
“தேனு அழாத…” என அவளின் கண்ணீரை துடைத்தான் குழந்தை ஆதிக்.
“அவனை பத்தி தான் உனக்கு தெரியுமே. இன்னைக்கு நேத்தா அவன் இப்படி இருக்கான். எல்லாத்துக்கும் சகுனம். ஊர் என்ன சொல்லும். அவன் பார்க்கான், இவன் பேசறான்னு வீட்டுல இருக்கறவங்க தலையை போட்டு உருட்டிட்டு இருப்பான்…” என்று அவளின் தலையை கோதிவிட,
“நைட் ஷிவாண்ணா பேசறேன்னு சொன்னான். அதுக்கும் கூட நான் பேச கூடாதுன்னு பெரியண்ணா சொன்னாலும் சொல்லும்…”
“ப்ச், அதெல்லாம் சொல்லமாட்டான். நீ இதை எல்லாம் பெருசு பண்ணாத. நாங்க இல்லையா உனக்கு?…” கார்மேகம் அவளுக்கு ஆறுதலாய் சொல்ல,
“அம்மாவை ரொம்ப தேடுது பெரிப்பா. ரொம்ப கஷ்டமா இருக்குது. என்னால உங்க எல்லாருக்கும் தான் பிரச்சனை…”
“தேனு உன்கிட்ட பலதடவை சொல்லிட்டேன். புரியாம பேசக்கூடாதுன்னு. முடிஞ்சதையே நினைச்சுட்டு இருக்காம கொஞ்சம் தெளிவா இருக்க பாரு. உன்னால எதுவும் இல்லை. இதுதான் நடக்கனும்னு இருக்குது. நடந்திருச்சு. அவ்வளோ தான். அதை தாண்டி வரப்பாரு. இப்ப போய் முகத்தை கழுவிட்டு வா. ஷிவா பார்த்தா திட்ட போறாரு…”
சுலோச்சனா சொல்லவும் சரி என்று தலையசைத்தவள் எழுந்து பாத்ரூமிற்கு சென்று முகம் அலம்ப,
“நீங்க போங்க அத்தை. நான் கூட்டிட்டு வரேன்…” என்று மாமியாரையும், மாமனாரையும் அனுப்பி வைத்தாள் சுலோச்சனா.
திருமணமாகி வந்ததில் இருந்து கணவனை புரிந்துகொள்ள முடியாது நிறையவே தடுமாறினாள்.
‘சில வீட்டுல பொண்ணுங்க தான் இந்த சகுனம், நேரம் காலம்னு பார்ப்பாங்கன்னா இவர் எல்லாத்துக்கும் மேல இருக்காரு’ என தனது பிறந்தவீட்டில் தியாகுவின் மீதான அதிருப்தியை பகிர்ந்துகொள்ளாத நாள் இல்லை.
இன்று வரை அதை சகித்துக்கொண்டு போய்க்கொண்டு தான் இருக்கிறாள். வேறு வழியும் இல்லையே?
“அண்ணி, நீங்க ஏன் வெய்ட் பன்றீங்க? நான் தலைய சீவிட்டு வரேன். அண்ணா வந்தா அதுக்கும் பேசும்…” என்றவளை பார்க்கவே அத்தனை கவலையாய் இருந்தது.
தன் திருமணத்தில் அவளின் கலாட்டாக்கள் சந்தோஷங்கள் என்னென்ன? நினைக்க நினைக்க இன்று நெஞ்சம் வலித்தது.
“பரவாயில்லை இருக்கறேன். நீ தலை பின்னு…” என்ற சுலோச்சனா,
“மாப்பிள்ளையை பார்த்தியா? உனக்கு தெரிஞ்சவர்ன்னு சொன்னியே. எப்படி தெரியும்?….” என கேட்க,
“அவர் எங்க ஊர்ல தான் மெடிஸின் படிச்சாரு அண்ணி. அப்போ தெரியும்…”
“அவர் டாக்டர்…”
“ஆனா ஒரே பஸ் ஸ்டாப். அப்படி பழக்கம். சொல்ல போனா வர்ஷாக்கா வச்சு தான் பழக்கம்…”
“வர்ஷா யாரு?…” சுலோச்சனாவிற்கு சட்டென்று புரியவில்லை.
“அவங்க தான் அவரோட பர்ஸ்ட் வொய்ப்…” என்றவள் தலை பின்னுவதை பாதியிலேயே விட்டுவிட்டு அண்ணியின் அருகே வந்து அமர்ந்தாள்.
“என்ன நடந்ததுன்னு தெரியலை அண்ணி. அவங்க ரெண்டுபேருமே ரொம்ப லவ் பண்ணினாங்க…”
“உனக்கு தெரியுமா தேனு?…”
“ஹ்ம்ம், நல்லாவே தெரியும்…” என தேன்மொழி சொல்ல வர்ஷா ஜீவனை வேண்டாம் என்ற காரணம் இன்னும் தேன்மொழிக்கு சொல்லப்படவில்லை.
இப்பொழுது தான் சொல்வதும் உசிதமாக இருக்காதென்று நினைத்த சுலோச்சனா அமைதியானாள்.
ஏற்கனவே அதற்கும் தியாகு ஆடி தீர்த்திருந்தான் ஜீவனின் விவாவகரத்திற்கான காரணத்தை தெரிந்து.
“ஏற்கனவே இப்படி அவசரமா ஒருத்தனுக்கு கட்டி வச்சு பத்தே நாள்ல இவ திரும்ப வந்து சேர்ந்தா. திரும்பவும் இப்படி ஒருத்தனுக்கு கட்டிவைக்க நினைக்கறீங்க. திரும்பவும் பிரச்சனை ஆகி கண்ணை கசக்கிட்டு வந்தா என்ன பண்ணுவீங்க? எத்தனை கல்யாணம் செய்வீங்க? அவ ராசி தான் எல்லாருக்கும் தெரியுதே….”
இப்படி தேன்மொழி வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் வார்த்தைகளை விஷமென அவன் கக்க,
“நாங்க எல்லாம் விசாரிச்சாச்சு. அந்த பொண்ணு டைவர்ஸ் வேணும்னு தான் அப்படி ஒரு பழியை தூக்கி அந்த பையன் மேல போட்டிருக்குது. தெரியாம நாங்க ஒன்னும் பொண்ணை குடுக்க நினைக்கலை…”
“நீங்க மாப்பிள்ளை பார்த்த லட்சணம் தான் தெரியுமே. அவ ஜாதகத்துல கோளாறு இருக்குனு நான் சொல்லியும் ஒருத்தனை கட்டி வச்சு அவன் உயிரே போய்ருச்சு. விரும்பி கேட்காங்க. குடுப்போம்னு குடுத்து இப்ப நம்ம வீட்டையே சகுன தடையா பார்க்கற மாதிரி பண்ணிட்டீங்க….”
“தியாகு, உனக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கிக்கோ. நாங்க எங்க பொண்ணுக்கு கல்யாணத்தை பார்த்துக்கறோம். முதல் தடவை நடந்ததுக்கு யாரும் பொறுப்பு இல்லை. அது விதி விட்ட வழி. அப்படியே எல்லா தடவையும் நடக்கும்னு சொல்ல கூடாது. தேனு மனசுக்கு அவ நல்லா இருப்பா…”
“நல்லா இருப்பா. இருந்தா சந்தோஷம் தான். நான் என்ன அவளுக்கு எதிரியா? ஆனா இந்த சமூகம்னு ஒன்னு இருக்கே. அதுக்கும் அஞ்சி தான் நாம வாழனும். சும்மா சும்மா கல்யாணம் செஞ்சு வச்சுக்கிட்டே…”
“தியாகு…”என்ற கார்மேகத்தின் சத்தத்தில் திடுக்கிட்டு வார்த்தையை நிறுத்தி அவரை பார்த்தான்.
“இன்னொரு வார்த்தை இப்படி பேசின…”
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீங்க என்னை கத்தறீங்க?…”
“இதுக்கு மேல என்னடா சொல்லனும்? அவ வயசென்ன? உன் வயசென்ன? சின்ன பொண்ணு வாழ்க்கை இப்படி பூக்கறதுக்குள்ள கருகிடுச்சென்னு நாங்களே மருகி போய் இருக்கறோம். கொஞ்சமும் மனசாட்சியோட பேசாம ஊருக்கு பார்த்து பேசறியே. நீ எல்லாம் என்னடா அண்ணன்?…”
“அம்மா, பார்த்தீங்களா அப்பா பேசறதை…” என்று பத்மாவிடம் அவன் திரும்ப,
“அவர் ஒன்னும் தப்பா பேசலை. நீ பேசினதுக்கு அவர் இப்படி பேசறது ரொம்ப கம்மி தான். இதுவே உன் கூட பொறந்த பொறப்பா இருந்தா கவலை இல்லாம இருந்திருப்பியா? இப்படி பேச உனக்கு மனசு வருமா? நாளைக்கு நான் அவ நிலைமைக்கு வந்தாலும் என்னையும் இப்படித்தான மூலையில உட்கார சொல்லுவ. அம்மான்னா நினைப்ப?…”
“அம்மா, இப்ப என்ன பேச்சு இதெல்லாம்? என்ன கூட பொறந்த பொறப்பு, பொறப்பு இல்லைம்மா. இது யாரா இருந்தாலும் நான் இப்படித்தான் நினைப்பேன். கல்யாணம் சரி வரலைன்னா விட்டுட்டு வேற பார்க்கனும். வேலையை பார்த்துட்டு இருக்கனும்…”
“என்ன சொல்ல வர? கல்யாணம் செய்யாம இப்படியே இருக்க சொல்றியா?…” கார்மேகம் கோபமாய் கேட்க,
“ஊரெல்லாம் சிரிக்கறாங்க. அப்பாம்மாவும் தொலைச்சு, புருஷனையும் தொலைச்சு இருக்கறவளுக்கு திரும்ப, திரும்ப கல்யாணம் செஞ்சு வைக்க முயற்சி பன்றாங்கன்னு கேலி பன்றாங்க…”
“ஆயிரம் பேசுவானுங்க ஊர்க்காரனுங்க. கேட்டுட்டு நிப்பியா?…”
“அவங்களுக்கு மத்தியில தான் நாம வாழறோம். கேட்காம என்னால கடந்து போக முடியாதுப்பா. எத்தனை மாப்பிள்ளை பார்த்து எல்லாம் கூடி வந்து கடைசில நின்னு திரும்ப திரும்ப இதையே செஞ்சு எல்லாரும் இளக்காரமா பேச வச்சுடீங்க…”
“பேசுடா பேசு. வீட்டு மனுஷங்க முக்கியமில்லை. எவனோ சொல்றது முக்கியம்னு பேசறியே. இதுக்குன்னே என் பொண்ணு உங்க எல்லார் மூஞ்சியிலையும் கரியை பூசற மாதிரி வாழ்ந்து காமிப்பா. அன்னைக்கு அவக்கிட்ட போய் நிக்கத்தான் போறீங்க…”
“என்னவோ பண்ணிட்டு போங்க. ஆனா நான் எதுலையும் தலையிடமாட்டேன். என்னை கேட்க கூடாது…” என்று பேசியிருந்தான் தியாகு.
அவன் மீதான கொஞ்சம்நஞ்சம் மதிப்பும் மனைவியான சுலோச்சனாவின் மனதில் அன்று இறங்கிபோனது.
ரத்த சம்பந்தம். பிறந்ததில் இருந்து பார்த்து வளர்ந்த சொந்த தங்கைக்கே இந்த நிலைமையா? என்று உள்ளுக்குள் அவனை திட்டி தீர்த்தாள்.
“அண்ணி என்ன அப்படியே உட்கார்ந்துட்டீங்க?…” என்று தேன்மொழி அவளின் கையை பிடித்து அழைத்ததும்,
“ஹ்ம்ம் இல்லம்மா, சும்மா தான். ஆமா நாளைக்கு ஹோட்டலுக்கு போகனுமா?…”
“ஹ்ம்ம், ஒரு நாள் தானே லீவ் சொன்னேன். போகனும் அண்ணி. என்ன புதுசா கேட்கறீங்க? நேத்தே சொல்லிருந்தேன்ல…” என்றதும்,
“ஹ்ம்ம், ஆமா, சொன்ன தானே? நான் தான் ஏதோ ஞாபகத்தில் மறந்துட்டேன்…” என்று தடுமாறினாள்.
வர்ஷா பற்றி தேன்மொழி பேசவும் கொஞ்சம் குற்றவுணர்ச்சி தலைதூக்கியது சுலோச்சனாவிற்கு.
“சரி சரி, நீ மாடியில இருக்கற துணியை எடுத்துட்டு வா. நான் போய் கிரைண்டரை கழுவறேன். இல்லைன்னா அத்தை அதை தூக்கிட்டு இருப்பாங்க…” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.
பத்மா அப்படியே ஓரமாய் அமர்ந்திருக்க கையில் இருந்த மாவும் காய்ந்துபோய் இருந்தது. கிரைண்டரில் மாவு மையாய் அரைபட்டு ஓடிக்கொண்டிருந்தது.
“அத்தை என்ன இது? இதை பார்க்கலையா நீங்க?…” என கேட்டு சுவிட்சை அமர்த்தியவள் கிரைண்டரை தொட அது சூடாகி இருந்தது.