புன்னகை – 8
ஷிவா கிளம்பவும் சற்று நேரத்திற்கெல்லாம் இரவு உணவை முடித்துவிட்டு திருமூர்த்தியும் அகல்யாவும் கிளம்பிவிட்டனர் வைதேகி, தெய்வாவோடு.
“இப்ப என்னத்துக்கு அம்புட்டுபேரும் இன்னிக்கே கிளம்புதீங்க? ஊருல சொடல மாமாக்கிட்ட சொன்னா பூசைக்கு ஆவறத செஞ்சிட்டு போறாரு….” என ஜீவன் சொல்லிக்கொண்டிருக்க,
“இவன் எவன்டா சுத்த வெவரங்கெட்டமாரி பேசிக்கிட்டு. அங்கன அந்த புள்ள வீட்டுல வச்சு மண்டைய ஆட்டிட்டு இங்க வந்து சித்தப்பன மாமான்ற மாதிரில இருக்குது….” என திருமூர்த்தி சொல்ல,
“ப்ச், இங்காருங்க மாமா, அங்க ஒம்ம பேச்சுக்கு எதுத்தி பேசினா நல்லா இருக்காதுன்னுதேன் பேசாம இருந்தேன். ஆனா இங்கன பேசுவேம்ல…”
“அத அந்த புள்ளைக்கிட்ட பேசிட்டு இரு. வாராவக நம்ம வீட்டுக்கு வாரப்ப சொவமா வந்துட்டு போவ வேணாமா?…” என அகல்யா சொல்ல,
“ஜீவா அக்கா சொல்லுததுதேம் சரிய்யா. வீட்ட அடைச்சு போட்டு வந்து ஒருவாரமாவுது. போயி சுத்தம் பண்ணி வைக்க வேணாமா? நம்ம வீட்ட நாம கழுவுன மாரி வராதுப்பா…” என்ற தெய்வாவை முறைத்தவன்,
“சும்மாவே மேலுக்கு ஆவலை. இதுல அங்க போயி சீமாறு புடிக்க போறியாக்கும்?…” என்று நெற்றிக்கண்ணை திறப்பதை போல பார்க்க,
“இவேன்ட்ட என்னால மாரடிக்க முடியாதுத்தா. பேசிட்டு வெரசா கிளம்புத வழிய பாருங்க. அவசரத்துக்கு போறேன்…” என்ற அகல்யாவின் காதில் முணுமுணுத்து திருமூர்த்தி உள்ளே சென்றுவிட அவர்களின் பேச்சில் இடையிடாமல் வேடிக்கை பார்த்தபடி நின்றாள் தேன்மொழி.
“இங்காருடா, நாளைக்கி உங்க எல்லாத்துக்கும் வர வண்டி சொல்லிட்டாங்க. அம்புட்டு தொலைவுக்கு அம்மாவால கால தொங்க போட்டே வர முடியுமா? அதேன் மாமா பஸுல படுத்துட்டு போறாப்புல சிட்டைய போட்டாச்சு. கட்டுன காசு கட்டுனதுதேன். இப்ப ஒன்னையும் கூட்டிட்டு போவலாம். ஆனா வாறவங்கள கூட்டிட்டு வரதுதேன் மருவாதி…”
“ப்ச், எல்லாம் பேசி முடிவு பண்ணிட்டீக…” என சட்டை பட்டனை கழற்றிவிட்டபடி தங்கள் அறைக்குள் அவன் நுழைந்துகொள்ள தேன்மொழியை பார்த்த அகல்யா,
“என்னத்தா இம்புட்டு சவுடாலுன்னு மெரண்டுட்டியா?…” என ஆதுரமாய் கேட்க தெய்வா புன்னகைத்தார் அதனை கண்டு.
“அதெல்லாம் இல்லைங்க அண்ணி. அவங்க காலேஜ்ல படிக்கப்பவே அப்படித்தான். முதல் ஆளா சண்டைக்கு நிப்பாங்க…” என தேன்மொழியும் சொல்ல,
“பார்ரா இந்த பய வீட்டுக்குத்தேன் நாட்டாமன்னா ஊருக்கே மூக்கை வெடச்சிருக்கான்…” என்று தாடையில் கை வைத்து ஆச்சர்யம் போல சொல்ல,
“எங்க போனாலும் அவேன் ராசாடி…” என தெய்வாவும் பெருமையாய் சொல்ல,
“அப்ப இருந்து நாளைக்கு ரா பயணமா ஒ ராசாவோட வாறது. எப்பிடி வசதி?…” என்று தாயை வம்பிழுத்தாள் அகல்யா.
“பொறுக்காதே ஒனக்கு. என்னைக்காச்சும் நீயும் சொல்லுவ, அன்னைக்கி வெச்சிகிடுதேன்…” என்று தெய்வா சொல்ல,
“என்னைக்காச்சும் என்னத்துக்கு சொல்ல? இன்னைக்கே சொல்லுதேன். எந்தம்பி ராசாதேன். எங்க வச்சிக்கிடு பாப்பம்…” என்று கலகலக்க அவளுடன் சேர்ந்து தேன்மொழியும் சிரிக்க,
“அட போங்கடி…” என சொல்லி சென்று அமர்ந்துகொண்டார் தெய்வா.
அறையை விட்டு உடை மாற்றி வெளியே வந்தவனின் முகம் இன்னும் உர்ரென இருக்க,
“இன்னும் என்னத்துக்கு மூஞ்சிய தூக்கிட்டு முசுடாட்டம் இருக்குத? ரெண்டு பல்ல காட்டத்தான?…”
“பல்ல வேணா கழட்டி கையில தரேன். பாத்துட்டே போறியா?…”
“என்ன இன்னும் ஓயாலையா?…” என திருமூர்த்தியும் வந்துவிட்டார்.
“காருக்கு சொல்லுப்பா. நேரமாகுதுல…” என்று சொல்லி அடுக்களைக்குள் சென்று தண்ணீரை பிடித்து குடிக்க,
“நான் தரேன் அண்ணா…” என வேகமாய் வந்தாள் தேன்மொழி.
“இருக்கட்டும்த்தா. நம்ம வீடுதான?…” என சிரித்தபடி சொல்லி தனக்கு பிடித்துக்கொண்டவர்,
“ஜீவா இங்க வா…” என்று அவனை அழைத்துக்கொண்டு பால்கனி பக்கம் சென்று நிற்க அவன் போனில் காரை புக் செய்துகொண்டு இருந்தான்.
“ஒரு வண்டிய எடுக்கறது தான? குடும்பமும் ஆகிபோச்சு. அவசரத்துக்கு இப்படி போன பாத்துட்டே இருப்பியோ?….”
“இதுவரைக்கும் தோணல மாமா…”
“அதேன். இதுவரைக்கு ஒண்டியா இருந்த. உன் வண்டியே செரி…” என்றவரின் பேச்சில் இருந்ததை புரிந்துகொண்டான்.
ஷிவா அவன் குடும்பத்தின் நிலமையை முன்னேற்றுவதை பற்றி சொல்லியதும் அந்த நேரம் ஞாபகத்திற்கு வர,
“சரிங்க மாமா. ஊருக்கு வந்துட்டு வந்து பாக்குதேன்…”
“அது வந்தே பாத்துக்க. லீவு போட்டு அந்த புள்ளையோட எங்கயாச்சும் வெளியூருக்கு போய்ட்டு வரத்தான?…”
“ஹ்ம்ம், லீவுக்கு தான் வெய்ட் பன்றேன். இதுக்கே முடியலை. பார்ப்போம்…”
“இதுக்கு தேடி போயி மெனெக்கெட்டு பாப்பியாக்கும்? எதாச்சும் பண்டிய நாளு கெழம வாரப்ப கூட ரெண்டு நா லீவா போட்டு போய்ட்டு வா. வெளங்குச்சா?…”
“ஹ்ம்ம், நல்லாவே வெளங்கிருச்சு…” என ஜீவன் குறும்பாய் சிரிக்க,
“இதாம்லே வேணும். என்ன நடந்தாலும் உன்னோட கொணத்த மாத்தாம எப்பவுமாட்டி இருக்க பாரு. அதேன் ஒங்கிட்ட எனக்கு புடிச்சதே…” என்று அன்பாய் சொல்லியவர்,
“செரி, நாளைக்கு பாத்து சூதானமா வந்து சேருங்க. வார வழியில அவகளுக்கு என்ன வேணும், ஏது வேணும்னு பாத்து பாத்து கவனிக்கனும். வெளங்குச்சா?…”
“சரி சரி…” என சொல்ல கார் வந்துவிட்ட மெசேஜ் மொபைலில் தெரிய,
“வந்துருச்சு மாமா…” என்றான் திருமூர்த்தியிடம்.
“வா போவோம்…” என்று அவர் முன்னே செல்ல,
“ரகசியமெல்லாம் ஆகிபோச்சா? இன்னும் மிச்சம் இருக்கா?…” என்று அகல்யா சிரிக்க,
“கீழ வண்டி வந்துருச்சு. பெட்டிய தூக்கிட்டு வா…” என்று மனைவிடம் சொல்லியவர் தன் கையில் இருந்த பெட்டியோடு முன்னே செல்ல அவர்களுடன் தேன்மொழியும் உடன் வர,
“இப்பத்தேன் கல்யாணம் ஆகிருக்குத்தா. இந்நேரம் கீழ வேணாம். இங்கயே இரு. நாங்க போயிட்டு வரோம்…” என்ற தெய்வா அவளின் கையை பிடித்துக்கொண்டு சிலபல அன்பு பத்திரங்களை சொல்லிவிட்டு செல்ல ,
“நா சொல்ல ஒண்ணுமில்ல. நாளைக்கு ஊருக்கு வருவேல. அங்கன பேசிக்கிடுவோம்…” என்று சொல்லி அகல்யாவும் சென்றுவிட,
“அனுப்பிட்டு வரேன். டோர் லாக் பண்ணிக்கோ…” என்று சொல்லி அவர்களுடன் ஜீவனும் சென்றான்.
கதவை பூட்டிவிட்டு கலைந்து கிடந்ததை எல்லாம் எடுத்து ஒழுங்குப்படுத்தியவள் அடுக்களைக்கு வர அங்கே வேலையே வைக்காமல் அகல்யாவே முடித்திருந்தாள்.
என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டை சுற்றி வந்தவள் அப்படியே பால்கனி பக்கம் வர கீழே காரில் ஏறிக்கொண்டு இருந்தவர்கள் அவளை நிமிர்ந்து பார்த்து கை அசைத்துவிட்டு செல்ல கார் கிளம்பும் வரை நின்றிருந்தவள் ஜீவனும் திரும்பி பார்க்கவும் அவன் மேலே வரும் வரை அங்கே நின்றாள்.
கீழே யாருடனோ பேசிக்கொண்டிருந்தபடி மேலே இவளிடமும் ஒரு பார்வையை வைத்துக்கொண்டு அவன் இருக்க சுற்றிலும் தெரிந்த கட்டிடங்களை பார்த்துக்கொண்டு இவள் நின்றாள்.
கலிங் பெல் அடிக்கும் சத்தத்தில் தான் மீண்டும் கீழே பார்த்துவிட்டு ஜீவன் இல்லாததை கண்டு ஓடிச்சென்று கதவை திறந்தாள்.
“வேடிக்கை பார்த்தவ என்னையும் பார்த்திருந்திருக்கனும் தானே?…” என்றபடி உள்ளே நுழைந்தவன் தொப்பென சோபாவில் விழ,
“எதாச்சும் குடிக்கறீங்களா?…” என தேன்மொழி கேட்டதும்,
“ம்ஹூம், வேண்டாம். கொஞ்சம் நேரம் ரெஸ்ட்…” என்று சொல்லியவன் எழுந்து அறைக்குள் சென்று படுத்துக்கொண்டான்.
“என்னாச்சு உடம்புக்கு முடியலையா?…” என அவனின் பின்னே வர,
“அதெல்லாம் இல்ல மொழி. லேசா டயர்டா இருக்குது. ஒரு டென்மினிட்ஸ்ல எழுப்பிடு…” என்று சொல்லி அப்படியே கண்ணை மூடி படுத்துக்கொள்ள என்ன செய்வதென்று தெரியாமல் ஹாலில் வந்து அமர்ந்தாள்.
டிவியை போடுவிட்டவள் பார்வை அதில் இருந்தாலும் மனது அதில் லயிக்கவில்லை. நினைவுகள் எங்கெங்கோ சுழல மனதிற்குள் பேரிரைச்சல். பலவகை சத்தங்கள்.
மொபைல் சத்தம் கேட்கும் வரை சுத்தமாக அந்த உலகத்திலேயே இல்லை தேன்மொழி. தனது போனில் அழைப்பு என்றதும் தன் வீட்டில் இருந்துதானோ என எண்ணி எடுக்க அழைத்தது அகல்யா.
“தேனு பஸ் ஏறிட்டோம். தம்பிட்ட சொல்லிடுத்தா. காலையில ஊருக்கு போயிட்டு பேசுதோம்…” என்று சொல்லி வைத்துவிட ஜீவன் எழுப்பிவிட சொன்னது அப்பொழுது தான் நியாபகத்தில் வந்தது.
“போச்சு ஒருமணி நேரத்துக்கும் மேல ஆகிடுச்சு…” என முணுமுணுத்தபடி உள்ளே சென்று அவனை பார்க்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஜீவன். அவனின் தோளை தட்டியவள்,
“பாஸ்…” என இரண்டுமுறை அழைக்க,
“ப்ச், மொழி ஒரு டென் மினிட்ஸ்…” என அதையே திருப்பி சொல்ல மணியை பார்த்தாள்.
இதற்கு மேல் எழுப்ப வேண்டாம் என முடிவுக்கு வந்தவளாக விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு கிட்சனில் கேஸ், ஜன்னல் என அத்தனையையும் சரி பார்த்தவள் தானும் வந்து உடை மாற்றி விளக்குகளை அணைத்துவிட்டு அவனருகே படுத்துக்கொண்டாள்.
கண்ணை மூடியது தான் தெரியும். கண் விழிக்கும் பொழுது அருகே ஜீவன் இல்லை. எழுந்தவளுக்கு தலை வலிப்பதை போல இருக்க தலையை பிடித்துக்கொண்டு ஐந்துநிமிடம் அப்படியே அமர்ந்திருக்க பின் எழுந்து குளிக்க சென்றாள்.
அறையை விட்டு வெளியே வர ஜீவன் லேப்ட்டாப்பில் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தான்.
“குட்மார்னிங் மொழி…” என திரும்பி பார்க்காமல் கொலுசு சத்தத்திலேயே அவளிடத்தில் சொல்ல,
“நீங்க எழுந்துக்கறப்பவே எழுப்பிருக்கலாமே என்னை?…”
“சோ வாட்? இப்ப என்னாகி போச்சு?…” என்று சிரிப்புடன் அவளை பார்த்து சொன்னவன்,
“இன்னைக்கு வாட்ரோப் ஒன்னு வரும். நேத்தே ஷிவாவும் நானும் ஆடர் பண்ணிட்டோம். எங்க வைக்கிறதுன்னு பார்த்துக்கோ…”
“நம்ம ரூம்லையே இடம் இருக்குதே. அங்க வச்சுப்போம்…”
“ஹ்ம்ம், யூவர் விஷ் மேடம்…” என்று சொல்லியவன்,
“கொஞ்சம் வொர்க் இருக்குது. முடிச்சுட்டு வரேன்…” என்றதும் தேன்மொழி கிட்சனிற்குள் செல்ல,
“பால் எல்லாம் காய்ச்சிட்டேன். உனக்கு என்ன வேணுமோ கலந்துக்கோ. எனக்கு வேண்டாம்…” என்று அங்கிருந்தே பதில் தர ஒரு பெருமூச்சுடன் திரும்பியவள் அங்கே அடுப்பில் இட்லி பாத்திரம் ஏற்றி இருப்பதை கண்டாள்.
அருகே பருப்பும் வேக வைத்திருக்கும் ஒரு சிறு குக்கரும் இருக்க திறந்து பார்த்தால் இட்லி சாம்பார் இருந்தது.
“மொழி, நான் சாம்பார் செஞ்சிட்டேன். தாளிக்க மட்டும் செய்யேன். இட்லி கூட ரெடி. சட்னி வேணும்னா பண்ணு. இல்லைன்னா இதையே வச்சுப்போம். பொடி இருக்குது….” என ஜீவன் குரல் கொடுக்க தேன்மொழிக்கு கோபமே வந்துவிட்டது.
தன்னை எழுப்பாமல் இத்தனை வேலையையும் செய்து வைத்துவிட்டு இப்போது அதற்கு பேசிக்கொண்டும் இருக்க,
“வேலை பார்க்கறேன்னு தான் பேரு. காதும் கண்ணும் இங்கயே தான் இருக்குது. இங்க நான் பார்த்துக்க மாட்டேனா?…” என்றாள் சத்தமாக.
“உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன். அது ஒரு தப்பா?…” என அதற்கும் அவன் பதில் தர எதுவும் பேசாமல் சாம்பாரை தாளித்து வைத்துவிட்டு வேறு பாத்திரத்தில் மாற்றியவள்,
“சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா? ரொம்ப நேரம் ஆகிடுச்சே…” என்றாள் அவனிடத்தில்.