சரத்தை காவல்துறை கைது செய்ததோடு தங்களின் கட்டுப்பாட்டில் வைத்தனர். உடனடியாக ஊடகத்திற்கும் தெரியப்படுத்திவிட்டனர்.
நள்ளிரவு வரை பரபரவென இவ்வேலைகள் மொத்தமாய் நெடுஞ்செழியனை பிடித்து வைத்திருந்தது.
சரத்திடம் முதற்கட்ட விசாரணையை அவ்விரவே அவர்கள் துவங்க எதற்கும் வாய் திறக்கவில்லை சரத்.
“எதுவானாலும் என் லாயர்கிட்ட பேசிக்கோங்க…” என இறுமாப்பாய் அவன் சொல்ல,
“உன் லாயரையும் தூக்கி உள்ள வைக்கறேன் டா. நாளைக்கு வரைக்கும் தான் உனக்கு டைம். அப்பனும், மவனும் உண்மையை சொல்லலைன்னா உங்களுக்கு சமாதியை இங்கயே கட்டறேன்…” என சீறிவிட்டு மணிகண்டனை பார்க்க கிளம்பினான்.
அங்கே மணிகண்டன் மருத்துவரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தார் தன்னை இங்கிருந்து அனுப்பிவிடாமல் ஏதேனும் சொல்லி அங்கேயே இருக்க வைக்க முடியுமா என்று கேட்டு.
அவருக்கு தெரியாதது ஒவ்வொன்றையும் நெடுஞ்செழியன் தீர்மானித்த பின்னரே செயல்படுத்திக்கொண்டிருக்கிறான் என்று.
இங்கே மணிகண்டனை அனுமதிக்கும் முன்பே அம்மருத்துவமனையில் இருப்பவர்களில் தனக்கு யார் வேண்டும் என்பது முதற்கொண்டு விசாரித்து அவர்களை நியமித்துக்கொண்டு தான் ஆரம்பித்திருந்தான்.
காவலுக்கென அங்கிருப்பவர்களை தாண்டி ஒருவரும் மணிகண்டனை பார்க்க முடியவில்லை.
“என்னோட லாயர் வருவார். அவரை அலோவ் பண்ணுங்க ப்ளீஸ்…” என மணிகண்டன் கெஞ்சிக்கொண்டிருக்க எதுவுமே காதுகொடுத்து கேட்க மறுக்கப்பட்டது.
அவருக்கு தன்னை சேர்ந்தவர்களை உடனடியா தொடர்புகொள்ளவேண்டிய அவசரம்.
எப்படியாவது ஜெய், கதிரை வைத்து தான் வெளியே வர என்ன செய்யவேண்டும் என கேட்கவேண்டும்.
ஆனால் எதற்கும் யாரும் இசைந்துகொடுக்கவில்லை. மணிகண்டனுக்கு ஒவ்வொரு நொடியும் நெருப்பில் நிற்பதை போலிருந்தது.
அங்கிருந்தவர்கள் அவரிடம் பேசவும் இல்லை. அதிலும் இப்படி ஒரு பாதக செயலை செய்திருப்பவன் மீது மதிப்பென்பதும் இல்லாமல் போக எந்த பேச்சும் வைத்துக்கொள்ளவில்லை அவர்கள்.
நெடுஞ்செழியன் நுழையும் பொழுதே அங்கே பூபாலன் யாரிடமோ கடுமையாய் பேசிக்கொண்டிருந்தான்.
“யார் நீங்க?…” என்றவனின் கேள்வியில் நெடுஞ்செழியனை திரும்பி பார்த்தவர்,
“ஸார் நான் மணிகண்டன் ஸாரோட லாயர்….” என தன்னை அவர் அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“அதுக்கென்ன இப்போ? லாயருக்கு கோர்ட்ல தானே வேலை. இங்க என்ன பன்றீங்க? வேலையை பார்க்கவிடாம தொந்தரவு பன்றீங்கன்னு நியூசென்ஸ் கேஸ் எதாச்சும் போடனுமா?…” என சிவந்த விழிகளுடன் நெடுஞ்செழியன் கேட்க,
“ஸார் பார்த்து பேசுங்க. நான் ஒரு லாயர். என்னோட கிளைண்ட்டை பார்க்கனும் நான். அவரோட…” என்றவரை பேச விடாமல் கையமர்த்தி நிறுத்தியவன்,
“எதுவானாலும் நாளைக்கு ஸ்டேஷன்ல வந்து பார்த்துக்கோங்க. அதுவும் என்னை. அக்யூஸ்ட்டை எல்லாம் பார்க்க அனுமதிக்க முடியாது…” என சொல்லிவிட்டான் நெடுஞ்செழியன்.
“பூபாலன் ஏன் இங்க வரை இவங்க வர அலோவ் பன்றீங்க. க்ளியர் பண்ணுங்க இமீடியட்டா…” என சொல்லிவிட்டு உள்ளே செல்ல போக,
“எக்ஸ்க்யூஸ் மீ ஸார், நான் அவரை பார்த்தே ஆகனும். இல்லைன்னா நீங்க மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும்…” என வழக்கறிஞர் நெடுஞ்செழியனை மிரட்டி பார்த்தார்.
“நான் பிஸி, கேஸ் முடியவும் சந்திக்கறேன்னு சொல்லுங்க அந்த விளைவுகளை. இப்ப கடையை காலி பண்ணுங்க…” என நக்கலாக சொல்லவும்,
“ஸார் இது நல்லா இல்லை…” அப்போதும் அந்த வழக்கறிஞர் அங்கிருந்து செல்லமுடியாதென பிடிவாதமாய் நின்றார்.
“பூபாலன் ரொம்ப மிரட்டி பார்க்கறாரே இந்த லாயர்? என்ன பண்ணலாம்? கொஞ்சம் பயந்து வருது. அனுப்பிடுவோமா?…” என சொல்லியவன்,
“நீங்க போய் மீட் பண்ணிட்டு வாங்க. நான் வெய்ட் பன்றேன்…” என்று அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான் நெடுஞ்செழியன்.
வழக்கறிஞர் எதுவும் புரியாமல் நிஜமாய் தன்னை செல்ல சொல்கிறானா என யோசனையுடன் பார்க்க,
“பூபாலன், இவரை உள்ள அனுப்புங்க. கிரைம் பாட்னர்ஸ் மீட் பண்ணட்டும். நமக்கும் எவிடென்ஸ் ஏதாச்சும் தேறும். பேசட்டுமே…” என்றதும் அவருக்கு புரிந்துபோனது தன்னையும் இதில் சிக்க வைக்க முயற்சி செய்கிறான் என்று.
“இது நல்லதுக்கில்லை. நான் கோர்ட் ஆடரோட நாளைக்கு உங்களை வந்து பார்க்கறேன்…” என்றார்.
“பார்க்கலாம். பார்க்கலாம். இப்ப நீங்க கிளம்புங்க…” என்ற நெடுஞ்செழியன் எழுந்து உள்ளே செல்ல அதுவரை மருத்துவரிடம் கெஞ்சிக்கொண்டிருந்த மணிகண்டன் நெடுஞ்செழியனை கண்டதும் சட்டென கண்ணை மூடிக்கொண்டு மயங்கிவிட்டதை போல நடிக்க,
“என்ன டாக்டர், பேஷன்ட் எப்படி இருக்கார்?…” என கேட்டபடி மணிகண்டனை நெருங்கி நின்றான் நெடுஞ்செழியன்.
“ஷாக் அடிச்ச அதிர்ச்சில தான் மயக்கம் வந்திருக்கு. இப்ப அவர் நல்லா இருக்கார்…” என மருத்துவர் சொல்ல,
“அப்போ கூட்டிட்டு போகலாமா?…” என்றான்.
“தாராளமா….” என்றவர் அங்கே தங்களிடம் மணிகண்டன் பேசியவற்றை எல்லாம் சொல்ல,
“பணக்கொழுப்பு. அதான் எல்லாத்தையும் முழுங்கி ஏப்பம் விட சொல்லுது. இனி தின்னது செரிக்காமலே சுத்தட்டும்…” என்றவன் பூபாலனை அழைத்து மணிகண்டனை கூட்டி செல்லும்படி சொல்ல,
“ஸார், தெரியாம பண்ணிட்டேன். இனிமே இந்த தப்பை பண்ணமாட்டேன். நான் வேணும்னா பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்கு நிவாரணத்தொகையா பணம் குடுத்து உதவி…” என்று சொல்லி முடிக்கும் முன் மணிகண்டனின் கன்னச்சதை கிழிந்து கடவாய் பற்கள் கீழே தெறித்தது.
“இதுக்கு ட்ரீட்மென்ட் பண்ணி உடனே இவனை எங்களோட அனுப்பி வைங்க…” என்ற நெடுஞ்செழியன்,
“உன்னை வச்சு நிறைய வேலை இருக்கு. அதனால ஒரு அறையோட விடறேன். கொலவெறில இருக்கேன். வாய திறந்த…” என விரல் நீட்டி எச்சரித்துவிட்டு பூபாலனை உள்ளே அழைத்தான்.
நெடுஞ்செழியனிடம் வாங்கிய அடியில் கண்ணில் நீர் கோர்த்துவிட இன்னும் நிகழ்விற்கு வரமுடியவில்லை மணிகண்டனுக்கு.
தலை கிறுகிறுப்போடு அமர்ந்திருக்க கிழிந்த உதட்டோரம் பஞ்சில் மருந்தை வைத்து கட்டி வாயை சுத்தம் செய்தனர்.
பற்கள் விழுந்ததில் அவ்விடமெல்லாம் வலி தெறிக்க உச்சந்தலையில் மின்னல் வெட்டுவதை போலிருந்தது.
அவரின் வயதிற்கு அதனை தாங்க முடியவில்லை. எல்லாம் மங்கலாக தெரிவதை போலிருக்க,
“கூட்டிட்டு போங்க…” என்றவன் குரல் வந்த திசைக்கே மணிகண்டன் திரும்பவில்லை.
‘ஒரு அடிக்கு தாளமுடியவில்லையே, எப்படி இதில் இருந்து தப்பிக்க?’ என உள்ளுக்குள் அரண்டு போனார்.
———————————————————-
“ஷிட், ஷிட், ஷிட்…” என்றவனின் காட்டுத்தனமான கத்தலில் கதிர் மௌனம் சாதிக்க,
“பேசி தொலையேன்டா, என்னவோ சொன்ன ஒன்னும் புடுங்க முடியாதுன்னு. எப்படி, எப்படி அவங்க அந்த செழியன்கிட்ட சிக்கினாங்க? அதுவும் முழுசா ஒரு நாள் ஆகலை. அதுக்குள்ள…” என்ற ஜெய்யின் சத்தத்தில் கதிர் வாயை திறக்கவில்லை.
“என்னவோ நான் பார்த்துப்பேன், யாராலையும் கண்டுபிடிக்க முடியாது அப்படி இப்படின்னு என்னென்னவோ சொன்ன? என்னத்த கிழிச்ச?…” என்றான் ஜெய்.
“சரத் அப்பா அவங்க வீட்டுக்கு கால் பண்ணுவாங்கன்னு தெரியாதுடா. அதுக்கு தான் அவங்களை யார்ட்டையும் பேச வேண்டாம்ன்னு சொல்லி வச்சிருந்தேன்…” என்றான் அடங்கிப்போன குரலில் கதிர்.
“ஜெய் இன்னொரு விஷயம் நீ கோபப்படாம கேட்கனும். நிதானமா இரு…” என பீடிகை போட,
“இன்னும் என்னத்த கேட்க? சொல்லி தொலை. எல்லாம் என் தலையெழுத்து. உங்களை வச்சிட்டு பிஸ்னஸ்ல இறங்கினேன் பார்த்தியா?…” என இன்னும் ஆவேசம் தணியாமல் இங்குமங்குமாய் நடந்தான் ஜெய்.
“இந்த கேஸ் கையும் களவுமா பிடிபட்ட கேஸ் மட்டுமில்லை, இப்ப வரை பாதிக்கப்பட்ட ரெண்டு பொண்ணுங்க கம்ப்ளைண்ட் வேற குடுத்திருக்காங்க. அவ்வளோ ஈஸியா இதை விடமாட்டாங்க…” என்று எச்சிலை கூட்டி விழுங்கியபடி கதிர் கூற,
“யாருன்னு தெரியுமா? கம்ப்ளைண்ட் குடுக்கற அளவுக்கு யாருக்கு தைரியம்? நாம யூஸ் பண்ணின பொண்ணுங்க அங்க இருந்து கிளம்பும் போது எல்லாருக்கும் அவங்களோட அந்த வீடியோவை காமிச்சு மிரட்டி தானே அனுப்பி வச்சாங்க? எங்க இருந்து வந்துச்சு அந்த துணிச்சல்?…” என்ற ஜெய் முகம் ஆத்திரத்தில் கருத்திருந்தது.
“ஒருவேளை இந்த தடவை வந்திருந்த பொண்ணுங்கள்ல யாராவதா?…” என கேட்க,
“இன்னும் தெரியலை ஜெய். ரொம்ப கான்பிடன்ஷியலா வச்சிருக்காங்க. வேதசௌந்தரி, கமிஷனர், நெடுஞ்செழியன் அவங்க டீம் தவிர்த்து வேற யாருக்கும் யாருன்னு தெரியலை….” என்றான் கதிர்.
“அப்போ அந்த பொண்ணுங்களை தூக்கு. அதுல இருக்கற யாரோன்னா அது யாருன்னு தெரியனும் எனக்கு. என் கண்ணு முன்னாடி அவளுங்க வரனும். கொஞ்சமும் அச்சமில்லாம கேஸ் குடுக்காளுங்களா? அதுக்கான பலனை அனுபவிக்க வேண்டாமா?…” என்று வெறிக்கொண்டு ஓரிடத்தில் நிற்கமுடியாமல் இங்குமங்குமாய் நடந்துகொண்டே இருந்தான்.
“ரிலாக்ஸ் ஜெய். அதோட இப்ப நாம இதுல இறங்க வேண்டாம். அது இன்னும் ரிஸ்க்காகிடும். கொஞ்சம் பொறு. எப்படியும் கோர்ட்டுக்கு கேஸ் வரும் போது கம்பளைன்ட் குடுத்த பொண்ணுங்களும் வந்துதானே ஆகனும். அப்ப தெரிஞ்சிரும்…” என்றான் கதிர்.
“டேய் அதுவரைக்கும் என்னை சும்மா இருக்க சொல்றியா?…” ஜெய் கத்த,
“ஆமா, இருந்து தான் ஆகனும். யாருன்னு தெரிஞ்சு அடுத்து என்ன செய்யறதுன்னு யோசிக்கிறது தான் புத்திசாலித்தனம். யாருன்னு தெரியாம எல்லாரையும் நாம தூக்க நினைச்சா கண்டிப்பா மாட்டிப்போம். அவசரத்துல எதையும் செஞ்சு வைக்க வேண்டாம்…” என்று கதிர் எச்சரிக்க,