கலகலப்பாய் வளைய வந்த பெண்ணின் குரலே இப்படி அடங்கி போயிருக்க வேதாவிற்கு மனதே ஆறவில்லை.
முதலில் நெடுஞ்செழியன் போனில் சொல்லிய போது கூட அவருக்கு முழுதாய் விருப்பமில்லை.
சரிவராது என்றிருந்தவரை பேசி பேசியே சங்கீதா தான் எடுத்து சொல்லி அவரை சம்மதிக்க வைத்தது.
“அவளுக்கும் ஒரு சேஞ்ச் வேண்டாமா அத்தை? இங்க இருந்தா இன்னும் கஷ்டப்படுவா. அதை பார்த்து நாமளும் வருத்தப்படுவோம். வேற என்ன செய்வோம்? அங்க போகட்டும். பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வோம்….” என்றவள்,
“கல்யாண வீடு வேற. கலகலப்புக்கு பஞ்சமா? அதுவும் சுபஷ்வினி பத்தி நீங்க சொன்னதுல இருந்து நிகியை அனுப்பறதுல தப்பில்லைன்னு தோணுது. இன்னும் தைரியமா இருப்பா நிகி. வேணும்னா நிகிட்டயே அந்த ஏசிபியை கேட்க சொல்லுங்க…” என்றிருந்தாள்.
முதலில் யோசித்த நிகிதாவும் செழியனின் பேச்சில் சரி என்றிருக்க இதோ அவளை கிளப்புவதில் ஆயத்தமாகிவிட்டார் வேதாவும்.
“என்னம்மா என்ன பன்றீங்க நீங்க?…” தனா அங்கே வைத்தே வேதாவை கண்டனமாய் பார்க்க,
“பயம் இருக்கத்தானே செய்யும் வேதாம்மா? பயம்ன்ற உணர்வு இருந்தா தான் எல்லாத்துலயும் ஒரு கவனம் இருக்கும். எனக்கும் கூட பயம் தான் மணிகண்டனோட கிரிமினல் பெஸ்ட்டீஸ் யாராவது என் கையில கிடைச்சா நானே என் கையால அவங்களை எதாச்சும் செஞ்சிடுவேனோன்னு பயமா இருக்குது…” என்றாள் பல்லை கடித்துக்கொண்டே சுபஷ்வினி.
“செய்யிறதா? செதில் செதிலா வெட்டி எறியனும். அத்தனை சுலபமா அவனுங்களுக்கு பனிஷ்மென்ட் கிடைச்சிடக்கூடாது…” சங்கீதாவும் அவளோடு உஷ்ணத்துடன் பேச நெடுஞ்செழியன் முகம் அவளை எண்ணி கவலையில் வாடியது.
தனாவின் சுயரூபம் தெரிந்தால் இந்த குடும்பம் அதனை எப்படி ஜீரணிக்க போகிறதோ என மனதெல்லாம் பாரமாகியது.
நெடுஞ்செழியன் பார்வை சங்கீதாவின் மேடிட்ட வயிற்றில் பதிந்து மீள சுபஷ்வினி அவனின் கையை பிடித்து அழுத்தினாள்.
“தப்பு செஞ்சவங்க அதுக்கான தண்டனையில இருந்து தப்பிக்க முடியாது மேம். உங்க கண்ணு முன்னாடி அவங்களை நிறுத்தும் போது நீங்க நினைச்சதை செய்ங்க…” என்ற நெடுஞ்செழியன்,
“நீங்க கவலைப்படாதீங்க ஜெயதனபாலன். இங்க கவனிக்கவே உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். இப்ப இந்த கேஸ் விஷயம் வேற. எதுக்கு உங்களுக்கு டென்ஷன்? நிகிதாவை நாங்க கொஞ்சநாள் பார்த்துக்கறோம். உங்களால என்ன செய்யமுடியுமோ அதை நீங்க செய்ங்க…” என்றான் தனாவிடம் மறைமுக சவாலாக.
பொடிவைத்து பேசி தனாவின் கோபத்தை விசிறிவிட்டுக்கொண்டே இருந்தனர் நெடுஞ்செழியனும், சுபஷ்வினியும்.
அவர்களிடம் எதையும் பேசிவிடாமல், வார்த்தைகளை கவனமாக கட்டுப்படுத்திக்கொண்டான்.
தான் பேசியதில் தானே அவன் இதையெல்லாம் கண்டுகொண்டது. நெடுஞ்செழியனின் சாதுர்யத்தை அங்கே கண்டுவிட்டான் தனா.
“என்ன மேம், உங்க மகன் அமைதியாகிட்டார்?…” என நெடுஞ்செழியன் வேதாவிடம் கேட்க,
“நிகிதாவை நினைச்சு தான் கவலையா இருக்கும் போல? அதான் அவன் மறுக்கமுடியாம இருக்கான்…” என மகனின் தோளை தட்டிக்கொடுத்தவர்,
“துக்கம் நடந்து நாலு நாள் தான் ஆகியிருக்கு. இப்படி விசேஷ வீட்டுக்கு அனுப்பலாமான்னு தெரியலை. அதுவேற ஒருபக்கம் நெருடலா இருக்கு…” என்றார் வேதா சுபஷ்வினி, நெடுஞ்செழியனை பார்த்து.
“எல்லாத்துக்கும் மனசு தான் காரணம். அதுவும் நிகிதாவுக்காக தானே? அவங்கப்பா கூடவே துணையா இருந்து மகளை வழி நடத்துவர். நீங்க வருத்தப்படாதீங்க…” என நெடுஞ்செழியன் அவரிடம் சொல்லிவிட்டு சுபஷ்வினிக்கு தலையசைத்தான்.
“ஓகே வேதாம்மா நாங்க கிளம்பறோம். எங்க கல்யாணத்துக்கு கண்டிப்பா நீங்க வரனும்ன்னு ஆசைப்படறோம்…” என்றவள் நெடுஞ்செழியனுடன் அப்போதே அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டாள்.
“அடடா…” என்றவர்,
“நல்லா இருங்க. நல்லா இருக்கனும்…” என வேதாவும் மனதார ஆசிர்வதித்து சங்கீதாவை பார்க்க,
“எல்லாம் ரெடி அத்தை. இன்வைட் பண்ண வராங்கன்னு சொல்லவும் தயாரா வச்சிருக்கேன்…” என்று பூ, பழம், புடவை, மஞ்சள், குங்குமம் என எல்லாம் நிரம்பிய தட்டை அவரின் கைகளில் தந்தாள் சங்கீதா.
“நல்லவ சரி. அது என்ன பாவம்?…” என்று சங்கீதா நிகிதாவிடம் சிரிப்போடு கேட்க,
“ஹ்ம்ம், பாவம் தான். நீங்களா எல்லாத்தையும் இழுத்து போட்டு செய்யறீங்க. இப்ப கூட நான் கிளம்பிட்டா என்னை நீங்க ரொம்ப மிஸ் பண்ணுவீங்க இல்லையா? அதான்…” என்ற நிகிதாவின் கண்ணில் நீர் நிறைந்துவிட்டது.
“அச்சோ, என்னவாம் தங்கப்புள்ளைக்கு? இப்படித்தான் அழுதுட்டு போவியா நீ? அழாம இருக்கனும்ன்னு தானே அங்க அனுப்பி வைக்கறோம். அப்பறம் என்னடா?…” என்றவள் நிகிதாவின் கண்ணீரை துடைத்தாள்.
சங்கீதா அந்த வீட்டிற்கு திருமணம் செய்து வந்த பொழுது நிகிதா சின்ன குழந்தை.
தாயில்லா குழந்தை வேறு என்பதால் இருவருக்குமான பந்தம் அத்தனை ஆத்மார்த்தமாக இருந்தது.
முன்பிருந்து இப்போது சங்கீதா தாயாகும் வரை குழந்தை இல்லை என்று மறுகும் பொழுதுகளில் ‘நானில்லையா உன் மகளாக?’ என நிகிதாவும், ‘என் பொண்ணுடா நீ’ என சங்கீதாவும் அணைத்துக்கொள்வர்.
மீண்டும் நிகிதா கண்ணீர் விட தாளமுடியவில்லை சங்கீதாவிற்கு. நின்றவாக்கில் தன் மேடிட்ட வயிற்றுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள் சங்கீதா.
அந்த காட்சியை தனாவை தவிர மற்றவர்கள் நெகிழ்ச்சியுடன் காண தனா இறுக்கம் கலந்த கலவரத்துடன் பார்த்தான்.
“இதுக்கு தான் போக வேண்டாம்ன்னு சொல்றேன்…” என தனா இதையே வாய்ப்பாக நினைத்து சொல்ல,
“நிகிதாவை எங்களோட அனுப்ப மனசே இல்லை போல உங்களுக்கு?…” என்றான் நெடுஞ்செழியன் தனாவிடம்.
“ஆமா, அனுப்ப விருப்பம் இல்லை தான். அதைதான் முதல்ல இருந்தே சொல்லிட்டிருக்கேன்…” என்று கோபமாய் தனா பேச,
“தனா என்ன பன்ற நீ?…” என்று வேதா சத்தம் போட்டார்.
“ஸாரி ம்மா…” என தனா சொல்ல,
“உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை? நிகியை அங்க தனியா அனுப்ப பயமா இருக்கு. அதானே?…” என சங்கீதா கேட்க,
“ஆமா, அதோட அவ காலும் இப்ப சரியில்லை. எல்லாத்துக்கும் ஒருத்தர் ஹெல்ப்க்கு வேணும். இப்படி ஒரு சூழ்நிலையில இன்னொரு வீட்டுல போய் அவளை விட முடியுமா? சொல்லபோனா அது அவங்களுக்கும் தொந்தரவா தான் இருக்கும்…” என்றான் தனா படபடவென்று.
“அந்த கவலையே வேண்டாம் உங்களுக்கு. அஷ்வினியோட அத்தை ஹெட்நர்ஸ் தான் அவங்க ஊர் ஜி.ஹெச்ல. அவங்க எங்களோட வந்து இருந்து நிகிதாவை பார்த்துப்பாங்க….” என கூறிய நெடுஞ்செழியன்,
“அதோட இப்ப இங்க உங்களுக்கு தான் வேலை அதிகம். மேம்க்கு துணையா இருக்கனும், உங்க வொய்பை கேர் பண்ணனும். கூடவே உங்களையும் பார்த்துக்கனும். நிகிதா விஷயத்துலையும் ஒரு பார்வை இருக்கனும். எவ்வளோ இருக்கு?…” என்று நக்கலாக சொல்லி முடித்தான்.
தான் என்ன சொல்லியும் அதற்கு தயாராக ஒரு பதிலை வைத்திருப்பதுடன் தன் ஆவேசத்தை தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கின்றனரே என தனாவிற்கு இயலாமையில் எதுவும் செய்துவிடுவோமோ என பயம் வந்துவிட்டது.
“நீங்க தப்பா நினைக்காதீங்க. அவருக்கு நிகி மேல ரொம்ப பாசம். எங்களுக்கு முதல் பொண்ணு நிகின்னு எப்பவும் சொல்லிட்டே இருப்பார். நடந்த விஷயத்தால ரொம்ப அப்செட்டா இருக்கார். அதுதான்…” என சமாளித்த சங்கீதா,
“அத்தை நான் இவங்க கூடவே போய்ட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேனே? நிகிக்கும் அங்க ஈஸியா இருக்கும். நேர்ல நான் போய் பார்த்துட்டு வந்தா இவருக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்….” என்றாள் வேதாவிடம்.