புன்னகை – 9
பொதுவாக ஜீவனின் குடும்பத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தவர் தானாக வர்ஷாவை பற்றி சொல்லிக்கொண்டிருக்க அவர்களிடையே ஏன் இந்த பிரிவு என கேட்க நினைத்த தேன்மொழி பின் முடிவை மாற்றிக்கொண்டாள்.
அவராகவே பேச்சினூடே சொல்வதென்றால் சொல்லட்டும் என்று விட்டுவிட அவர் இதை சொல்லி முடிக்கும் முன் ஜீவனும் வந்துவிட்டான்.
தேன்மொழியும் பூசாரியும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டான் ஜீவன்.
அவளை பார்த்து புன்னகையுடன் ஷிவாவுடன் பேசிக்கொண்டே வர உடன் சற்று தள்ளி தியாகு நடந்து வந்தான்.
“சரித்தா நீ போயி பூசைக்கு நில்லு…” என அவளிடம் சொல்லிவிட்டு பூசாரி நகர்ந்திட,
“என்ன பேச்சுத்துணைக்கு ஆள் இல்லைன்னு அவரோட பேசிட்டு இருக்கியா நீ?…” என்றவனிடம் தலையசைத்து மறுத்தவள்,
“எங்க போய்ட்டீங்க திடீர்ன்னு?….” என கேட்டாள்.
“சும்மா அப்படியே ஒரு வாக். நானும் இங்க வந்து ஆறுமாசத்துக்கு மேல ஆகிடுச்சு. சென்னைல ஜாயின் பன்றதுக்கு முன்னாடி இங்க பூஜைக்கு வந்துட்டு போனேன். அப்பறம் இப்போ…” என்றவன்,
“இந்த கோவில் எப்படி இருக்கு மொழி? உனக்கு பிடிச்சிருக்கா?…” என்றான் மீண்டும் அவளிடத்தில்.
சுற்றிலும் பார்வையை ஓட்டியவளின் முகம் மலர்ந்து ரசனை கொட்டிக்கிடக்க,
“இந்த இடத்தை யாராச்சும் பிடிக்காதுன்னு சொல்லுவாங்களா? ஜனசந்தடி இல்லாம இவ்வளவு அமைதியா ரம்யமா இருக்குது. விட்டா இங்கயே கொஞ்சம் நாள் இருக்கலாம்னு கூட சொல்லுவேன் நான்…” என அவனின் முகம் பார்த்து முடித்தாள்.
“நீ இதைத்தான் சொல்லுவன்னு நினைச்சேன்…”
“அப்போ என்கிட்டே கேட்டிருக்கவே கூடாது பாஸ்…” என தேன்மொழியும் பதில் சொல்ல,
“இருந்தாலும் உன் வாய்ஸ்ல இப்படி கேட்கும் போது நல்லா இருக்குதே. அதான் கேட்டேன்…”
“அதுசரி, எப்போ சாமி கும்பிடனும்? பொங்கல் வச்சு முடிச்சாச்சு…”
“இதோ இப்போ ஆரம்பிச்சுடுவாங்க. அவர் அலங்காரம் பண்ண போய்ட்டார். முடிச்சதும் சாமி கும்பிட வேண்டியது தான்…” என ஜீவன் சொல்லிகொண்டிருக்க,
“மே ஐ கமின்?…” என்றான் ஷிவா.
“நோ, நோ. இப்ப யாருக்கும் அனுமதி இல்லை…” என ஜீவனும் பதிலுக்கு சொல்ல,
“வந்தே தீருவேன்…” என வந்து நின்றான் அவன்.
“தேனு சாமி கும்பிட்டுட்டு ஆத்துக்கு போவோம். நம்ம நல்லநேரம் கூட அங்க இருந்து வரவே மனசில்லாம தான் வந்தாரு தெரியுமா?….” என ஷிவா தியாகுவை குறிப்பிட்டு சொல்ல,
“எங்களை விட்டுட்டு ஏன்டா போன?…” என அவனின் தலையில் பின்னால் இருந்து குட்டிய சுலோச்சனா,
“தேனு இவனை விட்டுட்டு நாம போவோம்…” என நாத்தனாரோடு ஜோடி சேர,
“நீங்க வேற அண்ணி இவங்க ரெண்டுபேரும் நம்மளை கழட்டிவிட்டுட்டு போனாலும் போவாங்க. நம்பாதீங்க. அப்பறம் வருத்தப்படுவீக…” என ராகமாய் சொல்ல,
“அதெல்லாம் முடியாது. தேனு இப்ப இந்த ஊர் பொண்ணாகிட்டா.எப்போ வேணா வந்து போகலாம். நாம அப்படியா? அதுவும் உன் அண்ணனை வச்சா?…” என சுலோச்சனா பேசிக்கொண்டு இருக்க,
“சாமி கும்பிடலாம் வாங்க…” என வந்த அகல்யா,
“சாமிய கும்பிட்டு ஒரு நட போவோம். இப்ப மொத சாமிய கும்பிட போவோமா?…” என்றதும் அனைவருமே அந்த இடத்தில் இருந்து எழுந்து வந்தனர்.
தேங்காய் உடைப்பக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட தேன்மொழி கண்மூடி வேண்டிக்கொண்டாள்.
‘இவங்க வாழ்க்கைல என்ன நடந்துச்சுன்னு எனக்கு முழுசா தெரியல. ஆனாலும் எதுவா இருந்தாலும் எதையும் தாங்கற சக்தியை குடும்மா.’ என்று மனமுருக வேண்டிக்கொண்டாள்.
கற்பூர ஆராதனையை கண்களில் ஒற்றிக்கொண்டவள் ஜீவனை காண அவன் வழக்கம் போல கைகளை கட்டியபடி நின்றுகொண்டு இருந்தான்.
ஒரு பெருமூச்சோடு அவனுக்கும் தன் கைகளாலேயே தீபத்தை ஒற்றி காண்பித்துவிட்டு விபூதியை தன்னைப்போல அவனுக்கும் இட்டுவிட குறுஞ்சிரிப்போடு அவளிடம் தலை தாழ்ந்து லேசாய் குனிந்து வளைந்து வாங்கிக்கொண்டான்.
அதை பார்த்த ஜீவனின் குடும்பத்தினருக்கு மனதிற்குள் இருந்த சிறு சஞ்சலமும் காணாமல் போனது. லேசாய் புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தனர்.
“பிராத்தனை என்னை வச்சா மொழி?…” என்று வேறு ஜீவன் கேட்க,
“வாங்க வாங்க வெளில போகலாம். சும்மா இங்க எத்தனைவாட்டி சாமியை பார்ப்பீங்க?…” என ஷிவா அவனின் குடும்பத்தினரை கூட்டிக்கொண்டு மரத்தடிக்கு செல்ல அங்கே பெரிய ஜமுக்காளம் விரிக்கப்பட்டு இருந்தது.
“இங்க இருந்து எப்போ கிளம்பனும் அக்கா?…” என சுலோச்சனா அகல்யாவிடம் கேட்க,
“அது சாயங்காலத்துக்குத்தேன் பொறப்பாடு. அதுவரைக்கி இங்கனதேன். சமைக்கறதுக்கு உள்ள சட்டி சாமான் எல்லாம் இருக்குத்தா. பொங்கல சாப்புட்டு அடுப்புல ஒலைய ஏத்திற வேண்டிதேன்…” என வாழை இலையில் அனைவருக்கும் பொங்கலை வைத்து கொடுத்தபடி சொன்னாள்.
“என்னது இங்க வச்சா? அடுப்பு?…”
“அதேன் வெறவு அடுப்பு இருக்குதுல? பழக்கமில்லையோ?…” என்று சிரித்த அகல்யா,
“அதேன் நானு இருக்கேனில்ல. இந்தா இத எல்லாருக்கும் குடு…” என நீட்ட அந்நேரம் அங்கே தேன்மொழியோடு வந்தவன்,
“யத்தா ஒத்த ஒத்த ஆளுக்கா தூக்கி கொண்டுபோய் குடுப்பாகளா? இரு வாரேன்….” என பாத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையை நோக்கி சென்றான் ஜீவன்.
“இவன் ஒருத்தேன் ஊருக்கே கொண்டுபோயி குடுக்கற மாதிரி பண்ணுவியான்…” என அகல்யா சலித்துக்கொள்ள,
“இந்தா இந்த மூடில வச்சு குடு. எல்லாருக்கும் ஒரேதா…” என்று பெரிய தேக்சாவின் மூடியை நீட்ட,
“சரி இந்த தேங்காய சில்லெடுத்து தா. நா வெக்கிதேன்…” என்றவள் தம்பி சொல்லியதை போல இலைகளில் பொங்கலை வைத்து அதில் பத்தை போடப்பட்ட தேங்காயையும் ஒரு வாழை பழத்தையும் வைத்து வைக்க சுலோச்சனா எடுத்து அனைவருக்கும் கொண்டு கொடுத்தாள்.
“பொங்கச்சருவத்த அந்த வாய்க்கா தண்ணில ஊற வைய்யித்தா…” என்று தெய்வா சொல்லியதும் அதை தூக்கிக்கொண்டு சென்று அதையும் கழுவி முடித்து வந்து அமர்ந்தாள்.
சிறிது நேரம் பேசியபடி கொண்டுவந்த காய்கறிகளை ஆளுக்கொன்றாய் பிரித்து நறுக்க ஆரம்பிக்க,
“ஜீவா, உள்ள இன்னொரு சமுக்காளத்த கொண்டாந்து அந்தப்பக்கத்து மரத்து நெழலுல விரிச்சு விடு. புள்ளைகளோடு செத்த உறங்கி எந்திக்கட்டும். சோறு வடிக்கவும் எழுப்பிக்கலாம்…” என தெய்வா மகனிடம் சொல்ல,
“எல்லாம் இருக்குது இங்கயே!!…” என வியந்தபடி வந்தான் ஷிவா.
“உங்க குலதெய்வம் கோவில்ல இதெல்லாம் இல்லையா என்ன? எல்லா ஊர்லயும் இருக்கறது தானே?…”
“இருக்கும் தான். ஆனா அதெல்லாம் ரொம்ப சின்னபிள்ளையா இருக்கறப்போ போனது. இப்போ அம்மாவும், அப்பாவும் தான் போவாங்க. அண்ணனும். நான் போயி பலவருஷம் ஆச்சு…”
“குலசாமி நம்ம குடும்பத்த காக்கற காவக்கார சாமி. கும்பிடாம இருக்க கூடாது. வருஷத்துக்கு ஒருக்காவாட்டியும் அங்க எட்டி பாத்துட்டு நானும் இருக்கேன்னு காமிச்சுட்டு வந்துடனும்….” ஷிவாவின் பேச்சை கேட்டபடி அவர்களின் பின்னால் வந்த திருமூர்த்தி சொல்ல,
“நாங்க எடுத்துட்டு வருவோமே அண்ணா. நீங்க என்னத்துக்கு?…” என அவரிடம் சிரித்தபடி ஷிவா கேட்க,
“நா பாத்திரபண்டத்த தூக்கிட்டு போவ வந்தேன்…” என சொல்லி அங்கிருந்த சில பாத்திரங்களை பிரித்து பார்த்து தேவையானதை எடுத்து வைக்க,
“என்ன வேணும்னு உங்களுக்கு தெரியுமா?…” என்றான் ஷிவா.
“ஏன் தெரியாம? பலநாளு ஆம்பளைங்களும் இங்க சோறாக்குவோம். எம்புட்டுப்பேத்துக்கு எம்புட்டு அளவுல சட்டி வைக்கனும்னு இங்க எல்லாருக்கும் அத்துப்படி. ஜீவாவுக்கும் கூடத்தேன்…” என சொல்ல,
“ஈஸிட்…” என ஜீவாவிடம் பார்வையை தெருப்ப,
“அதே அதே…” என்றான் ஜீவாவும்.
“நீங்க போங்க மாமா, மத்தத்த நா தூக்கிட்டு வாரேன்…” என்று தானும் சில்வர் வாளி, கரண்டி என்று சிலவற்றை தூக்க ஷிவா ஜமுக்காளத்தை கொண்டு சென்றான்.
மரத்தடியில் சென்று விரித்துவிட இன்னும் ஓராண்டு மூன்று ஜமுக்காளமிருக்க அதை தலையணை போல மடித்து போட்டு பிள்ளைகளை படுக்க வைத்தனர். உடன் தியாகுவும் பொங்கல் சாப்பிட்டதில் உறக்கம் பிடிக்க அந்த மரத்தடி காற்றில் படுத்துவிட்டான்.
அது சொர்க்கம். இப்படி இயற்கை சூழலில் உறக்கத்தை நாம் தேடிச்செல்லாமல் தானாகவே வந்து மயக்கி தழுவும்.
அனைவருமே பேசிக்கொண்டே சமையலில் ஆழ்ந்துவிட ஜீவன் நொடிக்கொருமுறை தேன்மொழியை பார்த்தபடி தேங்காயை துருவிக்கொண்டு இருந்தான்.
“இங்கல்லாம் ஆடு வெட்டி கறிவிருந்து செய்ய மாட்டாங்களா? இன்னைக்கு சோத்துல சாம்பாரா?…” என ஷிவா கிண்டலாய் பேச,
“கெடா கறி விருந்தெல்லாம் உண்டுதேன். கல்யாணம் முடிச்சு மொதவாட்டி கோவிலுக்கு வராக. சரின்னுதேன் காய்கறி சோறு. இல்லன்னா கறிசோறு, சேவக்கறி சோறு இப்பிடித்தேன் இங்கன வைப்போம்…” என அகல்யா அங்கு நடக்கும் திருவிழாக்களை பற்றி சொல்லிக்கொண்டிருக்க,
“மாமோய் இத கொஞ்சம் பாத்துக்கறது…” என்ற ஜீவனின் அழைப்பில் திருமூர்த்தி அதனை வாங்கிக்கொள்ள அகல்யா லாவகமாய் அடுப்பில் விறகை கொண்டு சமைப்பதை ஒருவித லயிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் சுலோச்சனா.
பத்மாவும், தெய்வாவும் பேசிக்கொண்டிருக்க திருமூர்த்தி ஷிவாவோடு சேர்ந்துகொண்டார்.
“என்னக்கா, ஒத்த வார்த்த என்னைய சொல்லாம நீ பாட்டுக்கு புள்ளைகளோட பொறப்பட்டு வந்துட்ட? அம்புட்டுக்கும் தூரமாயிட்டேனோ நானு?…” என வந்தார் சொடலை சாமி. ஜீவனின் உறவினர்.
“ஆத்தே என்ன வார்த்தைய்யா சொல்லிட்டீரு? காத்தால சொல்லலாமின்னுதேன் இருந்தேன். அதுக்குமின்ன ஒம்ம காணல. அதேன் வந்துட்டோம்…” என தெய்வா பேச,
“ப்ச், வாரப்பவே சண்டைக்கு வாரதாட்டம். உக்காரு மாமா. இந்தா இந்த வாழ எலைய நறுக்கும்…” என அவரை மேலும் புலம்பவிடாமல் அகல்யா அடக்கி அமரவைத்துவிட்டு அவரின் வீட்டுக்கதைகளை பேச துவங்கிவிட்டாள்.
“ஆமா எங்க மருமவன காணல?…” என கேட்டுக்கொண்டிருக்க அப்போதுதான் ஜீவனும் தேன்மொழியும் அங்கு இல்லாததையே அனைவரும் உணர்ந்தனர்.
“இந்தா இங்கன எதையாச்சும் சுத்தி காட்ட போயிருப்பான். வருவான். நீர் வேலைய பாரும்…” என்று திருமூர்த்தி சமாளிக்க அதன்பின் மீண்டும் அவர்களின் பேச்சுவார்த்தை திசைமாறியது.
“என்னமோ சொல்லனும்னு சொல்லி கண்ணை காமிச்சு வரவச்சுட்டு இப்ப எதுக்கு ஒருத்தர்ட்டையும் சொல்லாம ஏன் இங்க கூட்டிட்டு வந்தீங்க?…” என தேன்மொழி கேட்டுக்கொண்டிருக்க,
“ஏன் அன்ஈஸியா பீல் பண்ணிட்டு இருக்க? என்ன செய்யுது?…” என்றவனை சங்கடமாய் பார்த்தவள்,
“வாஷ்ரூம் போகனும்…”
“இவ்வளவு தானே? இதை என்கிட்டே கேட்க என்ன தயக்கம்? அக்காட்ட கூட சொல்லிருந்திருக்கலாம்ல…”
“அவங்க வேலையா இருந்தாங்க. அதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன்…”
“இதை எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணினா உடம்பு கெட்டுடும். அஸ் எ டாக்டரா சொல்றேன். உன் புருஷனாவும்…” என்றவனை லேசாய் முறைத்தவள்,
“இதுக்கு நான் அங்கயே இருந்திருப்பேன். கூட்டிட்டு வந்துட்டு பேசிட்டே இருக்கீங்க…”
“ஹ்ம்ம், இங்க வாஷ்ரூம் ரொம்ப நல்லா இருக்குமான்னு சொல்ல முடியாதே மொழி. அதான் இந்தப்பக்கம் போவோம்…”
“நான் மாட்டேன். அங்கயே போவோம். அதான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்னு சொல்றேன்ல…”
“நீ கேட்க மாட்ட. சரி வா…” என அவளை அழைத்துக்கொண்டு சற்று தூரத்தில் இருந்த தகரக்கதவு போடப்பட்டிருந்த இடத்திற்கு சென்றவன்,
“இதுதான் இங்க பாத்ரூம். பட் ரொம்பவே சுமார். யாரும் மெயிண்டயின் பன்றதில்லை…”
“பரவாயில்லை…” என்று சொல்லி அதை திறந்துகொண்டு உள்ளே சென்றவள் சென்ற ஐந்துநிமிடத்திற்குள் துள்ளிக்கொண்டு ஓடிவந்தாள். அவளின் சத்தத்தில் சற்று தள்ளி ஒரு மரத்தில் சாய்ந்து நின்றவன் ஓடிவந்தான்.
“என்னாச்சு? ஏன் கத்தற?…” என கேட்க,
“கரப்பான்பூச்சி…” என்று சொல்லி இன்னும் காலை உதறிக்கொண்டு நிற்க,
“கால்ல ஏறிடுச்சா?…”
“இல்லை, ஆனா ஒரு மாதிரி இருக்குது. புடவையில ஏறிருந்தா?…” என்று உதறினாள். அவளின் செயலில் சிரித்தவன்,
“நீ குதிக்கறதுலையே அது கீழே விழுந்து செத்துருக்கும். போதும் நில்லு. இந்த வாய்க்கால்ல காலை நனை. அந்த பீல் போகும்…” என சொல்ல,
“ஒரு லைட் கூட இல்லை. குலதெய்வம்னு அவ்வளவு பேச்சு பெருமையா பேசினீங்க. அட்லீஸ்ட் இதை சரிபண்ணலாம்ல உங்க செலவுல…” என்று அவனை காய,
“தேவைதான்….” என்றவன் அவளின் புடவையில் இருந்து கீழே ஒரு பூச்சி விழ,
“இங்கயும் கரப்பான்பூச்சி…” என தண்ணீரில் இருந்து மேலே ஏறினாள்.
“ஹேய் மொழி, இதான் உங்க ஊர்ல கரப்பான்பூச்சியா? நல்லா தான் சொல்லி குடுத்திருக்காங்க…” என கிண்டல் பேச,
“இது தான வளர்ந்து பெருசாகும்…”
“ஆமா, பெருசாகவும் அப்படியே படிக்கவும் வச்சுடுவாங்க. இதுக்கு பேரு ஓலைவண்டு. கரப்பான்பூச்சியோட இன்னொரு வெர்ஷன். தூதர்ஷன் மாதிரின்னு வச்சுக்கோயேன்…” என்று கேலியாய் சொல்ல,
“அப்படின்னா?…”
“இப்ப இங்க ஓலைவண்டு பார்த்துட்ட தானே? வீட்டுக்கு வா. கரப்பான்பூச்சி காமிக்கறேன்…” என சீரியசாய் சொல்ல,
“என்ன வீட்டுல இருக்கா?…” என கேட்டவள் அவனின் கையை பிடித்துக்கொள்ள,
“பயந்துட்டியா? பயந்தா தான் பக்கத்துல வருவ, இல்ல?…” என இன்னும் அவளை சீண்டினான்.
“ஒன்னும் வரலை. வாங்க போவோம்…”
“போகலாமா? நிஜமாவா?…” என அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க,
“நீங்க ஒன்னும் வரவேண்டாம். நானே போறேன்…” என்றவள் அவனை தாண்டி செல்ல வாய்க்காலின் நுனியில் காலை வைத்தவள் ஈரமண் வழுக்கி அதற்குள் சாய்ந்து அவனை பிடித்துக்கொண்டு இறங்கிவிட்டாள்.
“சேர்ந்து நடக்கனும்னு வாய்ல சொன்னா பத்தாதா? இவ்வளவு வயலண்டா மொழி நீ?…” என்று அதற்கும் சிரித்தவன் மேலே ஏறி வேஷ்டியை மடித்து கட்டியவன் தேன்மொழிக்கு ஒரு கைகொடுக்க அவளும் வரப்பில் நின்று காலை உதற சட்டென அப்படியே தூக்கிகொண்டான்.
“வாய்க்கால்ல வலுக்கின கால் பிசகிக்குமாம். அம்மா சொல்லிருக்கு…”
“ஆனா நான் சொல்லவே இல்லையே. இறக்கி விடுங்க…” என அவனின் சட்டையை பிடித்துக்கொண்டு சொல்ல,
“பரவாயில்லை, இங்க யாருமில்லை. நான் கொஞ்சம் நேரம் தூக்கிட்டு வரேன்…” என்றான்.
“இல்லை, நம்மளை தேடி வருவாங்க. பார்த்துருவாங்க…”
“பார்த்தா பார்க்கட்டும். அதுக்கென்ன?…” என இன்னும் சீண்ட தேன்மொழியின் முகம் யோசனைக்கு போனது. வர்ஷா தேன்மொழியின் மூளையை குடைந்தாள்.
காதலித்து மணந்தவள். ஆசைகொண்டு சேர்ந்தவர்கள். வர்ஷாவையும் ஜீவன் இப்படித்தான் பார்த்திருப்பானோ? அவளை இப்படித்தான் தாங்கியிருந்திருப்பானோ?
சுருக்கென முள் தைத்த உணர்வு. முகமே கசங்கி போனது தேன்மொழிக்கு. சட்டென ஜீவனின் கழுத்தை இறுக்கிக்கொண்டவள் தன்னைமறந்து அந்நினைவுகளின் தாக்கத்தோடு அவனின் முகத்தையே அளவிட்டுக்கொண்டு இருந்தாள்.
அவளின் முகம் வைத்தே இப்படித்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறாளோ என கண்டுகொண்டவன்,
“அப்படியே பொத்துன்னு போட்டேனா? ராஸ்கல். நினைப்பை பாரு. உன்னைத்தான், உன்னை மட்டும் தான் இப்படி தூக்கியிருக்கேன். போதுமா?…” என கோபமாக அவளை இறக்கிவிட்டவன்,
“நடந்தே சென்னைக்கு கூட வந்து சேரு. எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கா பாரு…” என்று கோபமாக அவளை தாண்டிக்கொண்டு சென்றான்.
தேன்மொழி நின்ற இடத்திலேயே நிற்க சற்று தூரம் நடந்துவிட்டவன் அவள் அங்கேயே நிற்பதை பார்த்து,
“என்னோட வர விருப்பமில்லையா?…” என அங்கிருந்தே இருபொருள்பட கேட்க அவளுக்கும் நன்றாக புரிந்தது. ஆனாலும் சட்டமாய் நின்றாள்.
ஏதோ ஒருவகையில் அவளின் மனதிற்குள் ஒரு சிறு நிம்மதி. ‘உன்னை மட்டும் தான் இப்படி தூக்கியிருக்கேன்’ என்றதில் அவளின் மனம் வர்ஷாவை வெகுதூரத்தில் தள்ளிவைத்தது.
ஜீவனின் கோபத்தை கண்டு மனதிற்குள் புன்னகைத்தவள் முகத்தை உம்மென வைத்துக்கொண்டு,
“கூட்டிட்டு போகவேண்டிய நீங்களே பாதில இறக்கிவிட்டா இங்க தான் நிக்கனும் நான். எனக்கு எதுவும் தெரியாது. நீங்க தானே கத்துத்தரனும்…” என அவளும் அவனை போலவே பேச இடுப்பில் கை வைத்து முறைத்தவன்,
“இதுக்கொண்ணும் குறைச்சலில்லை. ஆவுனா கனவு கண்டுட்டு கன்னியாகுமரிக்கு போய்டறது…” என அவளை திட்டிக்கொண்டே நெருங்கி வந்தான். அவளருகே வந்து அவளின் முன் தன் வலக்கையை நீட்டியவன்,
“கையை பிடிச்சுக்க மொழி. எப்பவும் விட்டுடாத. இப்போ மாதிரி நானும் பாதில விடமாட்டேன். பிடிச்சுக்க…” என்று சொல்லவும் நெகிழ்ச்சியுடன் அவனின் கையை பற்றிக்கொண்டவள் அவனோடு இணைந்து நடந்துகொண்டே,
“கால் வலிக்குது…” என்றாள் வேண்டுமென்றே.
“வலிக்கட்டும் நோ ப்ராப்ளம்…” என்றான் அவளை போலவே.
“அப்போ மாதிரி தூக்கிட்டு போகமாட்டீங்க போல?…” என மெல்லிய குரலில் முணுமுணுக்க அவளை திரும்பி பார்த்தவன் தோளோடு சேர்த்தணைத்து,
“மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா சொல்லிட்ட மொழி. நானும் கேட்டுட்டேன்…” என்று அவளின் காதருகே குனிந்து சொல்லிவிட,
“கேட்கனும்னு தான் சொன்னேன்…” என அவனுக்கு சரியாய் பேசியவள் அதற்கு மேல் அவனருகே நிற்கமுடியாமல் ஓட பார்க்க,
“விடமாட்டேன். சேர்ந்தே வா…” என்று மொழியை தன் கைகளுக்குள் வைத்தபடி நடந்துசென்றான் ஜீவன்.