“இதுக்கும் தனாவுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமா?…” என கேட்டாள்.
“மேபி, எனக்கு இப்ப இவங்களுக்கு எல்லாம் மேல இருக்கறது யார்ன்னு தெரியனும். இதுவரை தனா இதுல ஒரு ஹெல்ப்பரா இருக்கலாம்ன்னு தான் தோணிட்டிருந்துச்சு. இப்ப மணிகண்டனை கொல்ல ட்ரை பண்ணிருக்காங்க. அப்போ இதுல இன்னும் யாரோ பெரிய கை உள்ள இருக்குதுன்னு கன்பார்ம் பண்ணிட்டேன்…” என்றான்.
“ம்ஹூம், அவனுங்க எல்லாம் கஸ்டமர். அவங்களுக்கும் அந்த ரெசார்ட்ல மேனேஜரா இருந்தவனுக்கும் மட்டும் தான் தொடர்பு. வேற யாரோட கான்டக்ட்டும் அவங்ககிட்ட இல்ல. இவ்வளோ பண்ணிட்டு ஜாமீன்க்கு வேற ட்ரை பன்றானுங்க பொறம்போக்கு நாய்ங்க….”
பல்லை கடித்துக்கொண்டு பொங்கி எழுந்த கோபத்தை அடக்க முயன்றான் நெடுஞ்செழியன்.
“ஜாமீன் கிடைக்காது தானே? எப்படி இந்தமாதிரி ஆட்களுக்கு எல்லாம் ஆஜராகறாங்க? மனசாட்சியே இல்லைல?…” என்றாள் சுபஷ்வினி.
“இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் தி பேமஸ் லாயர் கனுஷாந்த் கிஷான் இன்னைக்கு சென்னைக்கு வந்திருக்கார்…” என்றதும் சுபஷ்வினிக்கு யார் அவர் என தெரியவில்லை.
“யார் அவர்? பேரும் புதுசா இருக்கே?…” என அவள் கேட்க தனது மொபைலில் அப்போதைய உடனடி செய்தியாக ஒருவரின் வருகையை ஊடகங்கள் செய்திகளில் ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தனர்.
“அவர் தமிழ்நாட்டுக்கு வரதே பிரேக்கிங் நியூஸ்ன்னா ஆள் எப்படின்னு புரியலையா? அத்தனை சீக்கிரம் அவரோட வரவு இருக்காது. காரணமில்லாம நடக்காது. இப்ப என்னோட சந்தேகம் எதுக்காக வந்திருப்பார்? ஒருவேளை இந்த கேஸ்க்கா இருந்தா?…” என்றான் யோசனையுடன்.
“எனக்கு புரியலை…” சுபஷ்வினி சொல்ல,
“எனக்கென்னமோ நான் தனாவை மட்டுமே சுத்திட்டு ஒரே இடத்துல இருக்கேனோன்னு தோணுது அஷ்வினி….” என்றான்.
“ஆனா வேற எங்க இருந்து இதை எடுத்துட்டு போகமுடியும்? நிகிதா சொன்னா இல்லையா அவளோட சந்தேகமும், ஊர்ஜிதமும் கூட வேதா மேம் வீட்டுல வேற விதமா பார்க்கப்படலாம்ன்னு. அதுக்காக மட்டும் தான் தனாவை விட்டு வச்சிருக்கேன்….” என கூறி,
“தனாவும், அவனுக்கு பின்னாடி இருக்கறவங்களும் யார்ன்னு தெரியனும். அட்லீஸ்ட் அவனோட ஒரு ஆளாவது இதுல சிக்கனும். புடிச்சிடலாம். இந்த சரத் வாயே திறக்கமாட்டேன்றான்…” என மீண்டும் முகத்தில் ரௌத்திரம்.
சுபஷ்வினிக்கு அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் உள்ளூர கலவரத்தை கூட்டியது.
“இது எல்லாத்தையும் விட நீங்க எல்லாரும் எனக்கு முக்கியம்…” என்றவன் குரல் கம்மிவிட,
“எனக்கு ஒன்னும் கஷ்டமில்லை செழியன்…” என்றாள் சுபஷ்வினி அவன் எதை நினைத்து சொல்கிறான் என புரிந்து.
அவள் பக்கம் திரும்பி பார்த்தவன் கண்கள் லேசாய் கனிந்து புன்னகையை சிந்தியது.
“நீங்க கில்ட்டியா எதுவும் பீல் பண்ண வேண்டாம். நான் சந்தோஷமா தான் இருக்கேன். சொல்ல போனா நம்மோட கல்யாணம் இப்ப நடக்கனும்ன்னு தான் அப்போ தள்ளி போச்சோன்னு கூட தோணுது…” என அவனை இலகுப்படுத்த முயன்றாள்.
“எனக்கு பாஸிட்டிவ் வைப் குடுக்க ட்ரை பன்ற போல?…” என அவளை கண்டுகொண்டவன்,
“உண்மையா குற்றவுணர்ச்சியா தான் இருக்கு. சூழ்நிலையை காரணமா வச்சு உன்னை என் இஷ்டத்துக்கு வளைக்கிறேனோன்னு. சந்தோஷமா நடக்கவேண்டியது பதட்டத்தோட நடக்க போகுது….” என்றான்.
“செழியன்…” என அவனை சமாதானம் செய்ய முடியாமல் சுபஷ்வினி திணற,
“நிறையவே கனவு இருந்தது அஷ்வினி. இந்த நாட்களை எப்படி எல்லாம் கழிக்கனும்ன்னு கற்பனை கூட இருந்தது. அது இப்படி முடியும்ன்னு நான் நினைக்கலை…” என்று சொல்ல,
“ஏன் இப்ப மட்டும் என்ன? எல்லாருக்கும் இப்படி ஒரு த்ரில் மொமென்ட்ல கல்யாணம் நடந்திடுமா என்ன?…” என்றாள் புன்னகையுடன்.
“என்னை கூல் பன்ற நீ…” என்று சிரித்தவன்,
“வீட்டுக்கிட்ட வந்துட்டோம்…” என அவர்கள் வீடு இருக்கும் வீதி பக்கம் காரை திருப்பினான்.
அவனின் கண்கள் சுற்றுவட்டாரத்தை வழக்கம் போல அலசி ஆராய்ந்து வாசலில் சென்று நின்றும் அதனை தொடர்ந்தது.
காரிலிருந்து சுபஷ்வினி இறங்க வீரவேந்தரும் வந்துவிட்டார் வெளியே. சுபஷ்வினி மறுபக்கம் வந்து நிற்க,
“ஓகே, நான் கமிஷனரை பார்க்க போகனும். அதோட ஹாஸ்பிட்டலுக்கு மணிகண்டன் கண்டிஷன் என்னன்னு பார்க்க போகனும். வரேன். டேக்கேர்…” என்று அவளை அனுப்பி வைத்தான்.
அவளிடம் விடைபெற்று சென்றவனின் வாகனம் கண்ணிலிருந்து மறையும்வரை சுபஷ்வினி நிற்க,
“மேம், உள்ள போங்க ப்ளீஸ்…” என்றனர் வீட்டில் பாதுகாப்பிற்கு நின்றவர்கள்.
—————————————————
கதிரின் முகத்தில் ஏமாற்றம் அளவு கடந்து தென்பட்டது. தனாவிடமிருந்து அழைப்பு வந்தும் அவன் எடுக்கவில்லை.
சற்று நேரத்தில் தானே அழைப்பதாக செய்தி அனுப்பிவிட்டு வைத்துவிட்டான் கதிர்.
என்ன சொல்லமுடியும்? பேசினால் கத்தி தீர்த்துவிடுவான். அதனால் சற்று நேரம் கழித்து பேசலாம் என நினைத்தவன் அடுத்து எப்படி திட்டத்தை செயல்படுத்துவது என்று யோசிக்க மீண்டும் மற்றொரு எண்ணிலிருந்து அழைப்பு.
இதனை அவனால் தவிர்க்கவே முடியாதே? கைகள் நடுங்க அதனை எடுத்தவன் காதில் வைத்ததும்,
“யூ யூஸ்லெஸ். ஒன்னுத்துக்கும் உதவாம எதுக்கு இருக்க நீ? ஒரு கொலையை கூட பண்ண முடியலைன்னா நீயெல்லாம்…” என சகட்டுமேனிக்கு மறுமுனை கத்த,
“இல்ல நான் தெளிவா அதான் ஸ்கெட்ச் போட்டேன்…” என்ற கதிருக்கு குரல் நடுங்கியது.
“என்ன இழவு ஸ்கெட்ச் அது? இப்ப அந்த மணிகண்டன் பிழைச்சிட்டா கண்டிப்பா அப்ரூவர் ஆகிடுவான். அவன் நம்மளை கண்டுபிடிச்சிருவான்…” என்றது அந்த குரல் ஆவேசத்துடன்.
“இப்படி மிஸ்ஸாகும்ன்னு நான் நினைக்கவே இல்லையே. நான் வேணும்னா திரும்ப…”
“மண்ணாங்கட்டி. வாய மூடு முதல்ல…” என கத்திவிட்டு,
“என்ன சொன்னான் உன் ப்ரெண்ட்?…” என கேட்டது.
“நிகிதாவை செழியன் கூட்டிட்டு போய்ட்டானாம். அடுத்து என்ன செய்யன்னு ஜெய் யோசிச்சிட்டிருக்கான்…” என கதிர் சொல்ல,
“ஜெய்யை முடிச்சிடு கதிர்…” என்றது மறுமுனை.
“என்ன? என்ன சொன்னீங்க?…” என கதிர் அதிர,
“ஜெய்யை முடிச்சிடுன்னு சொன்னேன். அவனை விட்டு வைக்கிறது நமக்கு தான் பெரிய ஆபத்து. அவன் நம்மளை முடிக்கிறதுக்குள்ள நாம முந்திக்கனும்…”
“ஆனா நான் எப்படி ஜெய்யை?…” என கதிருக்கு வார்த்தையே வரவில்லை.
“நீன்னா நீயேவா? ஆனா நீயே முடிக்கிறது இன்னும் பெட்டர். யோசி. நமக்கு நாள் குறைவு…” என சொல்லி,
“மணிகண்டனை நான் பார்த்துக்கறேன்…” என்றும் பேசி முடித்தாகிற்று.
கதிர் இன்னும் அந்த திகைப்பிலிருந்து வெளியே வரவே இல்லை. ஜெய்யை எப்படி என யோசித்து மண்டை காய்ந்திருந்தான்.
மறுநாள் காலை நாளிதழில் மணிகண்டனை கொலை செய்துவிட்டு அவரின் மகன் சரத் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியானது.
சிறைசாலையிலும் அவரை கொலை செய்ய முயன்றது அவரின் மகன் சரத் தான் என்றும் செய்திகள் பரபரப்பாகி தமிழகத்தையே கிடுகிடுக்க செய்தது.