தியாகுவிற்கு திருமணம் ஆகும் முன்பு வரை ஷிவாவும் அவனும் ஒரே அறை. அதன் பின்னர் ஷிவா வேலைக்கு என்று செல்லவும் அது அவனுக்கு மட்டுமேயான அறையாக மாறி இருந்தது.
தேன்மொழி வந்த பின்னர் பத்மாவின் அறையில் அவள் தாங்கிக்கொள்ள ஷிவா வந்து போகும் நேரங்களில் ஹாலில் உறங்கிக்கொள்வான்.
இப்போது நடக்கும் விஷயங்களை எல்லாம் பார்த்தபடி இருந்த ஷிவாவிற்கு குடும்ப சூழ்நிலை ஓரளவு விளங்கியது. சற்று வருத்தமாகவும் இருந்தது தன்னை குறித்தே.
‘இதை எல்லாம் எப்படி யோசியாமல் விட்டேன்?’ என நினைத்தபடி இருந்தவன் முதலில் மாடியில் ரூம் எடுத்து கட்ட வேண்டும் என்றும், குடும்பத்திற்கு எங்கேயும் சென்று வர ஒரு கார் வாங்கவேண்டும் என்றும் முடிவெடுத்துக்கொண்டான்.
அடுத்து தன் திருமணம் தான். அதற்குள் இவற்றை செய்துவிட வேண்டும் என்ற கணக்கிடலுடன் நிற்க,
“என்ன மச்சான், அடுத்து உன் கல்யாணம் தான்…” என்று ஜீவா வந்து அவனின் கையை பிறக்க,
“அதுசரி, அதுக்கு முன்ன நிறைய பொறுப்பு இருக்கே மாப்பிள்ளை…” என்றவன்,
“நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்கலையே…” என்று கேட்க,
“உதை தான் வாங்க போற. என்ன பேச்சு இது?…” என்று அவனை சற்று தள்ளி வெளியே அழைத்து வந்து என்ன என்று கேட்க மெதுவாய் அவனின் யோசனையை பகிர்ந்தான் ஷிவா.
“ரொம்ப நல்லவன்டா நீ. இவ்வளவு யோசிக்கிறதுக்கும் ஒரு பக்குவம் வேணும். அது பை பெர்த் உனக்கு இருக்குது. சிலருக்கு அனுபவம் தான் பக்குவத்தை தரும். என்னை போல…” என்று சொல்ல,
“ப்ச், இப்ப நீங்க எமோஷனலா? சரி வாங்க மாப்பிளை…” என்று அவனின் கை பிடிக்க,
“இதை நீ சொல்லாத. சும்மா பேர் சொல்லியே கூப்பிடு. விட்டா பத்து வருஷம் கழிச்சும் மாப்பிள்ளைன்னு நிப்ப…”
“ஹ்ம்ம், பேர் எல்லாம் வேண்டாம். எனக்கு மூத்தவர் தானே? சோ மாமான்னு வேணா கூப்பிடறேன்…” என்று சொல்ல இருவரும் சிரித்தபடி வீட்டிற்குள் வந்தனர்.
“கிளம்புவோமா ஜீவா?…” என திருமூர்த்தி கேட்க,
“ஹ்ம்ம் போலாம் மாமா…” என அவனும் சொல்லவும் கார்மேகம், பத்மா தவிர்த்து மற்ற அனைவரும் ஜீவனின் பிளாட்டிற்கு சென்றனர்.
அங்கே சென்றதும் விளக்கேற்றி அங்குள்ள சம்பிரதாயங்களை செய்து பால் காய்ச்சி என்று எல்லாம் முடித்ததும் சுலோச்சனாவை அங்கே விட்டுவிட்டு தியாகு ஷிவாவுடன் கிளம்பிவிட்டான்.
இரவு நேரமானதும் திருமூர்த்தி உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுவிட்டு காலை வருவதாய் சொல்லி அவரும் சென்றதும் ஜீவனை தவிர்த்து மற்ற நல்வரும் பெண்கள் தாம்.
தெய்வா இன்னொரு அறைக்குள் உறங்கிக்கொண்டு இருந்தார். திருமணம் முடிந்ததும் ஆசுவாசமானவர் வீட்டிற்கு வரவும் உடல் படபடவென்று வர அவரை பரிசோதித்தவன் பிபி அதிகமாக இருப்பதை கண்டு மாத்திரை தந்து உறங்க வைத்திருந்தான்.
சுலோச்சனாவிடம் பேசியபடி ஹாலில் தேன்மொழி அமர்ந்திருக்க அவளுக்கருகே அவளின் வளையல்களை பிடித்து விளையாடியபடி அகல்யாவின் பெண் வைதேகியும், தியாகுவின் மகன் ஆதிக்கும் அமர்ந்திருந்தனர்.
அவர்களை பார்த்தபடி அகல்யாவை அழைத்துக்கொண்டு தன் அறைக்குள் வந்தவன்,
“இங்க பாருத்தா, எதையாச்சும் பண்ணுதேன்னு உன் கைவண்ணத்த காமிக்காத. சும்மா அப்படியே அனுப்பு போதும். அவ மூஞ்சியே சரியில்ல…” என்று அக்காவிடம் சொல்ல,
“எனக்கு தெரியாதாக்கும். போவியா. எல்லாம் நான் பாத்துக்கிடுதேன்…” என அகல்யாவும் சொல்ல அவளை முறைத்தான்.
“ப்ச், இத எல்லாம் பேசிக்கிட்டு போடா…” என அவனை பிடித்து தள்ளியவள்,
“கம்முன்னு இங்கவே உட்காரு. வேற உடுப்பு மாத்தனுமின்னாலும் மாத்திக்க…” என்றுவேறு சொல்லிவிட்டு செல்ல பல்லை கடித்தான் ஜீவன்.
“காதுல வாங்காமையே போறத பாரு…” என புலம்பியவன் சென்று முகத்தை கழுவிவிட்டு இரவு உடைக்கு மாறியவன் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தான்.
புது கட்டில். விஸ்தாரமான பெரிய கட்டில், புது மெத்தை என தெய்வாவும், அகல்யாவுமாக சென்று சத்தமின்றி வாங்கிப்போட்டு பழைய கட்டிலை அந்த அறைக்கு மாற்றியிருந்தனர்.
அதை கண்டு சண்டையிட்டவனை வாயை திறக்கவிடவில்லை அவனின் அன்பு பெண்மணிகள். நினைக்கையில் இதழோரம் சிறு புன்னகை நெளிந்தது.
“பெத்ததும் அடாவடி. கூட பொறந்ததும் அடாவடி…” என்று சொல்லிக்கொண்டவன் கைகள் புத்தகத்தை வெறுமனே புரட்டிக்கொண்டு இருந்தது.
மனமெங்கும் தேன்மொழி வந்தால் என்ன பேசவேண்டும் என வார்த்தைகளை தேடி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சேகரிக்க பார்க்க வார்த்தைகளோ ஒன்றுக்கொன்று கோர்வையாக கிடைக்காமல் போகவே தடுமாற்றத்துடன் அமர்ந்திருந்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தவன் அங்கேயே நின்றுகொண்டிருந்த தேன்மொழியை பார்த்து புன்முறுவல் பூத்தவன் எழுந்து வந்து,
“வெல்கம் மொழி…” என்று அவளிடம் கையை நீட்டினான்.
மறுக்கமுடியாமல் தானும் கையை நீட்டி குலுக்கியவளின் கரத்தை விடாமல் பற்றியவாறு உள்ளே அழைத்து கதவை அடைத்து தாழிட அங்கேயே நின்றாள் தேன்மொழி.
“வெரி குட். வா இப்படி…” என அழைத்து சென்று அவனுக்கருகே அமர சொல்ல,
“எதுக்கு இது?…” என்றாள் அவள்.
தேன்மொழி முகம் ஏதோ தெளிவுடன் இருக்க அதை புரிந்து கொண்டவன் இலகுவாகவே பேச்சை துவங்கினான்.
“எது?…”
“இல்லை வெரிகுட் சொன்னீங்களே? அதான்….” என கேட்க,
“அன்னைக்கு கோவில்ல உன் கையை பிடிச்சதுக்கு பயந்து விலகின. இப்போ யார் எதுவும் சொல்ல முடியாதுல. நான் நீட்டினதும் நீயும் பிடிச்சுக்கிட்ட. அதான் ஒரு பாராட்டு. ஆனா ஒன்னு எப்போ இருந்து இன்னொருத்தவங்களை நினைச்சு பயப்பட ஆரம்பிச்ச மொழி?…” என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள் ஒரு பெருமூச்சுடன்,
“என் நிலையில இருந்து பார்த்தா தான் என் சூழ்நிலை புரியும்…”
“அடேங்கப்பா, இந்த சூழ்நிலை உனக்கு மட்டும் தான்னு நினைக்கிற பார்த்தியா அதுதான் தப்பு…” என்று சொல்ல லேசாய் முகம் மாறினாள்.
“ஓகே ஓகே, இதை இப்பவே பேச வேண்டாம். இனி நீ அப்படி இருக்க தேவை இல்லை. எப்பவும் போல நார்மலா இரு…” என்று சொல்ல,
“இப்பவும் எப்பவும் போல தான் இருக்கேன். உங்களுக்கு தான் வித்தியாசமா தெரியுது…”
“பார்ரா இவ்வளவு நீளமா பேசிட்ட…” என்று அவன் சிரிப்போடு கேட்டது அவளுக்கு பரிகாசம் செய்வதை போல தோன்ற,
“அது அண்ணா உங்கக்கிட்ட பேச கூடாதுன்னு…”
“பேச தான் கூடாது. பார்த்தா கூடவா நிமிர்ந்து பார்த்து ஒரு ஸ்மைல் பண்ண கூடாது. இப்போ என்ன பண்ணுவாராம் உன் அண்ணா?…” என்றவனின் பேச்சு தேன்மொழியை சுட மீண்டும் மௌனமாகிவிட்டாள்.
“போச்சுடா திரும்பவும் சைலன்ட்டா? என்னால முடியாது. நீ பேசு, நிறைய பேசிட்டே இரு. நானே நிறைய பேசறேன். எனக்கே போர் அடிக்குது…”
“என்ன பேச நீங்க கேளுங்க சொல்றேன்…” என அவனின் கேலி பேச்சில் சிறு சிரிப்புடன் சொல்ல,
“இது என்ன ஸ்கூலா உன்கிட்ட கேள்வி கேட்க? ஓகே கேட்கறேன். நான் கேட்டு தப்பா பதில் சொன்னா பெஞ்ச் மேல நிக்க வைக்கிற மாதிரி உன்னை இந்த கட்டில் மேல நிக்க வச்சுடுவேன். சரியா?…”
“பனிஷ்மேன்ட்டா? அப்ப அடிக்க தான செய்வாங்க…” என தேன்மொழியும் சற்று சகஜமாக,
“ஏன் அடிக்காம? சொல்பேச்சு கேட்கலைன்னா அடி பின்னிடுவேன்…” என கைகளை இழுத்துவிட்டு டிஷர்ட் காலரை தூக்கிவிட்டு காண்பித்தான்.
“நிஜமாவே அடிப்பீங்களா நீங்க? சும்மா சொல்லாதீங்க பாஸ். நீங்க எவ்வளவு ரீல் சுத்துவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியுமே…”
கொஞ்சம் கொஞ்சமாய் தேன்மொழி அவனின் பேச்சில் தன் வட்டத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தாள். அதுதானே வேண்டும் ஜீவனுக்கும். அவளின் மாற்றத்தை கவனித்துக்கொண்டே பேசினான்.
“ஆமா, அடிப்பேனே. கண்ணடிப்பேன். சைட்டடிப்பேன். உனக்கு ஓகேனா சொல்லு அடிச்சு காண்பிக்கேன்…” என்றவனை அதிர்ந்த பார்வையுடன் பார்த்து அவள் அப்படியே நிற்க ஜீவனிற்கு சிரிப்பு பொங்கியது.
“என்ன இப்படி முழிக்கிற? காலேஜ்ல இதெல்லாம் சகஜம் தானே? ஏன் உனக்கு தெரியாதா?…” என்றதும் சட்டென அதிர்விலிருந்து வெளியே வந்தவள் அவன் கல்லூரியை பற்றி சொல்லவுமே சட்டென அந்த நினைவுகளை நோக்கி சென்றாள். முகம் பளிச்சென்று மின்னியது.
“இதத்தான் பொய்யின்னு சொல்றேன். வாயை திறந்தாலே பொய். எனக்கு தெரியும் நீங்க அப்படி இல்லை. நீங்க அப்படி வர்ஷாக்காவை கூட பார்க்கமட்டீங்களே. அதான் ஷாக் ஆகிட்டேன்…” என்று நன்றாக சம்மணமிட்டு அமர்ந்து அவனுடன் பேச ஆரம்பித்தாள்.
“எல்லாம் சரி, வர்ஷாக்கா எங்க? என்ன ஆச்சு? எனக்கு யாருமே சொல்லலை…” என அவனிடம் கேட்க அவளை ஒருநொடி ஆழ்ந்து பார்த்தவன் இதழ்கள் லேசாய் விரிந்தது.
“சொல்லுங்க பாஸ்…” என்றாள் மீண்டும்.
“கண்டிப்பா சொல்லனுமா?…” என அழுத்தமாய் கேட்டவன்,
“சொல்லலாம். ஆனா இப்போ நாம பேசிட்டிருந்ததை பேசிடுவோம். நான் யாரையும் பார்க்கலைன்னு நீயா நினைச்சா நான் பொறுப்பில்லை…”
“நம்ப முடியலை…” என முகம் சுருக்கினாள் தேன்மொழி.
“ஹா ஹா ஹா, நம்ப முடியலை தான். வேற யாரையும் பார்த்ததில்லைன்றதும் உண்மை தான். ஆனா…” என நிறுத்தியவன் மீண்டும் அவளின் முகத்தை பார்த்தபடி,
“ஆனா உன்னை பார்ப்பேனே. நேரா வந்து ஸ்டாப்ல நிப்ப. நின்னதும் ஆட்டோமேட்டிக்கா உன் கை லெப்ட் சைட்ல இருக்கற கம்பியை பிடிச்சுக்கும். உன் ப்ரெண்ட்ஸ் வந்து நிக்கற வரைக்கும் சைலன்டா நிப்ப…”
“அவங்க வந்ததும் அதுல ஒரு பொண்ணோட பக்கத்து கடைக்கு போவ. ரெண்டு பேரும் கடைல வடை வாங்கி சாப்பிடுவீங்க. பேக்ல இருக்கற கர்சீப்பை எடுக்க மேடம்க்கு சோம்பேறித்தனம். சுடிதார் டார்க் கலரா இருந்தா ஷால்ல துடைச்சுக்குவ. லைட்டா இருந்தா கடையில மாட்டியிருக்கற நியூஸ் பேப்பரை கிழிச்சு துடைச்சுப்ப…”
“பஸ் ஏறுற வரைக்கும் எதையாச்சும் கொரிச்சுட்டே நிக்கறது தான் உன் வேலை. பஸ் கிளம்பற நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடி வறுத்த வேர்கடலை வரும். ரெண்டு பொட்டலத்தை வாங்கி பேக்ல போட்டுப்ப. ஈவ்னிங் திரும்பும் போது நாயர் கடை சாய் குடிக்காம போகமாட்டீங்க. இதுல மேடம் குடிக்கிறது மசாலா டீ…”
ஜீவன் சொல்ல சொல்ல வாய் பிளந்து பார்த்துக்கொண்டு இருந்தவள் அவன் கடைசியாய் சொல்லியதை கேட்டு லேசாய் வெட்கம் பிறக்க,
“மசாலா டீ வீட்டுல போட மாட்டாங்க. போட்டாலும் கடைல குடிக்கிற மாதிரி வராதுல அதான்….”
“தப்புன்னு நான் சொல்லவே இல்லையே. இன்ஃபாக்ட் உன்னோட அந்த ஆட்டிட்டியூட் எனக்கு ரொம்ப புடிக்கும். இங்கலாம் வாங்கி சாப்பிட்டா யாரும் எதுவும் நினைப்பாங்களோன்ற கவலையே இல்லாம யார் என்ன சொன்னா எனக்கென்னன்னு உனக்கு புடிச்சதை நீ செஞ்ச பார்த்தியா. அது ரொம்பவே இம்ப்ரெஸ் பண்ணுச்சு…” என்று சொல்லியவன் அவளின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு,
“இப்போ அந்த மொழி எங்க போனா? நான் அவளை தான் பார்க்கனும். அவக்கிட்ட தான் என்னோட மிச்சங்களை, மீதங்களை எல்லாம் பகிர்ந்துக்கனும். அவ கையை பிடிச்சுக்கிட்டு திரும்பவும் அந்த கன்னியாகுமரி முழுக்க சுத்தனும். அந்த நாயர்கடையில திரும்ப உன்னோட சேர்ந்து மசாலா டீ குடிக்கனும்…”
“என்னோட ரசனைகளை பகிர்ந்துக்கனும். எல்லாமே அந்த மொழிக்கிட்ட, தூதர்ஷன்கிட்ட மட்டும் தான். இந்த மொழிக்கிட்ட இல்லை. இல்லவே இல்லை…”
முதலில் விளையாட்டாய் சிரிப்புடன் ஆரம்பித்தவன் மிகவும் உணர்ச்சிபெருக்கில் பேச பார்த்தவளுக்கு தான் என்னவோ போல் ஆனது. ஒருபக்கம் தன்னை இந்தளவிற்கு நுணுக்கமாய் கவனித்திருக்கிறானா என்று வியப்பாகவும் இருந்தது.