தனக்கெதிரே எரிந்துகொண்டிருந்த தீயின் ஜூவாலையினால் உண்டான வெம்மையில் அப்பகுதியின் குளிர்ச்சி சற்றே குறைந்திருந்தது.
சுபஷ்வினியின் பார்வை அதில் தான் இருந்தது. மெல்லிய புன்னகை இதழ்களில் மினுங்க முகத்தில் மலர்ச்சியும் அவள் கண்களை தழுவியிருந்தது.
“என்ன ண்ணா இவனுங்க போட்டோ ஷூட் இன்னுமா முடியலை? கேம்ப் ஃபயர்ல கூட சின்ஸியரா எடுக்கறானுங்க? அப்ப கல்யாணத்துல என்ன எடுப்பாங்க புதுசா?….” என பூச்சி கிண்டலாய் பூபாலனிடம் கேட்க,
“முதல்ல கல்யாணம் பண்ணி வைக்கிற லிஸ்ட்ல இருந்து உன்னையும் என்னையும் எடுப்பாங்க. வந்த வேலையை தவிர்த்து எல்லா வேலையும் பார்க்கிற நீ…” என்றான் பூபாலன்.
ரெஸார்ட்டில் இப்போது அத்தனையாய் கூட்டமில்லை. குடும்பமாய் இரவு தங்குவதற்கு இருப்பது மூன்று குடும்பங்கள் மட்டும்.
மற்ற அனைவரும் இப்படி அலுவலக பணி நிமித்தம், தோழிகள் சேர்த்து என்று ஒரு கூட்டம்.
நண்பர்களாய் சிலர், சுபஷ்வினியின் அலுவலக தோழிகள் என்று மட்டுமிருக்க இதுவே சொற்பம் தான் என்றிருந்தது.
நேரம் செல்ல செல்ல நெடுஞ்செழியன் முகத்தில் இலகுத்தன்மை மறைய முயன்று கொண்டிருந்தது.
அவனின் விழிகள் அங்கிருக்கும் ஒவ்வொருவரையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தது.
உள்ளுக்குள் சிறு கலக்கம். இதில் யாருக்கு என்னவென்று தெரியாத சஞ்சலம். அதில் சுபஷ்வினியும் இருக்க இன்னுமே ஒருவிதமாய் சரியில்லாததை போல உணர்ந்தான் நெடுஞ்செழியன்.
வந்ததும் அவளை பார்த்து பேசியதோடு சரி. அதன் பின் அவளை நெருங்க நினைக்கவில்லை அவன்.
அதுவும் விடுதி மேற்பார்வையாளர்கள் தங்களின் அடையாளங்களை கண்டுகொண்டதை கவனித்துவிட்டவனின் முன்னெச்சரிக்கை உணர்வு சுபஷ்வினியிடம் பேச தடுத்தது.
தான் சென்று அவளிடம் ஏதேனும் கூறி அதுவே வந்த வேலைக்கு இடைஞ்சலாகிவிட்டால்? அதனைகொண்டும் அவன் மௌனமாகி போனான்.
எதுவாகினும் பார்த்துக்கொள்ளலாம் என்று துணிந்து நின்றான். எத்தனை எத்தனையோ வழக்குகளை பார்த்தவனுக்கு இது தெரிந்து பேரதிர்ச்சி.
இப்படி ஒரு வியாபாரம் நடப்பது இதுவே அவன் கவனிப்பில் முதன்முறை. உள்ளமெல்லாம் கொதித்து வர அதனை காட்டிக்கொள்ளாமல் இருக்க அரும்பாடுபட்டு போனான் நெடுஞ்செழியன்.
“ண்ணா என்னாச்சு? உங்க முகம் மாறிட்டே இருக்கே?…” விமல் அவனின் காலை லேசாய் அசைக்க,
“கொத்தா சிக்கட்டும். மாட்டினா சுண்ணாம்பு காவாயில இறக்கிருவேன்டா இவனுங்களை…” என பல்லை கடிக்க, ‘ஹோ’ என்ற கூச்சலும், கை தட்டலும் அவ்விடத்தை நிறைத்து அவனை திசைதிருப்பியது.
“பாடு சுபா, ப்ளீஸ் எங்களுக்காக. பாடு…” என சுபஷ்வினியின் தோழிகள் அவளிடம் சிறிய மைக் ஒன்றை நீட்டி பாட சொல்லிக்கொண்டிருக்க அவள் மறுப்பாய் தலையசைத்தாள்.
அந்த விடுதி முழுவதுமிருந்த மக்கள் ஆங்காங்கே இருந்தபடி இந்த கலாட்டாக்களை கவனித்தும் கவனியாமல் தான் இருந்தனர்.
சற்று முன்னர் தான் இரவு உணவு முடிந்திருந்தது. அனைவருமே உறங்க செல்லும் முன் வெளியே பூங்காவில் நடப்பதும், அமருவதுமாய் நேரத்தை போக்கிக்கொண்டிருந்தனர்.
இளைஞர்கள், வயது பெண்கள் என அந்த இளவட்டங்களின் விளையாட்டுக்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையை தெளித்தது.
ஆடல் பாடல் என ஒவ்வொருவரும் கொண்டாட்டமாய் பொழுதை நீட்டிக்க சற்று தள்ளி அமர்ந்து இதனை பார்த்துக்கொண்டிருந்தனர் நெடுஞ்செழியனும் அவனுடன் வந்திருந்தவர்களும்.
“எனக்காக ப்ளீஸ் சுபா. ஒரு ரெண்டு பாட்டு மட்டும் பாடேன்…” என மணப்பெண்ணாக போகும் அவளின் தோழி சொல்ல,
“விசாலி ப்ரெண்ட் நல்ல சிங்கர்ன்னு சொல்லி உங்க ட்ரூப்பை எங்க ரிசப்ஷனுக்கு புக் பண்ணினோம். இப்படி பன்றீங்களே? என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப ஈகரா வெய்ட் பன்றாங்க…” என்றான் அவளின் தோழியை மணந்துகொள்ள போகும் அந்த மணமகன்.
“அதானே இவளுக்கு பேசவா சொல்லித்தரனும். ஆனா பேச வேண்டியதை மட்டும் பேசமாட்டா…” என அதனை கண்டு பொறுமினான் நெடுஞ்செழியன்.
“மைன்ட் வாய்ஸா?…” பூச்சி நெடுஞ்செழியனருகே சென்று கேட்க,
“சத்தமாவே பேசினாலும் இதையெல்லாம் காதுல வாங்க கூடாது நீ…” என அவன் முறைக்க,
“ரைட் ண்ணா…” என்று மீண்டும் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்துகொண்டான் பூச்சி.
நெடுஞ்செழியன் முகத்தில் அவனின் செயலால் விளைந்த புன்னகையுடன் தனது போனையும் எடுத்து பார்த்தான்.
குறுஞ்செய்தி வந்திருந்தது. உடனே அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டவன் மற்றவர்களுக்கு கண்ணை காண்பித்துவிட்டு சற்று தள்ளி எழுந்து சென்று பேச ஆரம்பித்தான்.
“செழியன்…” என்ற அழைப்பு கேட்கவுமே,
“இப்ப வரை சந்தேகப்படற மாதிரி எதுவும் நடக்கலை. ஆனா என்னை யார்ன்னு தெரிஞ்சுக்கிட்டாங்க போல. வாட்ச் பன்றாங்க…” என்றான் நெடுஞ்செழியன்.
“ஓஹ், என்ன பண்ண போறீங்க?…” என்றவரின் கேள்விக்கு,
“என்ன பண்ணனும்னு வந்தேனோ அதை தான். கண்டுபிடிச்சு கவனிச்சிட்டு வராங்களே தவிர வேற எதுவும் இல்லை. பார்த்துக்கலாம்…” என்றான் அவன் தன் முன் நெற்றியில் விழுந்த சிகையை கோதியபடி.
“என்ன எமர்ஜென்ஸினாலும் உடனே கால் பண்ணுங்க செழியன். நான் அந்த ஏரியா டிபார்ட்மென்ட் ஆளுங்களை அனுப்பிறேன்…” என்று அவனிடம் பேசுபவர் கூற,
“நான் ஏற்கனவே சொன்னது தான். என்கிட்ட குடுத்துட்டா அதோட விட்டுடுங்க. நான் கேஸை முடிச்சிட்டு சொல்றேன். அதுவரை யாரையும் அலர்ட் பண்ண வேண்டாம். அவசியமில்லை….” என்றான் கடினத்துடன் நெடுஞ்செழியன்.
“ஹ்ம்ம், இருந்தாலும் சொல்லவேண்டியது என் கடமை. நாம புத்திசாலியா இருந்தாலும் நம்ம எதிரி புத்தியோட பலசாலியாவும் இருந்தா நாம முன்னேற்பாடா இருக்கறது தப்பும் இல்லை….”
“தப்புன்னு நான் சொல்லவே இல்லையே. தவறிட கூடாதுன்னு பார்க்கறேன். சப்போஸ் அதனால கூட யாரும் தப்பிச்சிட்டா?…” என்றவனின் பேச்சை கேட்டிருந்தவரும் கூட அந்த கூற்றை உணர்ந்து தான் இருந்தார்.
“இந்த கான்பிடன்ட் தான் வேணும் செழியன். அதான் நான் உங்களை தேடி இந்த வழக்குல சம்பந்தப்படுத்தினேன்…” என்றவரிடம்,
“ரொம்ப நேரம் பேசிட்டோம்ன்னு நினைக்கறேன்…” என சொல்லியவன் அதற்கு மேல் தொடராமல் பேச்சை நிறுத்திக்கொண்டான்.
இங்குமங்குமாய் நடந்துகொண்டே பேசியவன் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு இருந்தது.
அதனை வைத்து யாரிடமோ சிரித்து சந்தோஷமாய் பேசுகிறான் என்று தான் பார்ப்பவர்கள் கண்டுகொள்ள முடியுமே தவிர அவன் பேசியதில் ஒரு வார்த்தை கூட நெடுஞ்செழியனை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தவனின் காதில் விழவில்லை.
பேசியபடியே சற்று தூரமாய் மேடான புல்வெளி பக்கம் நடந்து வந்திருந்தான் நெடுஞ்செழியன்.
அங்கே எவருமற்று அலங்கார விளக்குகள் மட்டுமே சுற்றிலும் இருக்க அந்த விளக்கின் வெளிச்சத்தை சுற்றிக்கொண்டிருந்தது சிறு சிறு வண்டுகளும், பூச்சிகளும்.
அவற்றை பார்த்துக்கொண்டே வந்த வழி திரும்பி நடந்தவனின் பார்வை நொடியில் பக்கவாட்டில் எதார்த்தமாக பார்ப்பதை போல பதிந்து மீள ஒரு உருவம் நகர்ந்து மறைந்தது.
அதனை கவனியாததை போல மெல்லிய விசில் சத்தம் ஒலிக்க நடக்க ஆரம்பித்தான் நெடுஞ்செழியன்.
“ஸார் யார்கிட்ட பேசினாருன்னு தெரியலை. ஆனா ரொம்ப நேரம் சிரிச்சு சிரிச்சு பேசிட்டிருந்தார். எனக்கென்னமோ பார்க்க அவரோட ஆளா இருக்குமோன்னு தோணுது…” என்றான் நெடுஞ்செழியனை பார்வையிட்டவன் மேனேஜரிடம்.
“எப்படியா சொல்ற? அப்ப இங்க ஒரு பொண்ணு சொல்லுச்சுன்னு வந்து சொன்னியே? அந்த பொண்ணு யாரு?…” என மேனேஜர் குழம்பினார்.
சுபஷ்வினியும் அவளின் தோழியும் பேசிய சம்பாஷனையை வைத்து தான் நெடுஞ்செழியன் யார் எனவும், ஒருவேளை சுபஷ்வினி அவனுக்கு வேண்டப்பட்ட பெண் என்றும் யூகம் செய்திருக்க இப்போது இவன் என்ன புதிதாய் சொல்கிறான் என குழம்பிவிட்டார்.
“நீ நல்லா பார்த்தியா?…” என மீண்டும் பணியாளிடம் மேனேஜர் வினவ,
“நல்லா தெளிவா பார்த்தேன். என்ன பேசினார்ன்னு மட்டும் கேட்கலை. ஆனா கண்டிப்பா யாரோ அவருக்கு பிடிச்ச பொண்ணுக்கிட்ட தான் பேசியிருக்கனும். சொந்தக்காரங்களோ, அம்மாவோ, இல்ல ப்ரெண்டோ இருந்தா என்னத்துக்கு இவ்வளோ ரகசியமா பேசனும்?…” உறுதியாய் அவன் சொல்ல,
“சரி நான் ஸார்க்கு பேசிக்கறேன். நீ அங்க கவனி…” என்ற மேனேஜர் தனக்கு மேலானவனிடம் விஷயத்தை கூற சென்றான்.
அவ்விடத்தை சுற்றி பார்ப்பதை போல நடந்து வந்த நெடுஞ்செழியனின் காதில் இவ்விஷயம் பட்டும் படாமல் விழ தலையசைத்தபடி அவ்விடம் விட்டு அகன்று கீழே இறங்க ஆரம்பித்தான்.
உன்னோடு சேரும் ஒரு நேரமே
என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
சுபஷ்வினியின் குரல் அவனின் காதில் தேனாய் பாய பாடலை அனுபவித்து கேட்டபடி அவளை பார்த்துக்கொண்டே கீழிறங்கி வந்தவன் மனதின் வெம்மை மெல்ல குளுமையாவதை போலொரு பிரம்மை.
லெதர்கோட் அணிந்திருந்தவன் கை விரல்கள் பேண்ட் பாக்கெட்டினுள் தாளமிட ஒவ்வொரு பாத எட்டுக்களுக்கும் அவளின் ராகம் அவனை மீட்டியது.
அவனின் வருகையை பார்த்து பாடிக்கொண்டிருந்தவளின் கண்களை நிறைத்தவனில் இருந்து விழிகளை அகற்றவே இல்லை சுபஷ்வினி.
மெல்லிய கரகோஷமும், விசில் சத்தமும் சுபஷ்வினியை நிகழ்விற்கு கொண்டுவர அதனை முகமெல்லாம் நேசம் பூக்க பார்த்திருந்த நெடுஞ்செழியன் பார்வையில் அப்பட்டமான பாராட்டுதல்.