நெடுஞ்செழியன் வேதாவின் வீட்டிலிருந்து கிளம்பும் பொழுதே சொல்லிவிட்டான் தாங்கள் நிகிதாவுடன் வந்துகொண்டிருப்பதாக.
காஞ்சனாவும், சோபியாவும் தயாராக இருந்தனர் அவர்களை காண்பதற்கு. சுபஷ்வினியும் வருவாள் என்று தெரியும் என்பதால் சோபியா அதற்கொரு ஏற்பாட்டையும் செய்திருந்தாள்.
“அவன்கிட்ட அடி வாங்குவ நீ…” என காஞ்சனா மருமகளிடம் சொல்ல,
“செழியண்ணா அடிக்கிறாங்களா, அசடு வழியுறாங்களான்னு பார்ப்போமே?…” என சோபியா கண்ணடித்தாள்.
சுபஷ்வினியின் தாய்மாமாவான வீரேந்தரும் அவரின் மனைவி சாலாட்சியும் கூடவே அங்கே வந்திருந்தனர்.
வீட்டில் பேசி முடிவுக்கு வந்ததும் தான் நிகிதாவை அழைக்க வருவதாய் வேதாவிடம் பேசியிருந்தான் நெடுஞ்செழியன்.
இன்னும் சுபஷ்வினியின் வீட்டினருக்கு தனாவை பற்றி தெரிந்திருக்கவில்லை. நிகிதாவை பாதுகாப்பிற்காகவும், அவளின் மனஅமைதிக்காகவும் என்று அழைக்கவிருப்பதாய் சொல்ல மறுக்கவில்லை யாரும்.
இப்போது நிகிதாவை உடன் இருந்து பார்த்துக்கொள்ள சாலாட்சியை தான் நெடுஞ்செழியன் சொல்லியிருக்க சுபஷ்வினியின் வீட்டினர் எல்லாம் சென்னையிலேயே தங்கிவிட்டனர்.
உறவுகளுக்கு பத்திரிக்கை வைக்கவேண்டும் என யோசிக்கும் பொழுதே சுபஷ்வினியின் அக்கா கணவரும், சிங்கமுத்துவும் சேர்ந்து சென்று வைத்துவிட்டு வருவதாக சொல்லியிருக்க அந்த பிரச்சனையும் முடிந்தது.
இனி திருமண வேலைகள் மட்டுமே அவர்களுக்கு. பெரிதாய் செய்யவில்லை. கோவிலில் வைத்து திருமணம். ஹோட்டலில் வரவேற்பு போல சின்னதாய் ஒரு ஏற்பாடு.
சுபஷ்வினியிடம் கேட்டு முடிவு செய்திருக்க இப்போதைய சூழ்நிலையில் பெரிதாய் செய்யவும் யாருக்கும் மனதில்லை.
எப்போது என்ன நடக்குமோ என்று ஒருவித பதட்டத்திலேயே தான் இருந்தார்கள் சுபஷ்வினியின் வீட்டினர்.
அதிலும் நிகிதாவின் தந்தையின் மரணம் அவர்களை இன்னுமே அதிகமாய் பதட்டத்திற்குள்ளாக்கியது.
எல்லாவற்றிற்கும் மேல் மகளின் விருப்பம். அவர்களால் அதனை தாண்டி செல்லமுடியவில்லை.
இத்தனைநாட்கள் வேண்டாம் என்று மறுத்து நின்றவர்கள் இப்போது மறுக்கமுடியாமல் நின்றனர்.
“பிரச்சனைகளோடவே வாழனும்ன்னு முடிவு பண்ணிட்ட நீ…” என்றார் சிங்கமுத்து.
“நம்ம பாதுகாப்பா இருக்கோம்ன்ற எண்ணம் மட்டுமே நம்மை சந்தோஷமா, நிம்மதியா வச்சிருக்குப்பா. அது சூழ்நிலையை, இடத்தை பொருத்து இல்லை. மனசை பொருத்து…” என்ற சுபஷ்வினி,
“அவரோட வாழ்க்கைமுறை குற்றவாளி, போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கேஸ் ஜெயில்ன்னு இருந்தாலும் எங்களோட தனிப்பட்ட வாழக்கைன்றது நிச்சயம் ஒரு பூந்தோட்டம் தான். அதை உறுதியா என்னால சொல்லமுடியும்…” என்றாள் தெளிவாக.
அவளின் இந்த தெளிவும், பிடித்தமும் பெரியவர்களுக்கு அமைதியை விதைக்கவில்லை.
‘என் பெண் ஆசைப்பட்டதை போல அவள் வாழவேண்டும்’ என்ற வேண்டுதலுடான எதிர்பார்ப்பை தான் விதைத்தது.
இப்போது வரை முழுமனதாக இந்த திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்தனரா என்றால் இல்லை.
பதட்டத்தில் செய்வது எந்தளவிற்கு சரியாக வரும் என்ற யோசனைகளை எல்லாம் நெடுஞ்செழியனின் ஒற்றை செயல் தகர்த்துவிட்டது.
சிங்கமுத்துவிற்கு தெளிவாகவே தெரிந்திருந்தது நெடுஞ்செழியனை தவிர்த்து வேறொரு வாழ்க்கையை மகள் ஏற்படுத்திக்கொள்ள போவதில்லை என்று.
தன்னிலிருந்து ஆரம்பித்தது தான். தான் மாப்பிள்ளை என அவனை காண்பித்ததினால் அவனை பார்த்து பிடித்தது தான்.
ஆனாலும் தன்னுடைய மறுப்பும் கூட மகளிடம் அந்த பிடித்தத்தை உடைக்கவில்லையே.
இனி மனைவி ராதிகா சொல்லியதை போல ஆகவேண்டியவற்றை தான் பார்க்கவேண்டும் என முடிவுக்கு வந்துவிட்டார்.
காஞ்சனாவிடம் கலந்து பேசி எல்லாவற்றிற்கும் ஒரு திட்டமிடலை வகுத்தாகிற்று.
அதற்கு ஆரம்பமாய் இதோ நிகிதாவை அழைத்து வந்திருந்தனர் நெடுஞ்செழியனின் வீட்டிற்கு.
வாகனம் வாசலில் வந்து நின்றதுமே சாலாட்சியும், சோபியாவும் வேகமாய் சென்றனர்.
நிகிதா இறங்குவதற்கு ஏதுவாய் சுபஷ்வினி ஒருபக்கம் வந்து நிற்க சங்கீதாவின் கேர் டேக்கர் ஒருபக்கம் வந்து நின்றார்.
சர்க்கர நாற்காலியை கொண்டுவந்து வைத்த நெடுஞ்செழியன் தன் வீட்டினரை பார்க்க,
“வாங்க வாங்க எல்லாரும் வாங்க…” என புன்னகை முகமாய் அழைத்தாள் சோபியா.
“இவங்க யார்?…” என சங்கீதா நெடுஞ்செழியனிடம் கேட்க,
“என் தம்பி வொய்ப் சோபிக்கண்ணு. எங்கவீட்டு அறுந்த வாலு. கொஞ்சம் சேட்டை…” என சுருக்கமாய் அவன் சிரிப்புடன் கூற,
“இதெல்லாம் சும்மா பில்டப். நம்பாதீங்க….” என்றவள்,
“சாலாம்மா எங்க ஆரத்தி தட்டை?…” என பின்னால் திரும்பி தேடினாள் சோபியா.
“வாங்கம்மா…” என காஞ்சனாவும், சாலாட்சியும் அவர்களை அழைத்துவிட்டு,
“வா சுபா…” என்றார் காஞ்சனா தன் வருங்கால மருமகளிடம்.
“இல்ல நான் கிளம்பறேன் அத்தை….” சுபஷ்வினி வாசலில் நின்றவாறே சொல்லிவிட்டு நெடுஞ்செழியனை பார்க்க,
“ப்ச், அவ்வளோ சென்டியா எல்லாம் யோசிக்க வேண்டாம். இப்ப எல்லாமே அல்ட்ரா மார்டன் தான். இந்த கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு மாப்பிள்ளை வீட்டுக்கு வர கூடாதுன்ற சம்பிரதாயம் எல்லாம் யார் ஃபாலோ பன்றா?…” என்றாள் சோபியா.
“அதுவும் சரிதான்…” சங்கீதாவும் சொல்ல,
“உள்ள வா சுபா. சொல்றாங்கல்ல…” என சாலாட்சியும் சொல்ல நெடுஞ்செழியன் லேசாய் தொண்டையை கனைத்தான்.
“வாய திறந்தே சொல்லலாம். இதெல்லாம் தேவையா?…” என அவனை கிண்டல் பேசினாள் சோபியா.
“ஏன் சொல்லாம? மாட்டேனா என்ன?…” என்றவன்,
“உள்ள வா அஷ்வினி…” என்றான் இதழ்களுக்குள் மென்ற புன்னகையுடன்.
“எல்லாம் கூப்பிடவேண்டிய ஆள் கூப்பிட்டா தான் வருவாங்க போல? ஆனா நாங்க சரியா தான் கூப்பிடுவோம்…” என்ற சோபியா,
“இப்படி சேர்ந்து வந்து நில்லுங்க முதல்ல…” என சொல்லி ஆரத்தி தட்டை எடுக்க நெடுஞ்செழியன், சுபஷ்வினி இருவருமே திகைத்துவிட்டனர்.
“சோபி…” என நெடுஞ்செழியன் முறைக்க,
“முதல்முதல்ல பொண்ணு நம்ம வீட்டுக்கு வருது. வரவேற்பு அட்லீஸ்ட் இந்தளவுக்காவது இருக்க வேண்டாமா?…” என்று அவனின் வாயை அடக்கினாள் அவள்.
“அத்தை என்ன இதெல்லாம்?…” சுபஷ்வினி சாலாட்சியை பார்த்து கேட்க,
“குட், போட்டோஸ் அனுப்பு. நான் பார்த்துக்கறேன்…” என சொல்லியவன் மீண்டும் வீட்டிற்குள் செல்ல ஹாலில் ஒருவரும் இல்லை.
“வாலு எங்க எல்லாரும்?…” என அடுக்களையில் இருந்து வெளியே வந்த சோபியாவிடம் கேட்க அவள் கவனிக்கவே இல்லை அவனை.
“சோபி…” என அவள் பின்னால் சென்றவன் கையை பிடித்து நிறுத்தவும்,
“ஹாங், என்னண்ணா?…” என்றாள் சோபியா.
“ஒண்ணுமில்லையே…” என சொல்லி கழன்று கிடந்த மிஷினை காதில் பொறுத்தவும் அசட்டு சிரிப்பு சிரித்தவள்,
“இது ஒன்னு, நான் கவனிக்கிறதே இல்லை. சுபாக்காவுக்கு பழங்களை எடுத்து குடுத்தேனா. கை பட்டு விழுந்திருச்சு போல…” என்று இன்னும் நன்றாக காதில் பொருத்திக்கொண்டாள்.
“அதனால என்ன? யாரும் இல்லையேன்னு தேடினேன். வேறோன்னுமில்லடா…” என நெடுஞ்செழியன்.
“சுபாக்கா எல்லாருக்கும் ஜூஸ் போடறேன்னு கிட்சன் போனாங்க. கேர்டேக்கர் அக்காவும் அங்க தான் இருக்காங்க. நான் இந்த தண்ணியை குடுக்க போறேன் உள்ள இருக்கறவங்களுக்கு…” என மடமடவென ஒப்பித்துவிட்டு செல்ல நெடுஞ்செழியன் புன்னகையுடன் அடுக்களை பக்கம் சென்றான்.