தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சரின் பிரத்யேக அறையில் தன்னெதிரே இருந்தவர்களை கோபமாக பார்த்தார் களஞ்சியம் ராஜாங்கம்.
“என்னம்மா வேதசௌந்தரி, கேட்டதுக்கு பதில் சொல்லாம அமைதியா இருக்கீங்க?…” என்றார் கோபமாக.
அந்த அறையில் அவர்கள் மட்டுமல்ல, டிஜிபி, கமிஷனர், நெடுஞ்செழியன் என அனைவரும் இருந்தனர்.
காவல்துறை பாதுகாப்பில் இருந்த குற்றவாளிகளான மணிகண்டனும், சரத்தும் மரணமடைந்திருக்க அதை குறித்தான விவாதங்கள் மொத்த ஊடகத்திலும் அணையாத தீயாக எரிந்து கொண்டிருந்தது.
அத்தனைபேரின் குற்றம் சாட்டுதலும் சட்டத்தை நோக்கியே இருந்தது. சட்டம் என்ன உறங்குகிறதா?, ஆட்சி சரியில்லை என்னும் அளவிற்கு மிகுந்த பரபரப்பை உண்டாக்கியிருந்தது அச்செய்தி.
எதிர்கட்சிகள் வேறு இதுதான் சமயம் என்று இதனை இன்னும் ஊதி பெரிதாக்கிக்கொண்டிருந்தனர்.
“இது எதிர்பாராதது ஸார்…” என்றார் வேதசௌந்தரி.
இப்படி நடக்குமென அவரும் நினைக்கவில்லை. ஒரே இரவில் முக்கிய குற்றவாளிகள் விசாரணைக்கு முன்பே இப்படி இறப்பார்கள் என நினைத்தாரா?
“என்ன எதிர்பார்க்கலை? மீடியா கிழிகிழின்னு நம்ம ஆட்சியை கிழிக்கிறானுங்க. மகனே ஜெயில்ல வச்சு அப்பனை கொல்ல முயற்சி பண்ணியிருக்கான். அதுக்கப்பறமும் இந்த போலீஸ் என்ன பண்ணுச்சு? ஹாஸ்பிட்டல் வரை கூட்டிட்டு போய் கொலை செய்ய விட்டிருக்காங்கன்னு காரி துப்பறானுங்க…”
அவரின் பேச்சில் அனைவரிடமும் அசாத்திய மௌனம் மட்டுமே. என்ன பதில் சொல்லிவிட முடியும்?
“என்னய்யா போலீசு? இதுக்குத்தான் இங்க மாத்தல் வாங்கி வந்தியா நீ? நீ என்னத்தையோ புடுங்கிருவன்னு உன்னைய இதுல இறக்கிருக்காங்க….” என்ற பேச்சில் கொதித்து போனான் நெடுஞ்செழியன்.
“நான் புடுங்கினது எல்லாம் மொத்தமா ஒருநாள் உங்க பார்வைக்கு கொண்டு வருவேன் ஸார். அப்பா தெரிஞ்சுப்பீங்க…” என அதற்கு பதிலும் கூறிவிட்டான் அவன்.
“ஏய்…” என்றார் முதலமைச்சர் களஞ்சியம்.
“என் பேர் ஏய் இல்லை ஸார். நெடுஞ்செழியன்…” என நிமிர்வாகவே அவன் பதில் சொல்ல,
“செழியன்…” என அதட்டினார் கமிஷனர்.
“விடுய்யா, இந்த வீராப்புக்கு ஒன்னும் குறைச்சலில்லை. இதை வேலையில காமிக்க சொல்லு. அரஸ்ட் பண்ணி இத்தனை நாளாகியும் அப்பனும் மவனும் வாய திறக்கலை. இப்ப பாரு மானம் போயிருச்சுன்னு தற்கொலை பண்ணிக்கிட்டானுங்க…” என்றார் களஞ்சியம்.
“நோ ஸார், இது தற்கொலை இல்லை. கண்டிப்பா திட்டமிட்ட கொலை தான். அதுவும் சரத் மணிகண்டனை கொலை செய்யலை. நீங்களே எப்படி இதை தற்கொலைன்னு சொல்றீங்க?…” என நெடுஞ்செழியன் பேச,
“மிஸ்டர் நெடுஞ்செழியன். கொஞ்சம் நிதானமா யோசிச்சு பார்த்து பேசுங்க. நீங்க பேசிட்டிருக்கறது சி.எம் கிட்ட…” என கண்டனம் தெரிவித்தார் டிஜிபி.
“இந்த கேஸை பொறுத்தவரை நான் சந்தேகப்படறதை வச்சு தான் நான் சொல்லமுடியும் ஸார். ஏனா என்னோட விசாரணையில இருக்கற வழக்கு இது…” என நெடுஞ்செழியனும் முடிந்தளவு கோபத்தை குறைத்துக்கொண்டு வரவழைத்துக்கொண்ட நிதானத்துடனே பேசினான்.
“விடுய்யா, சின்ன வயசு. அப்படித்தான் துறுதுறுன்னு இருப்பான். பேசட்டும்…” என்ற களஞ்சியம்,
“என்ன வேதசௌந்தரி நீங்க வரவழைச்ச ஆள் தானே இவன்?…” என்று நக்கலாக அவரிடம் கேட்க,
“நேர்மையான காவல்துறை அதிகாரியை எல்லாம் இப்ப தேடி வரவழைக்க வேண்டிய அளவுல தான நம்ம சட்டம் இருக்கு…” என்றார் வேதாவும் சூடாக.
களஞ்சியம் முகத்தில் அத்தனை கோபம். அவரின் கீழ் இருப்பவர்கள் எல்லாம் களஞ்சியத்தின் ஆட்டுவிப்பின் பேரில் ஆடுபவர்கள்.
வேதசௌந்தரி அதில் தனிரகம். எப்போதும் தன்னுடைய சுயமரியாதையை அங்கே விட்டுக்கொடுக்கமாட்டார்.
“என்னைவிட சின்ன வயசும்மா உனக்கு. நான் உன்னை வா போன்னு சொல்ல கூடாதா?…” என்றவர்களிடம்,
“சின்ன வயசுன்னா மரியாதையா கூப்பிடக்கூடாதுன்னு இருக்கா என்ன? எனக்கு என் மரியாதை முக்கியம். அது என் வயசுக்கும், என் பதவிக்கும். நீங்க உரிமையா என்னை கூப்பிட வேண்டியதில்லை. என்னோட பதவிக்கு எப்படி கூப்பிடனுமோ அந்த மரியாதையை தந்துதான் ஆகனும்…” என இன்முகத்தோட சொல்லியிருந்தார்.
அவர்களின் கட்சியில் வேதசௌந்தரி எப்போதுமே ஒரு பெண் சிங்கம். சீண்டினால் பயந்து ஒளிந்து கொள்ளும் ரகமல்ல.
பதவியை வைத்து அவரை இறங்கி போக செய்யவும் முடியாது. இப்போதும் அவருக்கான மரியாதையை தன் பார்வையிலேயே பெற்றுக்கொண்டார்.
இன்றளவும் மக்களின் மத்தியில் வேதசௌந்தரிக்கான மரியாதை, செல்வாக்கு என்பது தனி.
இப்போது கட்சியை விட்டு நீக்கினாலும் தனியாக ஆட்சி அமைத்து தன்னுடைய நாற்காலிக்கே வரக்கூடியவர் அவர் என்பதை தெரிந்திருந்த களஞ்சியம் தங்களின் கட்சியிலேயே வைத்திருந்தார்.
இப்போது இந்த ஆடம்பர உல்லாச விடுதியின் வழக்கு பெரும் பிரச்சனையை கிளப்பியிருந்தனால் வேதசௌந்தரியை மட்டம் தட்டுவதை போல கிடுக்கிப்பிடி போட நினைத்தார் களஞ்சியம்.
“சட்டத்தையே குறை சொல்ற சட்ட அமைச்சர். விளங்கிரும்…” என்ற களஞ்சியம்,
“இப்ப மொத்த தமிழ்நாடும் நம்ம ஆட்சியையும், கட்சியையும் தான் குறை பேசிட்டு இருக்காங்க. இப்படி போலீஸ் பாதுகாப்பில் இருந்தவங்களுக்கே இந்த நிலமையான்னு கேட்டு எதிர்கட்சி மூலை மூலைக்கு மக்கள்கிட்ட நம்ம ஆட்சி மேல அதிருப்தியை திணிக்க முயற்சி பன்றான்…” என்றார்.
“அது எப்படி ஸார் ஒன்னுமில்லைன்னு சொல்றீங்க?…” என நெடுஞ்செழியன் கேட்க,
“செழியன், நாங்க இத்தனை பேர் இருக்கோம். நீங்க என்ன பேசறீங்க? உங்கக்கிட்ட கேட்டா மட்டும் பதில் சொன்னா போதும். உங்களையும் இதுக்கு கூப்பிட்டதும் பெரிய ஆளுன்னு நினைச்சுக்காதீங்க. உங்க லிமிட்ல இருங்க…” என்றார் டிஜிபி அவனிடம்.
“இந்த கேஸ் என் லிமிட்ல தான் இருக்கு. என்னோட பார்வையில தான் விசாரணை நடக்குது. கையும் களவும்மா அவங்களை நான் பிடிச்சிருக்கேன். ஆதாரத்தோட மாட்டியிருக்காங்க. அப்போ நான் என் பக்கத்தை சொல்லனுமே? கேஸ்ல ஒண்ணுமே இல்லைன்னு எப்படி சொல்லமுடியும்?…” என்றான் நெடுஞ்செழியன்.
“மேம், நீங்க சொல்லுங்க செழியன்கிட்ட. தான் தான்ற இறுமாப்பு வளர்ச்சிக்கு நல்லதில்லை. ஒரு ஏசிபி சி.எம்கிட்ட எப்படி பேசனுன்ற பேஸிக் சென்ஸ் இல்லாம…” என டிஜிபி சொல்லிக்கொண்டிருக்க,
“என்னோட சென்ஸ் லெவல் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும் ஸார். நீங்க அதை மார்க் பண்ண வேண்டாம்…” என்றான் அப்போதும் திமிராக நெடுஞ்செழியன்.
“யூ…” என்ற டிஜிபி,
“நீ என்ன பெரிய இவனா? ஒரே நிமிஷத்துல இந்த கேஸை சிபிஐக்கு மாத்திட்டு உன்னை வீட்டுக்கு அனுப்ப முடியும். செய்யவா?…” என ஆவேசமாய் சொல்ல அவரை தடுத்தார் வேதசௌந்தரி.
“காம்டவுன் மிஸ்டர்.சாருகேஷ். செல்ப்ரெஸ்பெக்ட் இருக்கற யாருக்கும் வரக்கூடிய தார்மீக கோபம் தான் நெடுஞ்செழியனோடதும். தவறில்லை. அதே நேரம் அவர் இதுல சம்பந்தபட்டிருக்கார். பதில் சொல்லத்தான் செய்வார்…” என்றவர்,
“அன்ட் ஒன் திங், இந்த கேஸ்ல செழியனை இன்வால்வ் பண்ணினது நான். என்னோட ஆடர்ல தான் அவர் இதை இன்வெஸ்டிகேட் பண்ணிட்டிருக்கார். இதுல இருந்து அவரை ரிலீவ் பன்றதும், சிபிஐக்கு கேஸை குடுக்கறதும் என்னோட முடிவுன்னு நான் நினைக்கறேன்…” என்றார் வேதசௌந்தரி.
“ஸாரி மேம்…” என டிஜிபி லேசாய் தலைகுனிந்து சொல்ல,
“நல்லா வேணும்…” என்று பார்த்தார் கமிஷனர் அவரை.
“நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க செழியன்…” என்று வேதா கேட்க,
“மேம் இப்ப நடந்ததும் கண்டிப்பா மர்டரா தான் இருக்கும். கண்டிப்பா சரத் மணிகண்டனை கொலை செஞ்சுட்டு தானும் தற்கொலை செஞ்சிருக்க வாய்ப்பில்லை….” என்றவன்,
“சரத், மணிகண்டன் ரெண்டுபேருமே தனி தனி செல்லுல தான் இத்தனை நாள் இருந்தாங்க. திடீர்ன்னு ஒரே செல்லுல அடைக்க காரணம் என்ன? நைட் அவங்க இருந்த செல்லுல டாய்லெட் இருக்கும் போது வயிறு சரியில்லைன்னு சொல்லி வெளில வந்ததா அங்க காவலுக்கு இருந்த வார்டன் சொல்றான்….”
“அது எப்படி முடியும்? மெடிக்கல் எமர்ஜென்ஸின்னா செல்லுல இருந்து வெளில கூட்டிட்டு வரலாம். மத்தபடி நைட்ல உள்ள அடைச்ச கைதியை இந்த ஒரு ரீசன் சொல்லி வெளில வந்தது, அதுவும் மகனோட கை தாங்கலா வந்ததுன்னு சொல்றது அபத்தமா இருக்கு…”
“தற்கொலை பண்ணனும்ன்னா அரஸ்ட்டான அன்னைக்கே முயற்சி பண்ணியிருப்பாங்க. அப்படியே சரத் கொலை செய்யனும்ன்னா இப்படி வெளில வந்து பாத்ரூம்ல வச்சு செய்யனும்ன்னு இல்லையே. இதுல மூணாவதா யாரோ சம்பந்தப்பட்டிருக்காங்க. சரத்துக்கு அடிபட்டது கூட அப்படித்தான்….”
“யாரோ பலமா தலையில தாக்கியிருக்காங்க. மணிகண்டனோட உடல்நிலைக்கு அது சாத்தியமில்லை. கனமான பொருளை தூக்கி மகன்கிட்ட இருந்து தன்னை காப்பாத்திக்கிறதுக்கு தாக்க கூடிய அளவுக்கு வலுவில்லாதவர், அதுவும் உடல்நிலை சரியில்லாதவர். அவரால அது முடியுமா?…”
“மணிகண்டனுக்கு பெருசா காயமில்லை. சரத்துக்கு தலையில நல்ல அடின்னாலும் ஸ்டிச்சஸ் ஜெயில்ல இருக்கற டாக்டரை வச்சே போட்டிருக்கலாம். வெளில கொண்டுவர அளவுக்கு எதுவுமில்லை….” என்றான் நெடுஞ்செழியன்.
“இப்ப என்னதான்ய்யா சொல்ல வர?…” என களஞ்சியம் கேட்க பல்லை கடித்தான் நெடுஞ்செழியன்.
“வாயா போயான்னு சொல்ல கூடாதோ? சரி, என்ன தான் சொல்ல வரீங்க ஸார்? இப்ப சொல்லும்…” என்றார் களஞ்சியம் அவனிடம் நக்கலாக.
“இது திட்டமிட்டே வேற யாரோ செஞ்ச கொலை தான். மணிகண்டனும், சரத்தும் அப்ரூவராகாம இருக்க, யாரையும் காட்டிக்குடுத்துட கூடாதுன்னு அவங்களை கொலை செஞ்சிருக்காங்க…” என்றான் அவன்.
“சரி, அப்ப அது யாருன்னு கண்டு பிடிச்சியா? அதையாச்சும் சொல்லு….” என்றார் களஞ்சியம்.
“அதை தான் தேடிட்டிருக்கோம். முதல்ல மணிகண்டன், சரத் மேல மட்டும் தான் சந்தேகம் இருந்தது. இப்ப அவங்க மரணம் இதுக்கு பின்னாடி வேற யாரோ இன்னும் இருக்காங்கன்றதை ஊர்ஜிதப்படுத்திருச்சு…” என நெடுஞ்செழியன் சொல்ல,
“என்னய்யா நீ யூகத்துக்குள்ளவே சுத்திட்டு இருக்க. இன்னும் ஒருத்தனையும் புடிக்கலை. புடிச்சி உள்ள போட்டவனுங்களும் போய் சேர்ந்துட்டானுங்க. பத்திரிக்கைலையும், டிவிலயும் போட்டு கிழிக்கிறானுங்க. நீ கதை சொல்லிட்டிருக்க…” என கோபத்தில் கொந்தளித்தார் களஞ்சியம்.
“இத்தனை பெரிய கேஸ்ல கவனமில்லாம அசால்ட்டா இருந்துட்டு இப்ப இருந்தவனுங்களையும் கோட்டை விட்டாச்சு. என்னத்த வச்சு கண்டுபிடிப்ப? உன் கைப்பிடிக்குள்ள இருந்தவனுங்களே உனக்கு வாய திறக்காம பெப்பே காமிச்சிட்டு போய்ட்டானுங்க. இப்ப ஒண்ணுமே இல்லாம என்ன செய்வ நீ?…” என காய்ச்சி எடுத்தார்.
“ஒன்னுமே இல்லாதப்போ தான் ஸார் முதல்ல இருந்து ஆரம்பிக்க முடியும்…” என நெடுஞ்செழியன் நம்பிக்கையுடன் சொல்ல,
“என்ன புதுசா என்னமோ சொல்லுத?…” என்றார் அவனிடம்.
“ஹ்ம்ம், எல்லாத்துக்கும் எதுவுமில்லாத ஒரு ஆரம்பம் வேணும். இந்த கேஸ் சவாலா தான் இருக்கு. முதல்ல மணிகண்டன், சரத்ன்னு ரெண்டுபேர் இருந்தாங்க. அவங்களை வச்சு அவங்களுக்கு பின்னாடி இருக்கறது யாருன்ற யோசனையிலேயே தான் போகவேண்டியதா இருந்தது…” என்றவன்,
“ஆனா இப்ப அப்படி இல்லை. நேரடியா இதுக்குள்ள யாருன்னு கண்டுபிடிக்க எனக்கொரு வாய்ப்பு. சொல்ல போனா எனக்கு நல்லது தான் பண்ணியிருக்காங்க…” என்றான் நெடுஞ்செழியன்.
“என்னது நல்லதா? கொலை பண்ணினது நல்லதா உனக்கு? ரெண்டுபேர் சாவு உனக்கு சாதாராணமா போச்சா?…” என களஞ்சியம் கொந்தளிக்க,
“அவனுங்க அப்படி ஒன்னும் உத்தமனுங்க இல்லையே? அவங்களோட இடத்துல தங்கறதுக்கு வந்த பொண்ணுங்களோட நம்பிக்கையை சிதைச்சி அவங்களை மிருகம் மாதிரி அடிச்சு சாப்பிட்டவனுங்க தானே? சாகலாம். தப்பில்லை…” என்றான் நெடுஞ்செழியன் அதைவிட கொந்தளிப்புடன்.