நகரத்தின் புறநகர் பகுதியின் பிரதான சாலையில் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்த காரின் முன் இருக்கை ஜன்னல்கள் கீழிறக்கப்பட்டது.
காரில் நான்குபேர் பயணித்துக்கொண்டிருக்க முன்னிருக்கையில் ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தான் நெடுஞ்செழியன்.
ஒருவித புருவ சுளிப்புடன் நெற்றியை விரலால் கீறியபடி ஆழ்ந்த சிந்தனை அவன் முகத்தில்.
“ஏஸியை ஆஃப் பண்ணிடவா ஸார்?…” என்றான் விமல் அந்த வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்தவன்.
“விமல்…” என்ற நெடுஞ்செழியன் விழிகள் அவனை கடுமை கலந்த எச்சரிக்கையுடன் பார்த்தது.
“ஸாரி ண்ணா….” என்று உடனே அவன் தன் அழைப்பை திருத்திக்கொண்டான்.
“விமல் லெப்ட் எடுத்து நேரா போகனும். அங்க இருந்து ரைட் அன்ட் ஸ்ட்ரெய்ட்…” என பின்னிருந்த பூபாலன் சொல்ல,
“டன்…” என்றான் விமல்.
“அண்ணா, இன்னும் ஆறு கிலோமீட்டர் தான். ஆனா இந்த ஏரியாவை பாருங்க. ரெஸார்ட்க்கு முன்னாடி இருந்தே எப்படி ஆக்குபை பண்ணியிருக்காங்கன்னு…” என நெடுஞ்செழியனிடம் சொல்லிக்கொண்டே தனது கேமராவால் அப்போதே படம் பிடிக்க ஆரம்பித்திருந்தான் பூச்சியப்பன்.
“எல்லாம் நோட் பண்ணிட்டே தான் இருக்கேன் பாய்ஸ். பத்திரம், கவனம்…” என சொல்லி நெடுஞ்செழியன் தனக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்தான்.
“ஹ்ம்ம், அவங்க ரீச்சாகிட்டாங்க…” என்று மட்டும் சொல்ல மற்றவர்கள் முகத்திலும் இலகுத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கவனம் கூட ஆரம்பித்தது.
தாங்கள் சேரவேண்டிய இடத்தை அடைய இன்னும் நான்கு கிலோமீட்டர் இருக்க நெடுஞ்செழியனுக்கு அழைப்பு.
தன் காதில் பொருத்தியிருந்த சிறிய ரக பட்டன் வடிவிலான ப்ளூடூத்தை அழுத்தியவன் காரின் ஜன்னல்களை மூடினான்.
“குட். இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்போம். நான் சொன்னது எல்லாம் பக்கா தானே?…” என கேட்க,
“ஆமாப்பா….” என்றார் அவர்.
“வேற டூரிஸ்ட் யார் அங்க இருக்காங்கன்னு பார்த்தீங்களா?…”
“நாங்க புக் பன்றப்போ நிறைய பிள்ளைங்க வந்திருந்தாங்க. பத்துபேர்கிட்ட இருப்பாங்க. உள்ள நிறைய ஃபேமிலியும் இருக்காங்கப்பா….”
“ஓகே நாங்க வந்திடுவோம்…” என சொல்லி அழைப்பை துண்டித்தவன் மீண்டும் இன்னொரு எண்ணிற்கு அழைத்தான்.
“ஸார் நெடுஞ்செழியன்…” என தன்னை சொல்ல,
“சொல்லுங்க செழியன், அங்க போயாச்சா?…” என்ற குரலில்,
“பக்கத்துல போய்ட்டோம். அதை இன்பார்ம் பண்ண தான் கால் பண்ணேன். எனக்கு நீங்க அடிக்கடி கூப்பிட வேண்டாம். நானே மெசேஜ் பண்ணுவேன்…” என சொல்ல,
“கேர்ஃபுல். அங்க என்ன நடக்குதுன்னு எனக்கு தெரிஞ்சே ஆகனும்…” என மறுமுனையில் அவனிடம் பேசியவர் வைத்துவிட்டார்.
அழைப்பை துண்டித்துவிட்டு நிமிர்ந்து பார்க்க உயர்தர கேளிக்கை விடுதிக்குள் நுழைந்தது அவர்கள் வாகனம்.
நேராக காரை நிறுத்துமிடம் சென்று சேர்த்துவிட்டு நால்வரும் இறங்கி உள்ளே அறைகள் பதிவு செய்யும் இடத்திற்கு சென்றனர்.
“ஸாரி ஸார். ஒரு ரூம் தான் இருக்கு. எல்லாமே புக்காகிருச்சு…” என்றார் அதன் பொறுப்பாளர்.
“இப்ப என்ன பன்றது விமல்?…” என நெடுஞ்செழியன் சிறு கண்ணசைவில் அவனிடம் கேட்க,
“ப்ச் இன்னும் ஒருவாரத்துல கல்யாணம். பேச்சிலர் ட்ரீட்ன்னு இங்கவரை கூட்டிட்டு வந்துட்டு திரும்ப எல்லாம் போக முடியாது ண்ணா….” என்றான் அவன் சட்டென ஒரு ஏமாற்றத்தை தன் முகத்தில் கொண்டுவந்து.
அவர்கள் நால்வரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த மேனேஜர் தானாகவே முன்வந்து,
“இது திடீர் ப்ரோக்ராம். கல்யாணத்துக்கு இன்வைட் பண்ண வந்த இடத்துல டக்குன்னு ப்ளான் பண்ணோம்….” என பூபாலன் சொல்ல,
“ஆமா ரெண்டுவருஷம் கழிச்சு மீட் பண்ணிருக்கோம். எல்லாம் குடும்பம், குழந்தைகுட்டின்னு ஆகிட்டா அடுத்து நமக்கு எங்க இந்த சான்ஸ் எல்லாம்?…” என்றான் பெருமூச்சுடன்.
யாருக்கு திருமணம் என்று சொல்லாமல் பொதுவாகவே அவர்கள் பேசிக்கொண்டிருக்க நெடுஞ்செழியன் தன் தாடையில் சேர்ந்திருந்த தாடியை நீவியபடி மேனேஜரை பார்த்தான்.
“முன்னாடியே புக் பண்ணியிருக்கலாமே ஸார். இப்ப என்ன பன்றது? ஒரு ரூம் தான் இருக்கு. ட்யூப்லேக்ஸ் ரூம். நாலு பேருக்கு எப்படி?…” என்றார் அவர்.
“நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம். எக்ஸ்ட்ரா பெட் அரேஞ்ச் பண்ணுங்க…” என நெடுஞ்செழியன் சொல்ல,
“ஸார்…” என்று யோசித்தார் மேனேஜர்.
“நாங்க எக்ஸ்ட்ரா பெட் எல்லாம் பன்றது இல்லையே ஸார்….” என மேனேஜரின் அருகிருந்த இன்னொருவன் கூற,
“நாலுபேருக்கான பேமென்ட் தந்திடறோம். அட்ஜஸ்ட் பன்றோம்ன்னு அதை எல்லாம் குறைக்க மாட்டோம்…” பூபாலன் உடனே சொல்ல அவர்கள் தயங்கினார்கள்.
நெடுஞ்செழியன் மூளையோ வேகமாக யோசித்தது. தாங்கள் இத்தனை வற்புறுத்தி கேட்டு அதில் எதுவும் சந்தேகம் எழுந்தால் என உடனே சுதாரித்தவன்,
“இட்ஸ் ஓகே. எங்களால நீங்க ஸஃபராக வேண்டாம். இந்த ரெஸார்ட் ரேட்டிங், ரிவ்யூ பார்த்து தான் இவ்வளோ தூரமா இருந்தாலும் ஓகேன்னு கிளம்பி வந்தோம். நாங்க கொஞ்சம் லேட்டா வந்துட்டோம் போல?…” என்று சொல்லி,
“இங்க பக்கத்துல உங்க ரெஸார்ட் மாதிரி ஒரு நல்ல ரெஸார்ட் இருந்தா நீங்களே சஜஸ்ட் பண்ணுங்க. இதுமாதிரி எங்களுக்கு பீஸ்ஃபுல்லா இருந்தா போதும். நாங்க அங்க ட்ரை பன்றோம்…” என்றான் நெடுஞ்செழியன்.
அவனின் பேச்சின் தன்மையும், சாதுர்யமும் அங்கே உடனே வேலை செய்தது. மேனேஜர் யோசிக்கவில்லை.
“ஸார் நோ ப்ராப்ளம். நீங்களே அட்ஜஸ்ட் பண்ணிக்கறீங்க. எங்களுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. ஒரு நிமிஷம் ஸார். ரூம்பாயை கூப்பிடறேன். நீங்க ரூம் எடுத்துக்கோங்க…” என்ற மேனேஜர் அங்கிருக்கும் வசதிகள் பற்றி எல்லாம் விவரித்து சொல்லிவிட்டு,
“ஓகே ஸார், நாளைக்கு செக்கவுட் டைம்…” என கூற,
“நாங்க ரெண்டு நாள் இருக்கறோம். அதனால நாளை மறுநாள் தான் செக்கவுட்….” என்றான் நெடுஞ்செழியன்.
“ஓகே ஸார். அப்போ நாளைக்கு உங்களுக்கு இன்னொரு ரூம் அலார்ட் பண்ணிடறோம்…” என சொல்லிவிட்டு உடனடியாக அவர்களின் விவரங்களை கேட்டு பண பரிவர்த்தனையை முடித்துக்கொண்டனர்.
“உங்க ரூம் கீ. ரூம்பாய் கூட போங்க ஸார். ஹேவ் எ நைஸ் டே…” என வாழ்த்தி அனுப்பி வைத்தார் மேனேஜர்.
தங்களுடைய பெட்டிகளை எடுத்துக்கொண்டு முன் சென்ற பணியாளனுடன் நடந்துகொண்டே அந்த ரெஸார்ட்டை நோட்டம் விட்டான் நெடுஞ்செழியன்.
“அப்பறம் தம்பி, பார்க்க நம்ம ஊர் மாதிரி இருக்கே?…” என பூச்சி அந்த ரூம் பாயின் தோளில் தட்டி கை போட்டுக்கொண்டே பேச,
“நீங்க எந்த ஊர் ஸார்?…” என்றான் அவன்.
“எனக்கென்னப்பா? ஒரு ஊரா? ரெண்டு ஊரா? எங்க வேலைக்கு போன்னு சொல்றாங்களோ போக வேண்டியது தான்…” என பூச்சி சொல்ல,
“அப்படி என்ன வேலை ஸார் பார்க்கறீங்க?…” என்றான் ரூம்பாய்.
பூபாலனும், விமலும் வாய்க்குள் சிரிக்க ‘கொளுப்ப பார்த்தியா?’ என பூச்சியப்பன் பல்லை கடித்தான். நெடுஞ்செழியன் உனக்கு தேவையா என அவனை ஒரு பார்வை பார்க்க,
“எங்கம்மா மாதிரியே இருக்கியே நீ. நான் கேட்டா அதுக்கு பதில் சொல்லாம. எல்லாம் என் ரோதனை…” என பூச்சி தன் கையை எடுத்துக்கொண்டு சலிப்புடன் பேச,
“எங்கம்மாவும் இதத்தான் சொல்லுவாங்க ஸார். கள்ளக்குறிச்சி பக்கமா நீங்க?…” என பேசியபடியே அவர்களின் அறையின் முன் நின்று கதவை திறந்தான்.
“ஆமாப்பா உளுந்தூர்பேட்டை…” பூச்சியும் அலட்சியமாக பதில் சொல்வதை போல பேச,
“அட, நான் அங்கிட்டு சின்னசேலத்துக்காரன் தான்…” என்றான் முகம் மலர்ந்து.
உள்ளே வந்ததும் பூபாலனும், விமலும் தங்களின் அலைபேசியை எடுத்து தாங்கள் இங்கே வந்துவிட்டதாய் வீட்டிற்கு பேசுவதை போல தகவலை சொல்லி அந்த அறையை பற்றியும் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தனர்.
நெடுஞ்செழியன் அறையை சுற்றி பார்த்துவிட்டு பால்கனி கதவை திறந்து பார்க்க பூச்சியப்பன் ரூம் பாயை விடவில்லை.
“அட அந்த ஊரா? பாரேன்…” என்ற பூச்சி ‘அதை தொடராமல் வேறு பேசு’ என்ற நெடுஞ்செழியன் பார்வையில் தனது பெட்டியை வைத்துவிட்டு அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான்.
“இது என்னைக்கு இங்க வச்சது? ரூம் அதுக்குள்ள ரெடியா இருக்கே?…” என கேட்க,
“கொஞ்சமா பேசுடா, சலசலன்னு…” என பூபாலன் சிரித்துக்கொண்டே அந்த தண்ணீர் பாட்டிலை வாங்கினான்.
“காலையில தான் இந்த ரூமை சுத்தம் பண்ணினோம் ஸார். ஒரு ஃபேமிலி காலி பண்ணிட்டு போனாங்க. சுத்தம் பண்ணினதும் கொண்டு வந்து வச்சது தான்…” என்று சொல்ல,
“ரூமே இல்லைன்னு சொன்னீங்க. ஆனா இங்க இருக்கற ரூம்க்கு மேல கூட்டம் இருக்கும் போல?…” என்றான் நெடுஞ்செழியன்.
பதில் தெரிந்தாலும் கேள்வி எழுப்பியபடி பால்கனி பக்கம் வந்து அங்கே விளையாட்டு மைதானத்தில் இருந்தவர்களை பார்த்து கேட்டான் தெரியாததை போல.
“இங்க நைட் தங்கற ஆளுங்கள விட டெய்லி டே அவுட்க்கு வரவங்க ரொம்ப அதிகம் ஸார். இன்-டோர், அவுட்-டோர் கேம்ஸ், ஆக்ட்டிவிட்டீஸ் அதிகம் ஸார். அதான் நம்ம ரெஸார்ட் எப்பவும் நம்பர் ஒன்ல இருக்கு….” என அவன் சொல்லிக்கொண்டே கிளம்ப பார்க்க,
“லன்ச் டைம் எப்போ?…” என்றான் விமல் அவனிடம்.
மேலும் எதாவது பேசுவானா என எதையாவது கேட்கவேண்டுமே என நிறுத்தி பேச,
“ஸார் இந்த புக்லெட்ல எல்லாமே எப்பப்பன்னு இருக்கு. நீங்க இங்க தங்கறதனால சில பெய்ட் கேம்ஸ் எல்லாம் உங்களுக்கு ப்ரீ தான். எங்கயும் நீங்க காசு கட்ட வேண்டாம். மசாஜ், பார்லர்ன்னு எல்லாமே இருக்கு…” என்றான் ரூம் பாய்.
“இதையே தான் அந்த மேனேஜரும் சொன்னாரு. ரிப்பீட்டா?…” என பூச்சி கேட்க,
“இல்ல ஸார், இருந்தாலும் சொல்லனும்ல….” என்றவன்,
“லன்ச் பஃபேயும் இருக்கு. ரூம் சர்வீஸும் இருக்கு. நீங்க ரெஸ்ட் எடுக்கனும்ன்னா இங்கயே கூட கொண்டுவந்திருவோம். பன்னெண்டு மணிக்கு வாட்டர் கேம்ஸ், ரெயின் டான்ஸ் எல்லாம் இருக்கு…” என்றான் அவன்.
“நாம என்ன கேட்டா இவன் என்ன சொல்றான்?…” என பூச்சி முறைக்க,
“பூச்சி…” என்றான் நெடுஞ்செழியன்.
“ண்ணா சும்மா ஃபன்…” என சொல்ல நெடுஞ்செழியன் முகத்தில் வலிய கொண்டுவந்த புன்னகை.
“நீ போப்பா. எதுவும் வேணும்னா நாங்க கால் பன்றோம்…” என அவனிடம் நெடுஞ்செழியன் கூற, அதற்குள் மேனேஜரிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது.
“வந்திடறேன் ஸார்…” என முகம் கறுத்து சுருங்கி சொல்லிவிட்டு,
அவன் சென்றதுமே கதவை பூட்டிய பூபாலன் சட்டென தனது பெட்டியில் வைத்திருந்த கருவியை எடுத்தவன் நெடுஞ்செழியனுக்கு ஒன்றை தூக்கி போட சட்டென அந்த அறை முழுவதும் ஒரு துரித சோதனை.
ஒரு இடம் விடாமல் நால்வரும் திருமணம் பற்றி பேசியபடியே ஒவ்வொரு இடமாய் பரிசோதித்து முடித்த பின்னர் தான் தங்களுடைய பேச்சுக்களை குறைத்தனர்.
“குட் ரூம்ல எந்த ரெக்காடரும் இல்லை. இப்போதைக்கு இந்த ரூம் ஓகே. ஆனா ஒவ்வொரு தடவையும் இப்படியே இருக்குமான்னு தெரியலை…” என்றவன் பேச மீண்டும் கதவு தட்டப்பட்டது. (https://punandjokes.com/)
“ஸார் வெல்கம் ட்ரிங்…” என கொண்டுவந்தவன் வேறு ஒருவன்.
நால்வரும் பார்வையால் அதனை கவனித்து சங்கேதமாய் பரிமாறிக்கொண்டதும் வந்தவன் அவர்களை பார்த்தபடி இறுக்கமாய் நின்றான்.
“வைங்க நாங்க குடிச்சிட்டு சொல்றோம். கல்யாண மாப்பிள்ளைக்கு இவ்வளோ ஜில்லுன்னு குடிச்சா ஒத்துக்காது. கொஞ்சம் நேரம் போகட்டும்…” என்றான் நெடுஞ்செழியன் அவனிடம்.
“ஓகே ஸார். நான் வெய்ட் பன்றேன்…” என அதனை வைத்துவிட்டு கிளம்ப,
“அம்புட்டு உஷாரா இவனுங்க. ஜட்டியோட ஓட விடறேன்…” என பல்லை கடித்தவன்,
“பூச்சி…”
“ஜூஸை தொடவே இல்லைண்ணே…” என சொல்லி அந்த தம்ளர்களை பாத்ரூமில் கொண்டு சென்று ஊற்றிவிட்டு வந்தான்.
“ஓகே ஸ்பாட்க்கு போகலாம்…” என சொல்லி நெடுஞ்செழியன் அறையை விட்டு வெளியேற மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.
அதற்குள் தங்களுக்கு முன் வந்திருந்தவர்களுக்கும் ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டே சென்றனர்.
நூற்றுக்கணக்கானோருக்கும் மேற்பட்ட கூட்டத்தின் மத்தியில் ஊடுருவியிருந்த நெடுஞ்செழியனுடன் சம்பந்தப்பட்டவர்கள் இருபதுபேருக்கு குறையாமல் இருந்தனர்.
“பூச்சி ஃபுட்பால் எடுப்போம்…” என நெடுஞ்செழியன் சொல்லவும் அதனை வாங்கிக்கொண்டு விளையாட சென்றனர்.
கவனத்தின் ஒரு பகுதி விளையாட்டில் இருந்தாலும் அங்கிருந்தவர்களின் மேலும் விழிகளை பதித்தே வைத்திருக்க முகத்தில் புன்னகைக்கும் குறைவில்லை.
கையில் வைத்திருந்த பந்தை வேகமாக தட்டிவிட்ட நெடுஞ்செழியன் கவனம் அது சென்று விழுந்த இடத்தை நோக்க பார்த்தவன் பார்த்தபடி அப்படியே நின்றுவிட்டான்.