“ஓகே, சொல்லுங்க. எப்போ போகனும் மினிஸ்டர் வீட்டுக்கு?…” என நேரடியாக சுபஷ்வினி கேட்க,
“அதுக்கு முன்ன நீ தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயம் இருக்கு அஷ்வினி…” என்றவன் கூறியவற்றை ஜீரணிக்க முடியாமல் சுபஷ்வினி அதிர்ச்சியின் உறைந்து நின்றாள்.
“இதுக்காக தான் சீக்கிரம் கல்யாணம் செய்யனும்ன்னு சொல்றேன். எனக்குள்ள ஒரு தாட், யாருக்காகவோ எதுக்காகவோ நான் உன்னை கேட்கிறதா நீ நினைச்சுப்பியோன்னு. அதான் கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தேன்…” என வெளிப்படையாக சொல்ல,
“அப்போ நான் தான் அவுட்டா? இதை ஒரு சாக்கா வச்சு என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கறீங்கன்னு நான் தான் தப்பா நினைச்சுட்டேன் போல…” என்று நக்கலாக சொல்லியவள் முகத்தில் தொனித்த கேலியை கண்டுகொண்டவன்,
“நீ ஆயிரம் நினைச்சுக்கோ. எனக்கென்ன? ஆனா அன்னைக்கு ரெஸார்ட்ல அந்த பாத்ரூம் டோரை நீ க்ளோஸ் பன்றதை அவாய்ட் பண்ணியிருந்திருக்கலாம்ன்னு அப்பப்ப தோணுது. மிஸ் பண்ணிட்டேன்…” என சொல்லியவன் முதுகில் சிலபல அடிகளை போட்டவள் முகத்திலும் புன்னகை நிறைந்திருந்தது.
“உலகவரலாற்றில் முதல் முறையாக…” என்றவன் கேலியில் வதனமேல்லாம் சிவந்துவிட,
“பேசினீங்க வலிக்க வாய்ல போடுவேன். மூச்…” என்று அவனை பேசவிடாமல் கைகொண்டு அவன் பேச்சிற்கு தடைவிதித்தாள்.
கேலியும் கிண்டலுமாய் அந்த மாலைநேரம் ரம்யங்களை சுமந்து நின்றது அவர்களுக்காக.
———————————————-
இந்த மூன்று நாட்களில் நிகிதாவின் அருகே கூட செல்லமுடியவில்லை தனாவால்.
கதிரின் மூலம் சுபஷ்வினியையும் அத்தனை சுலபம் யாரும் நெருங்கமுடியவில்லை. அவளுக்கும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.
அதிலும் பெரும்பாலும் வீரவேந்தர் மீசையை முறுக்கியபடி வாசலில் நின்று வருவோர் போவோரை பார்க்கும் பார்வையே அச்சுறுத்துவதாக இருந்தது.
“நம்ம பசங்களை ரெண்டுபேரை அனுப்பிவச்சேன் நோட்டம் விட. மனுஷனா அந்தாளு? சும்மா ரெண்டுதடவை தெருவை சுத்தினதுக்கே கூப்பிட்டு வச்சு விசாரிச்சிருக்கார். வீடு தேடி வந்தோம்ன்னு சொன்ன பசங்களை கழுத்தோட சாத்தி, வீடு பாக்கற மொகரையை பாருன்னு சொல்லி அறைஞ்சு அனுப்பிருக்காரு. டேஞ்சரஸ் ஃபெல்லோ…” என்றிருந்தான் கதிர்.
அதில் அத்தனை ஆத்திரம் தனாவிற்கு. இங்கேயும் இன்னும் சிலர் இருந்துகொண்டு நிகிதாவை பார்த்துக்கொண்டிருந்தனர்.
போதாததிற்கு சங்கீதா அவளைவிட்டு அசைவதாய் இல்லை. அவளுடனே தவம் போல இருந்தாள்.
“நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு கீதா? நிகியை பார்த்துக்க இத்தனைபேர் இருக்கோமே?…” என மனைவியிடம் சொல்லியபோதும்,
“நான் என்ன அவளை என் தலைமேலையா உக்கார வச்சிருக்கேன்? அவ கூட இருக்கேன். சும்மா தான் உக்கார்ந்திருக்கேன். உங்களுக்கு வேலை இருந்தா நீங்க பாருங்க…” என்றிருந்தாள் சங்கீதாவும்.
அதுவும் நிகிதாவின் விஷயம் அம்பலமானதில் இருந்து வேதாவிடம் தன்னிடம் சொல்லியிருக்கலாமே என்று நிகிதாவை விட்டு நகரவில்லை சங்கீதா.
“அவ என் கூட தான் இருப்பா. என்னை எதாச்சும் சொல்லாதீங்க. நான் ஏற்கனவே இதுகெல்லாம் காரணமானவனுங்க மேல பயங்கர ஆத்திரத்துல இருக்கேன். அதை உங்ககிட்ட காமிச்சிருவேன். என்னை போ போன்னு சொல்லி இவ்வளோ டென்ஷன் படுத்தாதீங்க…” என்றிருந்தாள்.
தனாவிற்கு மனைவியின் கோபத்தில் மூச்சே நின்றுவிட்டது. எங்கே இது குழந்தையை பாதிக்குமே என நகர்ந்துவிட்டான்.
வெங்கடேசனின் இறுதி காரிய விசேஷங்கள் எல்லாம் முடிந்து இதோ நான்காம் நாள்.
சொந்தங்கள் விரைவில் கிளம்பவேண்டும் என்று பதினாறாம் நாள் காரியத்தை விரைவிலேயே வைத்து முடித்திருந்தனர்.
முதல்நாள் தான் அனைவரும் கிளம்பியிருக்க அன்று அதிகாலை மீதமிருந்தவர்களும் சென்றிருக்க வீட்டினர் மட்டுமே இப்போது.
தனாவிற்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. ஹாலில் வந்தமர்ந்தவன் பார்வை நிகிதாவின் அறை பக்கம் செல்ல வாசல்பக்கம் யாரோ வரும் அரவம்.
உள்ளே வந்துகொண்டிருப்பவர்களை விழிகள் தெறிக்க பார்த்தவன் கையில் வைத்திருந்த நாளிதழை வைத்துவிட்டு சட்டென எழுந்துவிட்டான்.
“அஷ்வினி இவர் தான் வேதா மேம் பையன். ஜெயதனபாலன்…” என நெடுஞ்செழியன் சுபஷ்வினிக்கு அறிமுகம் செய்தவன்,
“இவங்க மிஸ். சுபஷ்வினி, நான் கல்யாணம் பண்ணிக்க போறவங்க…” என்றான் அத்தனை மரியாதை தொனிக்கும் பெருமித குரலில்.
தன்னை மிஸ்டர் என்று சொல்லாமல் பெயரை மட்டும் சொல்லி அறிமுகம் செய்துவிட்டு, அவளுக்கு மட்டும் மிஸ் என்று சொல்லியதில் உள்ளுக்குள் திகுதிகுவென தீ பற்றியது தனாவிற்கு.
“ஹாங், இல்ல திடீர்ன்னு இவ்வளோ காலையில வந்திருக்காங்களே? அதான்…” என்ற தனா,
“உட்காருங்க…” என்றான் அவர்களிடம்.
“ஹலோ மேம், எப்படி இருக்கீங்க?…” என சுபஷ்வினி கேட்க,
“எதுக்கு இந்த மேம் பார்மாலிட்டீஸ்? செழியன் அவரோட வேலைக்காக மேம் சொல்றார். நீ என்னை ஆன்ட்டினோ, அம்மானோ கூப்பிடும்மா சுபா….” என்றார் கனிவோடு.
“தேங்க் யூ ம்மா. வேதாம்மா. இப்படியே கூப்பிடறேன்…” என்று சொல்லிய சுபஷ்வினி,
“நிகிதா எப்படி இருக்காங்க?…” என்றாள் வேதாவிடம்.
“இருக்காம்மா. உள்ள தான் இருக்கா….” என்ற வேதா,
“செழியன் நீங்க வாங்க. நீ இரும்மா சுபா. உனக்கு காபி கொண்டுவருவாங்க. குடி. வந்திடறேன்…” என்று சொல்லிவிட்டு அவனுடன் உள்ளே சென்றார் வேதா.
“அஷ்வினி நிகிதாக்கிட்ட பேசிட்டு நானே கூப்பிடறேன்…” என்று சொல்லி அவளின் பத்திரத்தை பார்வையில் காண்பித்துவிட்டு உள்ளே செல்லவும் சுபஷ்வினி மீண்டும் அமர்ந்துகொண்டாள்.
அவர்கள் சென்றதும் காபியும் வேலையாள் கொண்டுவந்து தர நன்றி சொல்லி வாங்கிக்கொண்டவள் தன்னுடைய போனை பார்த்தபடி காபியை பருக தனாவிற்கு இருப்பு கொள்ளவில்லை.
தன்னை பொருட்டாக மதிக்காமல் அவள் இலகுவாய் இருப்பதை கண்டவனுக்குள் பெரும்ஜுவாலை தகித்தது.
“உங்க முழுப்பேரே சுபஷ்வினியா?…” என்று தானாகவே பேச்சை துவங்கிவிட்டான் தனா.
“ஆமா, வேற இணைப்பு பேர் இருந்தா மிஸ்டர்.செழியன் சொல்லியிருப்பாரே?…” என்றாள் சுபஷ்வினியும் நிமிர்ந்து பார்த்து.
சுபஷ்வினியின் பட்டென்ற பேச்சும், அச்சமற்ற பதிலும், பார்வையும் ஒருநொடி அவனை ஸ்தம்பிக்க செய்தது.
“வேற ஏதாவது கேட்கனுமா?…” சுபஷ்வினி கேள்வி எழுப்ப,
“ஹாங், இல்ல…” என்றவன்,
“ஆமா, கேட்கனும்…” என்று சொல்லி,
“அந்த ரெஸார்ட் கேஸ்ல எப்படி பயமில்லாம சாட்சி சொல்ல கோர்ட் வரை வந்தீங்க?…” என்றான் தனா அவளிடம்.
“அப்படின்னு யார் சொன்னா?…” என்றவள் பேச்சில் அவன் தடுமாறி பார்த்தான்.
“புரியலை…” தனா கேட்க,
“இல்லை அந்த கேஸ்ல நான் சாட்சி சொல்றேன்னு உங்ககிட்ட வேதாம்மா சொன்னாங்களா? இல்லை செழியன் சொன்னாரா?…” என அவள் மடக்க திணறி போனான் அவன்.
இத்தனைக்கும் அவள் புன்னகைக்கிறாளா, இல்லையா என்றே கண்டறியமுடியாத பாவனை சுபஷ்வினியின் முகத்தில்.
“நான் சாட்சி சொல்றேன்னு மட்டும் தான் உங்களுக்கு தெரியுமான்னு தெரிஞ்சுக்க கேட்டேன். ஆனா நான் சாட்சியும் தான். அதுமட்டுமில்லை, நானும் அந்த ரெஸார்ட் மேல கம்ப்ளைன்ட் குடுத்திருக்கேன்….” என்று சொல்லியவள் முகத்தில் அத்தனை துணிவு.
“என்ன சைலன்ட்டா பார்க்கறீங்க? அது தெரியாதோ?…” என்றாள் தனாவிடம்.
“இல்ல அப்படி இல்லை. சொல்றேனேன்னு தப்பா நினைக்க வேண்டாம்…” என்றவன்,
“ஒரு பொண்ணா இருந்துட்டு எதுக்குமா உங்களுக்கு இந்த வேலை? உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். பேசாம கல்யாணம் முடிச்சு குடும்பம்ன்னு வாழ்ந்துட்டு போகலாமே? பாருங்க, ஒரு மினிஸ்டர் வீட்டுல இல்லாத பாதுகாப்பா? ஆனா எங்க நிகி அவ அப்பாவையே பறி குடுத்துட்டா…”
“ரொம்ப ஆச்சர்யமா இருக்கு தனா ஸார். தி கிரேட் வேதாம்மாவோட பையன் நீங்க இப்படி பேசறது…” என்றவள்,
“பொண்ணா இருந்துட்டு இதை செய்யலாமாவா? அப்படி ஒரு பொண்ணால தான் இந்த உலகத்துக்கு வந்திருக்கீங்க. ஒரு பொண்ணை தானே கல்யாணம் செஞ்சிருக்கீங்க? அந்த பொண்ணால தான் உங்க அடுத்த ஜெனரேஷன் வர போகுது. ரொம்ப ஈஸியா ஒரு பொண்ணா இருந்துட்டுன்னு சொல்றீங்க. இதுக்கு பேசாம நீங்க ஒரு ஆம்பளையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்…” என்றாள் சுபஷ்வினி.
தன்னிடம் அவள் இப்படி பேசுவாள் என எதிர்பாராத தனா தன்னுடைய கோபத்தையும் காட்ட முடியாமல் அதிர்வில் அவஸ்தையுடன் நின்றான்.
இப்படி யாருமே தன்னிடம் இதுவரை பேசியதில்லை. அவள் பேசும் விதமும், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
நெடுஞ்செழியனிடம் அவசரப்பட்டதை போல சுபஷ்வினியிடமும் அவசரப்பட்டு வாயை விடக்கூடாது என்றே பொறுமையாக பார்த்தான் அவளை.
“இந்த நாட்டை உங்கம்மா சட்டத்தை கையில வச்சிட்டு ஆட்சி பன்றாங்க. இந்த வீட்டை உங்க மனைவி ஆட்சி பன்றாங்க. வீடுன்றது நாட்டை விட ரொம்ப நுட்பமா கையாளப்படவேண்டியது. ஆனா பொண்ணான்னு நீங்க ரொம்ப அலட்சியமா சொல்றீங்களே? தப்பில்லையா?…” என்றும் கேட்க,
“இல்லை நான் அந்த அர்த்தத்துல சொல்லலைம்மா…” என்றான் சமாளிப்பாக.
“அப்பறம் என்ன சொன்னீங்க? நிகிதாவோட அப்பாவை காப்பாத்த முடியலைன்னா? எந்த ஒரு விஷயமும் காரண, காரியமில்லாம நடக்கறதில்லை. நிகிதாவோட அப்பா ஒரு தீக்குச்சியா அணைஞ்சு போயிருக்கலாம். ஆனா அதுல பத்திக்கிட்டது பெரும் தீப்பந்தம். சாம்பலாக்கற வரை விடாது…” என்றாள் சுபஷ்வினி.
அவளின் பேச்சில் உள்ளத்தர்த்தம் இருப்பதை போலவும் தெரிந்தது. இல்லாததை போலவும் தெரிந்தது.
“விலகி கண்டுக்காம தப்பிச்சோம்ன்னு போக சொல்றீங்களே, அந்த இடத்துல உங்க மனைவியோ, உங்க பொண்ணோ இருந்திருந்தா இதையே தான் சொல்லுவீங்களா?…” என்றவளின் சொல்லில் உயிராழம் வரை இடி ஒன்று இறங்கியது தனாவிற்குள்.
“என்ன?…” என்றவன் அவளிடம் பேசும் முன் சங்கீதா வந்துவிட்டாள்.
“வாங்க சுபஷ்வினி…” என நிறைமாத வயிற்றுடன் வந்த வேகத்தில் சுபஷ்வினியின் கையை பற்றிக்கொண்டாள்.
“வாழ்த்துக்கள், அதோட உங்களுக்கு ஒரு பெரிய ஹக்…” என்று அவளை அணைத்து விடுத்தாள்.
“அத்தை நீங்க யார் என்னன்னு எல்லாம் சொன்னாங்க. எனக்கு உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்…” என்ற சங்கீதா,
“நிகிதா உங்க கூட வரேன்னு சொல்லிட்டா…” என்றும் கூற தனாவிற்குள் பெரும் பிரளயம்.
“என்ன? என்ன நடக்குது?…” என்றான் தனா.
“நிகிதாவை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்க. அவளுக்கும் ஒரு சேஞ்ச் இருக்கும்ல. அதான். அதை பேச தான் ரெண்டுபேரும் வந்திருக்காங்க. கூடவே அவங்க கல்யாண பத்திரிக்கையை குடுக்கவும்…” என்றாள் சங்கீதா.
தனா அதிர்ச்சியாய் சுபஷ்வினியை பார்க்க அவளின் புன்னகையில் அவனின் தலையே சுற்றியது.
“ஏன் ஸார் நீங்களும் வரீங்களா?…” என்றாள் சுபஷ்வினி இன்னும் அதே புன்னகையுடன்.
‘இல்லை, இது நடக்கவே கூடாது’ என கூப்பாடு போட்ட மனதின் சத்தம் வெளியில் கேட்டுவிடாமல் இருக்க நெஞ்சப்பகுதியில் கையை வைத்து நின்றுவிட்டான் தனா.
வேதா பேசிக்கொண்டே நெடுஞ்செழியனுடன் வர அவன் நிகிதாவை வீல் சேரில் தள்ளிக்கொண்டு நிகிதாவிடமும் என்னவோ சொல்ல அதை கேட்டு லேசாய் தலையசைத்தவள் முகத்தில் துளியளவு புன்னகை நிழலாடியது.