“டெலிவரிக்கு நாள் நெருங்குதுல. அப்படித்தான் இருக்கும். சின்ன சின்னதா உடம்பு படுத்தும்…” என புன்னகையுடன் வேதா கூற, தனபாலன் முகத்திலும் தன் மகவை காணும் ஆவல் அபரிமிதமானது.
“சரி, நீ போய் பாரு தனா. நாங்க தூங்க லேட்டாகும்…” என்று சொல்லிவிட்டு சட்டப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தார் சுரேந்திரன்.
“இப்பலாம் ரெண்டுபேரும் ரொம்ப பிஸியாகியாச்சு. எங்களோட நீங்க செலவு பன்ற நேரம் ரொம்பவே குறைஞ்சிருச்சு…” குறைபட்டதோடு அவனின் முகமும் வாட்டமானது.
“தனா, நாம பொது வாழ்க்கையில் இருக்கோம். நம்மோட பொறுப்பு மத்தவங்களை விட முக்கியத்துவம் வாய்ந்தது. நாளைக்கு உனக்கும் இதைவிட பொறுப்புகள் பல படி வரும்…” என்றார் வேதா.
“எக்ஸாக்ட்லி. எல்லாருக்கும் மத்தவங்க பிரச்சனையை தீர்க்க கூடிய அதிகாரம் கிடைக்காது. நமக்கு அந்த கடமை கிடைச்சிருக்கு. அதை சரியா நாம செய்யனும். குடும்பமும் முக்கியம் தான். அதே நேரம் இந்த நாடும், மக்களும் அதைவிட முக்கியம்….” என்றார் சுரேந்திரன்.
“புரிஞ்சுக்கோ தனா. நீ என் இடத்துக்கு வரும்போது இந்தமாதிரியான விஷயங்களுக்கு மனசை அல்லாட விடக்கூடாது. நாங்க கூடவே இருக்கனும்ன்னு இல்லை. அதுக்காக எதையும் பார்க்கலை, கவனிக்கலைன்னும் இல்லை. புரியுதா?…” வேதா மீண்டும் சொல்ல,
“ஸாரி ம்மா…” என்றான் தனபாலன்.
“இட்ஸ் ஓகே. இன்னும் நீ சின்ன பையன் இல்லை. உன் பிள்ளைகளுக்கு நீ சொல்லவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. நீ கத்துக்கவேண்டியதும் நிறைய இருக்கு….” என வேதா கூறவும்,
“ஓகே, இனி இப்படி பேசலை…” என்றான் இன்முகமாக தனபாலன்.
“இப்படி பேசக்கூடாதுன்றதுக்காக நான் சொல்லலை தனா. இதையும் நீ புரிஞ்சுக்கனும். உன்னோட தகுதியை நீ வளர்த்துக்கனும். எதையும் சரியா பார்க்க கூடிய பக்குவத்தை வளர்த்துக்கோ….” என்றார் வேதசௌந்தரி.
“ஓகே ம்மா. நான் போய் சங்கீதாவை பார்க்கறேன்…” என்று தனா நகர்ந்ததும் பெருமூச்சுடன் வேதா தனது போனை எடுத்து பார்த்தார்.
“இப்பலாம் அதிகமா நிகிதாவோட டச்ல இருக்க போல வேதா?…” என சுரேந்திரன் கேட்க,
“அதிகமா அவ என்னை தேடறா. நானும் அவளுக்கு ஒரு அம்மா இல்லையா? எனக்கும் பொண்ணு இல்லை. பின்ன நான் பார்க்காம யார் பார்ப்பா?…” என்றார் வேதா.
“அதுவும் சரிதான். வெங்கட் கூட இப்பலாம் ரொம்ப பிஸி போல. நிகிக்கு உடம்பு சரியில்லைன்னு பேசினதோட சரி. அடுத்து கூப்பிட்டா கூட ரெண்டுமூணு வார்த்தை தான். கட் பண்ணிடறான். ஒருநாள் நேர்ல போய் பார்க்கனும்…” என்றார் சுரேந்திரன்.
“நிகிதாவை இங்க கூப்பிட்டு வரலாம்னு யோசிக்கறேன் நான். அடுத்தவாரம் வரவழைப்போமான்னு ஒரு யோசனை. நீங்க என்ன சொல்றீங்க?…” என வேதா கேட்க,
“கண்டிப்பா. நான் ஏன் மாட்டேன்னு சொல்ல போறேன். எனக்கு ரொம்ப சந்தோஷம். வெங்கட் ட்ரான்ஸ்பர்ல அங்க போனப்பவே நான் வேண்டாம்ன்னு தான் சொன்னேன். கேட்டானா?…” என்றவர்,
“எம்மா வேதா, பேசாம நிகியை இங்கயே காலேஜ்ல சேர்த்து நாம பார்த்துப்போம்ன்னு சொல்லு. அன்னைக்கு பாப்பாக்கு முடியலைன்னு சொல்லி பேசமுடியாம அப்படி அழறான். மனசே கலங்கி போச்சு…” என்றார் சுரேந்திரன் வருத்தமாக.
“நான் பேசறேன். பார்க்கலாம்…” என்று மட்டும் வேதசௌந்தரி சொல்லி,
“ஆமாம்மா, நீயும் சீக்கிரம் தூங்கு. நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன். தனியா போய் உக்கார்ந்துக்கற. சரியா தூங்கறதில்லை. எங்களுக்கு நீயும் முக்கியம். பார்த்துக்கோ…” என்றவர் மீண்டும் தான் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அமர்ந்துகொண்டார்.
‘உறக்கமா? தனக்கா? நினைத்தும் பார்க்க முடியுமா? நிகிதாவை பார்த்த அந்த நிலை. இன்றும் கண்ணை விட்டு அகலவில்லை.
ஒரு பெண்ணாய், தாயாய், சகமனுஷியாய் என எந்த நிலையில் நின்று பார்த்தாலும் தாங்கிக்கொள்ளமுடியாத நிலை.
“உங்களுக்கு ரொம்ப தெரிஞ்ச பொண்ணுன்றதனால வந்த கோபமோ? இவ்வளோ வேகமா ஆக்ஷன் எடுக்க சொல்றீங்களே?…” என நெடுஞ்செழியன் அவரிடம் அன்று கேட்ட கேள்வியில் இப்போதும் விழிகள் சிவந்தது.
“அந்த இடத்துல நிகிதா இல்லாம எந்த பொண்ணு இருந்திருந்தாலும் என்னோட ஆக்ஷன் இதுவா தான் இருக்கும் நெடுஞ்செழியன்….” என்று நிமிர்ந்து சொல்லியதன் பொருளை அவன் ஏற்றுகொண்டாலும் மனதினோரம் சிறு வலி.
அதில் எத்தனை உண்மை உள்ளது. நிகிதா தன்னை அணுகும் இடத்தில் இருந்ததனால் இத்தனை துரிதமாக தனக்கு தெரியவந்தது.
இதுவே நிகிதா பாதிக்கபடாமல் தனக்கும் தெரியாமல் இருந்திருந்தால் எத்தனை எத்தனை பெண்குழந்தைகள் இதன் மூலம் பாதிக்கப்பட்டிருப்பார்கள்?
இதற்கு என்ன செய்யவேண்டும் என்ற ஒரு யோசனை நெஞ்சத்தினுள் பெரிதாய் கேள்வியை எழுப்பியபடி இருந்தது.
முதலில் நிகிதாவை இங்கே வரவழைக்க என்ன செய்வது என யோசித்தார். அதற்கு முன் கணவனிடம் இதனை பேச வேண்டும்.
இந்த வழக்கின் போது நிகிதா இங்கே தான் இருக்க வேண்டும். அதுதான் பாதுகாப்பும் கூட. யாரையும் நம்ப முடியவில்லை அவரால்.
தன் கைகளுக்குள் அப்பெண்ணை காப்பாற்றி வைத்துக்கொள்ளவேண்டும் என்னும் எண்ணம் தான் இப்போது.