புன்னகை – 6
ஜீவனின் பேச்சுக்களில் தன்னை தானே புதிதாய் பார்ப்பதை போல உணர்ந்தாள் தேன்மொழி.
எப்படியெல்லாம் இருந்திருக்கிறோமே? இவை எல்லாம் ஏதோ முன்ஜென்மத்தில் நடந்ததை போல உள்ளதே! அதனை ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டு இருந்தாள்.
தன்னை பற்றி கேட்க கேட்க அத்தனை பிடித்தது. ஆனாலும் இந்த வாழ்க்கை என்னை இப்படி மாற்றிவிட்டதே என்று வருத்தமும் எழாமல் இல்லை.
அந்த வருத்தத்தில் தன் பெற்றோரை இழந்தது, பெரியப்பாவின் வீட்டில் அடைக்கலமானது, திருமணம், அவனின் மரணம், பின் நடந்த சில அவமதிப்புகளும் ஒதுக்கங்களும் என வரிசையாய் நியாபகத்தில் வலம் வர கடைசியாய் ஜீவனின் மனைவியான இன்றைய தருணம்.
இத்தனை இழப்புகளின் பின் இவனிடம் வந்திருக்கிறேன். இதற்கு தான் இத்தனை காயங்களா? நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளுக்கு.
ஜீவனை அத்தனை பிடிக்கும். காரணமே இன்றி அவனின் மீதான அன்பு பெருகி கிடந்தது அவளிடத்தில். அவன் தன்னிடம் பழகுவதும், அவனின் பேச்சும், புன்னகையும் எப்போதுமே அவளுக்கு அலாதி தான்.
திருமணத்திற்கு பார்த்திருக்கிறோம் என்று பெரியப்பா சொன்ன உடனே மனக்கண்ணில் ஜீவன் தான் தோன்றினான்.
‘பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஜீவனை போல இருப்பானா? அவனை போல பழகுவானா? தன்னை கவனிப்பானா? தனக்கென நிற்பானா?’ இப்படி அவனை கொண்டே வருங்கால கணவனை பற்றிய அபிப்ராயங்கள் இருந்தது.
காதல். இது அவளின் மனதில் எவ்விடத்திலும் இல்லை. ஆனால் வாழ்க்கை துணை என்றால் இப்படித்தான் இருப்பானோ என்னும் விதமாக அவளின் மனதில் பதிந்துபோய் இருந்தான் ஜீவன்.
அப்படித்தான் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்திருந்தாள். அவ்வளவே. திருமணத்தில் பெரிதாய் எந்த ஆசைகளோ, எதிர்பார்ப்புகளோ இருந்ததில்லை.
ஒருவேளை அவளின் பெற்றோர் இருந்து இன்னும் பக்குவப்பட்டதும் திருமணம் என்று வந்திருந்தால் இன்னும் யோசித்திருந்திருப்பாளோ? அமுதனை காண்பிக்கவும் சரி என்றுவிட்டாள். அவனிடத்தில் அதன் பின்னர் ஜீவனை தேடவில்லை.
அமுதன் அப்படி இருந்தானா என்றால்? அவளுக்கு தெரியாது என்பதே உண்மை. அந்தளவிற்கு அவனுடன் பழகியிருக்கவில்லை. திருமணம். அதிகத்திற்கும் பேச்சுக்கள் இல்லை. அதனால் பெரிதாக எதிர்பார்க்கவும் இல்லை.
முழுதாய் புரிந்துகொள்ளும் முன் முதல் படியிலேயே வாழ்க்கை படகு மொத்தமாய் கவிழ்ந்து மூழ்கியிருந்தது. இப்போது அந்த யோசனைகள் மேலெழும்பியது.
தனக்கு ஏன் இத்தனை யோசனை? எங்கோ ஆரம்பித்து எங்கோ முட்டி நின்றது. திரும்பி வர வழி தெரியாமல் அவள் திணறி நிற்க ஜீவனின் குரல் அவளுக்கு கைகொடுத்தது.
“என்ன மொழி சைலன்ட் ஆகிட்ட?…” என கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள் மற்ற குழப்பங்களை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு மீண்டும் ஜீவன் சொல்லியதில் மனம் வந்து நிற்க ஒருமுறை அத்தனையையும் மனதிற்குள் அவனின் குரல் வாயிலாகவே கேட்டு கொண்டவள்,
“உங்களுக்கு என்னை அப்பவே புடிக்குமா?…”
“அப்போவேன்னா? அப்போ இப்ப புடிக்காதுன்னு அர்த்தமா என்ன? அதெல்லாம் இல்லை. மொழியை எப்பவுமே புடிக்கும். இப்பவும்…” என அவளின் கன்னத்தை தட்டிக்கொடுக்க கூச்சத்தில் சற்று பின்வாங்கினாள்.
“அதனால எந்த பாஸ்ட்டையும் பேசாம இந்த லைப்ல அட்டாச் ஆக பாரு. அதுக்கு ட்ரை பண்ணு…” என்றதும் அவள் மௌனமாய் இருந்தாள்.
ஜீவனுக்குமே தனக்கும் வர்ஷாவிற்கும் இடையில் நடந்ததை விவரிக்க எண்ணம் தான்.
அதற்கு முதலில் தேன்மொழி அவனின் மனைவியாக மனதளவில் மாறவேண்டும். கணவனாக தன்னை முழுமனதாய் ஏற்கவேண்டும்.
அதன் பின்னர் அவனின் அத்தனையையும் அவளிடம் ஒப்புவித்து தன்னையும் ஒப்புக்கொடுக்க தயாராக இருந்தான்.
“என்ன நான் சொன்னது ஏதாவது புரிஞ்சதா உனக்கு?…” என அவளை பார்த்தபடி கேட்க அவனின் பேச்சு புரியாமலா? நன்றாக விளங்கியதே.
ஆனாலும் அழுத்தம் சாதித்தாள். தயங்கினாள். அவனின் மனதை வார்த்தைகளின் அவன் மூலம் தெளிவுபடுத்திவிட்டான். அவனை போல சட்டென பேசிவிட அவளால் தான் முடியவில்லை.
“என்ன மொழி?….” என கேட்க,
“அது வந்து தூங்குவோமான்னு கேட்லாமேன்னு…” அவளை குறுகுறுவென பார்த்தவன் பின் சற்று குறும்பு தலைதூக்க,
“ஹ்ம்ம், இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்…” என்று நமுட்டு சிரிப்புடன் கையை உயர்த்தி நெளிந்துகொண்டே சொல்ல ஒருவித அவஸ்தையுடன் அவனை அடிக்கண்ணால் பார்த்தவள்,
“என்னது இது?…” என,
“என்ன என்னது? இதுக்கு பேசாம நாமளும் அந்த ஹால்ல படுத்திருக்கலாம்…” என்று சாதாரணமாக சொல்ல,
“ப்ச், பாஸ், இதெல்லாம் வேண்டாமே. இந்த பேச்சு…” என்று தயங்கி சொல்ல,
“இங்க பார் மொழி, நீ என்னோட வொய்ப். உன்கிட்ட இப்படி பேசலைன்னா தான் தப்பு….” என்றான் இலகுவாக.
“இப்ப இல்லை. கொஞ்சம் நாளைக்கு…” என்றவளை அழுத்தமாய் பார்த்தான்.
“எவ்வளோ நாளைக்கு அப்பறம்னு நீயே சொல்லேன்?…”
“என்னது?…” என விழிக்க,
“முடியாதுல. இப்ப இருந்தே பழகிக்கோ. கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்டே இருந்து இப்படி ஒரு வார்த்தையும் வந்திருக்காது உனக்கு. இப்போ உன்கிட்ட எப்படி பேசனுமோ அப்படித்தான் பேசுவேன்…”
“நீங்க இப்படிலாம் பேச மாட்டீங்களே…”
“அப்போ ப்ரெண்ட், இப்போ பொண்டாட்டி. வேற எதாச்சும் சொல்லனுமா?…” என்றதும் ‘ம்ஹூம்’ என்று தலையை ஆட்டியவள் மேலும் பேசி அவனை பேச வைக்காமல் போதுமென்று அப்படியே படுத்துக்கொண்டாள்.
“குட்நைட் மொழி…” என்று சொல்லி தானும் படுத்து கண்மூடிக்கொண்டான்.
அவன் பிடித்திருந்த தேன்மொழியின் கையை இன்னமும் விடவில்லை. பிடித்தபடியே உறங்க காற்றில் ஆடிய கேசமும், நிர்மலமான முகமும் அவனின் அமைதியை எடுத்துச்சொல்லியது.
அந்த அமைதி அவளிடத்தில் தான் இல்லை. இப்போது அவனின் முகத்தையும், முன்பு தன்னோடு பழகிய ஜீவனோடு ஒப்பிட்டு பார்த்தாள்.
எத்தனை எத்தனை வித்தியாசங்கள் அவனிடத்தில். மாறாதது அவனின் பிடிவாதமும், உரிமையான பேச்சும், தன் மீதான அன்பும் மட்டுமே.
அன்று அவனின் கண்களில் ஒரு கண்ணியமும், எல்லையும் இருக்கும். இன்று சுத்தமாய் இல்லை. அதை உணர்ந்தவளுக்கு லேசான சிலிர்ப்பு. விழிகளை இறுக்கமாய் மூடித்திறந்தாள்.
நினைத்தும் பார்க்கவில்லை. இந்த நிமிடம் ஜீவனின் மனைவி அவள். அவனருகே உரிமையாக இப்படி இருப்போம் என்று நினைத்தும் பார்த்ததில்லை. அவனின் கைகளுக்குள் அவளின் கரம். அதனை மெல்ல உருவ பார்க்க,
“ப்ச், மொழி…” என்று லேசாய் கண் திறந்து அதட்டியவன்,
“தூங்கலையா?…” என கேட்க,
“தூக்கம் வரலை…” என்றவளை பார்த்தவன் ஒரு நொடி மௌனித்து பின்,
“இங்க வா…” என்று அவளின் அருகே நெருங்கி அவளையும் அழைத்து,
“சாஞ்சிக்கோ…” என இடது கையை விரிக்க விழி அகன்று அவனை பார்த்தாள்.
“என்ன பார்வை இது? என் தோள்ல நீ சாய்ஞ்சதே இல்லையா?…” என்று கேட்க சட்டென அவன் அவளை முதன் முதலாக அணைத்து ஆறுதல்படுத்தியது ஞாபகம் வந்தது.
வர்ஷா. அவளால் தான் அவனின் அந்த அணைப்பும் ஆறுதலும். அவளைக்கொண்டே அதுவும் நிகழ்ந்தது. கோபமாய் பேசிய வர்ஷாவிடமிருந்து அவளை அன்று காத்தவன் ஜீவன்.
“என்ன ப்ளாஷ்பேக்கா? எதையும் நினைக்காதன்னு சொன்னேன்ல…”
“நினைக்காத நினைக்காதன்னு சொல்லி சொல்லி அந்த நினைவுகளோட மொத்த உருவமா நீங்க இருக்கும் போது ஞாபகம் வராம என்ன செய்யும்?…” என வெடுக்கென்று தேன்மொழி கேட்க,
“அது என் தப்பில்லை மொழி. இப்படியே ஏத்துக்க பழகு…” என்றான் அவனும் பட்டென.
“வான்றேன்ல…” என்ற அதட்டலில் அவனின் தோள் சேர்ந்தவள் அப்படியே கண்மூடிக்கொள்ள,
“சமத்து…” என்று லேசாய் அணைப்பில் அழுத்தம் கொடுத்து சில்லாகித்துக்கொண்டான்.
“இப்போலாம் ரொம்ப மிரட்டறீங்க…”
“முன்னாடி நீ கத்து குடுத்தது தான். என்னை மிரட்டுவியே. இப்ப ரிவெஞ்ச்…” என்று சிரிக்க அவனின் கையை கிள்ளினாள்.
“ரொம்ப மாறிட்டீங்க பாஸ்…” என்றவளின் தலையில் முகம் புதைத்தவன்,
“வாழ்க்கை நமக்கு நிறைய மாற்றங்களை தருது மொழி. சில நேரம் நம்மா விரும்பற மாதிரி. சில நேரம் நாமே எதிர்பாராத மாதிரி…” என்றவனின் பேச்சை ஒரு விரல் கொண்டு நிறுத்தியவள் அப்படியே கண்மூடிக்கொண்டாள்.
எதையும் கேட்க விரும்பாததை போன்ற அவளின் செய்கையில் லேசாய் முறுவலித்தவனும் கண்மூடிக்கொண்டான்.
“தூங்கும் போது பேச கூடாதோ?…” என கேட்க,
“நான் தூங்கி பத்து நிமிஷம் ஆச்சு…” என்றாள் மொழி.
“அதிகமா தூங்கறது நல்லதில்லை மொழி…” என்று சொல்ல பதிலே இல்லை அவளிடம். சிரித்ததில் லேசாய் அவள் மேனி அதிர,
“கேடி…” என்று அவளின் தலையை பிடித்து ஆட்டியவன் அப்படியே உறங்கி போனான்.
விடியற்காலை வழக்கமான நேரம் அவள் எழுந்துகொள்ள கொண்டு வந்திருந்த பேக்கில் இருந்து உடையை எடுத்துக்கொண்டு குளித்துவிட்டு வர ஜீவனும் முழித்திருந்தான்.
“காபி இருக்குது மொழி. அக்கா குடுத்தா. இதை குடிச்சுட்டு ரெடியாகு. நானும் வரேன்…” என,
“நீங்க? உங்களுக்கு காபி…” என கேட்டுக்கொண்டே அந்த கப்பை எடுத்துக்கொள்ள,
“நான் எம்ப்டி ஸ்டமக்ல எதுவும் குடிக்க மாட்டேன். சாப்பிட்டதும் தான் காபி, டீ எதுவானாலும். நீ குடி…” என சொல்லி குளிக்க சென்றுவிட்டான்.
காபியை குடித்துவிட்டு தலையை உலர்த்தி லேசாய் தளர்வாய் பின்னிக்கொண்டவள் திறந்திருந்த தனது பெட்டியில் இருந்த உடைகளை எடுத்து கட்டிலில் வைத்துக்கொண்டு இருந்தாள்.
“இப்பவே அரேஞ்ச் பண்ணனுமா நீ? இன்னும் கொஞ்சம் நேரத்துல உங்க பெரியப்பா வீட்டுக்கு கிளம்பனுமே?…” என கேட்டபடி வந்து நின்றவனை பார்த்து மலைத்து போனவள் படக்கென கண்ணை மூடிக்கொண்டாள்.
மீண்டும் ஒற்றை கண்ணை திறந்து பார்த்தாள். இப்படி சட்டை இன்றி மடித்துக்கட்டிய லுங்கியுடன் தலையை துவட்டிக்கொண்டு வந்து நின்றவனை கண்டு ஓடவும் முடியாமல் நகரவும் முடியாமல் அப்படியே நின்றாள்.
ஜீவனை இப்படி அவள் கண்டதே இல்லை. அதிலும் அவளின் செய்கையில் அவனின் புன்னகைக்க அது அவளை என்னவோ செய்ய மூச்சடைக்க திரும்பிக்கொண்டாள்.
அவனும் அவளை கண்டுகொண்டு தானே இருக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றவேண்டும் தானே? இதழ்களுக்குள் பொங்கிய சிரிப்பை அடக்கியவன் மேலும் அவளை சோதிக்கும் விதமாய் இரண்டு சட்டைகளை எடுத்துக்கொண்டு அவளிடம் வந்தான்.
“மொழி…” என அழைக்க தலையை சீவுவதை போல திரும்பிக்கொண்டவள் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கூச்சம் முட்டித்தள்ளியது.
“இங்க பாரேன்…” என்று தோள் தொட்டு தன்புறம் திருப்ப நிமிராமல் கண்ணை மூடிக்கொண்டாள்.
“ப்ச், என்ன இது? இங்க பாரு. இந்த ஷர்ட்ல எதை போடலாம் சொல்லு…” என்று கேட்க மெதுவாய் நிமிர்ந்து அவனின் கையில் இருந்த சட்டையில் கண் பதித்தலும் பார்வை வெற்று மார்பில் பதியாமல் இல்லை. ‘ஐயோ’ என உள்ளுக்குள் அலறியவள்,
“நீங்களே செலக்ட் பண்ணிக்கோங்க…” என்று திரும்ப பார்க்க அவன் விட்டால்தானே?
“அதெல்லாம் முடியாது. நீ சொல்லு. இன்னைக்கு உன் சாய்ஸ். கல்யாணத்துக்கப்பறம் பர்ஸ்ட் டைம் சேர்ந்து வெளில போறோம். சோ நீ தான் செலெக்ட் பன்ற…” என பிடிவாதமாய் சொல்ல,
“இது இது…” என்று பார்வை அலைபாய விரல்கள் நடுங்கியது.
“ஹ்ம்ம் சொல்லு. எந்த ஷர்ட் நல்லா இருக்கு?…” என்று மீண்டும் கேட்க அவனின் முகத்தை பார்க்க முடியாமல் இங்குமங்கும் பார்வையை ஓட்டினாள்.
“சொல்லு மொழி, இந்த ரெண்டு ஷர்ட்ல எது நல்லா இருக்குன்னு கேட்கறேன்ல…” இன்னும் அவளை நெருங்கி கேட்க விதிர்விதிர்த்து போனாள்.
“இல்லை நீங்க போட்டுட்டு வாங்க. நான் சொல்றேன்…” என பின்னால் போக,
“ஏன் இப்படியே சொன்னா என்ன குறைஞ்சா போய்டுவ?…”
“ப்ளீஸ், என்னால முடியலை…” என கெஞ்சலாய் அவனின் முகம் பார்த்தவள் அப்படியே அசையாது நின்றாள்.
அந்த முகம், அந்த புன்னகை. அதில் எதுவோ ஒரு உணர்வு இவளுள் மொத்தமாய் புரட்டி போட்டது. அப்படியே அவள் நிற்க மயக்கும் புன்னகையுடன்,
“நீ என் வொய்ப் தான? பார்க்கலாம். தப்பில்லை…” என்று அவன் கண்சிமிட்டி சொல்லவும் சட்டென மயக்கம் தெளிந்ததை போல அவனின் கையில் இருந்து விடுபட்டவள் அங்கிருந்து நழுவி பாத்ரூமில் சென்று ஒளிந்துகொண்டாள்.