சட்டென நெஞ்சுக்குள் சிறு கலவரம் பந்தாய் அவனை சுழற்ற தொண்டைக்குழி தவிப்பாய் ஏறி இறங்கியது.
அவனின் கட்டுப்பாட்டில் இருந்து சில நொடிகள் நழுவி மீண்டான் நெடுஞ்செழியன் விமலின் அழைப்பால்.
“ப்ரீ வெட்டிங் ஷூட்க்கு ரெஸார்ட் எல்லாம் சூஸ் பன்றாங்க பாருங்களேன்…” என சற்றே கேலியாய் கூறினான் விமல் நெடுஞ்செழியனிடம்.
“நான் போய் பால் எடுத்துட்டு வரேன்…” என சொல்லிய பூச்சி அங்கே நெருங்கும் முன் அந்த பந்துடன் நெடுஞ்செழியனை சமீபித்திருந்தாள் அவள். சுபஷ்வினி.
“ஹலோ மேம், பை மிஸ்டேக்லி…” என பூச்சி பவ்யமாய் சுபஷ்வினியிடம் பேச,
“கண்ணு கண்ணுல தான இருக்கு? பார்த்து விளையாட தெரியாதா?…” என்று நெடுஞ்செழியனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கையில் இருந்ததை வீசியவள் அங்கிருந்து நகர்ந்துவிட,
“யார் ஸார், தெரிஞ்சவங்களா?…” என்றான் பூபாலன் நெடுஞ்செழியனிடம் மெல்லிய குரலில்.
“நான் என்ன சொல்லியிருக்கேன்?…” என்ற செழியனின் கோபத்தில்,
“ஸாரி ண்ணா…” என்றான் அவன்.
நொடிபொழுதில் சுபஷ்வினியை கண்டு தடுமாறி இருந்தாலும் பூபாலனின் பணி நிமித்த அழைப்பில் தாங்கள் வந்திருக்கும் வேலை ஞாபகம் பெற சட்டென்று பீறிட்டு வந்த கோபத்தை அவனிடம் கக்கிவிட்டான்.
“யார் ண்ணா?…” என பூச்சி இப்போது சாதாரணம் போல கேட்க செழியனின் பார்வை சுபஷ்வினியை தீண்ட அவளும் அந்த நிமிடம் அவனை தான் திரும்பி பார்த்தாள்.
அவள் அவனை பார்த்த நொடி சட்டென செழியனின் முகத்தில் குறுஞ்சிரிப்பு குறும்பாய் படர,
“வெடிங் இன்விடேஷன் அனுப்புவேன்ல. அப்ப தெரிஞ்சுப்பீங்க. இப்ப வேலையை பாருங்க. நானும் போய் ஒரு ஸாரி சொல்லிட்டு வரேன்…” என்று சொல்லி கீழே கிடந்த பந்தை காலால் உதைக்க அது மேலே எழும்பவும் கையில் வைத்துக்கொண்டு அவள் நின்ற இடம் நோக்கி சென்றான்.
“ஸாரோட பாஸ் போல?…” என மூவரும் சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டனர்.
செயற்கை நீரூற்றுகளும், ஓவியமாய் பெரிய கற்சிலைகளில் செய்யப்பட்ட அந்த பூங்காவனம் முழுவதும் அற்புதம்.
அதன் மத்தியில் அத்தனை பேர் நின்றிருந்தனர். அலங்காரம் செய்யப்பட்ட இருவர் புகைப்படத்திற்கு நின்றிருந்தனர்.
“இங்க என்ன பன்றீங்க?….” என்றான் நெடுஞ்செழியன்.
அவன் தன்னை நோக்கி வரவுமே பேசத்தான் வருகிறான் என்பது புரிந்து போனது சுபஷ்வினிக்கு.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகிவிட்டது அவனின் அறிமுகம் அவளுக்கு கிடைத்து.
தன்னை பெண் பார்க்கவென வருவதாய் இருந்தவனை வரவேண்டாம் என்ற தன் வீட்டாரின் மறுப்பும், அதன் பின் நின்றுவிட்ட திருமண பேச்சுவார்த்தையும் என்று இரு வருடங்களாகிவிட்டது.
ஆனாலும் இருவரின் அலைபேசி எண்கள் பகிரப்பட்டது பகிரப்பட்டதாகவே தான் இருந்தது.
இருவருமே ஒருவரை ஒருவர் பேசிக்கொள்ளாமலே தங்களின் விருப்பங்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்.
பேச்சுக்கள் தான் இல்லையே தவிர்த்து அவனின் ஒவ்வொன்றும் அவளுக்கு அத்துப்படி. அவளின் சின்ன சின்ன நகர்வுகளும் அவனின் பார்வைக்கு மட்டும்.
இப்படியே பகிரப்படாமல் இருவரின் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்க புதிதாய் ஒப்புக்கொண்ட இந்த ரகசிய வழக்கில் இறங்கிய பின்னர் சுபஷ்வினியை கவனிக்கமுடியாமல் போனது நெடுஞ்செழியானால்.
இங்கே அவளை பார்த்ததுமே ஒருகணம் தான் வந்திருக்கும் விஷயமும் அவனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.
ஆனாலும் தானிருக்க என்ன நடந்துவிடும் என்ற நம்பிக்கை வரப்பெற்றவன் அவளை நேருக்கு நேர் சந்திக்கும் இந்த வாய்ப்பில் மகிழ்ந்தும் தான் போனான்.
இப்போது நேரடியாக சென்று பேசிவிட வந்திருக்க சுபஷ்வினி முகத்தில் சில நாட்களாக அவனின் கவனிப்பற்ற போக்கினால் உண்டான கோபம் தாண்டவமாடியது.
“நீங்க ஏன் அதை கேட்கறீங்க?…” என்றாள் பட்டென்று.
அவளின் கோபமும், முகபாவனையும் நெடுஞ்செழியன் மனதில் தவிப்புகளை தாராளமயமாக்க லேசாய் தொண்டையை செருமிக்கொண்டான்.
“ஏன் நான் கேட்க கூடாது?….” என்றவன் ஆராயும் பார்வையையும், முகத்தில் சிரிப்பிருந்தாலும் அவன் விழிகள் தன்னிடம் மட்டும் நிலைக்காமல் சுழன்று வருவதையும் கவனித்தாள்.
“ஆபீஸ்ல கூட வொர்க் பன்ற ப்ரெண்ட்க்கு மேரேஜ். அதுக்கு பார்ட்டி குடுக்க இன்வைட் பண்ணியிருந்தா. இங்க அப்படியே அவ பியான்சியோட போட்டோ ஷூட் பண்ணிடலாமேன்னு எடுத்திட்டிருக்காங்க…” என தானாகவே சுபஷ்வினி கூற,
“டே அவுட்டா?…” என்றான் அவன் அடுத்ததாக.
“ம்ஹூம், இல்லை. இன்னைக்கு இங்க தான் ஸ்டே பன்றோம்…” என சொல்லவும் அவனின் விழிகள் இடுங்கின.
“ஓஹ்…” என்றவன் சுபஷ்வினியிடம் மேலும் பேசும் முன் அவளின் தோழி வரவும்,
“டேக் கேர். எதுவானாலும் கால் பண்ணு…” என சொல்லி சென்றவனை புதிராய் பார்த்தாள் சுபஷ்வினி.
“யார் சுபா இவங்க?…” என்று வந்தவள் கேட்க,
“தெரிஞ்சவங்க தான். எத்தேர்ச்சையா பார்த்தோம். அதான்…” என்று சொல்ல,
“ஓஹ் ஓகே ஓகே….” என்று கேலியாய் சிரித்தவள்,
“ரொம்ப உரிமையா பேசிட்டிருந்த. தெரிஞ்சவர்ன்னா நான் வரதை பார்த்து ஏன் நிக்காம போறாராம்?….” என்றாள் இன்னும் கிண்டலாக.
“அவருக்கு என்ன பயம்? அதுவும் உன்கிட்ட பதில் சொல்லாம போற அளவுக்கு? போலீஸ்ம்மா. பயமாவது ஒன்னாவது…” என சுபஷ்வினி நெடுஞ்செழியனை பார்த்தபடி சொல்ல,
“போலீஸா? பார்த்தா அப்படி தெரியலையே?…”
“ஏசிபி நெடுஞ்செழியன். கூகுள் பண்ணி பாரு. அவர் தான். ஏன் எப்பவும் காக்கிலையே தான் இருக்கனுமா என்ன? பார்மல் ஷர்ட்டும், இந்த ஹேர் ஸ்டெயிலும் கூட ஸ்மார்ட்டா தான் இருக்கு…” என்று விட்டுக்கொடுக்காமல் சுபஷ்வினி பேச,
“ஹேய் அப்போ ஒரு இன்ட்ரோ குடேன்…” என்றவளின் வாயை அடக்கிய சுபஷ்வினி,
“அவர் அவரோட ப்ரெண்ட்ஸ் கூட வந்திருக்கார். எப்ப இன்ட்ரோ பண்ணனுமோ அப்போ பண்ணுவேன். இப்ப யார்க்கிட்டயும் மூச்சு விடக்கூடாது நீ. இப்ப வந்த வேலையை பார்ப்போமா?…” என தோழியை திசைதிருப்ப அங்கிருந்த ஒருவன் அதனை கவனித்து சென்றதை அவர்களும் கவனிக்கவில்லை.
சென்றவேகத்தில் நெடுஞ்செழியன் திரும்பி வந்ததும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மற்ற மூவரும் எழுந்து ஆர்வமாய் பார்த்தனர்.
“என்னடா இப்படி பார்க்கறீங்க?…” என்றான் அவர்களின் முகபாவனையை கண்டு சிரிப்புடன்.
“எப்பண்ணே கல்யாணம்?….” என்றான் ஆர்வமாய் பூச்சி.
“என்ன நேரமோ காலமோ போடா பூச்சி. எனக்கு கல்யாணம்ன்னா மட்டும் ஆப்பு ஆப்பு, தோப்பு தோப்புன்னு எங்கருந்து தான் வந்து இறங்குமோ?…” என தன்னை மறந்து பேசியவனை கண்டு அடக்கமாட்டாமல் மூவரும் சிரிக்க,
“அடிங், எந்திச்சு விளையாட வாங்கடா…” என எழுப்பியவன் அப்படியே ஒவ்வொரு விளையாட்டு நடக்கும் இடத்தையும் பார்வையிட்டுக்கொண்டிருந்தான்.
“விமல் நீ ரெயின் டான்ஸ் நடக்கற இடத்துக்கு போ. நான் ஸ்விம்மிங் பூல் போறேன். பூபா நீ என் கூட வா…” என அங்கே சென்றான் நெடுஞ்செழியன்.
நால்வரும் பிரிந்து செல்ல இங்கே மேனேஜரின் முகத்தில் முத்து முத்தாய் வியர்வை துளிகள்.
“ஸார் அவர் போலீஸ்ன்னு எனக்கு தெரியாது…” என மெல்லிய நடுக்கத்துடன் கூற,
“முட்டாள், முட்டாள்…” என்று போனில் இரைந்தவனின் குரலில் இருந்த ஆவேச சூட்டில் வெந்துவிடாத குறை தான்.
“போனை வை. அவங்களை வாட்ச் பண்ண சொல்லு. ஆனா சந்தேகம் வராம. போலீஸ்காரன். மோப்பம் புடிச்சிருவான்….” என சொல்லி மறுமுனை துண்டிக்கப்பட்டது.
சொல்லியதை போல நெடுஞ்செழியனை கவனிக்க இருவர் தொடர கண்டுகொண்டான் காவல்காரன்.
“பூபா ஸ்மெல் பண்ணிட்டாங்க போல. ஈஸி..” என நீச்சல் குளத்தில் குதித்தவன் பூபாலனின் காதில் கூறிவிட்டு,
“வாடா வாடா…” என தன்னோடு போட்டிக்கு அழைத்து மீண்டும் மேலிருந்து குதித்தான் நெடுஞ்செழியன்.
இங்கே மேனேஜர் தனி அறையில் தனக்கான அழைப்பிற்காக காத்திருக்க நேரம் செல்ல செல்ல பதட்டம் கூடியது.
சிசிடிவி கேமராவில் அந்த நால்வரின் நடமாட்டங்களை கவனித்தபடி அமர்ந்திருக்க அழைப்பும் வந்துவிட்டது.
“முருகா அவனை இப்ப ரெண்டு மாசம் சஸ்பென்ட் பண்ணியிருக்காங்க. ட்யூட்டியில இல்லை அவன். இருந்தாலும் பத்திரம்…” என்றவனின் பேச்சில் முன்பிருந்த சூடு இல்லை.
“ஓகே ஸார்…” என மேனேஜர் பதில் தந்ததோடு,
“இப்ப அவங்களை வெளியேத்த பார்க்கலாமா?…” என்ற கேள்வியில் மீண்டும் அழைப்பில் இருந்தவன் சூடாகி போனான்.
“முட்டாள், முட்டாள். இப்பத்தான சொன்னேன். அறிவுகெட்டத்தனமா பேசாத, செய்யாதன்னு. அவனை ஏதாவது செஞ்சு வெளியேத்தி எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு காமிக்க சொல்றியா? ஏன், என்னன்னு நோண்டி நொங்கெடுத்துருவான்…” என்று கத்த,
“ஸாரி ஸார்…” என்றார் மேனேஜர்.
“சொன்னதை மட்டும் கேளு நீ. ஆமா அந்த நாலுபேர்ல யாருக்கு கல்யாணம்?…” என்றதும் மேனேஜர் திணற,
“அதை கேட்கலையா நீ?…” என மீண்டும் பல்லை கடித்தான் மறுமுனையில் இருந்தவன்.
“பொதுவா பேசிக்கிட்டாங்க. ஆனா யாருக்குன்னு தெளிவா தெரியலை…” என்ற மேனேஜர்,
“இன்னொன்னு சொன்னா கோவிப்பீங்களா?…” என கேட்க,
“சொல்லி தொலை. ஆகாவழி வேலையை சொன்ன…” என்று எச்சரிக்க,
“இல்ல இல்ல ஸார்…” என பின்வாங்கியவர் சற்று நேர அமைதியில்,
“இல்ல இன்னைக்கு வர பார்ட்டியை வேண்டாம்ன்னு சொல்லிடுவோமா?…” என்றார்.
“ப்ச், என்னால வர பார்ட்டியை நிப்பாட்ட முடியாது. ஆல்மோஸ்ட் ரீச்சாகிட்டாங்க. நான் சொல்றமாதிரி பண்ணு. அந்த நெடுஞ்செழியன் ஒருவேளை சாதாரணமா கூட வந்திருக்கலாம். நாமளா ஒன்னை நினைக்க வேண்டாம். அதே நேரம் அஜாக்கிரதையா இருக்கவும் வேண்டாம்…” என எச்சரித்தான்.
“சரிங்க ஸார். நான் பார்த்துக்கறேன்…” என சொல்லி அழைப்பை துண்டிக்க மறுமுனையில் பேசிக்கொண்டிருந்தவனுக்கு ரத்த அழுத்தம் ஏறியது.
அவன் கவனித்தவரையில் நெடுஞ்செழியன் வந்ததில் இருந்து எல்லாமே சாதாரணமான நிகழ்வுகளாகவே தான் தெரிந்தது.
அந்த நால்வரின் பேச்சுக்களும், உடல்மொழிகளும் கூட அவனின் அறிவிற்கு இயல்பாக தான் தோன்றியது.
அதுவும் நெடுஞ்செழியன் தோற்றமும், அவன் இப்போது வேலையில் தற்காலிக பணி நீக்கம் பெற்றிருப்பதும் கூட சந்தேகிக்க முடியாத வண்ணம் தான் இருந்தது.
என்னவோ? எதுவோ? ஆனாலும் ஒருவித பயம், பதட்டம். விஷயம் வெளியில் தெரியாமல் இருக்கவேண்டுமே என்ற அச்சம் தொண்டையை கவ்வியது.
இத்தனை வருடங்கள் இல்லாத ஒரு உணர்வு பிடித்தாட்ட யாரின் மீதும் காண்பிக்க முடியாத ஆத்திரம்.
இங்கே ஒருவனின் உறக்கத்தையும், நிம்மதியையும் கெடுத்திருந்த நெடுஞ்செழியன் உணவுகள் வரிசைப்படுத்தபட்டிருந்த இடம் நோக்கி மற்ற மூவருடன் சென்றான்.
சிறு சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அவ்விடத்தில் குழுமி இருக்க செழியனின் விழிகள் சுபஷ்வினி எங்கே என தேடியது.
“அண்ணே அங்க இருக்காங்க…” என்றான் பூச்சி தூரத்தில் தன் தோழிகளுடன் அமர்ந்திருந்த சுபஷ்வினியை கை காண்பித்து சிரிக்க,
“அடங்குடா…” என்றான் விமல் அவனின் கையை பிடித்து இழுத்து.
“எல்லாம் ஒரு சமூக சேவை தான். பிகாஸ், பேசிக்கலி நான் ஒரு ஹெல்பிங் மைண்டட்…” என தன் டிஷர்ட் காலரை தூக்கி காண்பிக்க இருவரின் கலாட்டாவில் பூபாலன் சிரித்துவிட்டான்.
இவர்களின் பேச்சுக்களை காதில் வாங்கிய நெடுஞ்செழியன் சின்ன சிரிப்புடன் தனக்கான உணவை எடுக்க முன்னே செல்ல பேசிக்கொண்டே மற்றவர்களும் சென்றனர்.