வேதசௌந்தரி மகனுக்கு அழைக்க மாமியார் வீட்டில் சங்கீதாவுடன் இருந்தவன் தாயிடமிருந்து அழைப்பு வந்ததும் மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பி வந்துவிட்டான்.
வீட்டில் சுரேந்திரன் இல்லை. அவர் நீதிமன்றம் சென்றிருக்க வேதசௌந்தரி மாடியில் இருந்தார்.
“நீ உக்கார் கீதா, நான் போய் என்னன்னு பார்த்துட்டு வரேன்…” என மாடிக்கு சென்றான்.
அதற்குள் அங்கிருந்த அறைக்குள் இருந்து வெளியே வேதா வந்துவிட என்னவென கேட்கும் முன் அடுத்ததாய் வெங்கடேசனும், நிகிதாவும் வந்தனர்.
“ஹேய் வாலு, நீ எப்ப வந்த?…” என ஆச்சரியமும், சந்தோஷமுமாக தனா கேட்டு நிகிதாவை இழுத்து தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“ம்மா, அதான் எதுவும் சொல்லாம கிளம்பி வான்னு மட்டும் சொன்னீங்களா நீங்க? நான் என்னவோன்னு நினைச்சுட்டேன். உங்களுக்கு எதுவும் முடியலையோன்னு…” என்று தாயிடமும் சொல்ல,
“நான் சொன்னேன் தனா. வேதா தான் கேட்கலை. மாமனார் மாமியாருக்கு கல்யாணநாள்ன்னு போன பிள்ளையை கூப்பிட வேண்டாம்ன்னு…” என்றார் வெங்கடேசனும்.
“ஸாரி மாமா, உங்களை கேட்கவே இல்லை பாருங்களேன். எப்படி இருக்கீங்க மாமா?…” என்று கேட்ட தனா,
“நீங்க வந்திருந்தும் அம்மா என்னை கூப்பிடாம இருந்திருந்தா தான் கோபப்பட்டிருப்பேன். எவ்வளோ நாளாச்சு இந்த பெரியமனுஷியை பார்த்து? நானே ஊருக்கு வந்து பார்க்கனும்னு நினைச்சிட்டிருந்தேன்…” என முகமெல்லாம் சிரிப்புடன் அவன்.
“பொண்ணா? முடிவே பண்ணிட்டியா நீ?…” என தனாவும் அவள் அருகில் அமர,
“பின்ன, பொண்ணு தான். அதுவும் வேதா ஆன்ட்டி மாதிரியே கெத்தா…” என்று நிகிதா சொல்லவும்,
“ஏன் என்னை மாதிரி எங்கப்பாவை மாதிரி எல்லாம் மாஸா ஒரு பையன் வந்தா வேண்டாமா?…” தனாவும் அவளுடன் சரிக்கு சரி வம்புக்கு நின்றான்.
“கண்டிப்பா வேண்டாம். இப்ப எல்லாம் வேதாக்கள் தான் இங்க அதிகம் தேவை….” என்று லேசாய் இறுகவிருந்த முகத்தை மாற்றியபடி நிகிதா சொல்லவும்,
“பார்டா, புள்ளை பொறுப்பா பேசறதை…” என அவளின் கன்னம் பிடித்து கிள்ளியவன்,
“கேட்டுக்கோ கீதா…” என மனைவியிடம் காண்பித்தான்.
“அவ சொல்றதும் சரி தான். பொண்ணா இருந்தா மட்டும் என்னவாம்? இன்னுமே சந்தோஷம் தானே?…” சங்கீதாவும் அவனிடம் சிரிப்போடு கூறினாள்.
மூவரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்தபடி வேதாவும், வெங்கடேசனும் இறங்கி வந்தனர்.
நிகிதாவின் முகத்திலிருந்த புன்னகையை பார்த்த இருவருக்கும் நிம்மதியில் நெஞ்சம் விம்மியது.
“ஆன்ட்டி நீங்க சொல்லுங்க, தனா மாமாவுக்கு பொண்ணு தானே பிறக்கும். எனக்கு அப்படித்தான் தோணுது. ஆனா இல்லைன்றாங்க…” என நிகிதா வேதாவையும் பேச்சில் இழுத்தாள்.
பனித்து கிடந்த தன் விழிகளை சிமிட்டிக்கொண்டவர் தலையசைத்தபடி வந்தமர்ந்தார் அவளருகே.
“ஆமாடா நிகிம்மா, என் பொண்ணு சொன்னா நடக்காம போகுமா? தனாவுக்கும் பொண்ணு தான்….” என அவளின் கன்னம் கிள்ள,
“என்ன மாமா இது? நிகிக்கு கன்னத்தை பிடிக்க கூட சதை இல்லை. எப்படி ஒட்டிப்போயிருக்கு? ஒழுங்கா சாப்பிடவே இல்லையா இவ? என்ன கவனிச்சீங்க?…” என தனா வெங்கடேசனிடம் கோபமாய் கேட்டான்.
“நீயே அவக்கிட்ட கேளுப்பா. எவ்வளோ சொல்ல நானும்? சரியா சாப்பிடறதே இல்லை. இப்பவும் பாரு உன்னை வர சொல்லியிருக்கேன்னு சொன்னதுல இருந்து சாப்பிடாம வெய்ட் பன்றா…” என அவர் கூற,
“வாட்?…” என எழுந்தவன் நிகிதாவின் தலையில் நறுக்கென்று குட்டு வைத்தான்.
“இரு வரேன்…” என உள்ளே சென்றவன் திரும்பி வருகையில் ஒரு கையில் உணவு தட்டும், இன்னொன்றில் பழச்சாறும் இருந்தது.
“இது என்னோட பொண்டாட்டிக்கு….” என பழச்சாறை சங்கீதாவின் கையில் திணித்தான்.
“இது என் குட்டிப்பொண்ணுக்கு…” என நிகிதாவின் அருகில் அமர்ந்துகொண்டான் தனா.
லேசாய் குழிந்திருந்த தட்டில் சூடாய் குழைந்த சாதமும் அதனை மூழ்கடித்து பருப்பு ரசமும் தொட்டுக்கொள்ள தக்காளி கூட்டும், அவியலும் இருந்தது.
எல்லாம் அவளுக்கு பிடித்த உணவுகள். வேதா அவள் வருவதற்காகவே செய்ய சொல்லியிருந்தார்.
“மணியை பாரு, நாலுமணி ஆகிடுச்சு. சாப்பிடாம இருக்க, ராஸ்கல். எல்லாம் செல்லம்…” என்று திட்டியபடி அவளுக்கு ஊட்டிக்கொண்டிருந்தான் தனா.
“கீதாக்கா இதெல்லாம் என்னன்னு கேட்கமாட்டீங்களா? பாருங்க இந்த மாமாவை எப்படி திட்டறாங்கன்னு…” என நிகிதா அவளிடம் சீண்டிவிட,
“நான் வரலைப்பா உங்க ரெண்டுபேருக்குள்ள. என்னை விடுங்க…” என சங்கீதாவும் புன்னகையுடன் கையை கூப்பி.
“உன்னை கேட்க ஆளில்லாம ரொம்ப சேட்டையாகிருச்சு. இனி நீ எங்கயும் போக வேண்டாம். இங்கயே இரு. நான் திரும்ப உன்னை அனுப்ப போறதில்லை…” என்றவன்,
“மாமா, நீங்க வி.ஆர்.எஸ் வாங்குவீங்களோ, இல்லை இங்க ட்ரான்ஸ்பர் வாங்குவீங்களோ எனக்கு தெரியாது. இனி நிகிக்குட்டி இங்க இருந்து தான் காலேஜ் போவா…” என அவரிடம் கட்டளையாக.
“எங்கப்பா என்னை கேட்காம எதுவும் சொல்லமாட்டாங்களே…” நிகிதா சுடிதாரின் காலரை தூக்கிவிட்டாள்.
“ஆனா நிகிதா என் பேச்சை மீறமாட்டாளே. நான் சொன்னா கேட்பா. என்னம்மா?…” என்றவனின் அன்பில் இன்னுமே உள்ளுக்குள் உடைந்துகொண்டிருந்தாள் நிகிதா.
தான் தேடிய நேரத்தில் இவ்வுறவுகள் அருகில் இல்லாது போய்விட்டனரே என கண்கள் கலங்கி போனது.
அன்று வேதசௌந்தரி மட்டும் நேரில் வரவில்லை என்றிருந்தால் முதலில் தனாவுக்கு தான் அவள் சொல்லியிருப்பாள் நடந்த விஷயத்தை.
இப்போது அவரின் வார்த்தையை மீறி யாரிடமும் சொல்ல முடியவில்லை. தனாவிடம் சொல்லி அழவேண்டும் போலிருக்க லேசாய் விம்மிவிட்டாள் நிகிதா.
“என்ன நிகி, சென்டிமென்டா?…” தனா கிண்டலாய் கேட்க,
“ம்ஹூம், காரம் அதிகம். அதான்…” என்று சொல்லியவள் அவனின் தோளில் சாய்ந்து இரு கைகளால் கட்டிக்கொள்ள ஆதுரமாய் அணைத்துக்கொண்டான்.
“என்னை ரொம்ப மிஸ் பண்ணியிருக்கா…” என வெங்கடேசனிடமும் தனா சொல்ல,
ஏற்கனவே நிகிதா அந்நிகழ்வின் பின்னர் கல்லூரிக்கு செல்லாமல் இருந்திருக்க இந்த வருடம் படிக்க செல்ல வேண்டாம் என்றிருந்தார் வெங்கடேசன்.
நிகிதாவை தனியே விட அவருக்கு சுத்தமாய் மனமில்லை. அத்தனை பயம். தானில்லாத நேரம் வேறு எதையும் மகள் யோசித்துவிட்டால்?
ஒவ்வொரு நிமிடமும் செத்துக்கொண்டிருந்தார். இப்போதும் கூட அதற்காகவே இங்கே அழைத்து வந்துவிட்டார்.
இனி என்ன வேண்டும்? தேவைக்கு அதிகமாகவே சொத்துக்கள் இருக்கிறது. சேமிப்பிலும் கணிசமான தொகை இருக்க மகளை படிக்க வைத்து கரை சேர்த்து, அதன் பின்னரும் கூட அவள் வளமான வாழ்க்கைக்கும் தாராளம்.
‘கரை சேர்த்து’ இதனை நினைக்கையில் பெரிதாய் அவர் துவண்டு தான் போனார். அவளின் எதிர்காலம் வெகுவாய் பயமுறுத்தியது வெங்கடேசனை.
“ஏன் நிகி வாழ்க்கைக்கு என்ன? அவ இப்பவும் அதே நிகிதா தான். எதுவும் மாறலை. நிகிதா அவ விருப்பப்படி படிக்கட்டும். அவளுக்குன்னு இனி தனியாவா வாழ்க்கை உருவாக எதுவும் போகுது? அவ பிறந்தப்பவே தீர்மானிக்கப்பட்டவை எல்லாம் நடந்து தான் தீரும். அவளுக்கானவையும் அவளை வந்து சேரும். அவளுக்கானவனும் வருவான்…” என்றார் வேதா அன்றொருநாள்.
அந்த வார்த்தைகள் தான் அவரின் உயிரை நம்பிக்கையுடன் பிடித்து வைத்திருக்கிறது.
எப்போதும் ஒருவித அமைதியிலே இருக்கும் அந்த இல்லம் இப்போது பேச்சு சிரிப்பென கலகலப்பாய் இருந்தது.
வெகுநேரம் அமர முடியாமல் வேதசௌந்தரி லேசாய் சோர்ந்து பின்னால் சாய்ந்துகொண்டார் அந்த இருக்கையில்.
“ம்மா, நீங்க உள்ள போய் ரெஸ்ட் எடுங்க…” என தனா சொல்ல,
“நீங்க போங்கத்தை. இனி நான் பார்த்துக்கறேன் நிகியை…” என்றாள் சங்கீதா.
“ஹ்ம்ம், சரிம்மா. தனா நீ கட்சி ஆபீஸ் வரை போய்ட்டு வா. நாளைக்கு ஒரு குழு மீட்டிங் இருக்கு. அதுக்கு ஏற்பாட்டை பார்க்கனும்…” என்றார் வேதா.
“அதை எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க அதை எதையும் நினைக்காம போய் ரெஸ்ட் எடுங்க. எப்ப பாரு கட்சி, மக்கள்ன்னு உங்களை கவனிக்கறதே இல்லை…” என்று அவன் சொல்ல,
“அதை கவனிக்கறேன்னு அடுத்தவாரம் சங்கீதா வளைகாப்பு வேலையை மறந்திடாத. நாளைக்கு வீட்டுக்கு புடவை வந்திரும். காப்பு என்ன டிஸைன் வேணும்ன்னு கீதாட்ட கேட்டு பார்த்து வாங்கு….” என்றவர்,
“நீங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்கண்ணா…” என்று வெங்கடேசனிடம் சொல்லி சென்றார்.
அதன் பின்னர் வெங்கடேசன் எழுந்து முன்பக்கம் சென்று அமர்ந்துகொண்டார். ஆனாலும் பார்வை எல்லாம் மகளின் முகத்தில் தான்.
இந்த சிறிய மலர்ச்சி கூட இன்றி இத்தனை நாள் அவள் பட்ட வேதனைகள் நினைக்கையில் இதயத்தினுள் ரத்தம் கசிய வைத்தது.
என்னதான் இதை பார்த்து நிம்மதியாக இருந்தாலும் வழக்கின் பொழுது அங்கே கேட்க போகும் கேள்விகளுக்கு எப்படி மகள் பதில் சொல்வாளோ என நினைத்து நினைத்து மருகிக்கொண்டிருந்தார் அவர்.
——————————–
உர்ரென்ற பார்வையுடன் ஸ்ருதி நெடுஞ்செழியனை முறைக்க சுபஷ்வினி இதற்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை போல வேடிக்கை பார்த்திருந்தாள்.
வீரவேந்தர் மனைவி சாலாட்சியுடன் சுபஷ்வினியை அழைத்துக்கொண்டு சென்னை வந்திருந்தார்.
ஸ்ருதியின் மூலமே அருகில் ஒரு வீட்டை எடுத்திருந்தனர் தங்குவதற்கு. வீரவேந்தருக்கு ஹோட்டலில் தங்குவதில் சுத்தமாய் விருப்பமில்லை.
அதிலும் நெடுஞ்செழியன் எச்சரிக்கைகள் கூடுதலாகவே இருக்க அவர் அதற்கு மேல் கவனமாய் இருக்க நினைத்தார்.
அதனைக்கொண்டு வெளியில் தெரிந்த பாதுகாப்பான பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டார்.
ஸ்ருதியும், பார்த்திவ்வும் கூட அவ்வளவு சொல்லியிருந்தனர் தங்களுடன் தங்கும்படி. வீரவேந்தர் மறுத்துவிட்டார்.
“என்னத்துக்கு கண்ணு? இதுதான் சரியா இருக்கும். இதுவும் எம்புட்டு நாளைக்கு? சுபாவுக்கு கல்யாணமாகிடுச்சுன்னா அப்பறம் என்னத்துக்கு இந்த வீடு? வாரப்ப ஒவ்வீட்டுல தங்கிக்குவேன்…” என சொல்லியிருந்தார்.
“இனிமேட்டு சுபாவ நானே வேலைக்கு கூட்டி போயி கூட்டி வாரேன். ஊரு வேலை எல்லாத்தையும் பயலுவட்ட தள்ளிட்டேன். அவங்க பாத்துப்பாங்க. எனக்கு எம்புள்ளைய பாக்குதது தான மொத சோலி…” என்றார் அவர்.
அவரின் பேச்சை மறுக்க முடியுமா அங்கே? வீட்டிற்கு சென்றதும் அன்று மாலை நெடுஞ்செழியன் வந்து பார்ப்பதாக சொல்லியிருந்தான்.
சொன்னது போல வந்துவிட்டவனை ஏகத்திற்கும் முறைத்துக்கொண்டிருந்தாள் ஸ்ருதி அன்று தன்னிடம் எதையும் சொல்லவில்லையே என.
‘இவனை பத்தி தான் தெரியுமே?’ என நினைத்தவள் இவன் என்னதான் சொல்லி வருகிறான் என பார்ப்போமென்று வாயை திறந்தாள் இல்லை.
“இந்த பொண்ணு கொஞ்சம் ஓகே தான். ஆனாலும் பெரியமனசு பண்ணி சரின்னு சொல்றேன்…” என வழக்கம் போல நெடுஞ்செழியன் வம்பிழுக்க சுபஷ்வினி ‘அய்யோடா’ என்று முறைத்தாள்.
“உங்க பெரியமனசு இங்க தேவையில்லை ஸார்…” என ஸ்ருதியும் விடுவதாய் இல்லை.
“தேவைப்பட்டவங்க ஏற்கனவே எடுத்துட்டாங்களே? குடுத்தத திரும்ப வாங்கற ஐடியா எனக்கு எப்பவும் இருந்ததில்லை…” என சரிக்கு சரி பேச ஸ்ருதி நமுட்டு சிரிப்புடன் சுபஷ்வினியை பார்த்தாள்.
அவளை பேச வைக்கத்தான் இருவரும் கூட்டணி போட்டுக்கொண்டு பேச சுபஷ்வினி அசைந்து கொடுக்கவில்லை.
‘வாயை திறக்கறாளா பாரேன்?’ என பல்லை கடித்தவன் ஸ்ருதியை பார்த்தான்.