புன்னகை – 4
தேதி மாற்றப்பட்டுவிட்டதால் இன்னும் பதிமூன்று நாளில் திருமணம் என்று முடிவாகி இருக்க பத்து நாளில் ஷிவா கிளம்பிவிட ஆயத்தமாக அவன் வருவதற்குள் மற்ற வேலைகள் அனைத்தையும் துவங்கிவிட்டனர்.
கார்மேகத்திற்கு துணையாய் ஷிவா தனது நண்பர்களை துணைக்கு அனுப்ப அவரை எங்கேயும் கூட்டிக்கொண்டு செல்ல வர என அவர்கள் பார்த்துக்கொண்டனர்.
தியாகு ஒரு கல்லூரியில் விரிவுரையாளனாக பணியாற்ற அவனுக்கு இதில் தன்னை நுழைக்காமல் இருந்தாலே பேரும் நிம்மதி என்னும் மனநிலையில் இருந்தான். ஆனாலும் மனைவியிடம் எல்லாம் கேட்டுக்கொள்வான்.
தெய்வா ஊரிலேயே சொற்பமானவர்களுக்கு பத்திரிக்கை அடித்து அகல்யாவுடன் சென்று பத்திரிக்கை வைத்துவிட்டு யாரெல்லாம் கிளம்புகிறார்கள் என்று கேட்டு திருமணத்திற்கு முதல்நாள் வருவதற்காக ஒரு வண்டியையும் ஏற்பாடு செய்துவிட்டு சென்னை வந்துவிட்டார்.
அதிலேயே ஒருவாரம் ஓடியிருக்க அவரும் அகல்யாவும் வந்துதான் திருமணத்திற்கு உடை, நகை, திருமாங்கல்யம் என்று அனைத்தும் வாங்க வேண்டும் என்று கிளம்பி வந்துவிட்டனர்.
இன்னும் ஒருவாரமே இடையில் திருமணத்திற்கு. மறுநாள் மணமக்களுக்கு உடை எடுக்க செல்லவேண்டும். தியாகு கிளம்பமுடியாதென்று மறுக்க ஷிவா அழைத்துவிட்டான்.
“ட்ரெஸ் எடுக்க போக முடியாதுன்னு சொன்னியாமே? உன்னால போக முடியுமா? முடியாதா?…” என எடுத்ததுமே கேட்க,
“என்னை கேட்டா இங்க எல்லாம் நடக்குது? அதான் பாதி வேலை முடிச்சுட்டீங்களே. இப்ப மட்டும் நான் வேணுமாக்கும்?…” என தியாகு முறுக்கிக்கொள்ள,
“இப்ப கூட எல்லாம் நீ எடுத்து செய்யறேன்னு சொல்லு. நான் விலகிக்கறேன். எல்லாமே நீயே செய். வேண்டாம்னு சொல்லலை. ஆனா இதை சாக்குவச்சு நாளைக்கு நீ போகாம இருந்தா விளைவு வேற மாதிரி இருக்கும் பார்த்துக்கோ. அசிங்கப்பட்டு நீ தான் நிப்ப…” என ஷிவா சொல்ல,
“என்னடா மிரட்டறியா? நானும் தம்பியாச்சே சின்னப்பையன்னு பேசாம இருந்தா ஓவரா பன்ற? என்ன பண்ணிடுவ? எங்க சொல்லு?…” என கேட்க,
“சொந்த தங்கச்சிக்கு கல்யாணதுக்கு வரமாட்டேன்னு பிடிவாதமா இருக்கன்னு ஊரு ஃபுல்லா சொந்தக்காரங்கட்ட எல்லாம் சொல்லுவேன்…”
“நான் ஏன் வராம இருப்பேன்?…”
“உன்னை வரவிடாம நான் செய்யுவேன்ல. தேனுவுக்கு கல்யாணம் நடக்கறதுல உனக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்லுவேன். அதான் வரமாட்டேன்னுட்டன்னு சொல்லுவேன். இன்னைக்கு அவளுக்கு கல்யாணம் செய்யறதை கேலி பேசறவன் எல்லாம் நாளைக்கே இப்படி ஒரு நல்ல காரியத்துக்கு தடை சொல்றன்னு உன்னை உன்னை தான் பேசுவானுங்க…”
“ஷிவா…”
“உனக்கு தெரியும் நான் எதையும் யோசிக்கமாட்டேன்னு. நரம்பில்லாத நாக்கு பாரு. உன்னையும் பேசும். வாங்கிக்கோ…”
“இதெல்லாம் நல்லாவே இல்லை…”
“ஒன்னும் செய்யாட்டியும் நாளைக்கு அண்ணனா நீ தான் அவ கல்யாணத்தை எடுத்து நடத்தினதா ஊர் பேச நான் விட்டு குடுக்கறேன். எனக்கென்ன அவசியம்? எல்லாத்தையும் நான் செஞ்சுட்டு நல்லவன் மட்டும் பட்டம் உனக்கு?…”
“என்னடா நீ, கூடப்பொறந்த அண்ணனையே…”
“கூட பொறந்த தம்பியா இருந்தாலும் என்னால உனக்கு நல்லதில்லைன்னு தோணினா என்னையே உன் எதிர்க்க வரவிடமாட்டன்னு தெரியும்டா. இந்த டயலாக் எல்லாம் வேற எவன்கிட்டையாச்சும் விடு. எனக்கு என் தங்கச்சி வாழ்க்கை முக்கியம்…”
“அப்போ…”
“ப்ச், கொஞ்சம் பேசாம இருக்கியா? என்னால உன் கூட இவ்வளவு பேச முடியாது. பேச வைக்காத. நாளைக்கு போவியா மாட்டியா? இல்லைன்னா என் ப்ரெண்ட்ஸ்க்கு தான் சொல்லனும். அவங்க கூட்டிட்டு போவாங்க…” ஷிவா பிடிவாதமாய் சொல்ல வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான் தியாகு.
காலையில் இருந்து உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு கிளம்பி அமர்ந்திருந்தான் தியாகு.
வீட்டினர் கிளம்பி வரவும் வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் சரியாய் இருந்தது.
“தியாகு ஷிவாவோட ப்ரெண்ட் தான் கார் எடுத்துட்டு வந்திருக்கான். கிளம்புவோம்…” என பத்மா சொல்ல,
“இப்ப எதுக்கு கார்? நான் அப்பாவோட என் பைக்ல வந்தா நீங்க மூணுபேரும் ஆட்டோ பிடிச்சு வாங்க. இதெல்லாம்…”
“ஷிவா தான் சொன்னான். ஒண்ணா போங்கன்னு. கல்யாணம் முடியற வரைக்கும் கார் நம்ம வீட்டுலையே இருக்கட்டும்னு சொன்னான்…” என்ற தாயை ஒன்றும் செய்யமுடியாமல் பல்லை கடித்தபடி வெளியே சென்றான்.
கதவை பூட்டிக்கொண்டு அனைவரும் காரில் ஏற கார்மேகம் ஷிவாவின் நண்பனுடன் பேசிக்கொண்டு வர பெண்கள் மூவரும் மெல்லிய குரலில் அவர்களுக்குள் பேசிக்கொண்டு வந்தனர். அதற்கு பின் இருக்கையில் குழந்தையுடன் தேமே என அமர்ந்திருந்தான் தியாகு.
ஜவுளிக்கடைக்கு வந்ததும் பெண்கள் புடவை பகுதிக்கு நேராக சென்றுவிட ஜீவனும் தெய்வாவும் சற்று நேரம் சென்று தான் வந்தார்கள்.
வந்ததும் இவர்களை கார்மேகம் குடும்பத்துடன் வரவேற்க தியாகு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க இவர்களை கவனிக்கவில்லை அவன். அதை பார்த்த தெய்வா ஜீவாவிடம்,
“அவங்கள வாங்கன்னு கூப்புடு தம்பி…” தெய்வா சொல்ல,
“கல்யாணம் முடியற வரைக்கும் ஹலோ ஹாய் சொல்ல கூடாதுன்னு அவரு உத்தரவு போட்டிருக்காரு. அதனால சொல்லமாட்டேன்…”
“நீயென்ன போனுலையா பேச போற? அல்லோன்னு சொல்ல…”
“யத்தா சும்மா இருக்கமாட்ட. கொலய கவ்வாம வா…”
“அகம்புடிச்ச கழுத. ஒத்த வார்த்த கேக்குதியா?…”
“காதுல விழுவுது தான? கேட்காம என்ன? கம்முன்னு வரியா இல்லை நான் தனியா போவவா?…”
இப்படி தாயும் மகனும் மெல்லிய குரலில் வாதாடிக்கொண்டு இருக்க பத்மா தான் தியாகுவை அழைத்து வந்தார்.
“இவன் தான் என்னோட பெரிய மகன். பேரு தியாகராஜன்…” என அறிமுகப்படுத்த,
“வணக்கம் மாப்பிள்ளை…” என்றான் தியாகுவும் ஒட்டவைத்த சிரிப்போடு.
“ஹலோ…” என்று முடித்துக்கொண்டான் ஜீவா.
தியாகுவின் முகத்தில் தெரிந்த ஒவ்வாமையில் ஜீவானின் முகம் கடுகடுவென்றானது. அதிலும் அவனை அற்பமாக பார்ப்பதை போல அவன் பார்த்த பார்வை வேறு ஜீவனை சீண்டியது.
அதனால் அவனும் பெரிதாய் பட்டுக்கொள்ளவில்லை. சுலோச்சனாவையும் அறிமுகப்படுத்த அகல்யாவும் தன்னையும், தன் மகளையும் அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
அகல்யாவின் மகள் வைதேகி பன்னிரெண்டு வயது பெண். பள்ளி விடுமுறை ஆதலால் திருமணத்திற்கு வந்திருக்க தகப்பன் திருமூர்த்தி திருமணத்திற்கு முதல்நாள் ஊரிலிருந்து வருபவர்களை அழைத்துக்கொண்டு வருவதாய் சொல்லியிருந்தான்.
“வாங்க புடவை பார்க்கலாம்…” என சுலோச்சனா சொல்ல,
“அக்கா நீயும் அம்மாவோட போயி பாரு. நான் மேல எனக்கு பார்க்கறேன்…” என்று சொல்லிவிட்டு அவர்களை விட்டு நகர்ந்து செல்ல அதுவரை ஊமை போல ஒதுங்கி நின்ற தேன்மொழி அப்போது தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளை கண்டுகொள்ளாமல் அவன் சென்றதை பார்த்தவளுக்கு என்னவோ போல் இருந்தாலும் தன் அண்ணனின் பார்வை தன்னை தொட்டுவிடுமோ என மீண்டும் வேறுதிக்கில் திரும்பிக்கொண்டாள்.
மாடிக்கு சென்றவன் தனக்கு சில உடைகளையும் திருமூர்த்திக்கும் கூடவே ஷிவாவிற்கும் எடுக்க தியாகுவிற்கு எடுக்க மனதே இல்லை. ஆனாலும் தவறாக தெரியக்கூடாதே என அவனுக்கும் ஒரு சட்டையை எடுத்தான்.
ஜீவனும், ஷிவாவும் நெருங்கிய தோழர்களை போல இந்த குறுகிய நாட்களில் பழகிவிட்டார்கள். கல்லூரி தோழர்களை போல இருவருக்கிடையே அப்படி ஒரு பகிர்தலும், புரிதலும் இருந்தது.
பேர் சொல்லி அழைக்கும் அளவிற்கு நெருக்கமும், போன் எடுக்கவில்லை என்றால் திட்டிக்கொள்ளும் அந்நியோன்யமும் வந்திருந்தது.
‘மச்சான் துணை இருந்தா மலையேறலாம். உன் துணை இருந்தா தான் உன் வீட்டு படியேற முடியும்’ என அவ்வப்போது சொல்லி சொல்லி ஜீவா அவனை கிண்டலடிப்பான்.
இப்பொழுது அவனுக்கு பொருத்தமாய் இருக்கும் என ஒரு ஷர்ட்டை தேர்ந்தெடுத்தவன் வேறு எதுவும் நல்ல கலர் இருக்கிறதா என பார்த்துக்கொண்டு இருந்தான்.
முகூர்த்தத்திற்கு புடவை தேர்வு செய்துவிட்டு ஜீவனை தேடினார்கள் அவனுக்கும் பிடித்திருக்கிறதா என கேட்க. அவனை வெகுநேரமாய் காணாமல் தியாகுவை அனுப்பி அழைத்துவர சொன்னார் கார்மேகம்.
“ஏன் ஒரு போனை போட்டா வரப்போறான்…” என்றவனை அடித்துவிடுவதை போல பார்த்த கார்மேகம்,
“இதுவே உனக்கு கடைசி தடவையா இருக்கட்டும். இனி மரியாதை இல்லாம கூப்பிட்ட நான் மனுஷனா இருக்கமாட்டேன்….” என்ற கடும் எச்சரிக்கையில் எரிச்சலுடன் ஜீவனை தேடி சென்றான்.
இவன் வருவதை கவனிக்காமல் ஜீவன் எதோ பாடலை முணுமுணுத்தபடி எடுத்த ஷர்ட்களுக்கு மேட்சிங் பேண்ட் பார்த்துக்கொண்டிருந்தான். அவனருகே நெருங்கும் பொழுது தான் தியாகுவிற்கு அந்த பாடலே கேட்டது.
“வாங்க மச்சான் வாங்க வந்த வழிய பார்த்து போங்க. இந்தா வாங்க மச்சான். அட வாங்க மச்சான். அடடே வாங்க மச்சான் வாங்க வந்த வழிய பார்த்து போங்க, போங்க. போங்க…” என அவனாக வார்த்தைகளை தோதாக கோர்த்து பாட தியாகுவின் கோபம் எல்லை மீறினாலும் கட்டுப்படுத்திக்கொண்டு செருமினான்.
தனக்கு பின்னால் இருந்து தொண்டையை செருமியபடி இருந்தவனை திரும்பி பார்த்த ஜீவன் முகத்தில் குபீர் சிரிப்பு வர பார்த்தது.
தான் பாடிய பாட்டை அவன் கேட்டிருக்கிறன என்று தியாகுவின் முகத்தில் எரிந்த தணலை கொண்டே கண்டுகொண்டான் ஜீவன். ஆனாலும் வாயை திறந்து ஒன்றும் கேட்காமல் மீண்டும் பேண்ட்களை பார்வையிட்டபடி அடுத்த பாட்டை பாடினான்.
“மஸ்கார போட்டு மயக்குறியே. மச்சான பேசி கவுக்கறனா…” என்று பாடவும்,
‘இவன் விவாகரத்தானவன் மாதிரியா பாட்டு பாடறான்? கொஞ்சமும் கவலை இல்லாம என்ன இம்புட்டு ஜாலியா இருக்கான்?’ என தியாகு பார்த்தபடி நின்றான்.
“நல்ல ரசனை ஸார் உங்களுக்கு. குரலும் நல்லா இருக்கே…” என்று கடை பணியாளர் சொல்ல,
“ஈஸிட். தேங்க் யூ…” என்றான் சிரிப்புடன் அவரிடத்தில்.
அதற்கு மேலும் இருந்தால் இன்னும் எதையாவது பாடி தன் பிபியை ஏற்றுவானோ என்று எண்ணிய தியாகு,
“வாங்க உங்களை கூப்பிடறாங்க…” என அழைக்க,
“என்னைய்யா?…” என்றான் ஜீவனும். அவனின் கேள்வியில் கொலைவெறிக்கு ஆளானான் தியாகு.
“மரியாதையா பேசுங்க. என்ன சட்டுன்னு என்னைய்யான்னு கேட்டுட்டீங்க?…” என்று சண்டைக்கு கிளம்ப ஜீவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. சாதாரணமாக பார்த்தவன்,
“என்னை தான் கூப்பிடறாங்களான்னு கேட்டேன். உங்களுக்கு ஏன் ராங்கா கேட்டுச்சு? சொன்ன என்மேல தப்பில்லை. தப்பா புரிஞ்ச உங்க மேல தான். ஹ்ம்ம்…” என்று சொல்லி தோள் குலுக்க தியாகுவின் முகம் விழுந்துவிட்டது.
“அது வந்து…”
“வந்தீங்க, உங்களுக்கு என்னை மாப்பிள்ளைன்னு சொல்லி கூப்பிட இஷ்டம் இல்லை. மொட்டையா வாங்க, உங்களை கூப்பிடறாங்கன்னா. அதான் என்னையான்னு கேட்டேன்…”
“அப்படியெல்லாம் இல்லை மாப்பிள்ளை…” என்று அந்த மாப்பிள்ளையில் அதிக அழுத்தம் கொடுத்து பல்லை கடித்தான் தியாகு.
‘அது’ என்பதை போல பார்த்த ஜீவன் உள்ளுக்குள் சிரித்து வெளியில் ஒன்றுமறியாதவனை முகத்தை வைத்துக்கொள்ள,
“இப்ப போகலாமா?…”
“போகலாம் மச்சான். இனி போகத்தான ஆகனும்…” என்று அவனோடு சேர்ந்து நடந்தவன்,
“ஒன் மினிட்…” என சொல்லி மீண்டும் தான் தேர்வு செய்த உடைகள் இருக்குமிடம் வந்தவன்,
“இதை எல்லாம் பேக் பண்ணிடுங்க. செப்ரைட் பில். கீழே கவுண்டர்ல சொல்லிடுங்க…” என்ற ஜீவனிடம்,
“ஸார், லவ் மேரேஜா? பொண்ணு இவர் தங்கச்சியா…” என்று அந்த பணியாளர் கேட்க,
“அரேஞ்ச் பண்ணின மேரேஜ் தான். ஆனாலும் லவ் ஆகிட கூடாதுன்னு ஸார் மெனக்கெடறார் போல…” என்று அவரிடம் கண்ணடித்து சொல்லியவன்,
“இந்த ட்ரெஸ் எல்லாம்…”
“நான் பார்த்துக்கறேன் ஸார்…” என்று சொல்லி ஜீவனுக்கு வாழ்த்தையும் சொல்லி விடைபெற சிரிப்புடன் வந்தவனை தூரத்தில் இருந்து பார்த்தான் தியாகு.
‘இப்படி சிரிச்சு தான் எல்லாரையும் மயக்கி வச்சிருக்கான் போல. என்கிட்டே நடக்காது’ என நினைத்தபடி உர்ரென பார்த்தபடி நிற்க,
“ஏதாவது நீங்க பார்க்கனும்னா பார்த்துட்டு வாங்க…” என்று சொல்லிவிட்டு அவனை தாண்டிக்கொண்டு கீழே சென்றுவிட்டான் ஜீவன்.