நெடுஞ்செழியனின் மூலம் அவர்களை ஏற்கனவே சுபஷ்வினி அறிந்திருந்தாள் தான்.
புகைப்படத்தில் பார்த்திருந்தவள் இப்போது திரையில் பார்க்க அவர்களின் பின்னணியில் நிழலோவியமாய் நிறைந்திருந்த அஜிதாவில் லேசாய் நெஞ்சம் விம்மியது.
“அங்கிள், உங்களுக்காக என்னோட பிரசென்ட்…” என்று தான் வரைந்த ஓவியத்தை காண்பித்தாள் அஞ்சலி.
திருமண மேடை அது. அதில் நெடுஞ்செழியனும் சுபஷ்வினியும் நின்றிருக்க அவர்களுடன் பரிதி, அஜிதா, அஞ்சலி, சுந்தரவல்லி நால்வரும் சேர்ந்து மணமக்களுக்கு பரிசை கொடுப்பதை போல் வரைந்திருந்தாள்.
“ஆன்ட்டி போட்டோவை சரியா வரைஞ்சிருக்கேனா? ஆன்ட்டி எப்படி இருக்கு?…” என அஞ்சலி கேட்க,
“ரொம்ப அழகா இருக்குடா. நீங்க வந்திருக்கலாமே?…” என முறுவலுடன் கேட்டாள் சுபஷ்வினி.
“சரியா சொன்னீங்க நீங்க…” என்ற காஞ்சனா மந்திரத்தை படிக்க சொல்ல அனைவரின் ஆசியுடன், வாழ்த்துக்களுடன் நெடுஞ்செழியன் சுபஷ்வினி திருமணம் இனிதே நடந்தேறியது.
தனாவுடன் வேதசௌந்தரி, சுரேந்திரன் திருமணம் முடிந்ததுமே கிளம்பிவிட்டனர்.
நிகிதாவை தான் அழைத்து வருவதாக சங்கீதா சொல்லிவிட மனைவியை அப்படி ஒரு முறை முறைத்தான் தனா.
“நீ பன்றது ஒன்னும் சரியில்லை சங்கீதா…” என்றவன் கோபம் அவளுக்கு அதிர்வை உண்டாக்கியதே தவிர பயம் கொள்ள வைக்கவில்லை.
“உடனே எப்படி வர? நிகி திங்ஸ் எல்லாம் அங்க இருக்கு. நாங்க போய்ட்டு வரோம். நிகியும் சந்தோஷமா இருப்பா…” என்றுவிட்டாள் சங்கீதா.
மற்றவர்கள் அனைவரும் நெடுஞ்செழியன் இல்லம் நோக்கி சென்றனர். சுபஷ்வினியின் வீட்டினருக்கு திருமணம் எளிமையாக நடந்தாலும் சிறப்பாக நடந்ததில் அத்தனை சந்தோஷம்.
வேதாவையும், சுரேந்திரனையும் அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அந்த வெள்ளந்தி மனித மனங்களுக்கு கதிரவன் வந்தது கூட பெருமிதமாக இருந்தது.
மற்ற அழுத்தங்கள் எல்லாம் இதில் கொஞ்சம் குறைந்திருந்தது. அதனால் முகத்தில் புன்னகை வாடவே இல்லை.
மணமக்களுக்கு பால் பழம் கொடுப்பதில் இருந்து ஒவ்வொரு சம்பிரதாயமும் கலகலப்பாகவே சென்றது.
ஒவ்வொன்றிலும் நிகிதாவை சேர்த்துக்கொண்டனர். ‘நீயும் ஒரு தங்கை தான்’ என அவளுக்கு அத்தனை பேர் இருக்கிறார்கள் என உணர்த்தினார்கள்.
அத்தனையும் தனது தந்தையின் ஆசிர்வாதம் என எண்ணியவள் மனது அவரின் அருகாமையையும் இதில் தேடியது.
அனைவரும் ஓய்வெடுத்து வந்த பின்னர் மாலையானதும் சங்கீதா நிகிதாவுடன் கிளம்புவதாய் சொல்ல நிகிதாவின் முகம் இருளடைந்தது.
கோவிலில் வைத்து கூட தனா வேதாவின் முன்னால் அவளிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியதோடு சரி.
அதன் பின்னர் அவளை தூரத்தில் இருந்து பார்த்ததோடு சரி. அருகில் நெருங்கவில்லை.
நிகிதாவும் செல்லவில்லை. அப்போதும் நம்பமுடியாத ஒரு அழுத்தத்துடன் தான் தனாவை விழிகள் கலங்க பார்த்திருந்தாள்.
‘நீங்களா மாமா இப்படி பன்றீங்க?’ என மனதிற்குள் அரற்றியவளின் வேதனையை மேலும் கூட்டுவதாக இருந்தது சங்கீதாவின் அரவணைப்பு.
அவளின் இந்த நிறைமாத நேரத்திலும் அக்கறையும், கவனிப்பும், தனக்கு சின்ன முகவாட்டம் என்றாலும் ‘என்னடாம்மா?’ என்னும் கனிவிலும் நிகிதா தான் உடைந்துபோவாள்.
‘கீதாக்காவுக்காக கூட நீங்க நல்லவங்களா இருந்திருக்கலாமே மாமா?’ என நினைக்காத நேரமில்லை.
ஆனால் எதற்காகவும் இதனை விட முடியாதே? விட்டுவிட்டால் அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்ய கூடும்.
கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இன்றி இப்போதும் தன்னை வெறிக்கும் தனாவின் பார்வைகள் நிகிதாவை அச்சத்தில் உறைய வைத்தாலும் நெஞ்சத்தில் உரமேற்றியது.
அனைவரும் சங்கீதா கிளம்புவதாய் சொல்லவும் எப்படி வேண்டாம் என்று சொல்லவென யோசிக்க,
“அதெல்லாம் முடியாது. நிகி எங்களோட இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டும். இன்னும் அந்த அக்யூஸ்ட் சிக்கலைல. நிகியை நாங்க பார்த்துப்போம். நான் இருக்கேன். என்னால அனுப்ப முடியாது…” என்று வேகமாய் சொன்ன சோபியா நிகிதாவின் கையை பற்றிக்கொண்டாள்.
“கீதாக்கா வான்னு சொன்னா முடியாதுன்னு என்னால சொல்ல முடியாது ண்ணா. நான் இப்ப போனா அங்க எனக்கு என்ன நடக்கும்ன்னு தெரியலை. அப்படி ஒன்னு நடந்திருச்சுன்னா நான் இல்லைன்னாலும் நீங்க இந்த கேஸை விட்டுட கூடாது. ப்ராமிஸ்…” என தன் தலையில் சத்தியம் வைத்துக்கொண்டவள் தனது உடமைகள் அடங்கிய பையை எடுத்தாள்.
அதற்குள் அடியில் ஒரு போனும், கூடவே பாஸ்போர்ட்டும் இருந்தது. அதனை நெடுஞ்செழியனிடம் நீட்டினாள்.
“இது என்னோட போன். ஒருவேளை என்னோட மரணவாக்குமூலமாவும் இதை நீங்க எடுத்துக்கலாம். நானில்லைன்னா இந்த உண்மையை சொல்ல என்னோட நகலாச்சும் இருக்கனுமே?…” என்றவள்,
“இது தானா மாமாவோட பாஸ்போர்ட். என்கிட்ட இருக்குன்னு யாருக்கும் தெரியாது. சங்கீதாக்கா அவங்க கப்போர்ட்ல எதையோ தேடிட்டிருந்தப்போ இதை எல்லாம் எடுத்து வச்சாங்க. நான் அதை பத்திரப்படுத்திட்டேன். ஒருவேளை உண்மை வெளில வரமாதிரி இருக்குன்னு நாட்டை விட்டு தப்பிச்சு போகனும்ன்னு கிளம்பினா?…” என்றாள்.
“என்னளவு எனக்கு இதுல வேற என்ன செய்யனும்ன்னு தெரியலை ண்ணா. ஆனா இந்த ஒருவாரம் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன். சொல்ல போனா எனக்கு எங்கயும் போகவே மனசில்லை. இங்க இருக்கவும் உரிமை இல்லை…” என்றவள் கண்கள் கண்ணீரை பொழிந்தது.
“இப்ப தான் எனக்கு யாருமே இல்லையே, இப்படி ஒரு உறவு எனக்கு இல்லையேன்னு நான் அநாதையோன்னு எல்லாம் எல்லாம்…” என்றவள் வார்த்தைகளை தாளமாட்டாமல் தன் வயிற்றோடு அவள் முகத்தை சாய்த்து அணைத்துக்கொண்டான் நெடுஞ்செழியன்.
“நாங்க இருக்கோம்டா. இதுவும் உன் வீடு தான். அண்ணா, அம்மான்னு எல்லாரும் இருக்கோம்…” என்று சமாதானம் சொன்னாலும் நிகிதாவின் பேச்சில் அவனின் மனது கனத்து போனது.