இந்த ஜீவன் முற்றிலும் புதிது. அந்த பார்வை, அதில் இருந்த ஏக்கம். அவளிடம் அவன் கொண்ட எதிர்பார்ப்பு. இப்படி அத்தனையையும் அந்த ஒற்றை பார்வையில் அவன் காட்டியிருக்க அது தாளமுடியாமல் உள்ளுக்குள் படபடத்து போனாள்.
தேன்மொழியிடம் இருந்த தடுமாற்றம் துளியும் ஜீவனிடத்தில் இல்லை. வேறொரு பெண்ணாக இருந்தால் கூட தள்ளி இருந்திருப்பானோ? ஏற்றுக்கொள்ள நாள் ஆகியிருக்குமோ?
ஆனால் தேன்மொழியிடம் தள்ளியிருக்க அவனால் முடியவில்லை. திருமணம், கணவன் மனைவி உறவு என ஒரு நிமிடத்தில் அவன் தனக்குள் அவளை முழுமனதுடன் ஸ்வீகரித்துக்கொண்டான்.
ஆனால் அவள் ஏற்க நாளாகும் அல்லவா? அதற்காக தன் கடமையை உணர்த்தாமல் இருக்கமுடியாதே? அதனால் சிறு சிறு செய்கைகளிலும் அவளின் இடத்தை அவளுக்கு இட்டு காட்டினான்.
மீண்டும் தேன்மொழி வரும் முன்னர் உடை மாற்றி தயாராகி அறையை விட்டு வெளியே வர பிள்ளைகள் கிளம்பி அமர்ந்திருந்தனர்.
“என்னடா தேனு எங்க?….” என அகல்யா கேட்டதும்,
“வரா வரா. நீ என்னத்தா செய்யுதா? அங்க தான கால சாப்பாடு?…” என அக்காவிடம் கேட்க,
“அங்கதேன். அதுக்குன்னு வெறும் வவுத்தோட போவாகளா? பொறு, கொஞ்சமா எதையாச்சும் சாப்புட்டு போவலாம். புள்ளைங்க பசியோட இருக்கும்ங்களே…” என்று தோசையை ஊற்றிக்கொண்டு இருக்க சுலோச்சனா பிள்ளைகள் இருவருக்குமே அதை ஊட்டிக்கொண்டு இருந்தாள்.
“நீ என்ன சின்ன புள்ளையா? அவகள வேல வாங்குத?…” என மருமகளின் தலையில் கொட்டியவன்,
“நீ ஏன்ம்மா இவளுக்கும் ஊட்டிக்கிட்டு இருக்க?…” என சுலோவிடம் கேட்க,
“இருக்கட்டும்ங்க அண்ணா….” என்று ஊட்ட,
“அவளுக்கு யார்ட்டயாச்சும் செலாத்தல காமிக்கனும். இங்கன தான? போவட்டும். நாளைக்கு ஊருல வந்து ஊட்ட சொன்னா கொமட்டுல நாலு காட்டு காட்டுதேன்…” என அதனை பார்த்துக்கொண்டே அகல்யா சொல்ல,
“இருக்கட்டும்க்கா. அவளும் சின்ன பொண்ணு தானே?…” என பேசிக்கொண்டே ஊட்டினாள் சுலோ.
“சரி சரி, நீயும் ரெண்டு சாப்பிடேன்…” என தம்பிக்கு ஊற்ற,
“ஹ்ம்ம் வை…” என சொல்லி ஒரு ஸ்டூலை கொண்டுவந்து கிட்சனில் போட்டு அமர்ந்துகொண்டான்.
“அம்மா இன்னும் எழுந்துக்கலையா?…”
“எந்திச்சு குளிச்சு திரும்ப படுத்துருக்காங்க. அசதி வாட்டுது போலயாக்கும்…”
“சரி இரு அவங்களுக்கு ஊசி போட்டுட்டு வரேன். சாப்புடனுமில்ல…” என்றவன் எழுந்து சென்று தெய்வாவிற்கு ஊசியை போட்டுவிட்டு கையை கழுவி மீண்டும் வந்து சாப்பிட அமர்ந்தான்.
“இன்னும் எத்தனை நாள்டா லீவு உனக்கு? கோவிலுக்கு வேற போவனும்…” என்று தோசையை வைத்து அவனுக்கு தட்டை நீட்ட,
“இந்த வாரக்கடைசில போவனும். என்னிக்கு நாளு நல்லாருக்குன்னு பார்த்து அதுக்குள்ளே ஏற்பாட்டை பண்ணு…”
“இருக்கறது நாலு நாளு. இதுல எந்த நாள பாக்க? சரி அம்மாக்கிட்ட கேட்டுட்டு பேசுவம்…”
“ஏன் நாலு நாளுல ஒன்னும் பண்ண முடியாதாத்தா? போவ ஒரு நா. வர ஒரு நா. ரா பயணமா வச்சுக்கிட வேண்டித்தானே? போதாதா?…”
“சட்டுன்னு செய்யறதா? போடா…”
“அதேன் சொல்லிட்டேம்ல. இப்பத்தேன் வேலைக்கின்னு இங்க சேந்திருக்கேன். அவனுங்கட்ட லீவுக்கு நிக்க சொல்லுதியா? இதுக்கே மூஞ்சிய தூக்குனானுங்க. இம்புட்டு தான் லீவு. மத்தத பொறவு பாத்துக்கிடுவோம்…”
“அத இப்ப சொல்லுத நீயி? மொத சொல்லிருந்தா அதுக்கேத்தாப்புல என்னத்தையாச்சும் செஞ்சிருக்கலாமில்ல. என்ன நீ?…”
அவனை திட்டிக்கொண்டே திரும்ப ஜீவனின் அறைக்குள் இருந்து மெல்ல வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டே தேன்மொழி வருவதை கண்டு மெல்லிய புன்னகை பூத்தது அகல்யாவிடம்.
“என்னடா உன் சம்சாரம் உன்ன தேடிட்டே கதவ தொறக்கறா?…” என கிண்டலாய் சொல்லி சிரிக்க மெதுவாய் திரும்பி பார்த்தவனுக்கும் சிரிப்புதான்.
“நல்லா பாரேன். நா இருக்கேனான்னு ஒரு பார்வையோட தான் வருவாளாக்கும்…” என சொல்லிவிட்டு,
“மொழி இங்க இருக்கேன்…” என்று அழைக்க திடுக்கிட்டு திரும்பிய தேன்மொழி அவனிடம் செல்லாமல் வேகமாய் சுலோச்சனாவின் அருகே சென்று நின்றுகொண்டாள்.
“உன்னை அங்க கூப்பிட்டா நீ என் பக்கத்துல வந்து நிக்கற. போய் என்னனு கேளு தேனு. நம்ம வீட்டுக்கு கிளம்பனும். நாம தான் பார்த்துக்கனும். போ போ. போய் பேசு….” என சுலோச்சனா விரட்ட வேறு வழியின்றி ஜீவனிடம் வந்து நின்றவள் சட்டென அகல்யாவின் பக்கம் வந்து நின்றாள்.
“சாப்பிடுதியா தேனு?…” என கேட்ட அகல்யா அவளுக்கும் ஒரு தட்டை எடுத்தாள் அகல்யா.
“இல்லை அண்ணி, பசிக்கலை…” என சொல்ல,
“என்னவாம்? ஏன் பசிக்கலை மொழி…” என சீண்டல் குரலில் ஜீவன் கேட்க அவனை திரும்பி லேசாய் முறைத்தவள் அவனின் சிரிப்பில் பார்வையை தோசைக்கல்லில் வைத்தாள்.
“பார்த்தியாக்கா இவளை. எனக்கொரு சட்டைய எடுத்து தான்னு கேட்டதுக்கு மாட்டேன்னுட்டு போயி ஒளிஞ்சிக்கிட்டா. என்னன்னு இப்ப எனக்கு கேட்டுகுடு…” என்று அக்காவையும் இழுத்துவிட்டான் ஜீவன்.
“ஏன் தேனு, அப்பிடியா? ஏம்த்தா கேட்டா ஒத்த சட்டைய தூக்கி கையில குடுக்கத்தான? அதுக்கென்னத்துக்கு இம்புட்டு பண்ணுத?…” என அகல்யாவும் தம்பியுடன் சேர்ந்து தேன்மொழியிடம் விளையாட,
“இல்ல அண்ணி, அவங்களே எடுத்துட்டாங்க. சும்மா என்னை சீண்டிடு இருக்காங்க…”
“நீ அவேன் பொண்டாட்டி. அதேன் சீண்டுதான். எங்க என்னிய சீண்ட விடுதானா பாப்பமா?…” என சவாலாய் சொல்ல ‘பார்த்துக்கோ’ என்று தேன்மொழியை பார்த்து லேசாய் தலையசைத்தவன்,
“ஓகே, நீயும் சாப்பிட்டு முடி மொழி. கிளம்பனும். இப்ப மாமா வண்டி கொண்டு வந்திருவாங்க…” என்று சொல்லி அவன் சாப்பிட்ட தட்டை கழுவி வைத்துவிட்டு நகர்ந்தான்.
அவன் நகரும் பொழுது லேசாய் அவளை உரசிவிட்டு செல்ல புடவை தலைப்பை இறுக்கமாய் பிடித்தபடி, இன்னுமே கால்களை ஊன்றி நின்றாள் அவள். ஒதுங்கி நிற்க நிற்க சீண்டும் ஆவல் இன்னும் அதிகமானது ஜீவனுக்கு.
இதையும் கண்டு மிதமான புன்னகையுடன் ஜீவன் ஹாலிற்கு சென்றதும் தான் மூச்சு வந்தது. அகல்யா இதை கவனிக்காமல் இருந்ததே போதும் என்று சாதாரணமாக இருப்பதாக காட்டிக்கொள்ள அவளிடம் பேசிக்கொண்டே தானும் சாப்பிட்டாள்.
அகல்யா இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தாலும் காணாததை போல இருந்துகொண்டாள். மனதிற்குள் அப்படி ஒரு நிறைவு. தம்பியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும், அமைதியும் நிலைக்கவேண்டும் என்ற பிராத்தனையுடன் அவளுடன் பேசிக்கொண்டிருக்க,
“அத்தை எங்க அண்ணி?…” என்ற தேன்மொழியிடம்,
“உள்ள படுத்துருக்காங்கத்தா. இப்ப போயி எழுப்புதேன். அவுகளுக்கு முடியல. மேலுக்கு சொவமில்லாம இருக்குது போல…” என்று சொல்ல,
“நான் பார்த்துட்டு வரட்டுமா?…”
“நல்ல போய் பாரேன். யாரு வேணாங்குதா?…” என்று அகல்யா சொல்லவும் தேன்மொழி போய் தன் மாமியாரை பார்க்க கண்ணை மூடி உறங்கிக்கொண்டு இருந்தார்.
எழுப்புவோமா வேண்டாமா என யோசித்தபடி அவள் நின்றுகொண்டிருக்க அவளருகே வந்த ஜீவன்,
“இன்னும் சாப்பிடாம இங்க என்ன பன்ற?…” என வந்து கேட்கவும் திடுக்கிட்டாள். திடீரென்று பின்னால் இருந்து குரல் கேட்கவும் திரும்பி பார்த்தவளின் அதிர்வில் சத்தமின்றி சிரித்தவன்,
“வீட்டுக்குள்ள தான இருக்க? இங்க தானே எல்லாரும் இருக்கோம்? வேற யார் வந்து உன்கிட்ட இப்படி நின்னு கேட்க முடியும்?…” என்று கேலி பேச,
“அதை கொஞ்சம் நல்லா தான் கேட்கறது. இப்படி நின்னா ஷாக் ஆகும் தானே?…”
“எல்லாத்துக்கும் ஷாக் ஆகிட்டே இருந்தா எப்போ பழகிக்கறதாம்?…” என அவன் சிரிக்க,
“போதும், போதும்…” என்று அவனின் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள் அவனை கடந்து கிட்சனிற்குள் வேகமாய் சென்றாள்.
“யத்தா மொழி…” என அவளின் பின்னாலே வந்தவன் வம்பிழுக்க,
“குட்மார்னிங் எவ்ரிபடி…” என வீட்டிற்குள் நுழைந்தான் ஷிவா.
“வாடா சின்ன மச்சான்…” என ஜீவனும் ஆர்ப்பாட்டமாக அவனை அணைத்துக்கொள்ள ஒரு சுற்று சுற்றி நின்றனர் இருவரும்.
“எங்கடா என் பெரிய மச்சான் டார்லிங் டம்பக்கை காணோம்?…” என,
“உங்களுக்காக பாவி பயலே நீ பாட்டு பாட ப்ராக்டிஸ் எடுத்துட்டு வீட்ல வெய்ட்டிங். போனதுமே கச்சேரியை ஆரம்பிச்சுடலாம்…”
“பக்கவாத்தியத்துக்கு நானும் வருவேன்…” சுலோச்சனா வந்து நிற்க,
“நானும் டான்ஸ் ஆடுவேன்…” வைதேகி அதன் பின்னால ஒடி வர அவளின் கையை பிடித்துக்கொண்டு குழந்தை ஆதிக்கும்.
“இங்க என்ன நடக்குதுன்னே தெரியாம குடும்பமா கும்மியடிக்க தயாரா இருக்காங்கய்யா…” என்ற ஜீவனின் கிண்டலில்,
“சேர்க்கை சரியில்லை மாமா, அதான்…” என்று சொல்லி ஜீவனும், ஷிவாவும் ஹைபை அடித்துக்கொள்ள கிட்சனில் இருந்து இதை பார்த்தபடி தேன்மொழியும் அகல்யாவும் சிரித்தனர்.
அகல்யாவிற்கு தெரிந்ததனால் புரிந்து சிரிக்க தேன்மொழி அனைவரின் முகத்திலும் தென்பட்ட புன்னகை அவளுக்கும் தொற்றிக்கொள்ள சிரித்தாள்.
“கிளம்பலாமா?…” என்ற ஷிவாவிடம்,
“அதுக்கு முதல்ல கொஞ்சம் சாப்பிடு. சீக்கிரம் கிளம்பிருப்ப. அதனால லைட்டா சாப்பிடு. இப்ப மாமாவும் வந்திருவாங்க. போகலாம்…” என்ற ஜீவனிடம்,
“மாமா, கீழே கார்ல தேனோட திங்க்ஸ் கொஞ்சம் இருக்குது. இருங்க எடுத்துட்டு வந்திடறேன்…”
“கார்லயா வந்த?…”
“ஹ்ம்ம், ஆமா. ப்ரெண்ட் கார் இருக்குதுல…”
“ஓஹ், அப்போ மாமாவை எடுத்துட்டு வர வேண்டாம்னு சொல்லிடனும். வெய்ட். போன் பண்ணிட்டு வரேன்…”
“நேத்தே நான் சொல்லிட்டு தானே போனேன். அப்பறம் எதுக்கு இன்னொன்னுக்கு பேசினீங்க?…” என்ற ஷிவாவை சமாதானம் செய்தவன்,
“நீ எடுத்திட்டு இரு. மாமாட்ட பேசிட்டு வந்திடறேன் நானும்…” என்று ஷிவாவை அனுப்பிய ஜீவன் மொபைலை எடுக்க உள்ளே செல்ல,
“நானும் வரேன் ஷிவா…” என்ற சுலோவை,
“வேண்டாம் அண்ணி. நாங்க எடுத்துட்டு வரோம். நீங்க வந்தா ஆதியும் வரனும்னு அடம் பண்ணுவான். மாமாவையும் வேண்டாம்னு சொல்லுங்க. நானே கொண்டு வந்திருவேன்…” என்று சொல்லிவிட்டு வெளியேறியவன் கீழே செல்ல லிப்ட்டை அழுத்தினான்.
மீண்டும் மீண்டும் அழுத்த இரண்டாம் மாடியிலேயே நிற்பதாக காண்பித்தது. எரிச்சலானவன் வேகமாய் படியில் இறங்கி போனான். அங்கே இரண்டாவது தளத்தில் மூன்று பெண்கள் லிப்டை ஓபன் செய்துகொண்டு நின்றபடி பேச அவர்களின் தோற்றத்தை கண்டவன்,
“கொஞ்சமாவது சென்ஸ் இருக்குதா உங்களுக்கெல்லாம்? இப்படித்தான் எல்லாரும் யூஸ் பன்ற லிப்ட்டை ப்ளாக் பண்ணிட்டு நின்னு அரட்டை அடிப்பீங்களா? வேணும்னா வீட்டுக்குள்ளயே ஆளுக்கொரு லிப்ட் போடவேண்டியது தானே? இடியட்ஸ்…” என கத்திவிட்டு கடந்து போக,
“ஹவ் டேர் யூ? நீ என்னை…” என ஒருத்தி பொங்கிக்கொண்டு வர மற்ற இருவரும் அமைதியாக லிப்டிலிருந்து நகர்ந்து வெளியே வந்தனர். வந்ததும் லிப்ட் மேலே ஏறிவிட,
“எதே, டேரா? டாராகிடும் பார்த்துக்க. திட்டினாலும் மரியாதையா தானே திட்டினேன். நீன்னு பேசற என்னை? அது சரி, காமன் யூஸ்க்கு இருக்கறதை இப்படி ப்ளாக் பண்ணின இர்ரெஸ்பான்ஸிபிள் பர்சனாலிட்டிட்ட இதை தானே எதிர்பார்க்க முடியும்…”
“நான்சென்ஸ்…”
“அந்த சென்ஸ் இல்லைன்னு தான் உன்னை திட்டிட்டு இருக்கேன்…” என ஷிவாவும் அவளை விடுவதாய் இல்லை. அதற்குள் அந்த மற்ற இரு பெண்களும்,
“ஹேய் லீவ் இட் யா. நாங்க கிளம்பறோம்…” என்று லிப்ட்டை அழுத்தியிருக்க மேலே இருந்து வந்த லிப்ட் இரண்டாம் தளத்தில் வந்து நிற்க உள்ளே இருந்த ஜீவன் ஷிவாவின் சத்தத்தில் வெளியே எட்டி பார்த்தான்.
சட்டையை முழங்கை வரை இழுத்துவிட்டு பல்லை கடித்துக்கொண்டு மச்சான் பேசுவதை கண்டு பதறி வெளியே வந்தவன்,
“என்ன ஷிவா?…” என்று அவனை பிடித்துக்கொள்ள,
“லிப்ட்டை ப்ளாக் பண்ணிட்டு இதுங்க இங்க அரட்டை அடிக்கறாங்க. அதை வெளில நின்னு அடிக்கறதுக்கென்ன? அதை என்னன்னு கேட்டதுக்கு டர்ரு புர்ருன்னு என்கிட்டையே எகிறிட்டு வருது இந்த பொண்ணு…” என்று அவன் பொங்க,
“டாக்டர் உங்க ரிலேட்டிவா? கொஞ்சமும் மேனர்ஸ்…” என்றவளை தீயாய் முறைத்த ஜீவனை கண்டு அப்படியே வாயை மூடிக்கொண்டு அவள் நின்றுவிட,
“வாடா ஷிவா…” என அவனை அழைத்துக்கொண்டு சென்றான் ஜீவன்.
“என்னடா உனக்கு இவ்வளவு கோவம் வருது?…” என கீழே காருக்கருகே வரவும் அவன் கேட்க,
“நான் பேசினேன். நீங்க ஒரு பார்வை பார்த்தீங்க. அவ்வளவு தான் வித்தியாசம்…” என்று ஷிவாவும் பதில் கொடுக்க இருவருமாக சேர்ந்து கொண்டுவந்த பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றனர்.