இன்னும் கிளப்பப்படாத வாகனம் அவ்விடத்திலேயே நின்றிருக்க நெடுஞ்செழியனின் கைபேசி மீண்டும் சப்தம் எழுப்பியது.
அதன்மேல் பார்வையை பதித்தவனின் புருவங்கள் சுருங்கி விரிந்தது. இன்னொரு கையால் கை பேசியை எடுத்தவனிடம்,
“ஸ்ருதியா?…” என சுபஷ்வினி கேட்க,
“ம்ஹூம்…” என்று சொல்லியவன் ‘பேசாதே’ என்பதை போல ஜாடை காண்பித்து அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“ஸார் ஆள் எங்கன்னு தெரிஞ்சிருச்சு. சரவுண்டிங்கை நம்ம டீம் மார்க் பண்ணிட்டாங்க. டைட் பண்ணியாச்சு…” என்ற தகவலில்,
“குட்…” என்றான் நெடுஞ்செழியன்.
அவனின் மீசையின் நடுவில் பற்கள் நெறிபட எதுவும் கோபமோ என பார்த்தாள் சுபஷ்வினி.
“லொகேஷன் ஷேர் பண்ணுங்க….” என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த சுபஷ்வினியிடம் சட்டென புன்னகைத்து கண் சிமிட்ட,
“கண்ணை நோண்டிடுவேன்…” என்றாள் அவளும் மிரட்டலாக.
“டூ இட்…” என அவளருகே தன் முகத்தை காண்பித்து நெருங்க அவனின் நெற்றியில் ஒற்றை விரல் கொண்டு அழுத்தி பின்னே தள்ளியவள்,
“இப்ப இல்லை. எப்போன்னு நான் முடிவு பண்ணிக்கறேன்…” என்று மிடுக்காய் சொல்ல,
“வெய்ட்டிங்…” என்றபடி காரை கிளப்பினான் அவன்.
செல்லும் வழியில் விமலுக்கு அழைத்தவன் தயாராக இருக்கும்படி சொல்லிவிட்டு வைத்ததோடு போனில் வந்த இடத்தையும் கண்டுகொண்டான்.
இப்படி அவனின் ஒவ்வொரு செயல்களும் தீவிரத்துடன் இருக்க சுபஷ்வினிக்கு உள்ளூர பதட்டம் இதனை கண்டு.
அது அவளின் முகத்திலேயே அப்பட்டமாய் வெளிப்பட்டது. இங்கே வரும் பொழுது தோழிகள் வேறு சொல்லிய ஓரிரு வார்த்தைகள் மண்டைக்குள் வண்டாய் குடைந்தது.
இந்த வழக்கினால் அவனுக்கும் ஏதேனும் ஆபத்துகள் வரக்கூடுமோ என எங்கோ ஒரு மூலையில் சிறு துகளாய் ஒரு எண்ணம் படிந்தது.
“ச்சே ச்சே…” என தன் தலையை உலுக்கிக்கொண்டாள் சுபஷ்வினி.
தானா இத்தனை அச்சத்துடன் யோசிப்பது? எதில் தான் ஆபத்து இல்லை? எங்கு தான் இல்லை? என அந்த நினைப்பை அறவே விரட்டியடித்தாள்.
“என்ன, ரொம்ப யோசிக்கிற போல?…” என நெடுஞ்செழியன் கேட்க,
“ஹ்ம்ம் தேவையில்லாத யோசனை. அதான் அடிச்சு விரட்டினேன்…” என்று அவளே கூறினாள்.
“தேவை எது, தேவையில்லாதது எதுன்னு பிரிச்சு பார்க்க தெரிஞ்சிட்டாலே போதும். வாழ்க்கை நிம்மதியா இருக்கும்….” என்று உட்பொருள் கொண்டு அவன் பேச,
“சில நேரங்கள் தேவைப்படறது கூட நிம்மதியை சோதிக்குதே? அப்போ அதுக்கு என்ன பன்றதாம்?…” என சுபஷ்வினியும் அதே பாணியில் பேசிவைத்தாள்.
“நடக்கறது நடக்கட்டும்ன்னு ஒரு ஸ்டெப் தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கலாம். இப்போதைக்கு இதை தான் சொல்ல முடியும். ஹாஸ்பிட்டல் வந்திருச்சு. நீ கிளம்பற வழியை பாரு. இனி உன் விஷயத்துல என்னை நிப்பாட்ட முயற்சி பண்ணாத. அது வேஸ்ட்…” என தன் முடிவை அவளுக்கு சொல்லியவன்,
“ஒரு ஓநாய் ஒன்னு சிக்கியிருக்கு அஷ்வினி. இன்னைக்கு வகையா மாட்டிடும். முடிச்சிட்டு வரேன். நீ ஊருக்கு போ. இங்க எப்போ தேவையோ அப்போ உன்னை கூப்பிடறேன் நான்…” என்று முடிக்க மருத்துவமனை வந்துவிட்டது.
“இந்த வாட்ச் பத்திரம். எப்பவும் உன் கையிலையே இருக்கட்டும்…” என தானும் இறங்கிக்கொண்டான்.
இருவரும் உள்ளே செல்ல அதற்குள் விமல் மற்ற அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டான்.
“சம்மரி எல்லாமே ரெடி. ரிப்போர்ட்ஸ் எல்லாம் வாங்கியாச்சு ஸார்….” என்று சொல்லவும் தலையசைத்தவன் மற்ற பெண்களை கவனித்தான்.
“வெல், நீங்க புறப்படலாம். நீங்க உங்க இடங்களுக்கு போய் சேரும் வரைக்கும் எங்க டிப்பார்ட்மென்ட் ஆளுங்க உங்களுக்கு துணையா இருப்பாங்க. வெளில ட்ராவல்ஸ் வேன் ரெடியா இருக்கு. புறப்படலாம்…” என சொல்லியவன்,
“ஆனா ஒரு விஷயம் பிரச்சனைகளை விட்டு நாம விலகி நின்னுட்டா நம்மை எதுவும் பாதிக்காதுன்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் மட்டும் இருக்காதீங்க. நாளைக்கு உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னு வரும்போது மத்தவங்களும் இதே சுயநலத்தோட தான் நடந்துப்பாங்க…”என்றான்.
அவனின் பேச்சு சுளீரென்று தாக்கத்தான் செய்தது அவர்களை. ஆனாலும் அதற்காக தெரிந்தே இதில் இறங்க முடியுமா என மனதை சமாதானம் செய்துகொண்டனர்.
விசாலியின் பெற்றோர் நெடுஞ்செழியனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட சுபஷ்வினி ஒருமுறை அவனை திரும்பி பார்த்துவிட்டு சென்றாள்.
விமலுடன் பேசிக்கொண்டே அவளை தலையசைத்து செல்லுமாறு கூறியவன் அதன் பின்னர் மருத்துவரிடம் சென்று பேசிவிட்டு கிளம்பினான்.
“பூச்சி அங்க என்ன ஸ்டேட்டஸ்?…” என கார் வேகமெடுக்க நெடுஞ்செழியன் கேட்க,
“பொண்டாட்டி நம்பருக்கு போன் பண்ணினா மாட்டிப்போம்ன்னு வேலைக்காரன் பையனுக்கு போனை போட்டு அதை குடுத்துவிட சொல்லி அது மூலமா பேசியிருக்கான். எவ்வளோ கிரிமினல் மைண்ட்?…” என பூபாலனும் கோபமாய்.
“கொசுவுக்கே வலையை விரிப்பான் இந்த பூச்சி. என்கிட்டயேவா?…” என பூச்சி தன்னை தானே மார்த்தட்டிக்கொள்ள,
“ஆத்தீ பூச்சி பூச்சி…” என விமல் படக்கென்று எழுந்து உடையை தூசியை தட்டுவதை போல தட்டிவிட,
“எங்க? எங்க?…” என அவனின் இடுப்பில் ஏறாத குறை தான் பூச்சி.
“உன்னை பாராட்டினேன்டா. கொஞ்சம் சத்தமா பாராட்டிட்டேன் போல?…” விமல் சொல்லி பூபாலனுடன் ஹைபை அடித்துக்கொள்ள சத்தமாய் சிரித்துவிட்டான் நெடுஞ்செழியன்.
“நானும் பயந்த மாதிரி சும்மா ஆக்ட்டிங்கை போட்டேன்…” பூச்சி முறைப்புடன் விமலை கடித்துவிடுவதை போல பார்க்க,
“தெரியுது. இறங்கு என் இடுப்பை விட்டு. மாடு மாடு…” என்று தலையில் தட்டிக்கொண்டான் விமல்.
“இப்ப கொஞ்சம் முன்னாடி பூச்சி பூச்சி…” என மீண்டும் விமல் கிண்டலாய் பேச,
“அடேய் அடங்குங்கடா. அநியாயம் பன்றீங்க…” என மூவரையும் சின்ன சிரிப்போடு அடக்கியவன்,
“உண்மையிலையே பூச்சியோட ஐடியா தான் இங்க பக்காவா வொர்க்கவுட்டாகிருக்கு. கண்டிப்பா அப்ரிஷியேட் பண்ணனும் தானே?…” என அவனை தட்டிக்கொடுத்த நெடுஞ்செழியன் நேரத்தை பார்த்தான்.
அதற்குள் எல்லாம் தயார்நிலையில் இருக்க வானமும் இருளை பூச ஆரம்பித்ததும் விமலுக்கு தலையசைத்தான் நெடுஞ்செழியன்.
அடுத்த பத்து நிமிடத்திற்குள் மணிகண்டன் தங்கியிருந்த வீட்டினுள் உயர்மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் பாய்ச்சப்பட உள்ளிருந்து பெரிதாய் கூச்சல்.
“ரெடி பாய்ஸ்…” என்று அனைவரும் வேனில் இருந்து இறங்கிக்கொள்ள அவ்விடத்தை சுற்றிவளைத்திருந்த காவல்துறை தயார்நிலையில் நின்றனர்.
திட்டமிட்டபடி தந்தையை தூக்கிக்கொண்டு தனது காரில் புறப்பட்டான் மணிகண்டனின் மகன் சரத்.
வெளியே வந்தவர்களை சுற்றி வளைத்தவர்கள் கொத்தாக அள்ளிக்கொண்டு வந்தனர்.
“மேம், மணிகண்டனும், அவனோட பையனும் இப்போ நம்ம கஸ்டடில…” என வேதசௌந்தரிக்கு நெடுஞ்செழியன் சொல்லவும் அவருக்கு அத்தனை நிம்மதி.
எப்படி, என்ன என எல்லாம் கேட்டுக்கொண்டவர் மனதில் அணையாத தீ இன்னும் வீறுகொண்டு எரிந்தது.
“இனி அவங்க தப்பவே கூடாது. இதுக்கான பின்புலம் யார், என்னன்னு விசாரிங்க. சொல்லலைனா தேர்ட் டிகிரி ட்ரீட்மென்ட் குடுங்க. நான் அதுக்கான பர்மிஷனை தரேன் உங்களுக்கு…” என்றார் வேதசௌந்தரி.
அது போதுமே நெடுஞ்செழியனுக்கு. தொட்டதற்கெல்லாம் யாரிடமேனும் சென்று நிற்பதற்கு அவன் விரும்பியதில்லை.
அப்படி கேட்கவேண்டும் என்றாலே அவன் நிற்கமாட்டான். இப்பொழுது முழு அதிகாரமும் அவனுக்கு வழங்கப்பட நெடுஞ்செழியன் எரிமலையாய் தகித்து தான் நின்றான்.
மணிகண்டனுக்கான முதலுதவி செய்ய ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்ததனால் அவரும் காப்பாற்றப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.