“பெர்பாமென்ஸ் பத்தலை சிங்கரே. இன்னும் கொஞ்சம் ம்ம்ம்…” என நெடுஞ்செழியன் ஸ்ருதியிடம் சொல்ல,
“இதுவே போதும், போதும்…” என்று ஸ்ருதியும் சிரிக்க,
“எங்க அந்த லத்தி?…” என்றாள் சுபஷ்வினி இருவரையும் பார்த்து இடுப்பில் கை வைத்தபடி.
“எவ்வளோ நேரம் வெளிலையே நின்னு பேசிட்டிருப்பீங்க? மாப்பிள்ளையை உள்ள கூப்பிடும்மா ஸ்ருதி…” என உள்ளிருந்து சாலாட்சி அழைக்க தோட்டத்தில் நின்றிருந்தவர்கள் உள்ளே சென்றனர்.
நெடுஞ்செழியன் அவனின் காக்கி உடுப்பிலேயே தான் வந்திருந்தான் அவளை பார்ப்பதற்காக.
இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்க உள்ளே வீரவேந்தர் சிங்கமுத்துவிடம் போனில் பேச சாலாட்சி சுபஷ்வினியை அழைத்தார் உள்ளே.
“உன்னை தான் சாலாம்மா கூப்பிடறாங்க. போய் கேளு அஷ்…” என்ற ஸ்ருதி சுபஷ்வினி உள்ளே சென்றதும்,
“நாளைக்கு கோர்ட்ல அஷ்கிட்ட என்ன கேட்பாங்க? அவளை ஹர்ட் பன்ற மாதிரி எதுவும் இருக்காது தானே?…” என்றாள் ஸ்ருதி பரிதவிப்புடன்.
அதுவரை சரிக்கு சரியாய் வாயடித்து சிரித்து விளையாடிக்கொண்டிருந்தவள் முகமெல்லாம் கலவரம்.
சஞ்சலம் பொங்கி வர விழிகளில் நீரும் கோர்த்திருந்தது. பதட்டத்தை குறைக்கும் விதமாய் கோர்த்திருந்த விரல்களும் சேர்ந்தே நடுக்கத்தை காண்பித்தது.
“ஸ்ருதி என்ன இது? நீ எவ்வளோ தைரியமான பொண்ணு…” என்றான் நெடுஞ்செழியன்.
“அஷ் விஷயத்துல நான் அவ்வளோ தைரியமான்னு தெரியலை. ஆனா அவளுக்கு எதுவும் ஆகாது. அது எனக்கு தெரியும். இருந்தாலும் என்னவோ, என்னவோ மாதிரி இருக்கு….” என்று மூச்சை இழுத்து சுவாசித்த ஸ்ருதி கண்ணீரை அடக்கினாள்.
“இப்ப எனக்கு நிறையப்பேர் என்னோட சொந்தம், என் உறவுகள் எல்லாம் இருக்காங்க. ஆனா எல்லாத்துக்கும் ஆரம்பம் அது அஷ் தான். அவளை என்னோட ஆணிவேர்ன்னு சொல்லலாம். அதுக்கும் மேல…” என்றவளுக்கு வார்த்தைகள் வராமல் தொண்டை அடைத்தது.
“அவளோட அந்த கைகள் ஹ்ம்ம், எப்பவும் என்னை பார்த்ததும் அணைச்சுப்பா. தலையை தடவி குடுப்பா. தோளோட சாய்ச்சுப்பா. அப்போலாம் எவ்வளவு பலம் அந்த கையில நான் உணர்ந்திருப்பேன் தெரியுமா? ஆனா இப்போ இப்படி இப்படி இது மாதிரி அவளால திடமா என்னை புடிக்க முடியலை….”
தன் நடுங்கும் கைகளை காண்பித்து சொல்லியவள் முகமெல்லாம் சிவந்து கண்ணீர் வடிந்துகொண்டே இருந்தது.
“அஷ்கிட்ட சொல்ல முடியலை என்னால. அவ இன்னும் கலங்கிடக்கூடாது. எப்பவும் என்னோட அஷ் அப்படி இருக்கவே கூடாது. என்னவோ மனசு சொல்லுது. எனக்கு புரியலை. பார்த்துப்பீங்க தானே?…” என்றவள் கண்ணீர் தேம்பலாய் மாறிவிட்டது.
“ஸ்ருதி தோசையா, இட்லியா?…” என்று சுபஷ்வினி சத்தமாய் அடுக்களையில் இருந்து கேட்க,
“ஏன் உனக்கு தெரியாதா அஷ்?…” என சொல்லிய ஸ்ருதி பரபரவென முகத்தை துடைத்து சிரித்தபடி எழுந்து நின்றாள்.
“சும்மா நான் அழுததும் பாவமா முகத்தை வச்சிட்டு பார்த்துட்டு இருக்காம தைரியமா நான் இருக்கேன்லன்னு சொல்லுங்க லத்தி ஸார். எவ்வளவோ பார்த்திருப்பீங்க. இதை பார்க்கமாட்டீங்களா?…” என்று கண்களை சிமிட்டி சொல்லிவிட்டு பழைய சிரிப்போடு உள்ளே சென்றவளை புன்னகையுடன் பார்த்திருந்தான் நெடுஞ்செழியன்.
சிறிது நேரம் அங்கிருந்து பேசிக்கொண்டிருந்தவன் மறுநாள் காலை எப்போது வரவேண்டும், எப்படி என தெளிவாய் சொல்லிவிட்டே கிளம்பினான் அங்கிருந்து.
கிளம்பும் நேரம் சுபஷ்வினியை தனியே அழைத்தவன் முன்னே சென்று நிற்க மீண்டும் வீரவேந்தர் உள்ளே சென்றுவிட்டார்.
சாலாட்சியும், ஸ்ருதியும் கூட சுபஷ்வினிக்கு அறையை தயார் செய்ய சென்றுவிட்டனர்.
“ஹ்ம்ம் சொல்லுங்க…” என்று வந்து நின்றவளை பார்த்தவன் உள்ளே எட்டி பார்த்துவிட்டு,
“எதாச்சும் கேட்கனுமா?…” என்றான்.
“இல்லையே, என்ன கேட்கனும்? இல்லை நான் கேட்கனும்ன்னு நீங்க நினைக்கறீங்களா?…” என்றாள் அவள் பதிலுக்கு.
“நிறைய நினைக்கத்தான் செய்யறேன். ஆனா…” என சொல்லி பெருமூச்சை வெளியிட்டவன்,
“சரி, வேற எதோ திங்கிங். விடு. பார்த்துக்கலாம்….” என வலிய புன்னகையை வரவழைத்துக்கொண்டான்.
“கிளம்பறேன் அஷ்வினி. பார்த்துக்கோ. நான் சொன்னது ஞாபகமிருக்கட்டும்…” என சொல்லிவிட்டு கிளம்பினான் நெடுஞ்செழியன்.
——————————————–
நீதிமன்றவளாகத்தினுள் கதிரின் பார்வை அனைத்து பக்கங்களிலும் கழுகாய் சுற்றி வந்தது.
அவன் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் எல்லா இடங்களிலும் இருந்தார்கள். வழக்கத்தைவிட அதிகமாய் அத்தனை பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தது.
இத்தனை கூட்டத்திற்கு மத்தியில் அந்த இரு பெண்களும் எப்படி வர போகிறார்கள்? யாருடன் வரவிருக்கிறார்கள் என எதுவும் தெரியவில்லை.
“ஜெய் நான் கோர்ட் கேம்பஸ்க்குள்ள தான் இருக்கேன். விசாரணைக்கு இன்னும் டைமிருக்கு. நெடுஞ்செழியன் இன்னும் வரலை. ஆனா அவனோட இருக்கற பசங்க ரெண்டுபேர் இங்க தான் இருக்காங்க…” என்று போனில் பேசிக்கொண்டிருந்தான் கதிர்.
“ம்ம்ம்…” என்று மட்டும் அவன் பதில் கூற இருவரும் இணைப்பில் தான் இருந்தனர்.
ஜெய் எதுவும் பேசவில்லை. அங்கே என்ன நடக்கிறது என்று தெரியவேண்டும். பேசும் நிலையில் அவனும் இல்லை.
பூபாலனுடன் சுபஷ்வினி யாரும் அறியாமல் உள்ளே சென்றிருந்தாள். கதிரும், அவனின் ஆட்களும் கவனியாதவண்ணம் அவள் சென்றிருக்க நிகிதாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தான் நெடுஞ்செழியன்.
“மேம், இன்னும் நிகிதா வரலையே?…” என வேதசௌந்தரியிடம் நெடுஞ்செழியன் கேட்க,
“இன்னும் டைமிருக்கே செழியன். என் பையன் தனாவோட நிகிதா வந்திட்டிருக்கா. நான் தான் வரவேண்டியது. ஆனா வேற ஒரு மீட்டிங்ல மாட்டிக்கிட்டேன்….” என்றார் வேதசௌந்தரி.
“உங்க பையனுக்கு தெரியுமா?…” நெடுஞ்செழியன் கேட்க,
“இல்லை செழியன். இன்னும் சொல்லலை. ஒரு வேலையா என் ஹஸ்பன்ட் வர சொல்லியிருக்கார்ன்னு மட்டும் சொல்லி அனுப்பிருக்கேன். இனி தான் சொல்லனும். அவன் இன்னும் கவனமா பார்த்துப்பான் நிகிதாவை…” என்று சொல்லியவர்,
“ஹியரிங் முடிஞ்சதும் கூப்பிடுங்க செழியன்…” என்று வைத்துவிட்டார் வேதசௌந்தரி.
நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த தனாவின் கார் சென்று நின்றதும் தனது போனை எடுத்தவன்,
“மாமா ஒரு போன் பேசிட்டு வரேன். நீங்க உள்ள இருங்க. அப்பா கூப்பிடும் போது போகலாம்…” என்றான்.
“சரிப்பா…” என வெங்கடேசன் சொல்லவும்,
“உனக்கு எதாச்சும் வேணுமாடா நிகிக்குட்டி. ஏன் முகமெல்லாம் இப்படி வேர்த்திருக்கு?…” என கேட்டு,
“ஏசி ஓடட்டும். ரொம்ப வெயிலா வேற இருக்கு. உள்ளயே இரு. நான் அம்மாக்கிட்ட சொல்லிடறேன் வந்துட்டோம்ன்னு…” என்று சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கிக்கொண்டான்.
“நிகி…” என்றவன் திகைப்புடன் அவள் முகத்தையும் மூடியபடி அணிந்திருந்த உடையை மேலிருந்து கீழே பார்த்தான்.
“நான் தான் மாமா. இப்பதான் போட்டேன். இப்ப வந்திடறேன்…” என்றவள் நகரும்முன் ‘தான் பார்த்தது நிஜமா?’ என்பதை போல அவள் முகத்திரையை நடுங்கும் கையால் தனா விலக்கிவிட நிகிதாவின் முகம் கதிரின் கண்களுக்கும் அகப்பட்டது.
“மாமா கையை எடுங்க…” என்று அவன் கையில் அகப்பட்டிருந்த திரையை விலக்கிவிட்டவள் வழக்கறிஞரோடு வேகமாய் சென்றாள்.
இன்னும் தனாவினால் ஜீரணிக்க முடியவில்லை. உள்ளுக்குள் என்னென்னவோ இரைச்சல்கள். அப்படியே நின்றுவிட்டான்.
விசாரணை முடிந்தது போலும். நிகிதா மீண்டும் அதே உடையில் தனாவினருகே வர அவளுடன் நெடுஞ்செழியன் சற்றே இடைவெளிவிட்டு வந்து நின்றான்.
“ஹலோ ஸார்…” என்று வந்து நெடுஞ்செழியன் நின்றதும் தனாவின் பார்வை ஒருநொடி நிகிதாவின் மேல் படிந்து மீண்டு,
“நான் தனா. ஜெயதனபாலன்…” என்றான் தனது கையை நெடுஞ்செழியனை நோக்கி நீட்டியபடி.
“ஹேவ் எ நைஸ் டே அன்ட் தேங்க்ஸ். நிகிதாவை பத்திரமா கூட்டிட்டு போங்க…” என்றான் நெடுஞ்செழியன் அவனிடம்.
“ஹ்ம்ம்…” என்றவன் நெடுஞ்செழியன் நகர்ந்ததும் காரில் அமர்ந்து எதுவும் பேசாமல் வாகனத்தை கிளப்பினான்.
நிகிதாவும், வெங்கடேசனும் நீதிபதியின் முன்னால் கேட்கப்பட்ட கேள்வியில் மனம் துவண்டு போய் அமர்ந்திருந்தனர்.
முன்பக்க கண்ணாடியின் வழி அவர்கள் இருவரையும் பார்த்த தனா தனது போனில் வந்திருந்த குறுஞ்செய்தியை திறந்து பார்த்தான்.
“இந்த பொண்ணு தான் அந்த இன்னொரு பொண்ணு. பேரு சுபஷ்வினி. மத்ததை போன்ல சொல்றேன் ஜெய்….” என்று அனுப்பியிருந்தான் கதிர்.
திரையில் தெரிந்த சுபஷ்வினியின் புகைப்படத்திலேயே தனாவின் பார்வை நிலைகுத்தி நின்றது.
ஜனசந்தடிவிட்டு வாகனம் சாலையில் சீறி பாய அவனின் வேகத்தில் தான் வெங்கடேசனும், நிகிதாவும் அவனை கவனித்தனர்.
தனாவின் முகம் இறுகி வேறு எதோ சிந்தனையில் இருப்பதை போன்றிருந்தது பார்ப்பதற்கு.
“மாமா மெதுவா போங்க…” என நிகிதா கூற,
“தனா, தனா என்னாச்சுப்பா?…” என வெங்கடேசனும் அவனின் தோளை தட்டினார்.
எதுவும் அசைக்கவில்லை, வெறித்த பார்வையுடன் வேகமாய காரை செலுத்த எதிரே டேங்கர் லாரி வந்துகொண்டிருந்தது.
பின்னிருந்த இருவருக்கும் அத்தனை பதட்டம். நிகிதாவின் விழிகள் அச்சத்தில் விரிய மிக அருகில் நெருங்கிவிட்டது அந்த லாரியும்.
“டாடி…” என்ற நிகிதாவின் அலறல் தனாவின் செவிப்பறையை கிழித்தெறிந்தது.