“நீ போம்மா…” என சுபஷ்வினியிடம் சொல்லிய வேதா அவள் செல்லவும் இன்னும் கை கூப்பிக்கொண்டே நின்ற கதிரிடம்,
“உட்காருங்க கதிரவன் ராஜாங்கம்…” என்றார்.
“இல்லை அமைச்சரம்மா. நான் பூஜை முடிச்சு சாமி கும்பிட்டு கிளம்பனும். இன்னொருநாள் நிதானமா வரேன். தலைக்கு மேல ஆயிரம் வேலைகள்…” என்று அவன் சொல்லியதும் தனா அவனை ஒருபார்வை பார்த்தான்.
“வேலைகள் இருக்கத்தானே செய்யும். எதுக்கு இவ்வளோ பெரிய பொறுப்பில இருக்கிறவங்களை நாம சிரமப்படுத்தனும் மேம்?…” என்றான் நெடுஞ்செழியன்.
“உன் புத்தி இப்படித்தான் போகும்ன்னு தெரியும். இதை அம்மா மட்டும் கவனிச்சிருந்தா?…” என தனா கொந்தளித்தான்.
“கவனிச்சா என்ன? கல்யாணப்பொண்ணை நல்லா இருக்கான்னு பார்த்தேன்னு சொல்லிட்டு போறேன். ஆனா தனா, ப்ச். இந்த போலீஸ்காரன் கட்டிக்க போறவ எப்படி மிஸ்ஸாகிருக்கா பாரு அன்னைக்கு….” என்று வழிந்தபடி,
“நான் மட்டும் கொஞ்சம் ப்ரீயா இருந்திருந்தா அன்னைக்கு என்னானாலும் பரவாயில்லைன்னு நானே போயிருப்பேன் அவளுக்காக…” என்றான் வக்கிரமான எண்ணங்களுடன்.
“கதிர், முதல்ல நம்ம தலைக்கு மேல தொங்கற கத்தியை பாரு. உன் நினைப்பெல்லாம் அப்பறம் வச்சுக்கோ. நானே இங்க நெருப்புல நிக்கிற மாதிரி இருக்கேன்…” என்றவன்,
“இன்னைக்கு நிகிதாவை நாங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவோம்…” என தனா சொல்ல,
“குட் ஜெய், இனி அவ அந்த செழியன் கஸ்டடிக்கு போயிடவே கூடாது. அவளை உடனே முடிச்சிடு…” என எச்சரித்தான் கதிர்.
“நான் எதை எப்ப செய்யனும்ன்னு எனக்கு தெரியும். அதை நீ சொல்லாத கதிர்…” என்றான் தனா வெடுக்கென்று.
“சரி சரி விடு…” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு காரின் இருக்கையை ஓங்கி குத்தினான்.
‘இதுக்கே உன்னை கொல்லனும்டா. ஆனா என்ன ஏழரையை நீ இழுத்து வச்சிருக்கன்னு தெரியலை. இருக்கட்டும். அவளுங்களை உன் கையால முடிச்சிட்டு உன்னை தூக்கறேன்’ என சூளுரைத்துக்கொண்டான் கதிர்.
அவனிடம் பேசிவிட்டு தனியே நின்ற தனாவை தேடி வந்த சுரேந்திரன் மகனின் வாட்டமான முகம் கண்டு,
“என்னப்பா, இன்னும் வருத்தமாவே இருக்க?…” என்றார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா…” என முகத்தை இயல்பாக்க முயன்றான்.
“அப்பாவுக்கு தெரியாதா? நீ நிகியை நினைச்சு கவலைப்படற. சரிதானே?…” என்றவர்,
“அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கும். கண்டிப்பா அதை நாம அமைச்சு குடுப்போம். நம்ம கண்ணு முன்னாடி சீரும் சிறப்புமா நம்ம பொண்ணு வாழுவா. அப்பா உன்னோட இந்த குற்றவுணர்ச்சி எல்லாம் போயிரும்…” என்றார் மகனின் கவலை படர்ந்த முகம் காணமுடியாமல்.
தூரத்தே சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவளை தனாவின் விழிகள் வெறித்தது. கூடவே அருகில் மனைவி சங்கீதா.
“அதெல்லாம் கரெக்ட் டைம் வந்திருவா என் மோளே…” என்றாள் சுபஷ்வினி.
“இது ஒரு பிரச்சனையா இப்ப? புள்ளைங்க பேசி சந்தோஷமா இருக்கும் போது நீ ஏன் போய் தொணதொணக்கற? அதான் இன்னும் நேரமிருக்கே?…” என்றார் அவர்.
“நாம இருப்போம். மினிஸ்டர் வந்திருக்காங்க. அவங்க வெய்ட் பண்ணுவாங்களா?…” என புலம்பியபடி ராதிகா வேலைகளை பார்த்தார்.
“நீங்க எதுக்கும் பதட்டப்பட வேண்டாம். எங்களுக்குமே இங்க இருக்க கொஞ்சம் அமைதியா இருக்கு. நீங்க நிதானமா இருங்க….” என்றார் வேதா.
இங்கே சோபியாவை தேடிக்கொண்டு மனுரஞ்சன் வரவும் நிகிதாவும், சங்கீதாவும் பிடித்துக்கொண்டனர் அவனை.
நிகிதாவும், சங்கீதாவும் மனுரஞ்சனிடம் சோபியாவை கேலி பேசி அவர்களின் காதல் திருமணம் பற்றியும் கேட்டு கலாட்டா செய்தார்கள்.
அவர்களின் நேரம் அழகாய் நகர மனுரஞ்சன் எவ்விடத்திலும் சோபியாவை விட்டுத்தரவில்லை.
“சோபியா இப்படி இருக்கான்னா காரணமே நீங்க தான்…” என்றாள் சங்கீதா அவனிடம்.
“ஏன் அவளுக்கென்ன? என்ன சோபி?…” என கண்கள் மின்ன புன்னகைப்பவனில் நொடிக்கு நொடி சோபியாவின் முகத்தில் பூரிப்பு வளரும்.
இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி அரட்டையில் இருக்க அவர்களிடம் கையில் போனுடன் வந்தான் பூச்சியப்பன்.
“மேம் ஸார் குடுத்தாங்க…” என்று சுபஷ்வினியின் அருகே வந்ததும் தர,
“நீங்க?…” என சுபஷ்வினி அவனிடம் கேள்வியை முடிக்கும் முன்,
“பூச்சி, நான் தான் பூச்சி…” என்றான் உடனே அவன்.
அவன் சொல்லியதும், சொல்லியவிதமும் சட்டென நிகிதாவிடம் சிரிப்பை உண்டாக்க,
“தட் மீன்ஸ் காட்டுப்பூச்சி…” என அவளறியாமல் சொல்லி மேலும் சத்தமாக சிரித்துவிட்டாள்.
திருமணத்திற்கு என பக்காவாக வந்திருந்தான் பூச்சியப்பன். பட்டு வேஷ்டி, சட்டை, நெற்றியில் பட்டை என மங்களகரமாக வேறு இருந்தான்.
“நிகி…” என்று சுபஷ்வினி திகைத்து அவளை பார்க்க அனைவருமே திரும்பி பார்த்தனர் நிகிதாவை.
“அச்சோ, நான் உங்களை யார்ன்னு தெரியாம கேட்கலை. நீங்க ஏன் இதை கொண்டுவந்தீங்கன்னு கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க. அவ ஏதோ…” என சுபஷ்வினி பூச்சியப்பனிடமும் சமாளித்து நெடுஞ்செழியனை தேடினாள்.
அவனுமே வந்துவிட பூச்சியப்பன் தன்னை மேலும் கீழும் ஒருமுறை பார்த்துக்கொண்டான்.
“நல்லாத்தான இருக்கேன்?…” என்றுவேறு சொல்ல,
“நிகிம்மா…” என்று அவளின் கையை பிடித்தாள் சங்கீதா.
அதன் பின்னர் தான் பூச்சியப்பனின் முகம் போன போக்கிலும், மற்றவர்கள் தன்னை பார்ப்பதை கண்டும் பூச்சியை பார்த்தவள்,
“ஸாரி அண்ணா. நீங்க வந்து நின்ன வேகம், உங்க பேரை சொன்னது எல்லாம் சேர்ந்து சட்டுன்னு சிரிப்பு வந்திருச்சு. ஸாரி…” என மீண்டும் நிகி சொல்ல,
“நான் ஒன்னும் தப்பா நினைக்கலையே. தட் காட்டுப்பூச்சி அடைமொழி ஐ லைக் இட்…” என்று சொல்ல நிகிதாவிற்கு அவனின் உடல்மொழி, பாவனை எல்லாம் இன்னுமே புன்னகையை விதைத்தது.
“போதும்டா, அவளுக்கு புரையேறுது பாரு. உன்னை பார்த்ததுமே சிரிச்சிட்டா. முதல்ல நெத்தில இருக்கறதை துடைடா…” என்று அவனின் தோளில் ஒரு அடி வைத்து நெடுஞ்செழியன் சொல்ல,
“தங்கச்சி சொன்னதுல தப்பென்ன ண்ணா? நான் கட்டுக்கடங்காத காட்டு பூச்சி. உங்களுக்கு தெரியாதா? கரெக்ட்டா சொல்லிருக்காங்க…” என்று வேறு பூச்சி தனது கையை பறவை போல விரித்து காட்ட,
“செம்ம ண்ணா…” என மீண்டும் அடக்கமாட்டாமல் சிரித்தநிகிதாவின் முகத்தை அனைவருமே வாஞ்சையுடன் பார்த்தனர்.
பூச்சி பேச பேச நிகிதாவிடம் எத்தனை நாட்கள் கழித்து சிரிப்பு? தன்னை மறந்து கண்களில் நீர் வர முத்துக்களை கொட்டியது போல சத்தமாய் இவ்வளவு அழகிய புன்னகை.
வேதாவிற்கும், சுரேந்திரனுக்கும் கண்கள் பனித்துவிட்டது. சங்கீதா நிகிதாவின் கன்னம் கிள்ளி கொஞ்ச தனாவின் விழிகளும் கூட நிகிதாவின் பழைய மகிழ்ச்சியை கண்டு லேசாய் நெகிழ்ந்ததை போலிருந்தது அவன் நெஞ்சம்.
சிரித்துக்கொண்டிருந்தவளுக்கு புரையேறிவிட வேகமாய் தண்ணீரை தேதி திரும்பினர்.
“புடிங்க…” என நீட்டினான் விமல்.
நெடுஞ்செழியன் சுபஷ்வினியிடம் பார்வையை செலுத்தி தலையசைக்க விமலின் கையிலிருந்த பாட்டிலை வாங்கிக்கொண்ட நிகிதா,
“தேங்க்ஸ்…” என்று சொல்லி புன்னகைக்க தலையை மட்டும் அசைத்தவன் கண்களில் கனிவு.
“அடங்கமாட்டியாடா நீ? வா வா…” என பூச்சியப்பனை பிடித்து இழுத்தான் விமல்.
“பை தங்கச்சி, அப்பறம் வரேன். ஆஃப் ட்யூட்டில இருந்தாலும் வேலை பார்த்து தான் ஆகனும்…” என்று சொல்லி,
“டோன்ட் வொர்ரி. பி ஹேப்பி…” என்றவாறு வேஷ்டியை தூக்கி மடித்து கட்டியபடி திரும்பியவன்,
“ண்ணா மேம்கிட்ட உங்க போன் குடுத்துட்டேன்…” என தகவலை தந்துவிட்டு வேகமாய் வாசல் பக்கம் விரைந்தான் விமலுடன்.
“விளையாட்டு பையன். ஆனா ரொம்ப சின்ஸியர்…” என பூச்சியை நெடுஞ்செழியன் சொல்ல,
“போன் எதுக்கு கொண்டு வந்தாங்கன்னு கூட தெரியலை. ஒன்னும் சொல்லாம நீட்டினாங்க…” என்று சுபஷ்வினி கூற,
“ஸ்ருதி தான் கால் பண்ணியிருந்தா. பக்கத்துல வந்துட்டோம்ன்னு சொல்ல. உன் நம்பர் ரீச்சாகலை போல?…” என்றவன் அவளின் கையிலிருந்த போனை வாங்கிக்கொள்ள இன்னும் அழைப்பில் தான் இருந்தது அது.
“உன் மோளே இன்னும் லைன்ல தான் போல. பேசு….” என நெடுஞ்செழியன் போனை மீண்டும் சுபஷ்வினியிடம் தர,
“எங்க இருக்க ஸ்ருதி?…” என்றாள் அவள் வணகியதுமே காதில் வைத்து.
“காட்டுப்பூச்சி அப்பவே வாசல்கிட்ட வந்துட்டேன். இப்ப இங்க தான் இருக்கேன். திரும்பி பாரு…” என்றாள் ஸ்ருதி கைபேசி வாயிலாக.
சட்டென சுபஷ்வினியும் திரும்பி பார்க்க கையில் தன் குழந்தையுடன் உடன் கணவன் பார்த்திவ் கிருஷ்ணாவுடன் வந்துகொண்டிருந்தாள் ஸ்ருதகீர்த்தி.