“பேச்சிலர்ஸ்க்கு இதுவே அதிகம் ண்ணா. கடவுளுக்கு நன்றி சொல்லுங்க…” என்ற சோபியாவின் சிரிப்பில் நெடுஞ்செழியனின் முகமும் புன்னகையில் விரிந்தது.
“ஓய் கத்தரிக்கா, ஸ்கூல் போற வயசுல கல்யாணம் பண்ணிட்டு நீ என்னை பேச்சிலர்ன்னு சொல்றியா? ஆணவம். எங்க அவனை? எல்லாம் அவன் அவசரம். அதான் சில்வண்டுட்ட எல்லாம் நான் பேச்சு வாங்கறேன்…” என்று சொல்ல அதற்கு சோபியா பதில் சொல்ல என காலை பொழுது மனதில் சந்தோஷத்தை பரப்பியது.
“உங்க தம்பி ஆபீஸ்க்கு கிளம்பிட்டிருக்காங்க. இன்னைக்கு முக்கியமான வேலையாம். கலெக்டருக்கு ஒரே டென்ஷன்…” என சோபியா சொல்லிக்கொண்டிருக்க,
“சோபி…” என்ற தன் கணவனின் அழைப்பில் வேகமாய் திரும்பியவள் நெடுஞ்செழியனிடம் கையசைத்துவிட்டு ஓட்டமெடுக்க,
“நடந்தே போகமாட்டாளே…” என தாயிடம் சொல்லி புன்னகைத்தான் நெடுஞ்செழியன்.
“மனு வந்துட்டான். உன்கிட்ட பேசனும்ன்னு சொல்லிட்டிருந்தான் செழியா. வெய்ட்…” என காஞ்சனா சொல்லவும் தலையசைத்து பார்க்க இளைய மகனை காண்பித்தார் காஞ்சனா.
பார்மல் உடையில் சட்டையின் கை பகுதியில் பட்டன்களை போட்டபடி வந்தவனின் மேல் மோதா குறையாக சென்று நின்ற சோபியாவை பார்த்ததும் இன்னுமே சிரித்துவிட்டான் நெடுஞ்செழியன் .
“பார்த்து வரமாட்டியா சோபி…” என மனுரஞ்சன் மனைவியை நேராய் நிறுத்திவிட்டு கடிய அது எங்கே அவளின் காதில் விழுந்தது.
“கண்ணாடியை மறந்துட்டீங்க…” என அவனிடம் நீட்ட புன்னகையுடன் வாங்கிக்கொண்ட மனுரஞ்சன்,
“ப்ரேக்பாஸ்ட் வேண்டாம். அம்மாவும் நீயும் சாப்பிடுங்க…” என சொல்லிக்கொண்டே சோபியாவின் காதிலிருந்து கழன்று விழுந்திருந்த மிஷினை எடுத்து அவளின் காதில் பொருத்தியவன் மீண்டும்,
“ப்ரேக்பாஸ்ட் வேண்டாம். அம்மாவும் நீயும் சாப்பிடுங்க. நான் டின்னருக்கு தான் வருவேன். எவ்வளோ அவசரம்ன்னாலும் மெதுவா நடந்து போகனும் சோபி…” என பொறுமையாய் மனைவிக்கு சொல்லி கன்னத்தில் லேசாய் தட்டிவிட்டு திரும்ப காஞ்சனா கையில் போனுடன் அமர்ந்திருந்தார்.
“அண்ணனாம்மா?…” என கேட்டு தானே போனை வாங்கிக்கொண்டு அமர்ந்தான் அவரருகில்.
“என்ன மனு? உன் வொய்ப்க்கு பாடம் நடத்தி முடிச்சாச்சா?…” கேலியாய் தம்பியை கேட்க,
“அது எல்லாம் அத்தனை சீக்கிரம் முடியாது. நீங்க இப்ப வெளில கிளம்பறீங்களா ண்ணா?…” என்றான் மனுரஞ்சன்.
“ஹ்ம்ம், கிளம்பனும். ஒரு அரைமணி நேரத்துல…”
“நான் திரும்ப என் நம்பர்ல இருந்து கால் பன்றேன், வெய்ட் பண்ணுங்க….” என்ற மனுரஞ்சன் மனைவி, தாயிடம் விடைபெற்று கிளம்பினான்.
அரசாங்க குடியிருப்பில் தான் அவன் வசிப்பிடம். பிரதம மந்திரியின் பிரதம முதன்மை செயலாளருக்கு கீழ் அவனது பணி.
குடியிருப்பிலிருந்து கிளம்பியவன் நெடுஞ்செழியனுக்கு உடனே அழைத்துவிட்டான்.
“என்ன கேஸ் ண்ணா? ரொம்ப பரபரப்பா போய்ட்டிருக்கு?…” என கேட்க,
“நியூஸ் பார்த்திருப்பியே மனு?…”
“பார்த்தேன் ண்ணா. அதான் கேட்கறேன். சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சதை கூட நியூஸ் பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டோம் நாங்க…” என மனுரஞ்சன் கூற,
“எனிவே நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். அம்மா நெக்ஸ்ட் வீக் அங்க வராங்க…” என மனுரஞ்சன் தகவல் கூற,
“வரட்டும். என்னைக்குன்னு நானும் கேட்டுக்கறேன்…”
“ண்ணா பொறுமையா கேளுங்க. அம்மா வரது உங்களை பார்க்க இல்லை. காரைக்கால் போறதுக்கு. அண்ணி வீட்டுல பேசலாம்ன்னு இருக்காங்க. இனியும் உங்களை நம்பக்கூடாதுன்னு இருக்காங்க. அதுவும் இப்ப உங்களோட ட்ரான்ஸ்பர் வேற அம்மாவை வேகமாக்கிருக்கு…” என்று சிரிப்போடு சொல்ல,
“ஸோ இனி காய்ஞ்ச தோசையும், காரப்பொடியும் அவசியமில்லை போல?…” என நெடுஞ்செழியன் சிரிக்க,
“அண்ணிக்கு சமைக்க தெரியுமா?…” என்று மனுரஞ்சன் கேலி செய்தான் அண்ணனை.
“என் செல்லக்குட்டி சோபிக்கண்ணு இருக்க எனக்கென்ன கவலை? அவ சொல்லி தந்திருவா அஷ்வினிக்கு…”
“அதுசரி. உங்க தலையெழுத்து…” என்று வாய்விட்டு சிரித்தவன்,
“இதை அவ முன்னாடி பேசினா நான் உங்ககிட்ட சொல்லிட்டேன்னு அம்மாட்டயும் சொல்லிருவா. அண்ணிக்கும் சொல்லிருவா. அதான் தனியா வந்து பேசறேன். அலார்ட்டா இருங்க. என்ன செய்யனுமோ பார்த்துக்கோங்க. ஓகே ண்ணா. பெஸ்ட் ஆஃப் லக். சீக்கிரம் சம்சாரியாகிருங்க…” என சொல்லி வைத்துவிட்டான்.
மனுரஞ்சன் பேசி முடித்ததும் போனை வைத்த நெடுஞ்செழியன் முகமெல்லாம் யோசனை தான்.
இந்த திருமண பேச்சுவார்த்தை ஆரம்பித்த பொழுதே சுபஷ்வினியின் தந்தை சிங்கமுத்து முதலில் மறுத்துவிட்டார்.
மீண்டும் தங்கள் பக்கத்திலிருந்து தாய் நேராக சென்று அங்கே ஏதேனும் பேசி இன்னும் மனஸ்தாபம் வந்துவிட்டால் காலத்திற்கும் அது முள்ளாய் உறுத்திக்கொண்டிருக்கும்.
அவை எதுவும் ஏற்படாமல் இருக்க இதில் தானே முன்னிறங்கவேண்டும் என்ற முடிவுடன் எழுந்துகொண்டான்.
ஏற்கனவே எடுத்த முடிவு தான். நேரில் சென்று சுபஷ்வினியின் வீட்டினரிடம் பேசவேண்டும் என்று.
இனியும் தள்ளி போட மனமில்லை. முதலில் சுபஷ்வினியை தன் பார்வை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்.
அதற்கு இதுவும் ஒரு வாய்ப்பாகிவிட்டது. காஞ்சனாவின் வரவிற்கு முன் அங்கிருப்பவர்களை பேசி சரிசெய்ய வேண்டும் என்று எண்ணியபடி சுபஷ்வினியின் தாய்மாமா வீரவேந்தருக்கு அழைப்பு விடுத்தான்.
“யாரது?…” என வீரவேந்தர் கேட்டதும்,
“நான் நெடுஞ்செழியன்….” என்றான் அவன்.
“தம்பி நீங்களா? சௌக்கியங்களா?…” என எடுத்த எடுப்பிலேயே சந்தோஷமும், விசாரிப்புமாக அவனின் மனதில் பாலை வார்த்தார்.
பின்னே, சுபஷ்வினி இந்த இரண்டு வருடங்களாக வரும் வரன்களை எல்லாம் என்னவென்று கூட கேட்காமல் திருமணமே வேண்டாம் என்பதில் ஸ்திரமாக இருக்க காரணமானவன் ஆகிற்றே.
எப்போதடா இப்படி ஒரு நாள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு நெடுஞ்செழியனின் அழைப்பு அத்தனை மகிழ்ச்சியை தந்தது.
ஆனாலும் உள்ளுக்குள் ஒரு அச்சம், அவனின் அழைப்பு திருமண விஷயமின்றி வேறு ஏதேனுமாக இருந்தால்?
அப்படி இருக்க கூடாதென அதற்குள் ஆயிரமாயிரம் வேண்டுதல்களை வைத்துவிட்டார் கடவுளிடம்.
ஸ்ருதியின் மூலம் அவருக்கு ஏற்கனவே அவர்கள் விஷயம் தெரிந்திருக்க வீட்டில் சிங்கமுத்துவிடம் மூச்சு காட்டவில்லை வீரவேந்தர்.
ஆனாலும் அவ்வப்போது குத்திக்கொண்டே இருப்பார், ‘பிள்ளையின் வாழ்க்கையை விட என்ன உங்களுக்கு முக்கியம்?’ என.
‘சுபஷ்வினியின் மனதில் நெடுஞ்செழியன் தான் இருக்கிறான், அதனால் தான் வேறு வரன்களை மறுக்கிறாள் அவள்’ என அவ்வப்போது காதில் போட்டுவைக்க சமீபகாலமாக சிங்கமுத்துவிற்கு அது ஒரு யோசனையை கொடுத்திருந்தது.
இந்த சமயத்தில் நெடுஞ்செழியன் வீட்டிலிருந்து வந்து கேட்டால் திருமணம் நடந்துவிடும் சாத்தியக்கூறுகள் உள்ளதே என நினைக்க நினைப்பை மெய்ப்பிப்பதை போல அவனின் அழைப்பு.
“ஹலோ கேட்கறீங்களா?…” நெடுஞ்செழியன் மீண்டும் அவர் இணைப்பில் உள்ளார என சந்தேகமாக கேட்க,
“ஓகே, நான் நாளைக்கு காலைல காரைக்கால் வரேன். அஷ்வினி வீட்டுல பேசனும். நீங்களும் அந்த நேரம் அங்க இருந்தா நல்லா இருக்கும்…”
“என்னங்க தம்பி இப்படி சொல்லிட்டீங்க? நீங்க வரீங்கன்னு தெரிஞ்சாலே நான் அங்க வந்திருவேன். நீங்க இவ்வளவு சொல்லனுமா?…” என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனார்.
“இப்போதைக்கு நான் மட்டும் தான் வரேன்….”
“மகராசனா வாங்க சாமி. வாங்க…” என்றார் வீரவேந்தர்.
“சரி வைக்கறேன்…” என பேசிவிட்டு வைத்தவன் சுபஷ்வினி எங்கே என்பதை கண்காணிப்பில் கவனிக்க எங்கோ பயணிப்பதை காண்பித்தது.
அவளின் எண்ணிற்கு அழைக்க சுபஷ்வினி எடுக்கவில்லை. மீண்டும் அழைத்தவன் அவள் செல்லும் திசையை பார்க்க,
“ஹலோ, நாங்க காரைக்கால் போய்ட்டிருக்கோம். அஷ் தூங்கறா…” என்று கூறியது ஸ்ருதியே.
“பத்திரம், நானும் நாளைக்கு வரேன்..” என சொல்லி வைத்துவிட்டவன் மறுநாள் காலை காரைக்கால் நோக்கி பயணமானான்.
அவன் அத்திசை கிளம்பியிருக்க ஹைதராபாத் விமான நிலையத்தில் நிகிதா வெங்கடேசனுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
சென்னைக்கு அவளின் பயணம் உறுதியாகியிருந்தது ஒரே நாளில். வெங்கடேசன் மறுக்கமுடியாமல் அழைத்துக்கொண்டு வந்திருக்க அவருடன் விமானம் ஏற முன்னே நடந்து சென்றவள் தடுமாறி கீழே விழுந்தாள்.
“டாடி…” என்று விழுந்த பெண்ணை கைகொடுத்து தூக்கியவன்,
“ஸாரிம்மா, கவனிக்கலை…” என்றான்.
மன்னிப்பாய் சொல்லி அவளை நிமிர்ந்து பார்த்த கதிர் ஒருகணம் யோசித்து நிகிதாவை அடையாளம் கண்டு அதிர்ந்து பார்த்தான்.
“இட்ஸ் ஓகே ண்ணா…” என அவனிடமிருந்து தன் கையை விலக்கிக்கொண்டாள் நிகிதா.
“என்னாச்சும்மா…” என வெங்கடேசன் பதற,
“ஒண்ணுமில்லை டாடி. நாம போகலாம்…” என்றவள் தந்தையுடன் விலகி நடக்க கதிர் மீண்டும் அவர்கள் செல்லும் திசையை கவனித்தான்.
“ஒருவேளை கேஸ் குடுத்தது இந்த பொண்ணா இருக்குமோ?…” என தன்னைப்போல முணுமுணுத்தவன் ஜெய்யின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.