தம்ளரில் பாலை ஆற்றியபடி ராதிகா மகளுக்கு கொண்டுவர அதனை வாங்கிய சுபஷ்வினி,
“ம்மா பிடி பிடி. கீழே போட்டுட போறேன். கை நடுங்குது…” என கத்தினாள்.
“எல்லாம் நேரங்காலம். என்னத்த சொல்ல? இதுவே கல்யாணமாகியிருந்தா புருஷன் குடும்பம்ன்னு இருந்திருப்பா என் பொண்ணு. விட்டாரா இந்த மனுஷன்?…” என சிங்கமுத்துவை போட்டு காய்ச்சி எடுத்துவிட்டார்.
சுபஷ்வினி காரைக்கால் வந்து சேர்ந்ததில் இருந்து விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவர் தான்.
தெளிந்து எழுந்ததில் இருந்து இதே பேச்சு தான் அவருக்கு. கைகள் நடுங்க முகமே வெளிறி ரச்சப்பசையின்றி வந்திருக்கும் மகளை காண காண வயிறு பற்றி எரிந்தது அவருக்கு.
“என் பொண்ணுக்கு இப்படியா நடக்கனும்? எம்புள்ளைக்கு அந்த தண்ணிய குடுத்தவன் கையில புத்து வைக்க. பாடையில போக. நடுவீதில தான் அவனுக்கு சாவு….” என ஓயாது வசைமாரி பொழிந்துகொண்டே இருந்தார்.
அதற்கு ஈடாக சிங்கமுத்துவையும் தாளித்து தலையால் தண்ணீர் குடிக்க வைத்துவிட்டார்.
பார்க்கவே பரிதாபமாக அமர்ந்திருந்தார் சிங்கமுத்து. ஆனாலும் மகளின் மீது அத்தனை கோபம்.
“உன்னை யார் அங்க போக சொன்னா சுபா? தேவையில்லாத சிக்கல் தானே? இப்ப பாரு எப்படி இருக்கன்னு?…” என சிங்கமுத்து பேச,
“அவக்கிட்ட எதாச்சும் பேசினீங்க, நான் மனுஷியா இருக்க மாட்டேன். அவளுக்கு என்ன நிம்மதி இருக்குன்றேன். புடிச்ச மாதிரி வாழ முடியுதா அவளால? பேசறாரு பேச்சு, துப்புக்கெட்டத்தனமா…” என வரிந்துகட்டிவிட்டார்.
“நீங்க செத்த கம்முன்னிருங்களேன்…” என வீரவேந்தர் சிங்கமுத்துவை அமைதிப்படுத்திவிட்டு,
“எத்தா நீ உள்ள போய் செத்த சாஞ்சிக்க…” என்று சொல்ல சுபஷ்வினி உள்ளே வந்துவிட்டாள்.
“இந்த பால நான் குடுத்துக்கறேன். நீ போயி சோலிய பாரு. எப்ப பாரு சண்டையை கூட்டிக்கிட்டு…” என்றவர் சுபஷ்வினியின் அறைக்குள் நுழைந்தார்.
“நீங்க முதல்ல சொல்லுங்க மாமா, நானும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்….” என்று பீடிகை போட்டாள்.
“சரி மொத பால குடி. புடிச்சு குடிப்பியா?…” என அவளின் கையில் திணிக்க சில நொடிகள் தான் பிடிக்க முடிந்தது. விரலோடு சேர்ந்து மொத்த கையுமே நடுங்கியது.
“ஆத்தா அவனுங்க யாருன்னு மட்டும் தெரியட்டும், செதில் செதிலா செம்மி உப்புல கரைச்சிடறேன் பாரு…” என மருமகளின் நடுக்கத்தை பார்த்து கொதித்தவர்,
“நீ புடி சாமி. நான் இருக்கேன்ல…” என்று அவளின் இரு கரங்களுக்குள் தம்ளரை கொடுத்து அவளின் கையை பிடித்துக்கொண்டார் வீரவேந்தர்.
“முடியும்த்தா. உன்னால ஆகாததா என்ன? புடி புடி. இப்படியே போட்டுடுவோம்ன்னு நினைக்காம போடக்கூடாதுன்னு பால் தம்ளர இறுக்கி புடி. உன்னோட மனசோட பலத்த அதுல காட்டு…” என்று சொல்லியவர் பாதி பால் அவள் அருந்தும் வரை மெல்ல மெல்ல தன் கைகளை கீழே இறக்கிக்கொண்டே வந்தார்.
எப்போது கைகளை விலக்கினார் என தெரியாமல் சுபஷ்வினி தானாகவே மீதி பாலையும் அருந்தி முடித்து அவரிடம் தம்ளரை நீட்டினாள்.
“எம்மருமவளா கொக்கா? அந்த மருந்து உன்னைய என்ன செஞ்சிரும்? இப்ப அது உன்கிட்ட தோத்து போயிருச்சு…” என்று சொல்ல,
“அதானே? மாமா என் கூட இருந்தா எந்த மருந்தும் என்னை எதுவும் செய்ய முடியாது. என்ன மாமா?…” என சுபஷ்வினியும் லேசாய் கண்கள் கலங்கி சொல்லவும் அத்தனை சந்தோஷமாய் இருந்தது வீரவேந்தருக்கு.
இடையில் இதனை வந்து ராதிகா எட்டி பார்த்துவிட்டு தான் சென்றார். சிங்கமுத்து மனைவிக்கு பயந்தே அங்கே சென்று பார்க்கவில்லை.
“ஸ்ருதி புள்ள தான் அனத்திட்டே கிளம்பி போயிருக்கு. பாவம் கை புள்ளையை வச்சிட்டு இங்கிட்டும் அங்கிட்டுமா அல்லல் படுது. இந்ததடவை எப்படியாச்சும் வீட்டுல பேசி கல்யாணத்துக்கு முடிவு பண்ண வைங்கன்னு சொல்லிட்டு போயிருக்கு…” என்றவர்,
“மாப்பிள்ளை தம்பி போன் போட்டார் சுபா…” என்றார் தங்கை மகளிடம் வீரவேந்தர்.
“என்ன சொன்னாங்க மாமா? இன்னும் அதை நீங்க சொல்லவே இல்லை…” என சுபஷ்வினி கேட்க,
“நாளைக்கு காலையில இங்க இருப்பாராம். போன் பண்ணினார் காலையில. நான் வீட்டுக்கு வந்து சொல்லுவோம்ன்னு இருந்தேன்…” என்றதும் சுபஷ்வினி தலையில் கைவைத்தாள்.
“என்னம்மா கல்யாண விஷயமா பேச தானே வரார். அதுக்கேன்?…” வீரவேந்தர் கேட்க,
“அவங்க கல்யாணத்தை பத்தி மட்டும் பேச வரலை மாமா…” என்றவள் வெளியே எட்டி பார்த்தார்.
“அம்மாவும், அப்பாவும் எங்க?…” என கேட்க,
“வெளில தான் இருப்பாங்க. உங்கம்மா இந்நேரம் உங்கக்காவுக்கு போன் பண்ணிருப்பா. அவளும் வேற எங்க புலம்புவா? நீ சொல்லு, என்ன விஷயம்?…” என்றார் வேந்தர்.
“ப்ச், மாமா இப்ப இந்த பிரச்சனை நடந்ததுல, அந்த ரெஸார்ட் மேல நான் கம்ப்ளைன்ட் பண்ணியிருக்கேன்…” என்று சட்டென சொல்லிவிட வேந்தரின் விழிகள் அகன்றது.
“என்ன காரியம் பண்ணிருக்க சுபா?…” என அவர் அதிர்ந்து பார்த்தார்.
“தப்பா எதுவும் பண்ணலையே. நான் என்ன பண்ணனும்ன்னு நினைச்சேனோ அதை தான் செஞ்சிருக்கேன்…” என்று சுபஷ்வினி அப்போதும் தைரியமாக சொல்ல,
“உங்கம்மாவுக்கு, அப்பாவுக்கு தெரிஞ்சது அவ்வளோ தான்…” என்று சொல்லியவர்,
“ஆமா, இது மாப்பிள்ளைக்கு தெரியுமா?…” என கேட்டார்.
“கம்ப்ளைண்ட் குடுத்ததே அவர்கிட்ட தான். பின்ன இப்படி நாசம் பன்றவங்களை சும்மா விட சொல்றீங்களா? தெரிஞ்சே எப்படியும் போகட்டும்ன்னு விட்டுட்டு வர சொல்றீங்களா மாமா?…” என கேட்க அவளுக்கு என்ன பதிலை சொல்வதென தெரியாமல் விழித்தார்.
“செழியன் அதையும் சொல்ல தான் வருவாங்க. சொல்லாம இருக்கமாட்டாங்க…” என சுபஷ்வினி சொல்ல,
“இப்ப என்ன செய்யட்டும் நான்?…” என்றார் அவளிடம்.
“எதுவும் செய்யவேண்டாம். உங்களுக்கு நான் செஞ்சதுல தப்புன்னு தோணுதா மாமா?…” என அஷ்வினி கேட்க,
“எனக்கே அவனுங்களை வெட்டி வீசனும்ன்னு வெறியாவுது. தப்பில்லை தான். ஆனாலும் எங்களுக்கு நீ உசத்தில ஆத்தா. அதான்…” என தன் நெஞ்சை நீவிக்கொண்டவர் முகம் கலக்கமாக இருந்தது.
“எனக்கு எதுவும் ஆகிரும்ன்னு நினைக்கறீங்களா மாமா?…” என மெல்லிய சிரிப்புடன் அவரிடம் கேட்க,
“நான் உசுரோட இருக்கறப்ப அப்படி ஒன்னு நடந்திருமா? என்னைய மீறி எவன் என்ன செய்யறான்னு பார்க்கறேன்…” என்றார் வேந்தர் வேகத்துடன்.
“இதுதான் மாமான்றது…” என அவரின் மீசையை பிடித்து ஆட்டியவள்,
“நாளைக்கு சமாளிச்சிடலாம் தான். இருந்தாலும் உங்க தங்கச்சி கண்ணீரை பார்த்து நீங்க அந்த பக்கம் சாய்ஞ்சிட கூடாது…” சுபஷ்வினி எச்சரிக்கையாய் சொல்ல,
“முதல்ல உங்கக்காக்கு ஒரு போனை போட்டு இங்க வர சொல்லிடறேன். காலையில அவளும் இருந்தா செத்த நிம்மதியா இருக்கும். இவங்களை சமாளிக்க முடியும்…” என்று எழுந்துகொண்டார்.
“ம்ஹூம், அதெல்லாம் வேண்டாம்…” என சுபஷ்வினி மறுத்தாள்.
“சரி, எதையும் நினைச்சு கலங்காம உறங்கு ஆத்தா. மாமா இருக்கேன்ல…” என சொல்லிவிடுட் அவர் வெளியேற ஸ்ருதி அழைத்துவிட்டாள்.
அவளிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தவள் நெடுஞ்செழியன் வரும் விஷயத்தை சொல்ல அத்தனை சந்தோஷம் ஸ்ருதிக்கு.
இரவெல்லாம் உறக்கம் வராது என நினைத்தவள் மாத்திரையின் உபயத்தால் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.
மறுநாள் காலை பரபரப்பாக இருந்தது. வேந்தர் சுபஷ்வினி உறங்கிய பின்னர் ராதிகா, சிங்கமுத்துவை அழைத்து நெடுஞ்செழியன் வருவதை பற்றி சொல்ல,
“இதுக்கு நான் ஒத்துக்கவே முடியாது…” என வேதாளம் முருங்கை மரம் ஏறியது.
“இங்க பாருங்க, இப்படியே விட்டா நம்ம புள்ளை காலத்துக்கும் தனியா இருக்க வேண்டியது தான். மாப்பிள்ளையும் சும்மா இல்லை. ஒன்னு பிரச்சனை பண்ணி கல்யாணம் செஞ்சுக்க பார்ப்பார். இல்லைன்னா இப்படியே வாழ்க்கையை ஓட்டுவார். ஆனா ரெண்டாவது ரகமில்லைன்னு தோணுது…” என்றார்.
வீரவேந்தர் சொல்லவும் சிங்கமுத்துவின் முகம் சிறுத்துவிட்டது. ராதிகாவிற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
“அதுக்கென்ன? நான் முன்ன நின்னு என் மகளுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கறேன்..” என்றார் அவர்.
“என்னை மீறி பண்ணிடுவியா நீ?…” என சிங்கமுத்து எகிற,
“ஒரு வயசுக்கு மேல பிள்ளைங்களை வாழ வச்சு அதை பார்த்து நிம்மதியா கண்ணை மூடனும். எனக்கு அப்படி ஒரு சாவு தான் வேணும். ஐயோ என் பொண்ணு தனிமரமா நிக்கிறாளேன்னு மருகி சாவ சொல்றீங்களா?…” என அதற்கு மேல் எகிறினார்.
“சண்டை போடாம இருக்கீங்களா?…” என்று அவர்கள் இருவரையும் அதட்டிய வேந்தர்,
“இப்ப நம்ம சுபாவுக்கு கல்யாணத்தோட பாதுகாப்பும் அவசியம். அதுக்காகவும் தான் சொல்றேன்…” என்றவர் சுபஷ்வினி புகார் கொடுத்துவிட்டு வந்திருப்பதை பற்றியும் சொல்ல தலையில் அடித்துக்கொண்டார் சிங்கமுத்து.
“என்னண்ணே சொல்றீங்க?…” என ராதிகா அதிர்ந்து கேட்க,
“ஆமாம்மா…” என இரவு சுபஷ்வினி பேசியதை எல்லாம் முழுவதும் கூற,
“என் பொண்ணுக்கு போராட்டமில்லாத நிம்மதியான வாழ்க்கை வேணும்ன்னு நினைச்சு தான் இந்த வரனையே வேண்டாம்ன்னு சொன்னேன். எல்லாம் என்னால வந்தது நான் தான் அந்த வரனை சரின்னு சொன்னேன். இப்ப ஒத்துவராதுன்னு விலக நினைச்சாலும்…”
சிங்கமுத்து புலம்பிக்கொண்டே இருந்து டிவியில் பார்த்ததை நினைத்து பயந்து ஆற்றாற்று போனார்.
“நீயும் பாத்தேல வீரா, எம்புட்டு போலீசு? அத்தனை பேருக்கு மத்தியில அவனுங்க இத்தனை வருஷமா இந்த சோலியை பார்த்திருக்கானுங்கன்னா எம்புட்டு நெஞ்சுரம் இருக்கனும்? இத்தனை பேரால உடனே எல்லாரையும் புடிக்க முடிஞ்சதா? இப்ப இவ என்னடான்னா அதுக்குள்ளே தலைய குடுத்துட்டு வந்திருக்கா…” என்று பேசிக்கொண்டே இருந்தார் சிங்கமுத்து.
காலை வரை இந்த பேச்சுக்கள் தொடர அங்கே ஒருவரும் இம்மியளவும் உறங்கவில்லை.
கடனே என காலை காபி, டிபன் முடிந்திருந்தது. வேந்தர் சுபஷ்வினியிடம் சொல்லிவிட்டார் விஷயத்தை போட்டுடைத்தாகிற்று என்று.
சுபஷ்வினி வாயை திறக்கவில்லை. முதலில் செழியன் வரட்டும். அதன் பின்னர் பேசிக்கொள்ளலாம் என மௌனம் சாதித்தாள்.
மகள் எதுவும் பேசக்கூடும், அதன் பின் பதிலுக்கு பேசலாம் என நினைத்திருந்த சிங்கமுத்துவிற்கு ஏமாற்றம் தான்.
காலை உணவு முடிந்திருக்க பத்து நிமிடத்திற்குள் நெடுஞ்செழியன் வந்துவிட்டான் அவர்களின் இல்லத்திற்குள்.
முன் தாழ்வாரத்தில் லேசாய் தலையை குனிந்தபடி அவனின் உயரத்தை குறைத்துக்கொண்டு வந்து நின்றான்.