“அடடா மறந்துட்டேன் சுலோ…” என எழுந்து வேகமாய் வந்தவர் மாவை வழிக்க போக,
“இதோட வழிச்சு எடுத்தா சுட போகுது. நீங்க போய் கையை கழுவுங்க. நான் பார்த்துக்கறேன்…” என்றவள் அதனை மெதுவாய் தண்ணீரில் நனைத்து சுத்தம் செய்து அந்த மாவை பாத்திரத்தில் ஊற்றி கரைத்து வைத்தாள்.
“இட்லி ஊத்த முடியாது அத்தை. ரொம்ப நைஸா போச்சு. தோசையா ஊத்தி காலி செஞ்சிடுவோம். அதுவும் எப்படி வருமோ?…” என சொல்லிக்கொண்டே,
“அத்தை ஒன்னு கேட்கனும்….”
“சொல்லும்மா என்ன விஷயம்?…” என பாத்திரங்களை கழுவியபடி பத்மா கேட்க,
“ஜீவன், வர்ஷா டைவர்ஸ் பத்தி இன்னும் தேன்மொழிட்ட ஏன் சொல்லலை? அதுவும் இப்ப அவளுக்கு தெரிஞ்சவர். வர்ஷாவையும் தெரிஞ்சிருக்கு நம்ம தேனுவுக்கு…” தேன்மொழி கீழே இறங்கி வருகிறாளா என பார்த்துக்கொண்டே மெல்லிய குரலில் கவனமாய் சுலோ பேச,
“முதல்ல சொல்லலாம்ன்னா எதையும் கேட்டுக்கற மனநிலையில தேனு இல்லை. இன்னொருக்க கல்யாணமே வேண்டாம்னு சொன்னவ நம்ம பேச்சை கேட்டு சரின்னதோட சரி. இதுக்கு முன்னால வந்த வரனை பத்தி சொல்லி பேச்சுவார்த்தை போயி அதுவும் நின்னுடுச்சு…”
“மனசளவுல ரொம்பவே உடைஞ்சுட்டா. இப்ப இவரை பத்தி பேசலாம்ன்னா எனக்கு எதுவும் கேட்கவேண்டாம். நீங்க பாருங்க, போதும்னு விட்டுட்டா. அதான் சொல்லலை. இன்னொரு கரணம் எதுக்கு இப்பவே சொல்லி ஏற்கனவே பிடிப்பில்லாம இருக்கறவ மொத்தமா நம்பிக்கை இல்லாம போய்ட்டா? அதான் சொல்லலை…”
“இதுவரை சொல்லலை சரிங்கத்தை. இப்போ சொல்லலாம்ல. அவளுக்கும் தெரியட்டுமே…” சுலோ தேன்மொழிக்காக பேச,
“சொல்றதை பத்தி எதுவும் இல்லைம்மா. பார்த்த தானே? தியாகு பேசினதை. இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கனும். எந்த ஒரு தடையும் இல்லாம. எதாச்சும் தடங்கல் ஆச்சுன்னா தேனுக்கு ஒரு நல்லது பண்ண விடமாட்டானோன்னு பயமா இருக்குது…”
“அதுக்கும் இதுக்கும் என்னத்தை சம்பந்தம்? எனக்கு புரியலை….”
“தெரியாதவங்க பிரச்சனையை விட தெரிஞ்சவங்க பிரச்சனையை பேசினா அதுக்கு தீர்வை தான் தேடனும்னு நினைப்பாங்க. தேனு அப்படித்தான். மாப்பிள்ளை வீட்டுல அந்த பொண்ணே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாங்க. இவ பாட்டுக்கு பேசறேன்னு கிளம்பி கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா?…”
“அதெல்லாம்…”
“இல்லை சுலோ. கல்யாணம் முடியட்டும். எதுவா இருந்தாலும் அவரும் தேனுவும் பேசிக்கட்டும். அவர் பக்கம் எந்த தப்பும் இல்லைன்றப்போ தேனு புரிஞ்சுப்பா. இப்ப எனக்கு இதுதான் படுது. தப்புன்னு நினைக்கறியா நீ?…” என்றவரை ஒரு நொடி யோசனையாக பார்த்தவள்,
“ஹ்ம்ம், நான் ஒன்னும் தேனுட்ட சொல்லலை அத்தை. உங்க விருப்பம்…” என்று சொல்ல,
“அண்ணி ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்…” என தேன்மொழி குரல் கேட்க,
“சரி அவளை பாரு. ஷிவா கூப்பிடறேன்னு சொன்னான்ல. லைன்ல வரப்போ ஒரு சத்தம் குடு. நான் இதை எல்லாம் கழுவி வச்சிட்டு வந்திடறேன்…” என்றவர் மிஞ்சிய பாத்திரங்களை தேய்க்க ஆரம்பித்தார்.
அடுத்த இரண்டு நாட்களும் ஷிவாவிடமிருந்து அழைப்பு வரவில்லை. வேலை அதிகமென மெசேஜ் மட்டுமே அனுப்பிவைத்திருந்தான்.
நியூயார்க்கில் பணியாற்றுபவன் எத்தனை வேலை இருந்தாலும் குடும்பத்தோடான நேரத்தை மட்டும் அவன் ஒதுக்கியதே இல்லை. முடியாத சமயங்களை தவிர்த்து தினமும் சிறிது நேரமாவது வீட்டினரிடம் பேசிவிடுவான்.
அன்றும் இரவு உணவை எல்லாம் முடித்துவிட்டு அவன் அழைக்கும் பொழுது பார்த்துக்கொள்ளலாம் என அனைவரும் உறங்க ஆயத்தமானார்கள்.
தியாகுவும் குழந்தையும் உறங்கிவிட சற்று நேரத்திற்கெல்லாம் ஷிவாவிடமிருந்து சுலோச்சனா எண்ணிற்கு அழைப்பு வந்துவிட்டது.
அவனின் அழைப்பிற்காக தான் காத்திருந்தது அனைவரும். போனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் தேன்மொழி அருகே அமர்ந்துகொண்டாள்.
“ஹலோ அண்ணி எப்படி இருக்கீங்க?…” என சுலோவை பார்த்ததும் கேட்டவன்,
“எங்க கல்யாணப்பொண்ணு, முகத்தையே காட்டமாட்டேன்றா?…” என்று சுலோவின் அருகில் அமைதியாய் அமர்ந்திருந்த தங்கையை பார்த்து சிரிப்புடன் கேட்க,
“இங்க தான் இருக்கேன். நீ தான் அண்ணியை பார்த்ததும் அவங்கட்ட பேசின…” என்று தேன்மொழி மொபைலை கையில் வாங்கி வைத்து பேச,
“நீ இந்த உலகத்துல தான் இருக்கியான்னு டெஸ்ட் பண்ணினேன். பரவாயில்லை. இருக்க இருக்க…” என கிண்டல் பேச,
“இந்த உலகமே வேண்டாம்னு நான் எப்பவும் நினைச்சதில்லை. இதை விட்டு எங்க போவேன் நான்?…”
“ஸ்யப்பா இப்பவே கண்ணை கட்டுது. உன் தத்துவத்தை யாரும் இங்க கேட்கலை. மாப்பிள்ளையை பார்க்க போனியே. பேசினியா? பழக எப்படி இருக்கார் ஆளு?…” என்று ஷிவா கேட்டதும் மொபைலை பிடுங்கிய சுலோ அன்று நடந்ததை அனைத்தையும் அவனிடம் சொல்ல,
“பேசாம அவன் தூங்கறப்போ வாய்க்கு பெவிக்விக் போட்டு ஒட்டிருங்க அண்ணி. ரெண்டுநாள் வாயை திறக்காம இருந்தா நிம்மதியா இருக்கும். அவனை நான் என்னைக்கோ அண்ணன்ல இருந்து டைவர்ஸ் பண்ணிட்டேன்…” என ஷிவா சொல்ல,
“ப்ச், இப்ப இதை அவன்ட்ட சொல்லனுமா நீங்க?…” என சுலோவை முறைத்தாள் தேன்மொழி.
“பார்ரா சிட்டிக்கு கோபம்லாம் வருது…” என்று தங்கையை கிண்டல் பண்ணியவன்,
“சரி மாப்பிள்ளை நம்பரை மெசேஜ் பண்ணு. நான் அவரை பேசிக்கறேன்…”
“என்ன பேச போற?…”
“உன்னை தான பேச கூடாதுன்னான். நான் பேசுவேன். எங்க என்கிட்டே சொல்ல சொல்லு. அவனும் அவன் நல்லநேரமும்…” என ஷிவா பல்லை கடிக்க,
“ஏன்டி அவன் பேசினா கூப்பிடுங்கன்னு சொல்லியிருந்தேன். நீங்க என்னன்னா…” என ஹாலுக்கு வந்து சேர்ந்தார் பத்மா.
“என்னம்மா பன்றீங்க?…” என தாயிடம் பேச,
“உனக்கு லீவ் என்னாச்சு ஷிவா? தேதிக்கு லீவ் கிடைச்சுடும் தானே?…” என முக்கிய கேள்வியை கேட்க,
“அம்மா, அதுக்கு முன்னாடியே வரவேண்டியதா இருக்கும் போல. அந்த தேதிக்கு எனக்கு நோ லீவ். நான் இங்க கண்டிப்பா இருக்கனும். வரதே பத்துநாள் லீவ்ல தான்…” என்று சொல்ல,
“என்னடா இது? உன்னை நம்பி நாங்க இங்க கல்யாண தேதியை குறிச்சு வச்சா?…”
“ஆளுக்கு முன்ன தேதியை குறிச்சுட்டு என்னவோ எனக்குன்னே குறிச்ச மாதிரி. ம்மா சும்மா இருங்க…”
“இப்ப என்னடா பன்றது?…” என பத்மாவும் யோசனையாக,
“என்னவாம்?…” என்று வந்து எழுந்து விட்டான் தியாகு.
“மூக்கு வேர்த்திடும் நான் பேசறப்போ மட்டும்…” என ஷிவா முணங்க,
“என்னடா என்னமோ சொல்லிட்டு இருக்க?…” என்று அவனுக்கு முன்னால் அமர தேன்மொழி எழுந்து தள்ளி சென்று நின்றாள்.
“உன்னை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். அதைத்தான் இங்க இருக்கற காக்கா குருவிங்கட்ட சொல்லிட்டு இருக்கேன்…” ஷிவா நக்கலாய் பேச,
“நீ சொல்லிருப்ப. எனக்கு தான் தெரியுமே உன்னை பத்தி. நான் அதை கேட்கலை. ஊருக்கு வரதை பத்தி என்ன சொல்லிட்டு இருந்த?…”
“லீவ் கல்யாணத்துக்கு பதினஞ்சு நாள் முன்னாடியே கிடைக்குது. கல்யாணத்துக்கு இருக்க முடியாது. அதான் என்ன செய்யறதுன்னு பேசிட்டு இருக்கேன்…”
“கிடைச்ச லீவ்ல வந்துட்டு போ. கல்யாணம் நடக்கறது நடக்கட்டும். இதுல உனக்கு என்ன குழப்பம்? எல்லாமே நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ….” என்று தியாகு சொல்ல அருகில் இருந்தவர்களுக்கு அத்தனை கோபம்.
வெளிக்காட்ட முடியாமல் பொங்கிய கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக நிற்க, ஷிவா அப்படி அடக்கிக்கொள்ள மாட்டானே?
“எதே, நடக்கட்டுமா? அப்போ கல்யாணத்துக்கு நான் இருக்க வேண்டாமா? இங்க பாருடா, நீ எப்படியும் இருந்துட்டு போ. உன் ஜோசியத்தை எல்லாம் என்கிட்டே சொல்லாத. என் தங்கச்சி கல்யாணத்துக்கு நான் இருக்கனும்…”
“அதான் லீவ் இல்லையே. எப்படி இருக்க முடியும்? வேலை முக்கியம் ஷிவா. சும்மா இதுக்கெல்லாம் நீ அலையவேண்டாம். நான் இருக்கேன்ல…”
“நீ இருக்கற லட்சணம் தான எனக்கு தெரியுமே…” என்றான் ஷிவா பட்டென்று.
“ஷிவா….”
“அட போடா, நான் வரத்தான் செய்வேன். என்ன செய்யனுமோ அதை நான் பார்த்துக்கறேன். நீ ஒன்னும் வேண்டா வெறுப்பா எதையும் செய்ய வேண்டாம். புரியுதா?…” என ஷிவா சொல்லியதும் அவனிடம் பேசிக்கொண்டே மொபைலுடன் தான் அறைக்கு வந்துவிட்டான் தியாகு. அவனின் பின்னே சுலோவும்.
“ப்ச், என்கிட்டே எதுக்குடா கோச்சுக்கற? அதான் எல்லாரும் தேதியை முடிவு பண்ணிட்டாங்களே? அதுக்கு தான் சொன்னேன்…” என்று தியாகு சொல்ல,
“முடிவு பண்ணினா இப்போ என்னவாம்? நான் வரும் போது நல்ல நாள் இருக்காதா? இப்போலாம் கல்யாணம் மண்டபம் பார்த்து தான் கல்யாணமே வைக்கிறாங்க. தேனு கல்யாணம் கோவில்ல தானே? தேதியை மாத்த முடியுதான்னு நான் பேசறேன்…”
“என்னது அவங்க வீட்டுல நீ பேசனுமா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அவன் ஒரு…”
“டேய், வாயை மூடிடு. வந்தேன் என்ன செய்வேன்னு தெரியாது. அவர் நம்ம தேனுவை கட்டிக்க போற மாப்பிள்ளை…”
“அவனை பத்தி உனக்கு தெரியாது ஷிவா…”
“எல்லாம் தெரியும். நானும் விசாரிச்சுட்டேன். கத்தி சொன்னா போய் உண்மை ஆகிடாது. நம்ம வசதிக்கு நாலும் திரிச்சு பேசலாம். ஆனா நிஜம்னு ஒன்னு இருக்கு. எத்தனை சாயத்துக்கும் அதோட நிறம் மாறாது…” என்ற ஷிவா,
“உன்கிட்ட மூச்சுக்குடுத்து பேச எனக்கு முடியாது. நான் ஆபீஸ் கிளம்பனும். லீவ் அப்ளை செய்யனும். அதுக்கு முன்னாடி மாப்பிள்ளைட்ட பேசனும். நீ போனை வை…” என்று கட் செய்துவிட,
“பார்த்தியா இது தான் நல்லதுக்கே காலமில்லைன்றது….” என்று தியாகு சொல்ல,
“ஆமா ஆமா…” என்று சொல்லி மொபைலை வாங்கிக்கொண்டு வெளியேறிவிட்டாள் சுலோச்சனா.
“என்னம்மா ஷிவா என்ன சொன்னான்?…” என பத்மா கேட்க சுலோச்சனாவும் ஷிவா தேதி மாற்றி வைக்க போவதை பற்றி மாப்பிள்ளை வீட்டில் பேச வேண்டும் என்று பேசியதாக சொல்ல தேன்மொழி இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதை போல மறுநாள் காலை சமையலுக்கு தயார் செய்துகொண்டு இருந்தாள்.
மீண்டும் ஷிவாவே அழைத்துவிட்டான். பத்மாவோடு தெய்வாவிற்கு அழைத்து விஷயத்தை சொல்ல அவரும் உடனே தன் மகளிடம் கலந்து பேச தேதி பார்க்கப்பட்டு உடனடியாக மாற்றி வைக்கப்பட்டது திருமண தேதி.
அனைத்தும் பேசி திருமணத்தை ஷிவா வரும் நாளில் இருந்து மூன்றாம் நாள் வைக்க ஏற்பாடாகிவிட்டது.
ஒருவழியாய் அனைத்தும் பேசி முடித்து ஷிவா ஜீவனுக்கு அழைத்தான். அவன் இரவு பணியில் இருக்க ரவுண்ட்ஸ் போய்விட்டு வந்து அப்போது தான் தன் அறைக்குள் வந்திருந்தான்.
ஷிவா அவனுக்கு வீடியோகாலில் அழைக்க புது எண்ணாய் இருப்பதை கண்டவன் ஒரு நிமிடம் தான் யோசனை எல்லாம். அதை அட்டன் செய்துவிட்டு பார்க்க ஜீவாவின் முகம் தெரியவுமே ஷிவா பரபரப்பாய் அவனை ஆராயும் பார்வை பார்த்தான்.
போனை போட்டுவிட்டு அவன் பேசாமல் பார்த்தபடி இருக்க ஜீவனும் என்னதான் செய்கிறான் இவன் என்று பார்த்திருந்தவன் ஷிவா இன்னும் அவனின் முகத்தை பார்த்தபடி இருக்க ஷிவாவின் அறையில் அவனின் தலைக்கு பின்னால் இருந்த முருகன் படம் போட்ட காலெண்டரை பார்த்த ஜீவன்,
“கமிட்டட் தான். எத்தனை வாட்டி சுத்தி சுத்தி பார்த்தாலும் ஒன்னும் அம்புடாது. யாருலே நீ? வச்ச கண்ணு வாங்காம பாக்குத?…” என்றான் ஊர் பாஷையில்.
ஜீவனின் அந்த நக்கல் பேச்சில் ஒரு நொடி அசந்தாலும் பக்கென்று சிரித்துவிட்டான் ஷிவா.
“மச்சான்…” சிரித்தபடி ஜீவாவிடம் முறை சொல்ல,
“நானா? உனக்கா?…” என்றான் ஜீவா.
“ம்ஹூம், நான் உங்களுக்கு மச்சான்…”
“அவன் இப்படிலாம் பேசறவன் இல்லையே…” என முணுமுணுத்தபடி பளிச்சென நினைவு வந்தவனாக,
“ஓஹ் பாரின் மச்சானா? கல்யாணம் முடிஞ்ச பின்னாடிதான் பேசுவீங்கனு நினைச்சேன்…” என ஆற்றமாட்டாமல் ஜீவா சொல்லிவிட,
“ரொம்ப தான் கட்டுப்பாடான அண்ணான்னு கெத்து காட்டினானாக்கும் என் அண்ணன். தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை, அவன் கொஞ்சம் கெடுபிடியான ஆளு தான்…”
“ஏற்கனவே தப்பா எடுத்திருந்தா? சரி அதை விடுங்க. நீங்க என்ன சொல்ல கால் பண்ணுனீங்க?…” என்று ஜீவனும் அவனை போலவே பேச,
“சீக்கிரமே நான் ஊருக்கு வர போறேன்னு சொல்ல கால் பண்ணினேன். உங்க கல்யாணமும் தேதி மாத்தி வைக்கலாம்னு தெய்வா அத்தைட்ட இப்ப தான் பேசினோம். அதையும் சொல்லிடலாமேன்னு தான் கூப்பிட்டேன். அப்படியே சின்னதா ஒரு இன்ட்ரோ…”
“எது இந்த வீடியோ கால்ல மாப்பிள்ளை பார்க்கறது சின்ன இன்ட்ரோவா?…” என்று ஜீவன் சிரிக்க,
“நீங்க மாப்பிள்ளை. நான் உங்களை பார்த்தேன். அப்போ மாப்பிள்ளையை பார்க்கிறது தானே?…”
“பார்த்த வரைக்கும் போதுமா? பாட்டு, டான்ஸ் இப்படி வேண்டாமா?…” என்ற ஜீவா,
“சத்தியமா சொல்லுங்க அவர் தான் உங்க அண்ணனா?…” என்றும் கேட்க,
“சத்தியமா தான். ஆனா இந்த உலகம் தான் நம்பமாட்டிக்குதே?…” என்று அவனும் பதிலுக்கு பேச இருவரிடையே சற்று நேரத்திற்கெல்லாம் நல்ல தோழமை உணர்வு உண்டானது.