வருத்தமாகி போனது தேன்மொழிக்கு. முதல்நாளே இப்படி உறங்கி அவனை வேலை செய்ய வைத்துவிட்டோமே என்று கவலையானாள்
“வைய்யேன் சாப்பிடுவோம்…” என லேப்டாப்பை தூக்கி ஓரமாக வைத்தவன் எழுந்து கையை கழுவிவிட்டு வர எடுத்து கொண்டு வந்து கீழே வைத்தாள். அவளுக்கருகே அமர்ந்தவன் சாப்பிட்டுக்கொண்டே,
“உனக்கு எத்தனை நாள் லீவ்?…” என்றான்.
“அடுத்த வாரம் முழுக்க லீவ் தான். பெரியப்பா தான் போட சொன்னாங்க. அதான்…”
“ஓஹ். இன்னைக்கு நைட் ஊருக்கு போறோம். நாளைக்கு அங்க ஸ்டே பன்றோம். நாளை மறுநாள் கிளம்பி வந்தா அதுக்கு மறுநாள் நான் ஹாஸ்பிட்டல் போய்டுவேன். தனியா மேனேஜ் பண்ணிப்பியா மொழி?…” என,
“ஹ்ம்ம் பண்ணிப்பேன் தான். ஒன்னும் பிரச்சனை இல்லை…”
“ஓகே, ரெண்டு நாளைக்கு தேவையான ட்ரெஸ் எடுத்து வச்சுக்கோ. வாட்ரோப் வரவும் இன்னைக்கே எல்லாம் அடுக்க வேண்டாம். ஊருக்கு போய்ட்டு வந்து பொறுமையா அடுக்கிக்கலாம். புரியுதா?…” என்று பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க அடுத்த ஒருமணிநேரத்தில் வாட்ரோப் வந்துவிட்டது.
உடன் ஷிவாவும் வந்துவிட அதன் பின் நேரம் சென்றதே தெரியவில்லை அவர்களுக்கு.
இரவு ஜீவனின் வீட்டில் இருந்து கிளம்பி கார்மேகத்தின் குடும்பத்தை அழைத்துக்கொண்டு மதுரை நோக்கி சென்றார்கள்.
தியாகு வரவே மாட்டேன் என இருந்தவன் ஷிவாவின் அதட்டலில் கிளம்பி வந்திருந்தான்.
“வரது சரி, அங்க வந்து மச்சான்னு பாடிட்டு இருந்தா போங்கடான்னு நான் மட்டும் கிளம்பி வந்துட்டே இருப்பேன் பார்த்துக்கோ…” என்று தியாகு சொல்லவும் ஷிவா சிரிப்பை அடக்கிக்கொண்டு அவனுக்கு தலையாட்ட,
“நீ தான் பொறுப்பு…” என்றுவேறு சொல்ல அதை வேனில் வைத்து ஜீவாவிடம் பகிர்ந்தான் ஷிவா.
“அண்ணனும்,தங்கச்சியும் ஒரு பொறுப்பை ஒப்படைச்சா தீயா செய்வீங்களே…” என்ற ஜீவாவின் பேச்சில் இருந்த அர்த்தம் ஷிவாவுக்கு விளங்கவில்லை.
“என்னமோ நடந்திருக்குது. சொல்லமாட்டேன்றீங்க…” என்ற ஷிவாவுக்கு புன்னகையையே பதிலாக தர வேனில் மெல்லிய குரலில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.
தேன்மொழி ஜீவனின் தோளில் சாய்ந்தபடி உறங்கிக்கொண்டு இருக்க ஜீவாவின் பின்னால் ஷிவா ஆதிக்கை மடியில் வைத்து ஜீவாவுடன் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு வந்தான்.
“கோவக்கார மச்சானுமில்ல, என் மச்சான்…” என கிராமியப்பாடல் இசைக்க பேசிக்கொண்டிருந்த இருவரும் ஒருநொடி பேச்சை நிறுத்திவிட்டு ஒரே சேர தியாகுவை பார்த்து சத்தமாக சிரித்துவிட உறங்கிக்கொண்டிருந்தவன் முழித்துவிட்டான்.
“தூங்கிருடா கைப்புள்ள…” என ஜீவன் அப்படியே கண்ணை மூடிக்கொண்டான்.
ஏற்கனவே அவன் அமர்ந்திருந்த சீட்டை ஷிவாவுக்கருகே பேசுவதற்கு வாகாய் சாய்த்து வைத்திருக்க தியாகு கண்விழித்து நிமிர்ந்ததும் உடனே கண்ணை மூடிக்கொண்டான் ஜீவன்.
ஷிவா தான் திணறி போய் அப்படியே தலையை முட்டுக்கொடுத்து அவனும் கண்ணை மூடிக்கொள்ள இருளில் அவர்கள் முழித்திருக்கின்றனரா என தெரியாமல் தியாகு எட்டி வந்து உத்து பார்த்தவன் பின் ட்ரைவரின் அருகே சென்று அமர்ந்து என்னவோ சொல்ல பாட்டு நின்றது.
தியாகு நகரும் வரை இருவருமே அசையவில்லை. அவன் சென்று இருக்கையில் அமர்ந்து சாய்ந்த பின்னர் தான,
“பொங்கல் வைக்கிற வரைக்கும் உங்க வாய்க்கு பூட்டு போட்டா அவன் பேசாம இருப்பான். என்னையும் படுத்தாதீங்க…”
“ஷிவா, நீயெல்லாம் ஒரு மச்சானா?…”
“அத நாளைக்கு பார்த்துப்போம். இப்ப நானும் தூங்கறேன்…” என தானும் பின்னால் சாய்ந்துகொண்டான். ஜீவனும் தியாகுவை நினைத்து சிரித்தபடி தூங்கினான்.
காலையில் நேராக ஜீவனின் வீட்டில் சென்று இறங்கியவர்கள் உடனே குளித்து கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.
தேன்மொழி வீட்டை பொறுத்தவரை ஜீவனின் வீடும் சொந்தங்களும் பரம திருப்தி. பழையகாலத்து வீடாக இருந்தாலும் நன்றாக பெரிதாக இருந்தது.
“உங்க தங்கச்சி குடுத்துவச்சவன்னு இப்பவாச்சும் புரியுதா? இதுக்கு போய் இவ்வளவு கோவப்பட்டீங்களே?…” என சுலோச்சனா தியாகுவிடம் இடித்துரைக்க,
“எம்புட்டு வசதி வாய்ப்பிருந்து என்ன செய்ய? குடும்பத்தோட கோர்ட்டுல அசிங்கப்பட்டது பட்டது தானே? அது எல்லாம் இல்லனா போயிரும்…” என அப்போதும் ஏற்றுக்கொள்ளாததை போல பேசி வைக்க,
“உங்களை இனி எதாச்சும் சொன்னேனா பாருங்க…” என்று எரிச்சலுடன் சென்றாள் சுலோச்சனா.
குலதெய்வ கோவில் வாழை தோப்பின் மத்தியில் இருந்தது. மெயின் ரோட்டில் இருந்து சற்று உள்ளடங்கி வயல்பரப்பில் நடந்து அதற்கும் தள்ளி வாழை தோப்பில் இருந்தது அவர்கள் வழிபடும் கோவில்.
ஒரு கிலோமீட்டருக்கு வரப்பிலே நடந்தனர். அதன் பின்னர் வாழை தோப்பிற்குள் நடந்து கோவிலுக்கு சென்றனர்.
ஜீவனின் குடும்பத்தினருக்கு அது பழக்கம் என்பதால் நடையில் எந்தவித தடுமாற்றமும் இல்லை. ஆனால் தேன்மொழி குடும்பத்தினருக்கு அப்படி அல்லவே.
“நடக்க ஆசைப்படறவங்க நடங்க. நானு பெரியவங்கள டிவிஎஸ் வண்டில ஆத்தோரமா கூட்டிட்டு வாரேன். சுத்துதேன். ஆனாலும் இதுல நடக்க உங்களுக்கு சுளுவா இருக்காது பாருங்க…” என்றார் திருமூர்த்தி.
தெய்வாவின் உடலுக்கு முடியாமையால் அவரையும் அழைத்துக்கொண்டு சென்றவர் அடுத்து கார்மேகத்தை கொண்டு சென்று கோவிலில் விட்டுவிட்டு வந்தவர் அடுத்து பத்மா, தியாகு என அழைத்துக்கொண்டு சென்றார்.
மற்றவர்கள் அந்த அனுபவத்தை ஆழ்ந்து அனுபவித்தவாரு வர இடையிடையே வரப்பின் நடுவே ஓடிய வாய்க்காலில் காலை நனைத்தபடி விளையாடிக்கொண்டே வந்தனர்.
வெயில் இல்லாத மிதமான வானிலை, குளிர்ந்த காற்றும் இதமாய் இருக்க மனதிற்கு சுகானுபவமாய் இருந்தது.
“பிடிச்சிருக்கா மொழி?…” என்ற ஜீவனிடம்,
“நீங்க சொல்லும் போது கூட இப்படி இருக்கும்னு நினைக்கலை. ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது…” என்றவளின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தில் அவனின் முகமும் மலர்ந்தது.
அவளின் கையை பிடித்தபடி அனைவரையும் முன்னால் விட்டு இவன் அவளுடன் இணைந்து நடக்க அங்கு தெரிந்த இடங்களை பற்றிய சிறு சிறு நினைவுகளையும் அவளிடம் பகிர்ந்துகொண்டே வந்தான்.
ஒருவழியாய் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். வந்தது என்னவோ மிக தூரம் தான். ஆனாலும் களைப்பு தெரியவில்லை. அந்த இயற்கை அத்தனை இதமாய் இருந்தது அவர்களுக்கு.
ஏற்கனவே சொல்லியிருந்தபடியால் பூஜைக்கு எல்லாம் தயாராக இருக்க பொங்கல் வைக்க ஆரம்பித்தனர். அருகிலேயே கிணறும், பம்புசெட்டும் இருக்க வைதேகியிடம் ஆதிக்கை ஒப்படைத்துவிட்டு அவர்களுக்கு காவலாய் கார்மேகத்தை விட்டுவிட்டு இங்கே பெண்கள் பொங்கல் வேலையில் இருக்க,
“வாங்க மாமா ஆறு எங்க இருக்குன்னு பார்ப்போம்…” என்று அழைத்தான் ஷிவா.
“நாம வந்த பாதைல இருந்து பாதி அளவு நடக்கனும் எதிர்த்தாப்புல. சரின்னா வா போவோம்…” என்று ஜீவன் சொல்லவும்,
“ஷிவா நானும் வரேன்…” என்றான் தியாகு.
அவன் சொல்லவுமே ஜீவன் வானத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் கையில் இருந்த வாட்சையும் பார்க்க,
“வேண்டாம்னா சொல்லிடு இங்கயே இருந்துக்கறேன்…” என முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு அவன் பேச,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, நீங்க வாங்க…” என ஜீவனே மென்னகையுடன் அழைத்தான்.
அதன் பின்னர் பேசிக்கொண்டே சற்று தூரம் வந்துவிட அப்போது தான் உடன் வந்த தியாகுவை காணாமல் ஜீவன் தேட,
“கூடத்தான வந்தான்? எங்க போனான்?…” என தலையில் கைவைத்தபடி சுற்றிலும் பார்த்தான்.
“இன்னும் வாழை தோப்பை விட்டு வெளியே வரலை. இங்கதான் இருப்பாரு. எதாச்சும் வாழை மரத்துக்கு நல்ல நேரம் பார்த்துட்டு…” என ஜீவனும் கிண்டலாய் சொல்லி சுற்றி பார்க்க,
“நானே அண்ணனை காணோம்னு தேடிட்டு இருக்கேன். நீங்க வேற…”
“இப்ப என்ன? மச்சானை தேடனும். நான் தேடறதுல அவரு எப்படி வராருன்னு மட்டும் பாரு…”
“என்ன பண்ண போறீங்க?…”
“ப்ச், கேள்வி கேட்காம என் மச்சானை எப்படி தேடறேன்னு மட்டும் பாரேன்…” என்ற ஜீவன் வேஷ்டியை மடித்து கட்டியபடி,
“மச்சான பார்த்தீங்களா? தும்ச்சக்கு, தும்ச்சக்கு, தும்ச்சக்கு. மலைவாழ தோப்புக்குள்ள, தும்ச்சக்கு தும்ச்சக்கு. மச்சான பார்த்தீங்களா?…” என ஜீவன் சத்தமாக ராகம் போட்டு இடையே மெட்டுக்கள் சேர்த்து பாடிக்கொண்டே வர,
“ஐயோ போதும், இங்கதான் இருக்கேன். இருங்க நானே வாரேன்…” என கத்தினான் தியாகு.
ஆள் தெரியாமல் குரல் மட்டும் வர இருவருமே குரல் வந்த திசையை பார்க்க மெல்ல வெளியே வந்தான் தியாகு கடும் கோபத்துடன்.
“எங்கையாச்சும் போக விடறியா? இவர் வேற பாட்டை பாடிட்டு. மனுஷன் அவஸ்தை புரியாம…” என வயிற்றை தடவ அதற்கு மேலும் ஷிவாவால் சிரிப்பை அடக்கி வைக்கமுடியவில்லை. வெடித்து சிரிக்க,
“ப்ச், என்ன இது ஷிவா? அவர் தான் சொல்றாருல்ல. இப்படிலாம் சிரிச்சு வெறுப்பேத்தறது நல்லதில்லை…” என ஜீவன் சிரிக்காமல் அவனை அடக்க,
“எல்லாம் உங்க கூட சேர்ந்த பின்னால தான் அவன் இப்படி ஆகிட்டான்…”
“ஓஓஹோ…” என ஜீவனும் அவன் பேசுவதை கை கட்டி நின்று கேட்க,
“இப்ப எதுக்கு கூப்பிட்டீங்க?…”
“உங்களுக்கு அவசரம்ன்னா என்கிட்டையே கேட்டிருக்கலாம்ல. இதுல என்னங்க உங்களுக்கு கோவம்?…”
“ப்ச்…” என்ற எரிச்சல் குரலே தியாகுவிடம் இருந்து.
“சரி வந்ததும் வந்துட்டோம். பக்கம் தான் ஆறு. இந்நேரம் யாரும் இருக்கமாட்டாங்க, வாங்க…”
“என்னது ஓபன் ப்ளேஸா?…” என்று அதற்கும் கத்த,
“இங்க இருந்து கோவிலுக்கு போகனும்னா ரொம்ப நேரம் ஆகும்ங்க. அதுவும் ரொம்ப நல்லாவெல்லாம் இருக்காது. உங்களுக்கு சரின்னா சொல்லுங்க…” என்ற ஜீவனிடம் ஒன்றும் பேசமுடியாமல் தியாகு பல்லை கடிக்க,
“உங்க சங்கடம் புரியுதுங்க. ஆனா இது கிராமம். சில விஷயங்கள் இயற்கையோட தான் இருக்கும். இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க…” என்று சொல்ல,
“அண்ணா என்ன இது? இங்கயும் வந்து எல்லாத்தையும் எதிர்பார்ப்பியா நீ?…” என ஷிவா கேட்க,
“நான் கேட்டேனாடா? அதான் சத்தமில்லாம போனேன்ல…” என்றவனை எதுவும் சொல்லவேண்டாம் என பார்வையால் தடுத்த ஜீவன்,
“ஒன்னும் பிரச்சனை இல்லை. வாங்க போகலாம்…” என அழைத்துக்கொண்டு நடக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆறு கண்ணிற்கு தென்பட்டது.
சுழித்துக்கொண்டு ஓடிய தண்ணீரை கண்டதுமே தியாகுவின் மனதில் எரிந்துகொண்டு இருந்த தணல் சற்று மட்டுப்பட்டது.
“நாங்க இங்க இருக்கோம். இங்க வேற யாரும் இல்லை…” என்ற ஜீவனின் பேச்சை காதில் வாங்கிக்கொள்ளாததை போல நடந்து சென்றான் தியாகு.
“தண்ணிய பார்த்ததும் வாய பிளந்துட்டான். இது சும்மா உங்கக்கிட்ட கோவமா இருக்கற மாதிரி ஸீன் போடறான்…” என்ற ஷிவா,
“முதல்ல பொங்கல் வச்சு சாமி கும்பிட்டதும் எல்லாரையும் கூட்டிட்டு ஆத்துக்கு வரனும்…” என்றான் குதூகலமாக.
“ஹ்ம்ம் ஆமா மொழிக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும்ல…” என்று ஜீவன் சொல்லிக்கொண்டிருக்க கோவிலில் அதை சுத்தம் செய்வதற்கு இருக்கும் ஆள் தேன்மொழியிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
“உன் புருஷன மொத கட்டினவளுக்கு இந்த கோவிலு சுத்தமா ஆவாதும்மா. ரெண்டு வாட்டி வந்துச்சு. மொதவாட்டியே கண்ணுல கங்கு பட்டுருச்சுன்னு ஒரே ஆட்டம் ஆடிருச்சு. இத்தனைக்கு அது வெறும் புகை தான்…”
“அதுக்கே பொறுக்கலை. அன்னைக்கு பொங்கிட்டு இருந்த பானையும் அந்த பொண்ணு கால் பட்டு பாதியா சாய்ஞ்சு பொங்கத்தண்ணி அம்பிட்டும் கீழே ஊத்தி அடுப்ப அணைச்சுடுச்சு…” என்று சொல்லிக்கொண்டு இருக்க அமைதியாய் கேட்டபடி இருந்தாள் தேன்மொழி.
“ஆசையா கூட்டிட்டு வந்த அந்த புள்ள முகமே வாடி போச்சு. தெய்வா அழுத அழுக அந்த சாமிக்கே பொறுக்கல போல. அதான் அதுக்கிட்ட இருந்து விடுதல வாங்கி குடுத்திருச்சு. நீதான் தாயி அந்த புள்ளைய சந்தோசமா வச்சிக்கிடனும். இந்த கிழவனுக்கு வேற என்ன ஆச?…” என்று சொல்ல சொல்ல அசையாமல் அமர்ந்திருந்தாள் தேன்மொழி.
“நான் ஜீவ்ன்னு சொன்னா நீயும் சொல்லுவியா? இதான் லாஸ்ட். அவனை நீ சொல்ல கூடாது…” என்ற வர்ஷாவின் குரல் காதில் ஒலிக்க மனதிற்குள் கசப்பாய் உணர்ந்தாள் தேன்மொழி.