“இது போதும் ஆன்ட்டி. இது சங்கீதாவுக்கு. பாதி இனிப்பு மட்டும் போட்ட ஜூஸ். மத்தவங்களுக்கு எடுத்துட்டு போங்க. நான் இதையும் பிழிஞ்சுட்டு வரேன்…” என்றாள் அவரிடம்.
அவர் பழச்சாறு தம்ளர்கள் நிரம்பிய ட்ரேயை எடுத்து செல்லவும் உள்ளே நுழைந்தான் நெடுஞ்செழியன்.
“ஹ்ம்ம், வந்தன்னைக்கே டேக்கோவர் பண்ணியாச்சு போல?…” என கிண்டலுடன் மேடையில் சாய்ந்து நிற்க,
“என்னை பார்த்தா எப்படி தெரியுது?…” என்றாள் சுபஷ்வினி.
“சொல்லனுமா? சொல்லிடவா?…” என மெல்லிய குரலில் கேட்க அவனின் கேள்வியில் மின்னிய முகத்தை மறைத்தபடி,
“உங்களுக்கு ஜூஸ் போடவா? லன்ச் இன்னும் ரெடியாகலை…” என்று அடுத்ததை எடுத்து பிழிய,
“நான் லன்ச் கேட்கவே இல்லையே அஷ்வினி….” என நெடுஞ்செழியன் சிரிப்போடு.
“அடி தான் உங்களுக்கு. என்ன பேச்சு இதெல்லாம்? சோபி வந்திருவா. வெளில போங்க. இல்லைன்னா எனக்கும் சேர்த்து ஜூஸ் போடுங்க….” என பழங்களை அவன் பக்கம் தள்ள,
“எக்குத்தப்பா எதாச்சும் சொல்லிடுவேன். பார்த்துக்கோ….” என்றவன் பெருமூச்சுடன் இன்னும் நன்றாக சாய்ந்து நின்றவன் சுபஷ்வினியை தன்னருகில் இழுத்துக்கொண்டான்.
“ஹலோ ஸார், நமக்கு இன்னும் கல்யாணமாகலை. ஆனா கை ரொம்பத்தான் நீளுது…” என தன்னை வளைத்து அணைத்திருந்தவன் பிடியை தளர்த்த முயன்றாள்.
“சோபி எட்டி பார்த்துட்டு தான் போனா. இப்ப யாரும் வரமாட்டாங்க…” என அவளை விடவில்லை நெடுஞ்செழியன்.
அவனின் பக்கவாட்டில் நின்றிருந்தவளை தன் முகம் பார்க்க நிறுத்தியவன் கைகள் அவளின் தோளில் மாலையாய் விழுந்தது.
அவன் முகத்தில் பெரிதாய் இல்லை என்றாலும் நிறைவாய், மகிழ்வாய் ஒரு புன்முறுவல் மலர்ந்திருந்தது.
சில நொடிகள் அவனின் முகத்தை அளவிட்டவள் கண்களில் சிறுமின்னல் தெறித்தது.
“எவ்வளோ நேரம் இப்படியே நிறுத்த போறீங்க? விடறதா உத்தேசமில்லையா?…” என கிண்டலாய் கேட்டாள் சுபஷ்வினி.
“ம்ஹூம், உன்னை விடறதா இல்லை…” என்றவன் இன்னும் இடைவெளியை குறைத்து தன் பிடியை வலுவாக்கினான்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல?…
“ஏன் அஷ்வினிக்கு இல்லையாமா?…” என்று புருவமுயர்த்தியவன்,
“உன்கிட்ட எப்படி லவ் டயலாக் பேச? ப்ச், யோசிச்சு பார்க்கறேன். வரமாட்டுது. ஹெல்ப் மீ…” என சற்றே கவலையுடன் வேறு சொல்ல பக்கென்று சிரித்துவிட்டாள் சுபஷ்வினி.
“என்ன? என்ன சிரிப்பு? எனக்கும் இது புதுசு தானே? அதான் உன்கிட்ட கேட்டேன். இல்லன்னா நீ தான் இதை சமாளிக்கனும்…” என்றும் குறும்பாய் சொல்ல,
“வேற வழி. பார்த்துக்கலாம்…” என்றவள்,
“எதையும் சொல்லித்தந்து எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாம். இப்படியே இருக்கலாம். அடுத்து என்ன நமக்கு தோணுதோ அப்படி சேர்ந்து வாழ்வோம். டயலாக் எல்லாம் வேண்டாம். இதோ இந்த பிடி, இந்த பார்வை, இந்த சிரிப்பு. எனக்கு எல்லாமே ஃபுல்ஃபில் பீல் தந்திடுச்சு. வேறென்ன வேணுமாம்?…”
சுபஷ்வினி அழகாய் அவனிடம் சொல்ல இன்னுமே அவளின் முகத்தை தன்னருகில் நிறுத்தினான்.
“வேணுமே. என்னவோ இன்னும் புதுசா வேணும்ன்னு தோணுது. கிடைக்காம எனக்கு ஃபுல்ஃபில்லாகாது அஷ்வினி…” என்றவனின் கைகள் அவளின் கன்னங்களில் அழுத்தமாய் பதிய நெடுஞ்செழியனின் மூச்சுக்காற்றை மிக அருகில் சுவாசித்தாள் சுபஷ்வினி.
அதற்கு மேல் இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கவுமில்லை. விலகவும் இல்லை. சில நொடிகள் விழிகளை மூடி நெற்றியோடு முட்டியபடி நின்றவர்கள் விரல்கள் ஒன்றையொன்று பின்னிக்கொண்டது.
“நான் கிளம்பனும். போகட்டுமா?…” சுபஷ்வினி வாய் திறக்க,
“ம்ஹூம், நான் ஸ்டேஷன் போகனும். இன்னைக்கு இரு. ஈவ்னிங் வரேன். வந்து நானே உன்னை ட்ராப் பன்றேன். அதுவரை இரு. உங்கப்பாட்ட நான் பேசிக்கறேன்…” என்றான் அவனும்.
“இன்னும் என்ன உங்கப்பா? ஏன் மாமான்னு சொன்னா ஆகாதோ?…” என சுபஷ்வினி நிமிர்ந்து பார்த்து முறைக்க,
“கேட்டதும் சரின்னு பொண்ணை குடுத்தா வாய் நிறைய மாமா என்ன மாமனாரேன்னு கூட சொல்லியிருப்பேன்…” என அவனும் வீம்பிற்கென்றே வம்பிழுக்க அவனின் கையை தட்டிவிட்டவள்,
“அப்படி ஒன்னும் நீங்க பெரியமனசு பண்ணி சொல்லவேண்டாம். தேவையுமில்லை…” என அதற்குமேல் அவள் முறுக்கிக்கொண்டு நின்றாள்.
“சொன்னாலும் சொல்லாட்டியும் எனக்கு பெரியமனசு தான். இல்லைன்னா நீ சொல்லாமலே நான் உன்னை பொண்ணு கேட்டு வந்திருப்பேனா?…” என சீண்டிவிட,
“ஆஹா, ரொம்ப நல்லா வந்தீங்க. நீங்க கேட்ட லட்சணத்துக்கு பருத்திமூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம். கைதியை காப்பாத்த கல்யாணம் பன்ற மாதிரி ஒரு ப்ரபோப்சல். பேசாம போயிருங்க…” என்று பல்லை கடித்தாள்.
“என்னை நீ அலைக்கழிச்சதுக்கு இந்த ப்ரப்போசலே போதும் போதும். இப்பவும் நான் வந்து கேட்கலைன்னா என்னையும் நீ சாமியாராக்கி, நீ அவ்வையாரா மாறியிருப்ப. அவ்வளோ பிடிவாதம்…” என மாற்றி மாற்றி இருவரும் வாக்குவாதம் புரிந்தனர்.
ஒருகட்டத்தில் கடுப்பில் நறுக்கி வைத்திருந்த ஆரஞ்ச் பழத்தோலை எடுத்து நெடுஞ்செழியனின் கண்ணில் பட்டென்று பிழிந்துவிட்டாள் சுபஷ்வினி.
“வாய் வாய்…” என்று சொல்ல,
“ஹேய் என்னடி பண்ணின? கண்ணு எரியுது…” என கண்ணை கசக்கியவனின் மெல்லிய அலறலில் சுபஷ்வினி பதறி போனாள்.
“அவ்வளோவுக்கு எல்லாம் எரியாதே?…” என்றவள் அவனின் கண்ணில் நீரை பிடித்து கழுவி விட்டும் அவனால் திறக்கமுடியவில்லை.
“அச்சோ கையை எடுங்க சிவந்துபோய் இருக்கு. ஊதிவிடறேன்…” என்று நெடுஞ்செழியனின் கையை பிரித்துவிட்டவள் அவன் விழிகளை பிரித்து பார்க்க சிவந்துபோயிருந்தது.
“ஸாரி செழியன், வேணும்ன்னே பண்ணலை…” என்று காற்றை இழுத்து விழிகளில் ஊதிவிட சற்று நேரம் அவளின் அருகாமையில் நமுட்டு சிரிப்புடன் கையை கட்டிக்கொண்டு நின்றவனால் அமைதிகாக்க முடியாமல் போனது.
“அஷ்வினி, என்னை டெம்ப்ட் பன்ற நீ…” என்றவன் தன் ஒற்றை கையால் சுபஷ்வினியின் இடைவளைத்து மறுகையால் அவள் முகத்தை பற்றி இதழ்களுக்கருகே வர அவளின் விழிகள் பெரிதாய் அகன்றது.
“தரவா? தருவியா?…” என்றான் ரகசிய குரலில் மயக்கும் விதமாய்.
“ம்ஹூம்…” என்றவள் கண்கள் அவனை கண்டிப்பதை போல முறைப்பை காட்ட,
“பொழச்சு போடி….” என்றபடி கன்னத்தில் வன்மையாய் முத்தமொன்றை பதித்துவிட்டு விலகி சென்றான்.
சில நொடிகளானது சுபஷ்வினி அந்நிகழ்வில் இருந்து வெளிவர. மெல்லிய படபடப்பும், நாணமுமாய் சிவந்து நின்றவளை ரசித்து பார்த்தான்.
“ஈவ்னிங் வரேன். அதுவரை இரு…” என்று சொல்லி சென்றவன் மீண்டும் வந்தது நிகிதா சுபஷ்வினியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது தான்.
மாலை சங்கீதா கிளம்பிவிட தானும் உடனே கிளம்ப முடியாமல் அங்கே இருந்தவள் இரவு நெடுஞ்செழியன் வர தாமதமாக தானே கிளம்புவதே முடிவிற்கு வந்து நிகிதாவிடம் சொல்லிவிட்டு செல்ல வந்திருந்தாள்.
வந்ததும் தனாவை பற்றி பேசியதும் அப்படி ஒரு அதிர்ச்சி சுபஷ்வினிக்கு. தெரிந்தும் எப்படி இவள் அமைதியாக இருக்கிறாள்? எப்படி முடிந்தது என கேட்டும்விட்டாள்.
“உனக்கு எப்படி தெரியும் நிகி?…” சுபஷ்வினி அவளின் கையை பிடித்துக்கொண்டு அதிர்ச்சி விலகாமல் கேட்க,
“அப்பா இறந்தப்பவே அன்னைக்கே. அப்பவே தெரியும். ஆனா என்னால அதை ஜீரணிக்க முடியலைக்கா….” என்றவள் தன் தலையை பிடித்துக்கொண்டாள்.
“அன்னைக்கு ஆக்ஸிடன்ட் நடந்தப்போ கார்ல தனா மாமாவோட பார்வையை அந்த ஒரு செகென்ட் பார்த்தேன். எப்பவும் பாசமா பார்த்தவங்க பார்வை மாற்றத்தை என்னால புரிஞ்சுக்க முடியாதா என்ன?…”
“எனக்கு ஏன்னு தான் இப்ப வரைக்கும் தெரியலை. கார்ல நான் மயங்கிட்டாலும் அப்பாவோட அலறலும், கெஞ்சலும் எனக்கு கேட்டுச்சு. எனக்குள்ள அது மட்டும் தான் நான் திரும்ப கண் திறக்கற வரைக்கும் கேட்டுட்டு இருந்துச்சு…”
“தனா என் பொண்ணை விடுப்பா. என்ன பன்ற நீன்னு கத்தி அழுதாரு. என்னை காப்பாத்தினவருக்கு தனா மாமாவா அப்படின்ற விஷயத்தை தாங்கிக்க முடியலை போல. என்னையும் விட்டுட்டு போய்ட்டார்…”
“எனக்கு நிஜமாவே நான் கேட்டது உண்மையா, இல்லை பிரம்மையான்னு சத்தியமா அந்த அதிர்ச்சில விளங்கவே இல்லைக்கா. அப்பாவை தகனம் பண்ணிட்டு வந்த மறுநாள்ல இருந்து மாமா கவனிக்காம நான் அவங்களை கவனிச்சேன். என்னை எவ்வளவு ஆத்திரமா பார்த்தாங்க தெரியுமா?…”
“அப்பா…” என்றவள் இப்போது பயந்து சுபஷ்வினியை கட்டிக்கொண்டாள்.
“ஏன் இப்படி பண்ணினாங்க அவங்க? அப்போ அவங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு எதுவுமே புரியலை. அங்க இருந்த ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பு மேல நிக்கிற மாதிரி இருந்துச்சு. யார்க்கிட்ட சொல்ல? எப்படி சொல்ல? முதல்ல எதுக்கு இதெல்லாம் அப்படின்றதே தெரியலை எனக்கு…”
“வேதா ஆன்ட்டிட்ட சொல்லிடுவோமான்னு யோசிச்சேன். சொல்லிட்டா, அவங்க என்னை நம்பலைன்னா?…” என பாவமாய் பார்த்தாள் நிகிதா.
“நீங்க என்னை நம்பறீங்களாக்கா?…” என சுபஷ்வினியிடமும் அவள் கேட்க,
“சத்தியமா நம்பறேன்ம்மா. நிகி, நீ தைரியமா இரு…” என அவளை தேற்றினாள் சுபஷ்வினி.
“தைரியமா? எனக்கு தெரியலை அப்படி ஒன்னு இருக்கான்னு. ஆனா அவங்க தைரியமா இருக்காங்க. நான் சொன்னா அப்பா இறந்த அதிர்ச்சியில எனக்கு எதுவும் ஆகிடுச்சுன்னு மாத்திடுவாங்களா? வேதா ஆன்ட்டி அவங்க மகன் அப்படின்றதால நான் சொல்றதை நம்பாம போய்டுவாங்களோன்னு தோணுச்சு…”
“எனக்கு முதல்ல என்ன செய்யன்னு தெரியலை. எல்லாத்துக்கும் மேல, எங்கப்பா என்னக்கா செஞ்சாங்க? தனா மாமா ஏன் இப்படி பண்ணுனாங்க? அப்பா பாவமில்லையா? யாருக்காகவோ ஏன் இப்படி செய்யனும்?…”