புன்னகை – 7
ஷிவாவுடன் ஜீவனும் லக்கேஜ்களை லிப்ட்டில் ஏற்றி வீட்டிற்கு கொண்டுவர அதனை பார்த்துவிட்டு,
“எதுக்கு எல்லாமே இப்பவே எடுத்துட்டு வந்துட்டீங்க அண்ணா?…” என்றாள் தேன்மொழி.
“அம்மா தான் சொன்னாங்கடா. இங்க கொண்டு வந்துட்டா உன் தேவைக்கு யூஸ் பண்ணிப்பியேன்னு தான்…” என்ற சொல்லி ஜீவனின் அறைக்குள் கொண்டு சென்று வைத்துவிட்டு வந்தான்.
“உடனே எடுத்து அடுக்க ஆரம்பிச்சுடாத. இன்னொரு கபோர்டுக்கு சொல்லிடுவோம். இதுல பத்தாது. நீ நெருக்கியடிச்சு வச்சிட்டு இருப்ப. ஊருக்கு போய்ட்டு வந்து பார்த்துக்கலாம்…” என்ற ஜீவாவிற்கு தலையாட்டியவள்,
“கிளம்பனும், இன்னும் அவங்க வரலையே?…”
“எவங்க?…” என்றான் வாட்சை எடுத்து கையில் மாட்டிக்கொண்டே.
“வைதேகி அப்பா…”
“உனக்கு அண்ணன் தானே? அப்படி சொல்லு. யாரையோ சொல்ற மாதிரி சொல்ற?…” என சிரித்தவன்,
“கிளம்பிட்டாங்க. வந்திருவாங்க. சரி வா….” என்று அவளுடன் வெளியே வர,
“மாமாவுக்கு பேசினியாடா?…” என கையை துடைத்தபடி வர,
“இங்க பஸ் ஸ்டாப்ல இறங்கி நடந்து வந்துட்டு இருக்காங்க. வரவும் போவோம்…”
“சரி வந்தா குடிக்க எதாச்சும் கேட்பாரு. யார் யாருக்கு டீ வேணும்னு சொன்னா போட்டுடுவேன். நிறைய போட்டு மிச்சமாகிடும்…” என்று அகல்யா கேட்க ஷிவாவும், ஜீவனும் வேண்டுமென்று கை தூக்க சுலோச்சனா தேன்மொழியை துணைக்கு அழைத்துக்கொண்டு இருந்தாள்.
“எனக்கு அரை கிளாஸ் போதும்த்தா…” என ஜீவன் சொல்ல,
“இவன் ஒருத்தன் அளந்து அளந்து குடிப்பியான்…” என தம்பியை திட்டிவிட்டு பால் பக்கெட்டை எடுத்து அளந்து ஊற்ற ஆரம்பித்தார்.
“எம்புட்டு தண்ணி விட்டாலும் இதென்ன மாவ கரைச்சதாட்டம் இருக்குது. இதேன் இங்க டீ குடிக்கனும்னா கருமாயப்படனும்…” என்றுவேறு சொல்லிக்கொள்ள அவரின் பேச்சில் அனைவரும் சிரித்தனர். சுலோவிடம்,
“ப்ச், இப்ப என்னத்துக்கு அவளையும் குடின்னுட்டு இருக்க? நான் குடிப்பேன். என்னோட குடி…” என்றவள் பிள்ளைகள், தேன்மொழி, தெய்வாவை தவிர்த்து மற்ற அனைவருக்கும் டீயை வைத்து மிச்சம் இருந்த பாலை அப்படியே கட்டி ப்ரிட்ஜில் போட்டார்.
“அத காச்சி வச்சா அம்மா கலந்துக்கும்ல. இது மிச்சமாத்தா?…”
“இந்தா மொத இந்த வீட்ட மாத்தி ரூமா இருக்கற அடுப்படிய பாரு. சும்மா அங்கன ஒக்காந்து வியாக்கியானம் பேசின கொதிக்கற டீய தூக்கி பிரிட்ஜுக்குள்ள வச்சுப்போட்டு செவனேன்னு ஒக்காந்துருவேன்…” அகல்யா மிரட்ட,
“அட சண்டைய நிறுத்துங்கப்பா. எப்பப பார்த்தலும் சலசலன்னு…” என எழுந்து வந்தார் தெய்வா.
“எப்ப பாத்தாலும் அவக்கிட்டையே ஏன்டா ஓரண்டைய கூட்டுவிய? கம்முன்னே கெடக்க மாட்ட…” என்றவர் மகளிடம்,
“கொஞ்சம் கஞ்சி வைய்த்தா. வேற ஒன்னும் வேணா…” என்றவரை அமர சொல்லிவிட்டு ஷிவாவும் ஜீவாவும் கீழே விரித்திருந்த போர்வையில் அமர்ந்துகொள்ள,
“அட மேலையே ஒக்காருங்கைய்யா, நானும் செத்த கால நீட்டிக்கிடுவேன்ல…”
“இருக்கட்டும் அத்தை, நீங்க மேல உட்காருங்க…” என ஷிவா சொல்ல,
“யத்தா ஒன்னால ஒக்காந்து எந்திக்க முடியாதுன்னு சூசவமா சொல்லுதியான் கேட்டுக்கிடுதியா?…” என்ற ஜீவன்,
“கீழே அவ்வளவு பேசினல மச்சான், பேசு இப்ப பேசேன். கம் ஸ்பீக் அவுட்…” என்று கண்ணடிக்க,
“சரியான வில்லன்…”
“ஜீவன்டா…” என காலரை உயர்த்த அவனின் விளையாட்டை பார்த்துக்கொண்டே மாமியாருக்கு கஞ்சியை கொண்டுவந்து தந்தாள் தேன்மொழி.
“உட்காருத்தா. சாப்பிட்டியா?…” என வாஞ்சையுடன் கேட்க,
“ஹ்ம்ம், சாப்ட்டேன். நீங்க சாப்பிடுங்கத்தை…”
“ஆவட்டும் ஆவட்டும்…” என அவளை கண்களால் நிரப்பிக்கொண்டே சாப்பிடுவதும் மகன், மருமகளை பார்ப்பதுமாய் அவர் இருக்க,
“இந்தா இப்ப என்னத்துக்குத்தா உசும்புத? ஒழுங்கா கஞ்சிய குடி…” என ஜீவன் தாயை அதட்ட,
“அட போடா வேலையத்தவனே…” என சிரித்துக்கொண்டே அவர் குடிக்க அவர்களின் பேச்சுவழக்கை பார்த்தபடியே இருந்த ஷிவா,
“நீங்க எப்பவுமே இந்த ஸ்லாங் தான் பேசுவீங்களா? நல்லா இருக்கே…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், வீட்ல அம்மா, அக்காவோட ஊர்ல எப்பவும் இந்த பேச்சு வழக்கு தான். ப்ரபஷன்னு வரப்போ ஆட்டோமேட்டிக்கா மாறிடும். அம்மா திருநெல்வேலி பக்கம். அப்பா மதுரை. சோ ரெண்டுமே மிங்கிள் ஆகிடும். பாதி நேரம் தப்பு தப்பாவும் பேசுவேன். கிண்டலடிக்கும்ங்க ரெண்டு லேடீஸும் சேர்ந்து…”
கை இரண்டையும் பின்னால் ஊன்றி ஒரு கால் மேல் இன்னொரு காலை போட்டு நீட்டியபடி சாய்ந்துகொண்டு அவன் பேச அவன் அமர்ந்திருந்த விதமும், பேச்சும் சுவாரஸியம் தந்தது.
“ப்ச், ஜீவ் ஒரு டாக்டர் மாதிரி பேசு. இதென்ன பேச்சு?…”
“என் பேச்சு இதுதான். உன்கிட்ட டாக்டரா பேசனும்னா என்னோட பேஷன்டா மட்டும் தான் நீ இருக்கமுடியும்…”
“எப்பவும் இதை சொல்லியே வாயை அடைச்சுடு. உன் பேச்சை இந்த பஃபூன் வேணா ரசிப்பா. என்னை சேர்க்காத…” என வர்ஷா அவனின் பேச்சு வழக்கை கூட பொறுக்கமுடியாமல் பேசியது மனதில் பிம்பங்களாய் தோன்ற தேன்மொழி அப்படியே அமர்ந்திருந்தாள்.
“உன் தங்கச்சி கனவு காண போய்ட்டா பாரேன்…” என ஜீவன் சொல்ல,
“தேனு…” என்று ஷிவா அழைக்கவும் திரும்பி அண்ணனை பார்த்தவள் பார்வை தன்னைப்போல ஜீவனிடம் திரும்ப முறைத்தபடி அமர்ந்திருந்தான் அவன். வாய்க்குள் அவன் எதுவோ முணுமுணுக்க,
“திட்டறீங்களா என்னை?…” என இவளும் சத்தமின்றி வாயசைத்து கேட்க ‘ஆமாம்’ என தலையசைத்தான் அவன்.
சற்று முன் இருந்த கோப பார்வை போய் இன்று அவள் கேட்டவிதத்தில் லேசாய் முறுவலித்தவனுக்கும் கூட பழைய நினைவுதான்.
கன்னியாகுமரியில் அவர்களின் அந்த பஸ் ஸ்டாப்பில் அவனுடன் பேசவேண்டும் என்றால் இப்படித்தான் வாயை மட்டுமே அசைத்து அவனிடம் அனுமதி கேட்பாள். அவளிடம் எதுவும் சொல்லவேண்டும் என்றாலும் இதே சத்தமில்லாத பாஷைகளே அவர்களிடத்தில்.
இருவருக்குமே அந்நினைவில் முகம்மலர சிரித்தபடி வேறுதிசைக்கு திரும்பி கொண்டனர்.
“பச்சை மண்ணை வச்சுட்டு பேசும்படம் ஓட்டறீங்க? நான் ஆரோ தான. அன்பு ஒன்றே அநாதை…” என ஷிவாவும் காலை கட்டியபடி சொல்ல,
“ஹவ் டேர் டர்…” என்று ஜீவன் சொல்லி சிரிக்க,
“இதுக்குத்தான் உங்க கிட்ட சொல்ல கூடாதுன்றது. ஆனா என்னடான்னு நீங்க கேட்டதும் இந்த பிஞ்சு மனசு வெள்ளந்தியா அம்புட்டையும் ஒப்பிச்சுடுச்சு…” என்று சொல்ல அவனின் தோளில் தட்டி சிரித்தவன் பதில் சொல்லும் முன்னர் திருமூர்த்தி வந்துவிட்டார்.
“மன்னிக்கனும், வர வழியில தெரிஞ்ச ஒருத்தர கண்டு பேச்சுல நின்னுக்கிட்டேன்…” என்றபடி வந்தமர்ந்தவருக்கு டீயை கொண்டுவந்து தந்த அகல்யா,
“பாத்தவர கூட்டிட்டு வராம அங்கனவே விட்டுப்போட்டு வந்தீகளாக்கும் மாமா?…” என கேட்க,
“ப்ச், கூட்டிட்டு வந்தேனா நாளைக்குத்தேன் தேனு வீட்டுக்கு போவ முடியும். ஆமா நீ என்ன இந்த சேலையோட நிக்குத? போயி மாத்திட்டு வா. கெளம்ப வேணாமா?…”
“இல்ல மாமா, நீங்க வரவும் சொல்லலாம்னுத்தேன் இருந்தேன். அம்மாவோட நா இங்கன இருக்கேனே? நீங்க எல்லாரும் போய்வரத்தான?…”
“என்ன அகலு? அத்தைய கூட்டிட்டு போவோம்…”
“இல்லங்கய்யா மேலுக்கு சொவமில்ல. அலுங்க முடியாது பாருங்க. எல்லாரும் போய்வாங்க…” என தெய்வா சொல்ல,
“அப்ப செரி, போயிட்டு மத்தியானமே நாம வருவோம். இவேன் அங்க இருந்துட்டு சாயங்காலம் வரட்டும்…” என்ற திருமூர்த்தி,
“என்ன சொல்லுத ஜீவா?…” என கேட்க,
“நீங்க சொன்னா சரித்தேன். இதுல என்னைய கேட்கனுமா?…” என்று அவனும் ஒப்புக்கொள்ள ஷிவாவிற்கும், சுலோவிற்கும் அவர்களின் புரிதல் அத்தனை பிடித்தமாக இருந்தது.
“தேனு கொடுத்துவச்சவ இல்ல ஷிவா…”
“ஹ்ம்ம், நான் கொடுத்து வைக்கலையே. இந்த மாமாக்கு இன்னொரு தங்கச்சி இருந்திருந்த இங்கயே செட்டில் நான்…” என ஷிவா சொல்ல,
“என் தங்கச்சி தான் வேணும்னா நீ அடுத்த ஜென்மம் வரைக்கும் வெய்ட் பண்ணனும். உனக்கு ஓகேவா?…”
“ஏன் ஓகே இல்லாம, இருக்கவே இருக்கு கைலாசா. முரட்டு சிங்கிள் கூட ஜாலியா சுத்த கூடிய ஒரே இடம் அது தான்…” என்றவனின் கையில் தட்டியவன்,
“வச்சான் பாரு பேரு கைலாசான்னு. மவனே உனக்கு கைலாசம் தான்னு இனி எவனும் எவனையும் மிரட்டமுடியாது. உடனே டிக்கெட் கேட்டுட்டு க்யூல நின்னுடுவானுங்க…”
“அதெப்படி ஒன்னு சொன்னா அதுக்குன்னு ஒரு பதிலை சொல்றீங்க. உண்மைக்கும் உங்க மெடிக்கல் காலேஜ்ல இதுக்கும் தனியா ட்ரெய்னிங் குடுத்தாங்களா மாமா?…”
“நீ படிக்கும் போது உன் காலேஜ்ல என்ன ட்ரெய்னிங் குடுத்தாங்களோ அதே ட்ரெய்னிங் தான் எனக்கும் குடுத்தாங்க. இந்த ரகசியத்தை அப்படியே மெய்ண்டைன் பண்ணுவோம். இல்லைன்னா நம்மளை ட்ரெய்னரா உட்கார வச்சிருவானுங்க…”
“ரொம்ப குஷ்டம் உங்கக்கிட்ட பேசறது. உங்க பேஷன்ட்கிட்டையும் இதேதானா?…”
“இப்ப கிளம்பலைனா நாம தான் இங்க பேஷன்ட். என் அக்கா தலையை ஆஞ்சிடுவா. அங்க போய் என் பெரியமச்சானோட பேசுவோம். வா…” என்று சொல்லி எழுந்துகொள்ள அனைவரும் கிளம்பினார்கள்.
தெய்வாவை தவிர மற்றவர்கள் கிளம்ப தெய்வாவிற்கு அகல்யா எளிமையாக உணவை தயார் செய்து வைத்திருந்தபடியால் எந்தவித டென்ஷனும் இன்றியே கிளம்பினார்கள்.
அங்கே வீட்டில் காலை உணவு தயாராக இருக்க முதலிலேயே ஷிவா போனில் சொல்லியிருந்தபடியால் பத்மா அதிகமாய் சமைக்காமல் அளவாகவே செய்திருந்தார்.
மதியத்திற்கு பெண்கள் அனைவரும் சேர்ந்தே விருந்துக்கு தயார் செய்ய கார்மேகம் திருமூர்த்தியுடன் அமர்ந்துக்கொண்டு ஊர் நிலவரங்களை கேட்டு தெரிந்துகொண்டார்.
தியாகு வந்ததும் வந்து வாங்க என்று கேட்டதோடு சரி அவ்வப்போது ஹாலிற்கு வந்து எட்டி பார்ப்பதும், பின் தன் அறைக்குள் நுழைந்து கொள்வதுமாக இருக்க,
“கூப்பிடுடா உன் அண்ணனை. ஒரு கை குறையுது. எவ்வளவு நேரம் தான். உன் கூடவே பேசிட்டு இருக்க. போர் மேன்…” என ஜீவன் தியாகு வந்து பார்த்துவிட்டு செல்லும் போது சொல்லிவிட அதை கேட்ட தியாகு அதன் பின் சாப்பிடும் வரை வெளியே தலைகாட்டவே இல்லை.
“சந்தோஷமா?…” என ஷிவா பாவனையாக கேட்க ஜீவனும் அவனும் அடக்கமாட்டாமல் சிரித்தனர். மதிய உணவை அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்ததும் திருமூர்த்தி தான் தொடங்கி வைத்தார்.
“ஜீவாவுக்கு லீவு கொறச்சலாதேன் இருக்கு போல. அதனால நாளைக்கு எல்லாரும் கிளம்பி மதுரைக்கு வந்தா குலசாமி கோவில்ல பொங்கல் வச்சுட்டு திரும்பி வந்துடலாம். அப்பறம் எப்ப லீவு கிடைக்கும்னு சொல்ல முடியாதுல. அதேன் இப்பவே சொல்லிட்டேன்…”
“அதுக்கென்னங்க நல்லபடியா போய்ட்டு வருவோம். அம்புட்டுத்தான…” என கார்மேகம் இலகுவாய் சொல்ல,
“அப்பா…” என்ற தியாகுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் திருமூர்த்தியிடம்,
“எப்ப கிளம்பனும்னு சொன்னீங்க?…” என கார்மேகம் கேட்க,
“நாளைக்கு ராவுக்கு கெளம்பினா போதும். நாங்க இன்னிக்கே போயி ஆக வேண்டிய சோலிய பாத்துக்கிடுவோம். வந்து பொங்கல வச்சிட்டு அன்னைக்கு ஒருநா தங்கலு. மறுனா கெளம்பிக்க வேண்டிதேன்…” என சொல்ல,
“சரிங்க, நாங்களும் அந்த பக்கம் வந்ததில்ல. கண்டிப்பா வரோம்…” என உறுதியாய் கார்மேகம் சொல்ல,
“குலதெய்வ கோவில் எங்க இருக்குது?…”
“மதுரைய தான்டி ஊருக்கு வெளில வாழத்தோப்பு இருக்குது நமக்கு. அதுக்கு மத்தில கோவிலு…” அகல்யா அந்த இடத்தை பற்றி விரிவாக சொல்லிக்கொண்டு இருக்க,
“ஆமாமா,கொஞ்சமேனிக்கி நடந்தா ஆறு கூட ஓடும்…” என வைதேகியும் அவளுக்கே உரிய குதூகலத்துடன் சொல்ல,
“வாவ், அப்ப கண்டிப்பா போறோம்…” என சொல்லி சுலோவும், ஷிவாவும் ஒரே சேர சொல்ல தியாகு இருவரையும் முறைத்தான்.
ஒருவாறு மறுநாள் இரவு மதுரைக்கு கிளம்புவதாக முடிவு செய்து எத்தனை மணிக்கு, எல்லாம் விபரங்களும் பேசிமுடித்து கால்டாக்ஸி புக் செய்து அகல்யா திருமூர்த்தியுடன் கிளம்பிவிட உண்டமயக்கம் அனைவரையும் சாய்த்தது.
தேன்மொழியை சுலோவும், பத்மாவும் தியாகு இருக்கும் அறைக்குள் அழைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருக்க தியாகு கார்மேகத்தின் அறையில் சென்று அவரோடு படுத்துக்கொண்டான்.
ஜீவனும், ஷிவாவும் மட்டும் ஹாலில் அமர்ந்து ஷிவாவின் வேலை சம்பந்தமாக பேசிக்கொண்டு இருக்க சற்று நேரத்தில் அவனுக்குமே உறக்கம் வந்தது.
“என்ன மாமா சொக்கறீங்க? தூக்கம் வருதா?…” என கேட்க,
“லேசா சாஞ்சு எழுந்தா போதும். எல்லாரும் தூங்கி வழிஞ்சு எனக்கும் வந்திருச்சு…”
“சரி இருங்க அப்பா ரூம்ல போய் படுங்க…” என்று எழுந்த ஷிவா கார்மேகத்தை எழுப்ப போக,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…” ஜீவன் தடுக்க,
“சரி பெரியண்ணா ரூம்ல அம்மா, தேனு, அண்ணி அவங்க எல்லாம் பேசிட்டு தான் இருக்காங்க. நீங்க போய் படுங்க மாமா…”
“அடேய் ஏன்டா? சும்மா இரு. பேசட்டும். ஈவ்னிங் வேற கிளம்பிடுவோம். பேசறவங்களை டிஸ்டர்ப் செய்யாத. நான் லேசா சாய்ஞ்சுக்க தான் பார்க்கறேன். இந்த சோபாவே போதும்…” என்று சொல்லி குஷன் பில்லோவை எடுத்து தலைக்கு வைத்து காலை நீட்டி படுத்துவிட்டான்.
இப்போது ஷிவா மட்டுமே தனியாய் அமர்ந்திருக்க பொழுது போகாமல் மொபைலை பார்த்திருந்தவனுக்கும் தூக்கம் வர ஒரு பெட்ஷீட்டை எடுத்துவந்து விரித்து ஹாலில் படுத்துவிட்டான்.
பத்து நிமிடத்தில் ஜீவனின் மொபைல் வைப்ரேட் ஆக எழுந்துகொண்டவன் வெளியே சென்று பேசிவிட்டு வந்து மீண்டும் உறக்கம் வராமல் அப்படியே சாய்ந்தபடி ஷிவா வைத்திருந்த ஹெட்போனில் பாட்டை போட்டு கேட்டுக்கொண்டு லேசாய் முணுமுணுத்துக்கொண்டு இருந்தான்.
தியாகு எழுந்து வந்துவிட அவன் வந்ததும் தெரியாமல் ஜீவன் கண்ணை மூடி பாடிக்கொண்டு இருக்க என்ன பாடுகிறானோ என்ற ஆர்வத்தில் மெதுவாய் அவனருகே சத்தமில்லாமல் வந்து நின்றான்.
மெல்ல அவனருகே வந்து அமர்ந்துக்கொண்டு காதை கூர்மையாக்க கேட்ட பாட்டில் முகம் தீயாய் மாறியது.
“மச்சான் மீச வீச்சருவா…” என்று ஜீவன் ஹம் பண்ண,
“நிஜமாவே நீங்க டாக்டர் தானா?…” என்று வேகமாய் கேட்டுவிட்டவன் அதன் பின்னர் தான் உணரவே செய்தான்.
தியாகு வேகமாக எழுந்ததில் கண் திறந்து பார்த்த ஜீவனுக்கு அவன் பேசியது கேட்கவே இல்லை.
“என்னய்யா…” என வழக்கம் போல அவன் கேட்க பல்லை கடித்தான் ஜீவன்.
“உங்களைத்தான். இப்படி பாட்டுதான் கேட்பீங்களா நீங்க?…”
“ஏன், என்ன பாட்டு?…” என நமுட்டு சிரிப்போடு ஜீவன் கேட்க,
“இப்ப கேட்டீங்களே மீசை அருவான்னு…”
“ஹா ஹா அதுவா, தூக்கம் வந்துச்சு. அதான் எதாச்சும் பாட்டு கேட்போமேன்னு தான் கேட்டேன்…”
“இதெல்லாம் ஒரு பாட்டுன்னு இதையும் கேட்டுட்டு…”
“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் பாட்டு கேட்கறதா? இல்லை இந்த பாட்டை கேட்டதா?…” என நேரடியாக கேட்க,
“பாட்டுதான். நீங்க என்ன கேட்டா எனக்கு என்ன? இதெல்லாம் ஒரு பாட்டுன்னு…” என்றவனிடம் அந்த ஐபேடை ஜீவன் நீட்ட,
“நான் இதை எல்லாம் கேட்க மாட்டேன்…” என்று தியாகு முறுக்கிக்கொள்ள,
“இது உங்க ஐபேட் தான். யார் டவுன்லோட் செஞ்ச சாங்க்னு எனக்கு தெரியாது. இதுல இருந்தது நெக்ஸ்ட் நெக்ஸ்ட்ன்னு ஒட்டிட்டு இருந்துச்சு. ஷிவா கேட்டுட்டு வச்சதை நானும் கேட்டேன். தட்ஸ் ஆல்…” என்றதும் தியாகுவின் முகம் பேயறைந்ததை போலானது.
“அது நான் சும்மா அந்த மூவி சாங்ஸ் டவுன்லோட் செஞ்சிருந்தேன். அது அது…” என வாங்கிக்கொண்டு அசடுவழிய நிற்க,
“அடேங்கப்பா போதும்யா, ஒரு மனுஷன் எவ்வளவு நேரம் தான் தூங்கற மாதிரியே இதை எல்லாம் பார்த்துட்டு இருக்கறது…” என ஷிவாவும் எழுந்துகொண்டு சிரிக்க,
“நீ ஏன்டா இதை எடுத்துட்டு வந்த?…”
“அது சரி, ஆதிக் தான் இதை தூக்கி வச்சிட்டு சுத்திட்டு இருந்தான். கீழே போட்டுட கூடாதேன்னு தான் நான் வாங்கி வச்சேன். எல்லாரும் தூங்கவும் சரின்னு இதுல பாட்டு கேட்டேன். என் போன் சார்ஜ்ல இருக்கு. அதான்…” ஷிவா சொல்லவும் முறைப்புடன் தியாகு வெளியே சென்றுவிட,
“மனுஷன் நேரத்தை கூட பார்க்காம கிளம்புறாரு ஷிவா. நீ ரொம்ப பேட். இப்படி விரட்டறியே?…”
“யாரு நானு? விரட்டினேன். நீங்க பார்த்தீங்க. உங்களுக்கெல்லாம் மனசாட்சின்றதே இல்லையா?…” என கேட்க,
“அதெதுக்கு நமக்கு?…” என சொல்லி சிரிக்க அப்போதுதான் பெண்கள் எழுந்து வெளியே வந்தனர்.
மூவரின் முகத்தையும் பார்க்க நன்றாக தூங்கி எழுந்திருப்பார்கள் போலும். முகமே அயர்ந்து இருந்தது.
தேன்மொழிக்கு முன்பே குண்டு கன்னம். இப்பொழுது பகல் தூக்கத்தில் லேசாய் இன்னும் குண்டாக தெரிய சிவந்த விழிகளுடன் பார்க்க அரை உறக்கத்தில் சிறு பெண்ணை எழுப்பியதை போல வந்து நின்ற கோலம் ஜீவனின் மனதில் கல்வெட்டாய் பதிந்தது.
“கிளம்பிட்டோமா?…” என அவளாகவே வந்து கேட்க,
“ஹ்ம்ம், ஆமா, கிளம்புவோமா?…” என்று ஜீவனும் அவளிடம் சிரிப்புடன் கேட்க,
“என்னது கிளம்பறீங்களா? இப்பவா? அதெல்லாம் முடியாது. இன்னும் ஒருமணி நேரத்துக்கு அப்பறம் தான் நல்ல நேரம். அதுவரைக்கும் உட்காருங்க. அம்மா டீ போடுங்க…” என காலண்டரை ஒரு பார்வை பார்த்துவிட்டு பத்மாவை பார்த்து சொல்லிவிட்டு தியாகு தன் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
அவன் சொல்லிவிட்டு சென்ற வேகத்தில் ஏன் எதற்கென என்றே தெரியாமல் அனைவரும் சிரிக்க கார்மேகமும் எழுந்து வந்துவிட்டார்.
அதன் பின்னர் ஒருமணி நேரம் அங்கேயே இருந்துவிட்டு மாலை போல கிளம்பிவிட்டனர். ஜீவன் எத்தனை சொல்லியும் ஷிவா தானே வந்து விட்டுவிட்டு வருவதாக சொல்லி உடன் வர கிளம்பிவிட்டனர்.
ஜீவனின் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் இருந்துவிட்டு அதன் பின்னர் தான் கிளம்பினான் ஷிவா.
“வா பார்க்கிங் வரை வரேன்…” என்ற ஜீவனை மறுத்துவிட்டு ஷிவா கிளம்பிவிட லிப்ட்டில் இருந்து வெளியே வர எதிரே யாரோ ஓடிவந்து இவன் மேலே இடித்துவிட்டு நிற்பதை கண்டு,
“யப்பா…” என தோளை தடவியபடி பார்க்க அன்று லிப்ட்டில் சண்டையிட்ட அதே பெண்.
“ஹேய், உங்களுக்கு வேற வேலையே இல்லயா?…” என கோபமாக அவளிடத்தில் கேட்க,
“இங்க பாருங்க, நானா வேணும்னு பண்ணலை. இது தெரியாம நடந்தது…”
“இதுவா? நான் தான் லிப்ட்ல இருந்து வெளில வந்தேன் பார்க்கலை. நீங்க பார்த்திருந்திருப்பீங்க தானே?…”
“ப்ச், நான் அவசரமா போகனும்னு தான் ஓடிவந்ததுல பேலன்ஸ் மிஸ் ஆகிடுச்சு. இப்ப லிப்ட் போய்ருச்சு…” என்றவளை அவன் முறைத்த நொடி லிப்ட் சத்தத்துடன் அப்படியே நின்றுவிட திரும்பி பார்த்தால் பழுதாகியிருந்தது.
“ஒஹ் காட்…” என தலையில் கை வைத்தவளை தினுசாய் பார்த்தவன் நகர பார்க்க,
“எல்லாம் உன்னால தான். இப்ப நான் படியில போக முடியுமா? எல்லாம் உன்னால. இப்ப எப்படி நான் போவேன்?…” என அவள் அவனின் முன்னால் வந்து திட்ட,
“ஹ்ம்ம், ரோலிங்கா போ…” என்று அவளை பிடித்து ஒரு சுற்று சுற்றிவிட்டு அவன் நகர்ந்துவிட,
“இந்த ஷக்திக்கிட்டையே உன் வேலையை காட்டுறியா?….” என்றவளின் சத்தத்தில் திரும்பி நக்கலாக பார்த்து,
“நல்ல பேரு தான். ஷக்தியாமே. நான் கூட பராஷக்தின்னு நினைச்சேன்…” என்று சொல்லி கிண்டலாய் சிரித்துவிட்டு கார் கீயை தூக்கிபோட்டு பிடித்தபடி செல்ல அவனை முறைத்துக்கொண்டே மாடிப்படிகளின் கதவை திறந்துகொண்டு மேலே ஏற ஆரம்பித்தாள் ஆதிஷக்தி.