“நினைச்சு பாரு எப்படி இருந்திருக்கும் இவளுக்கு? சீண்டிவிட வேற விஷயமே இல்லையா? இங்க ஒத்தையா அவ வீட்டோட அவ போராட போதாததுக்கு லத்தி ஒருபக்கம் அவளை சோதிச்சு பார்க்க?…” என்று சொல்லிய ஸ்ருதி இப்போதும் நெடுஞ்செழியனை முறைக்க அவன் சுபஷ்வினியை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
கோவிலில் திருக்கல்யாணத்திற்கு காஞ்சனா வேண்டியிருக்க அன்று அவன் செய்த கலாட்டாவில் முதன்முதலில் சுபஷ்வினி அவனுக்கு வீடியோ காலில் அழைப்பு விடுத்திருந்தாள்.
விளையாட்டாக எதையோ செய்ய போய் அவன் பார்த்தது அவளின் கண்ணீர் சுமந்த முகத்தை தான்.
உண்மைக்கும் நெடுஞ்செழியன் அதனை எதிர்பார்க்கவே இல்லை. அவள் நம்பிவிடுவாள் என்றும் நினைக்கவில்லை.
ஆனால் அன்றிருந்த சூழ்நிலையில் வீட்டில் நடந்த பேச்சுக்களில் சுபஷ்வினி மொத்தமாய் துவண்டிருக்க நெடுஞ்செழியனின் புகைப்படமும், அதில் சொல்லியிருந்ததும் அவளை சுக்கலாய் நொறுக்கிவிட்டது.
திரையில் மாப்பிள்ளை கோலத்தில் நின்றவனையும் தன்னை பார்த்ததும் அவன் முகத்தில் வந்துபோன உணர்வுகளையும் கண்டவள் ‘வாழ்த்துக்கள்’ என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.
‘என்ன மடத்தனம் பண்ணிட்ட நீ?’ என அவளின் மனமே அவளை சாடிக்கொண்டிருந்தது.
‘அப்படியே அவனுக்கு திருமணமானால் என்னவாம்? நன்றாக இருந்துவிட்டு போகட்டும்’ என்று தன்னை தானே சொல்லிக்கொண்டாலும் தன் மனதை தேற்றமுடியாத ஒரு விம்மல்.
இதனை நம்பமுடியாத ஒரு மனது, அவன் புகைப்படத்தின் பின்னிருந்த அவன் குடும்பமும், அங்கிருந்த ஏற்பாடுகளும், அவர்களின் முகமும் என்று எல்லாம் நம்பும்படி தான் இருந்தது.
கேவி அழுதுவிடாமல் அழுகையை அடக்கியபடி முடங்கிவிட்டவளுக்கு சோபியாவிடமிருந்து அழைப்பு வர எடுத்து பார்த்தவள் கண்கள் கண்ணீரை பொழிந்தது.
மீண்டும் விடாமல் அவள் அழைக்க வேறு வழியின்றி அதனை ஏற்க திரையை நிறைத்தாள் சோபியா.
“சுபாக்கா அழறீங்களா?…” என பார்த்ததுமே கேட்டு பதறியவள்,
அழுது கொண்டிருந்தவள் அழுகையை நிறுத்தவேண்டும் என்றும் தோன்றாமல் பார்த்தவன் முகத்தில் மெலிதாய் சிறு புன்னகை.
“ஹ்ம்ம் ரொம்ப அழறியே நீ. என்ன பண்ணலாம்?…” என்று சிறிது நேரம் சென்று நெடுஞ்செழியன் கேட்க விசும்பலை நிறுத்திவிட்டு அவனை முறைத்தவள் ஒன்றும் பேசாமலிருந்தாள்.
“கல்யாணம் பண்ணிக்கலாமா அஷ்வினி?…” என அதற்குமேல் முடியாமல் இன்னும் விரிந்த புன்னகையுடன் கேட்டுவிட்டான் நெடுஞ்செழியன்.
“நீங்களாம் மனுஷனே இல்ல தெரியுமா? இனி என்கிட்ட பேசவோ, கல்யாணம் பண்ணிக்கவோ கேட்டீங்க. அவ்வளோ தான்…” என எரிந்துவிழ,
“ஹேய் இரும்மா…” என்றவனுக்கு அப்போதும் சிரிப்பு தான் வந்தது.
தன் மீதான அவளின் தேடலில் உண்டான பேருவகை தந்த புன்னகை அது. அத்தனை மகிழ்ச்சியில் இருந்தான் நெடுஞ்செழியன்.
சுபஷ்வினியின் உணர்வுகள் அங்கே சிலநொடிகளில் கொய்யப்பட்டதை அவனால் உணர முடியவில்லை.
உணர்ந்துகொள்ளவும் இல்லை. அவன் காத்திருப்பிற்கான பலனாய் அந்த கண்ணீர் அவனுக்கு அவளின் காதலை பறைசாற்றியது.
சொல்லிக்கொள்ளவில்லை, பேசிக்கொள்ளவில்லை. ஆனாலும் கண்ணுக்கு தெரியாத ஒரு நூலிழையில் இருவரின் அன்பின் பிணைப்பு அவர்களை இன்றளவும் கட்டி வைத்திருந்தது.
தன்னுடைய சந்தோஷம் சுபஷ்வினியின் முகத்தில் இல்லாததில் ஒருநொடி புன்னகையை குறைத்து மெல்லிய முறுவலுடன் அவளை கனிவாய் பார்த்தான்.
“என்ன டெஸ்ட் வைக்கறீங்களோ? இவ இன்னும் என்ன மைண்ட்செட்ல இருக்கான்னு. மனசாட்சியே இல்ல, இல்லையா?…” என சுபஷ்வினி பொரிய,
“ஹேய் அஷ்வினி, நான் சும்மா ஒரு விளையாட்டு…” என சொல்லியவனின் பேச்சை கேட்கும் நிலையில் இல்லை.
“இங்க நான் என்ன பாடுபட்டுட்டு இருக்கேன்? நீங்க என்னன்னா?…” என்றவள்,
“ப்ச், ஒன்னும் தேவையில்லை. இனி நீங்க நிஜமாவே யாரையாச்சும் கல்யாணம் பண்ணினா கூட எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கெட் லாஸ்ட்…” என்று கத்திவிட,
“அஷ்வினி…” என்றவன் அழைப்பு எடுபடவே இல்லை அவளிடம்.
“போயா யோவ்…” என்றதோடு அழைப்பை துண்டித்தவளின் கோபம் அவ்வளவு வேகத்தில் இருந்தது.
மற்றவர்களை எல்லாம் திடமாய் இருந்து சமாளித்து நின்றவளின் காத்திருப்பு நெடுஞ்செழியன் விளையாட்டில் ஆட்டம் கண்டுவிட்டது அந்த ஒருநொடி.
‘விளையாட்டிற்கு’ எப்போதும் அவளை சீண்டி எதையாவது செயலியில் வைப்பவன் தான். வெறுப்பேற்றுபவன் தான்.
கண்ணீர், அத்தனை கண்ணீர். மீண்டும் மீண்டும் அவளின் கண்களை நனைத்தது.
அதன்பின்னர் அவனின் சமாதான செய்திகள் எல்லாம் சுபஷ்வினியிடம் எடுபடவில்லை.
அவனின் எதுவும் வேண்டவே வேண்டாம் என்றளவிற்கு சென்றுவிட்டாள் சுபஷ்வினி.
சாதாரண நேரத்தில் கூட அவன் இப்படி செய்திருந்தால் பதிலுக்கு பேசி அவனையும் ஒருவழி செய்திருப்பாள்.
ஆனால் தான் துவண்டிருந்த நேரம் மனதை துண்டாடுவதை போலிருந்தது ஜீரணிக்க முடியாத அந்த செயல்.
தன் வீட்டின் நிலவரம் அவன் அறிந்திருக்கவில்லை என்றாலும் எதில் விளையட்டு என்பதில்லையா என்ற ஆதங்கம் அவன் மீதான கோபத்தை இழுத்து பிடிக்க செய்துவிட்டது.
ஸ்ருதி மொத்தமாய் சொல்லி முடிக்கவும் நிகிதாவும், சங்கீதாவும் நெடுஞ்செழியனை ஆச்சர்யமாய் பார்த்தனர்.
“என்னவாம்?…” என்றான் இருவரிடமும் பொதுவாக புன்சிரிப்புடன்.
“நீங்க இவ்வளவு சேட்டை பிடிச்சவரா இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை…” என்றாள் நிகிதா சிரிப்புடன்.
“இதுக்கெல்லாம் நெத்தில எழுதி ஒட்டிட்டா இருக்கமுடியும்? அதெல்லாம் அப்பப்ப. அதை காமிச்சிட்டே இருந்தா என் கெத்து என்னாகறது…” என்று டிஷர்ட்டின் காலரை தூக்கிவிட்டுக்கொண்டான் நெடுஞ்செழியன்.
“உண்மையிலையே நீங்க கெத்து தான் ண்ணா…” என நிகிதாவும் அழுத்தத்துடன் சிறு புன்னகை மின்ன சொல்ல,
“உன்னை விடவா?…” என்று நெடுஞ்செழியனும் அவளை மெச்சுதலாய் கூறினான்.
“நீயும் தான் நிகிதா. அழகு மட்டுமில்லை. உன்னோட தைரியமும் என்னை ரொம்ப அட்மையர் பண்ணுது நிகிதா. உன்கிட்ட நான் கத்துக்கனும். நான் எல்லாம் எமோஷனலாகிட்டா அஷ்ஷை தான் தேடுவேன். எல்லாத்துக்கும் எனக்கு அவ வேணும்…” என்றாள் ஸ்ருதி.
இப்படியாக அவர்களின் பேச்சுக்கள் கலகலப்பாக, நேரம் செல்வது தெரியாமல் சென்றுகொண்டிருந்தது.
அடுத்து வந்த நாட்கள் எங்கிருந்து அந்த கணினி இயக்கப்பட்டது என கண்டுபிடிப்பதில் ஓரளவு தேறியிருந்தனர்.
ஆனால் சட்டென நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை. இன்னும் ஆதாரம் வலுவாக வேண்டுமென்ற அவசியம்.
மீண்டும் அந்த கணினியை இயக்குவார்களா என காத்திருப்பதிலும் காலம் செல்ல இதோ நெடுஞ்செழியன் சுபஷ்வினியின் திருமணம்.
அதிகாலையே அனைவரும் கோவிலுக்கு வந்துவிட்டனர். கோவிலில் பாதுகாப்பு பலமாக இருந்தது.
சட்ட அமைச்சர் வேதசௌந்தரியும், தலைமை நீதிபதி சுரேந்திரனும் கலந்துகொள்வதாக இருக்க கூடுதல் பாதுகாப்பு வேறு ஏற்பாடாகி இருந்தது.
திரைத்துறையில் இருந்து இசையமைப்பாளன் பார்த்திவ் கிருஷ்ணாவும், அவனின் மனைவி ஸ்ருதகீர்த்தியும் குடும்பம் சகிதமாக வரவிருக்க அதன் பாதுகாப்பு ஒருபக்கம் என கோவிலே பரபரப்பாய் இருந்தது.
பொதுமக்களுக்கு அது தொந்தரவாக இருந்தாலும் இவர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டமுடியாதே?
சற்று நேரத்தில் திருமணம். மணமக்கள் தயாராக இருக்க நெடுஞ்செழியனின் காதில் பூபாலன் வந்து என்னவோ சொல்ல புருவங்கள் சுருக்கி கேட்டவன் விழிகள் உயர்ந்தது.
அங்கே இருபுறமும் காவலர்கள் பாதுகாப்புடன் திருமணம் நடக்கும் அந்த மண்டபத்திற்குள் வந்துகொண்டிருந்தான் ராஜாங்கம்.
“அஷ்வினி…” என நெடுஞ்செழியன் அழைக்க அதுவரை பெண்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தவள் அவனின் அழைப்பில் அவனருகே சென்றாள்.
வேதசௌந்தரியும் சுரேந்திரனும் ஒருபக்கம் அமர்ந்திருக்க அவர்கள் அருகில் வேண்டாவெறுப்பாய் தனாவும்.
“அமைச்சர் அம்மாவுக்கு வணக்கம்…” என்று அங்கே வந்த ராஜாங்கம் வேதசௌந்தரியிடம் வணக்கம் வைத்தான்.
“அடடே வாங்க ராஜாங்கம். நீங்க எப்படி இங்க?…” என அவரும் எழுந்து நின்று வணக்கம் வைக்க,