“என்ன ஸார் இப்படி பண்ணிட்டீங்க? அவன் உஷாராகிடுவான்…” என்று அவனருகில் விமல் வர,
“வார்னிங் குடுத்தா உஷாராகி நேக்கா தப்பிக்க நினைக்கிறது ஒரு ரகம்ன்னா, அந்த வார்னிங் குடுத்ததாலயே பதட்டத்துல தப்பு தப்பா தப்பிக்க தப்பு பன்றவன் இன்னொரு ரகம். தனா ரெண்டாவது. அதான் நெம்பி விட்டிருக்கேன். வந்து சிக்குவான் பாரு….” என்றான் நெடுஞ்செழியன்.
“இதுக்கு நீங்க மேம்கிட்டையே இந்த சந்தேகத்தை சொல்லி தனாவை கஸ்டடில எடுத்து விசாரிக்கலாமே?…” என விமல் கேட்க,
“நீ கத்துக்க வேண்டியதுல இதுவும் ஒன்னு விமல். குற்றவாளி, கொலையாளி சாதாரணமானவனோ இல்லை பணபலம் இருக்கறவனோ அத்தனை சுலபத்துல அவனை தூக்கி உள்ள வச்சிட முடியாது. வெறும் சந்தேகத்துல அரஸ்ட் பன்றது மீனுக்கு தூண்டில் போடற மாதிரி….”
“க்ளவரா புழுவை சாப்பிட்டுட்டு தப்பிச்சுப்போற மீன்களும் இருக்கும். யாரா இருந்தாலும் வலையை விரிக்கனும். மாட்டிக்கிட்டா எந்தபக்கமும் தப்பிக்கவே விட கூடாது. அதுக்கு நம்மக்கிட்ட ஸ்ட்ராங் எவிடென்ஸ் வேணும்….”
“அதுவும் தனா மாதிரி ஆளுங்க எல்லாம் அவசரத்துல தெரியாம தப்பு பண்ணினவங்க இல்லை. இவங்களை பிடிக்கிறதுக்கு இன்னும் நாம பொறுமையா இருக்கனும். இப்ப தானே கலைச்சு விட்டிருக்கோம். பார்த்துக்கலாம்…” என்றான் நெடுஞ்செழியன்.
அதற்குள் தனாவை வேஷ்டியை கட்ட சொல்லி உடை மாற்றி வர சொல்லினர் அங்கிருந்தவர்கள்.
அதனை கவனித்த நெடுஞ்செழியன் பார்வை தனாவை விடுத்து இப்போது நிகிதாவில் மையம் கொண்டது.
“ச்சே ச்சே பரிதாபம்ன்னு இல்லை. ஆனா மனசுக்கு கஷ்டமா இருக்கு. நல்லா இருக்கவேண்டிய பொண்ணு இவனுங்க கையில சிக்கி இப்படி ஒரு நிலைமையா?…” என்றான் வருத்தத்துடன்.
“விமல் எனக்கொரு வேலை இருக்கு. கூட வா. மேம்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்…” என சொல்லியபடி வேதாவை நோக்கி முன் வராண்டாவிற்கு சென்றனர்.
“மேம்…” என நெடுஞ்செழியன் அழைக்கவும் வேதா எழுந்து வர,
“ஒரு முக்கியமான விஷயம்…” என சொல்லியவன் அவரின் காதில் என்னவோ கிசுகிசுப்பாய் பேசினான்.
அதனை தூரத்திலிருந்து கவனித்த தனாவிற்கு உதறல் தான் இன்னும் அதிகரித்தது என்ன சொல்கிறானோ என்று.
“சரியான நேரத்துல சொன்னீங்க செழியன். தேங்க் யூ…” என்று சொல்லிய வேதா சுரேந்திரனை தேடி செல்ல, வெங்கடேசனின் உடலை அமரர் ஊர்திக்கு எடுத்து செல்ல ஆட்கள் வந்துவிட்டனர்.
அவரை வைக்கப்பட்டிருந்த கண்ணாடியின் மேல் போடப்பட்டிருந்த ரோஜா மாலைகளை அகற்ற,
“என்ன என்ன பன்றீங்க?…” என்றாள் நிகிதா பதட்டமாய் அவர்களை தடுக்க முயன்று வீல் சேர் முன்னால் நகர்ந்து.
“எடுக்கனுமா? என்ன, என்ன எடுக்கனும்?…” என்னும் பொழுதே தொண்டை அடைத்துவிட்டது நிகிதாவிற்கு.
அவளின் கண்ணீருடனான கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் உடலை தூக்க வந்தவர்கள் இரக்கத்துடன் பார்த்தனர் அவளை.
“எடுக்கனும்ன்னு எல்லாம் சொல்லாதீங்க ண்ணா. இவங்க என்னோட டாடி….” என்று கண்ணாடியில் அவரின் முகத்தின் மேல் கைவைத்து பார்த்து,
“கூட்டிட்டு போகனும்ன்னு கூட சொல்லுங்க…” என்று சொல்லியவள் விரல்கள் அவரை ஸ்பரிசிக்க பரிதவித்தது.
வந்து நின்றவர்கள் மேலிருந்த கண்ணாடியை எடுத்ததும் நிகிதா இன்னும் வெங்கடேசனின் அருகில் நெருங்கினாள்.
“நிகிம்மா…” என சங்கீதா பிடித்துக்கொள்ள நிகிதாவிற்கு அவளின் கால் வலி, இடுப்பு வலி எதுவும் பெரிதாய் தெரியவில்லை.
“இப்ப அப்பாவை கூட்டிட்டு போய்ருவாங்கக்கா. அப்போ நான் எப்ப அவரை பார்ப்பேன்? கொஞ்ச நேரம் ப்ளீஸ்….” என இறைஞ்சியவள்,
“அண்ணா ப்ளீஸ்…” என்று அவரை தூக்க வந்தவர்களிடமும் கை கூப்பி அழுகையுடன் கெஞ்ச பார்த்தவர்கள் மனதை உலுக்கிவிட்டது.
“டூ மினிட்ஸ், இல்ல, இல்ல. ஒரு பை மினிட்ஸ்…” என்றவள் இன்னும் பக்கத்தில் சென்றாள்.
“டாடி…” என வெங்கடேசனின் சில்லிட்ட முகத்தில் கைவைக்க அந்த குளிர் அவளின் உள்ளங்கால் வரை ஊடுருவியது.
“டாடி கிளம்பறீங்களா? அதுக்குள்ளே ஏன் டாடி?…” என்று அவரின் கன்னத்தை தாங்கினாள்.
“எதுக்கு இப்படி என்னை தனியா விட்டுட்டு போனீங்க? என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாமே டாடி. நான் பாவமில்லையா?…” என அவரிடம் பேச பேச சங்கீதாவிற்கு அழுகை வெடித்தது.
வேதாவும் சுரேந்திரனும் அங்கே வந்துவிட தனா தூரத்தே நின்று இதனை பார்த்தான்.
மனதில் எங்கோ ஒரு மூலையில் நிகிதாவின் கண்ணீர் அவனை குத்தி கிழிப்பதை போல தோன்றியது.
அதனை சில நொடிகள் கூட தாக்குப்பிடித்து நிற்கமுடியாமல் அவன் வெளியேறிவிட நெடுஞ்செழியன் மனதெல்லாம் அவன் செயலில் இறுகிவிட்டது.
“நிகிம்மா, நாங்கலாம் இருக்கோமே நிகி…” என்று வேதா தன் நெஞ்சோடு அவளை அணைத்துக்கொள்ள,
“ஆனா டாடி நான் இல்லாம இருக்க மாட்டாங்க ஆன்ட்டி. அங்கயும் என்னை தேடுவாங்களே? எப்படி போனாங்க? நான் தூக்கத்துல கனவுல பதறி எழுந்தா கூட எனக்கு டாடி வேணுமே? டாடி வேணும்…” என்று வீறிட்ட கதறலில் அனைவரின் விழிகளும் குளமாகிவிட்டது.
“கோர்ட்ல இருந்து வந்ததும் ஈவ்னிங் நம்ம வீட்டுக்கு போய்ட்டு வருவோம்ன்னு சொல்லிட்டு தான் இருந்தாங்க. ஏன் கூட்டிட்டு போகலை? என்னை ஏன் காப்பாத்தினாங்க ஆன்ட்டி? என்னையும் கூட்டிட்டு போக சொல்லுங்க…” என்றவள் அழுகை,
“ம்மா நேரமாகுது…” என்றனர் உடலை தூக்கி செல்பவர்கள்.
“ண்ணா, ண்ணா ப்ளீஸ்…” என்றவள் வேதாவின் அணைப்பிலிருந்து விலகி வெங்கடேசனின் நெஞ்சில் மேல் சாய்ந்துகொண்டாள்.
“ப்ளீஸ், அஞ்சு நிமிஷம். அதுக்கப்பறம் டாடி இல்ல…” என சொல்லியவள் வெங்கடேசனின் கையை தூக்கி தன் மேல் போட முயல,
“நிகிம்மா என்னடா பன்ற?…” என்ற வேதாவிற்கு தாள முடியவில்லை.
“டாடி எப்ப வெளில போனாலும் முத்தம் குடுப்பீங்க. இப்ப நிகிக்கு இல்லையா? நான் அழக்கூடாதுன்னு சொல்லுவீங்களே. நீங்களே என்னை அழவிடறீங்க. நிகி பாவம் தானே?…” என ஏக்கத்துடன் கேவல் வெடிக்க கேட்டு,
“கால் எல்லாம் வலிக்குது டாடி. சர்ஜரி பண்ணினது ரொம்ப வலிக்குது. உங்ககிட்ட சொல்லனுமே. நீங்க என்னை பார்த்துக்க வேண்டாமா? என்னை யார் பார்த்துப்பா? என் கூட வாங்க டாடி. இல்லை என்னையும் கூட்டிட்டு போங்க. நான் வரேன்…” என்றபடி கண்ணீர் வடிய தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள் நிகிதா.
“ம்மா இதெல்லாம் பண்ண கூடாது…” என்றனர் அந்த இருவர்.
“மேடம் சொல்லுங்க நீங்க…” என்று கூறியவர்கள்,
“நேரமாக ஆக ரொம்ப கஷ்டமா இருக்கும். பாடியும் தாங்காது. இந்த பொண்ணுக்கும் கஷ்டம். அதுக்கு தான் சொல்றோம்…” என்று அவர்கள் சொல்ல,
“நிகி நான் சொல்றதை கேளுடா…” என்றார் சுரேந்திரன் கலங்கிய கண்களுடன்.
“ஒரு நிமிஷம். ஒரு நிமிஷம்…” என்றவள் மீண்டும் அவரின் நெஞ்சில் சாயவும், கையை வருடவும், முகத்தில் முத்தமிடவுமாய் இருந்தவள்,
“ப்ளீஸ் டாடி போகாதீங்க. எனக்கு உங்க கூடவே இருக்கனும். ப்ளீஸ்…” என அவரின் கையை பிடித்துக்கொண்டு கதறிவிட்டாள்.
“நிகியை பாருங்க டாடி. இப்படி லேசா கிள்ளி வைப்பீங்களே. என்னை தொட்டு பாருங்க டாடி. ஒரு தடவை நிகிம்மான்னு கூப்பிடுங்க ப்ளீஸ். என்னால இருக்க முடியாதே நான் என்ன டாடி செய்வேன்?…” என்று கதறியவளின் ஓலம் பார்த்தவர்கள் நெஞ்சத்தில் ரத்தம் கசிய வைத்தது.
“நிகிம்மா அழாதடா….” என்று வேதா அவளை தாங்கிக்கொள்ள வெங்கடேசனின் உடல் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டது.
அதிலிருந்து பிரிக்கவே முடியாத அளவிற்கு நிகிதா பிடித்துக்கொள்ள அவளையும் அந்த வாகனத்திற்குள்ளேயே ஏற்றி தானும் உடன் ஏறிக்கொண்டார் வேதா.
“ம்மா நிகி எதுக்கு?…” என தனா கேட்க,
“தனா நிகி தான் வெங்கடேசனுக்கு எல்லா காரியமும் செய்ய போறா. இது வெங்கடேசனுக்காக…” என்றார் சுரேந்திரன்.
அனைவரும் மயானத்திற்கு புறப்பட அங்கே நெடுஞ்செழியன் வேதாவிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நிகிதா தான் அத்தனை காரியங்களையும் செய்தாள்.
தனாவால் இதனை ஜீரணிக்க முடியவில்லை. தன்னை செய்ய சொல்லிவிட்டு இப்போது இப்படி மாற்றி இருக்க தன்னைவிட நெடுஞ்செழியன் சொல் பெரிதாகிவிட்டதா என்னும் கோபம் கரைபுரண்டது.
சுரேந்திரன் இதனை சொல்லியது நெடுஞ்செழியன் தான் என்றும் அது தான் சரி என்றும் கூறியிருக்க அவனின் மேல் தீரா வன்மம் வளர்ந்தது தனாவிற்கு.
துக்கத்திற்கு சென்றுவிட்டு தன் வீடு வந்து சேர்ந்த நெடுஞ்செழியன் குளித்து உடைமாற்றி அமர வீரவேந்தரிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.
“தம்பி கொஞ்சம் வீடு வரைக்கும் வர முடியுமா?…” என்றதுமே நெடுஞ்செழியனுக்கு புரிந்திருந்தது.
நிகிதாவுக்கு விபத்து நடந்த அன்றே காஞ்சனா டெல்லியிலிருந்து சோபியாவையும் அழைத்துக்கொண்டு விமானத்தின் மூலம் சென்னை வந்து சேர்ந்திருந்தார்.
வந்ததும் நெடுஞ்செழியனும் வழக்கின் விஷயத்தை அவரிடம் விளக்கமாகவே சொல்லியிருந்தான்.
முதல்நாளில் இருந்தே சுபஷ்வினியின் அழைப்பும், வீரவேந்தர் சொல்லிய விஷயமும் அவனை அதிகமாய் யோசிக்க செய்தது.
“என்ன செழியா, இப்ப தான் வந்த. அதுக்குள்ளே வெளில கிளம்பிட்டியா?…” என்றார் காஞ்சனா.
“கிளம்பிட்டேன் இல்லை. கிளம்பறோம்…” என்று சொல்லியவன் வீரவேந்தர் வர சொல்லியதை சொல்ல மூவருமே கிளம்பி சென்றனர் அங்கே.
சுபஷ்வினியின் வீட்டில் ஊரிலிருந்து அனைவரும் வந்திருக்க அதுவே பெரிய பிரச்சனை என்றானது.
சிங்கமுத்து காலில் சலங்கை கட்டாத குறையாக ஆடுவார், சமாளிக்கலாம் என்று வந்தால் கையெடுத்து கும்பிட்டு கண்ணீரினால் அவனுக்கு கட்டுப்பாடு விதிக்க நினைக்க நெடுஞ்செழியன் பொறுமை காத்தான் இல்லை.
“இப்ப இந்த நிமிஷம் எனக்கு அஷ்வினி கழுத்துல தாலி கட்ட முடியும். ஆனா எல்லாரோட சம்மதத்தோட நடக்கனும்ன்னு நான் நினைக்கறேன். புரிஞ்சுக்கோங்க…” என்றவன் தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அத்தனைபேரின் முன்னிலையிலும் சுபஷ்வினி கழுத்திற்கு இடம் மாற்றினான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்திருக்க சிங்கமுத்து ஸ்தம்பித்து பார்த்தார்.
“இதனால உனக்கு வருத்தமா அஷ்வினி?…” என சுபஷ்வினியிடம் கேட்க,
“ம்ஹூம், இல்லை…” என்றாள் அவளும்.
அவளின் கையின் நடுக்கங்கள் இப்போது நன்றாகவே குறைந்திருந்தது. அவ்விரல்களை பற்றிக்கொண்டவன்,
“என்னை பொறுத்தவரை இதுவே எங்களோட கல்யாணம் தான். ஆனா உங்க எல்லாரோட ஆசிர்வாதத்தோட வழக்கமா நடக்கிற விதத்துல நடக்கனும்ன்னு நாங்க நினைக்கறோம்….” என்றான் நெடுஞ்செழியன்.
அவனுக்கு யார் என்ன செய்கின்றனர் என்று தெரிகிறவரை ஒருவித அழுத்தம் என்றால் தனாவே இதனில் சம்பந்தம் கொண்டிருக்க நிகிதாவிற்கு அடுத்து சுபஷ்வினியின் மீது தான் அவர்கள் பார்வை திரும்பும் என்று தெரிந்துவிட்டது.
அதற்கு அவள் தன்னருகில் இருக்கவேண்டும் என்பதில் தீவிரமாகிவிட்டான் நெடுஞ்செழியன்.
“நடக்கறதை பார்த்தா எனக்கு என் பொண்ணுக்கு எதுவும் ஆபத்தாகிடுமோன்னு பயமா இருக்கு. நீங்க என்னன்னா…” என சிங்கமுத்து தன் கையை பிசைய,
“ஆபத்துன்னு பார்த்தா எது தான் இல்லை. வர கஷ்டங்களை சமாளிக்க சொல்லி குடுங்க. அஞ்சி ஒதுங்கி போக வைக்காதீங்க…” என்றாள் சுபஷ்வினியும் செழியனுக்கு ஏற்றவளாய்.
ஒருவழியாக கோவிலில் வைத்து எளிமையாக திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் இன்னும் ஒருவாரத்தில் என்று முடிவாகிவிட்டது.
சுபஷ்வினி, நெடுஞ்செழியன் திருமண வேலைகள் சூடுபிடிக்க தனாவின் உத்தரவின் பெயரில் சுபஷ்வினியை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஆவன முயற்சிகளையும் ஆரம்பித்துவிட்டான் கதிர்.
அவர்கள் திட்டத்தின்படி சுபஷ்வினி அவர்களின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டாள்.