தன்னெதிரே வெட்கமும், புன்னகையுமாய் அமர்ந்திருப்பவளை காண காண தெவிட்டவில்லை நெடுஞ்செழியனுக்கு.
அத்தனை ஆசைகள் மனதிற்குள் ஊற்றாய் பெருகினாலும் இந்த நிமிடத்தை, இந்த நாளை எவ்வித சஞ்சலங்களும் இன்றி சுகித்துவிட முடியும் என அவனுக்கு நம்பிக்கை இல்லை.
குத்தும் முள்ளாய், கனக்கும் மலையாய் அவன் நெஞ்சில் ஏறி அழுத்திக்கொண்டிருக்கும் பாரம் உணர்த்துவதை அவன் அச்சத்துடன் உணர்ந்தான்.
“சொல்லுங்க, உக்கார்ந்தாச்சு. இப்படி பார்த்துட்டே இருந்தா எப்படி?…” என சுபஷ்வினி கேட்க,
“ஹ்ம்ம், சொல்லலாம். நிறைய பேசனும், சொல்லனும்ன்னு எவ்வளோ யோசிச்சு வச்சிருந்தேன்…” என சொல்லி பெருமூச்சுடன் அவளின் புறங்கையை வருடியபடி அமர்ந்திருந்தான் நெடுஞ்செழியன்.
“என்னாச்சு செழியன்? என்ன?…” என சுபஷ்வினி கேட்கவும் அவளிடம் நிகிதா தந்தவற்றை காண்பிக்க கண்கள் கலங்கி போனது அவளுக்குமே.
“என்ன இதெல்லாம் செழியன்?…” என தாளமாட்டாமல் அவனிடம் கேட்க,
“ப்ச், ரொம்ப குட்டி பொண்ணு. எவ்வளோ யோசிக்கிறா? அங்க போனா அவ உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் போக துணிஞ்சிட்டா. அவ போனா கூட அவ பேச நினைக்கிறதை ஆதாரமா தந்துட்டு போகனும்ன்னு இருக்கா. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை அஷ்வினி…” என்றான்.
“நம்பிக்கைக்கும், தாய் பாசத்துக்கும் வித்தியாசம் இருக்கு அஷ்வினி. அதுவும் இல்லாம நிகிதா சொல்றதை அவங்க நம்பினாலும் ஆதாரம்ன்னு ஒன்னு கண்டிப்பா வேணும்…”
“அந்த ஆக்ஸிடன்ட் நடந்த ஆதாரம் வச்சு எதுவும் பண்ண முடியாதா?…” சுபஷ்வினிக்கு எப்படியாவது தனாவை வேதாவிடம் சொல்லிவிட முடியாதா என்றிருந்தது.
“ப்ச், அந்த ஆக்ஸிடென்ட் வச்சு மட்டும் தனாவை என்ன பண்ணிட முடியும்? இவ்வளோ பண்ணினவன் இப்படி மாட்டிக்கிட்டா என்ன பண்ணனும்ன்னு தெரியாமலா இருப்பான்?…” என்ற நெடுஞ்செழியன்,
“நாம வெளிச்சம் போட்டு காட்ட நினைக்கிறது சாமானியனை இல்லை. ஆட்சில ஆளுமை அதிகாரத்துல இருக்கறவங்களை. அத்தனை சுலபமா என்ன? என்ன ஆனாலும் நிகிதாவுக்கு எதுவுமாகிடக்கூடாது அஷ்வினி…” என்றான் பரிதவிப்புடன்.
“எதுவுமாகாது, ஏன் என்னென்னவோ யோசிக்கிறீங்க நீங்க?…” என சுபஷ்வினி அவனின் கைகளுக்குள் ஆதரவாக அழுத்தம் கொடுத்தாள்.
“ப்ச், இல்லை. அவளோட கண்ணீர் என்னை ரொம்பவே படுத்துது. எந்த கேஸ்லையும் நான் இவ்வளோ டிஸ்டர்ப்டா இருந்ததில்லைம்மா…” என்றான் ஒருவித தவிப்புடன்.
“ஓகே, அதுக்காக இவ்வளோ டென்ஷன் எடுத்துக்காதீங்க. பேசாம படுங்க. தூங்குங்க…” என சுபஷ்வினி சொல்ல அவளின் முகத்தையே இமைக்காமல் பார்த்தான் நெடுஞ்செழியன்.
“அஷ்வினி…” என்றவன் குரலில் அவ்வளவு வருத்தம்.
“என்னவாம்? அஷ்வினிக்கு என்ன வச்சிருக்கீங்க?…” என்றவளின் வெட்கங்கள் கலைந்து கனிவு நிரம்பியது.
“இருக்கு நிறையவே, ஆனா இப்ப தரமுடியாது. காட்ட கூடிய சூழ்நிலையில நான் இல்லைன்னு சொல்லலாம்…” என்றவன் அவளின் உள்ளங்கையில் தன்னிதழ்களை பதித்தான்.
சின்னதாய் அந்த இதழொற்றல் அவளிடம் சிலிர்ப்பை தரவில்லை. மாறாக அவனின் மன்னிப்பாய் தான் தெரிந்தது.
“என்னவாம்? ஏன் இப்படி?…” என கேட்டவள் அவனின் தலையை லேசாய் கலைத்துவிட்டாள்.
“இந்த செழியன் ரொம்ப புதுசா இருக்கே? எங்க அந்த அடாவடி செழியன்? அந்த திமிரும், மிடுக்கும் என்னவாச்சாம்?…” என்று இன்னும் அவனை நெருங்கி அமர அவனால் அவளை அள்ளிக்கொள்ள முடியவில்லை.
“சரி நீங்க எதையும் யோசிக்க வேண்டாம். தூங்குவோமா?…” என கேட்டவள் எழுந்து தன்னுடைய இரவு உடையை எடுத்துக்கொண்டாள்.
“நான் உள்ள போய் சேஞ்ச் பண்ணிட்டு வரேன். நீங்களும் மாத்திக்கோங்க…” என சொல்லி குளியலறைக்குள் நுழைந்துகொள்ள நெடுஞ்செழியனிடம் பெருமூச்சு எழுந்தது.
தானும் எழுந்து இரவு உடைக்கு மாறியவன் மீண்டும் வந்து கட்டிலில் கால் நீட்டி சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
உடைமாற்றி வந்த சுபஷ்வினி அவனை பார்த்து புன்னகைத்தபடியே தண்ணீரை எடுத்து குடித்தவள்,
“என்ன உக்கார்ந்துட்டே தூக்கமா போலீஸ்காரருக்கு?…” என்றதும் அவளை திரும்பி பார்த்தவன்,
“நீ பேசு, என்கிட்ட வசமா மாட்டும் போது பதில் சொல்றேன்…” என்றான் மெல்லிய குரலில்.
“இன்னைக்கே சொல்லலாம். என் காது ப்ரீயா தான் இருக்கு. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால கேட்டுட்டு இருக்க முடியாது…” என அவனை சீண்டியபடியே இருந்தாள் அவன் மனைவி.
‘எப்படியான இரவு இது? எவ்வளவு இலகுவாய் அவனை வம்பிழுத்து பேசிக்கொண்டிருக்கிறாள்? இந்த நாள் மட்டும் எவ்வித இடைஞ்சல்களும் இன்றி வந்திருந்தால் இப்படியா இருந்திருக்கும்?’ என நினைத்தவனுக்கு மெல்லிய புன்னகை.
“ஏன் காது மட்டும் ப்ரீ? வா உன்னையும் கொஞ்சம் ப்ரீ பண்ணிவிடறேன்…” என அவள் என்னவென கிரகிக்கும் முன் தன்மேல் சுபஷ்வினியை இழுத்து போட்டிருந்தான்.
ஒரு நொடியில் மொத்தமாய் அவன் வசமாகிவிட்டவளின் கண்கள் விரிந்து மூச்சுக்கள் வேகமெடுக்க மெல்லிய அதிர்வுடன் பார்த்தாள் நெடுஞ்செழியனை.
“என்ன அஷ்வினி? ப்ரீ பண்ணிடலாமா?…” என்று கேட்க,
“ஹாங், என்ன?…” என கேட்டவள் அவன் கைகளின் சுதந்திரத்தில் மேலும் அவனில் நெளிந்து ஒருகட்டத்தில் வெகுவாய் திண்டாடி போனாள்.
“ப்ரீயா இருக்கேன்னு சொன்னியே?…” என சொல்லியவன் இதழ்களுக்குள் அப்பட்டமான விஷம புன்னகை.
“ஓய், என்ன இவ்வளோ ஷாக்?…” என்று கேட்டவன்,
“வாய் பேச்சு மட்டுமில்லை, செயல்லயும் புயலா இருக்கனும் மிஸஸ்.நெடுஞ்செழியன்…” என்று சொல்லி அவளின் நெற்றியில் முத்தமிட மெல்ல விழிமூடி தளர்ந்துவிட்டாள் சுபஷ்வினி.
“அஷ்வினி என்னை பாரு. கண்ணை திற…” என கிசுகிசுப்பாய் அவனின் குரல் அவளின் காதோரம் உரசி சிலிர்க்க செய்ய மெல்ல இமை விரித்தாள் சுபஷ்வினி.
“இப்பவே உன்கிட்ட மொத்தமா நான் வந்து சேர்ந்துடனும்ன்னு தோணுது. ரொம்பவே உன்னை தேடறேன். சொல்ல போனா இந்த நிமிஷம் நான் நானா இல்லை. ஆனாலும்…” என சொல்லிக்கொண்டே வந்தவனின் குரலில் சிறு பிசிறல்.
தன்னை புரியவைத்துவிடும் நோக்கில் நெடுஞ்செழியன் அவளின் விழிகளை சிறையெடுக்க நினைத்து சிறைபட்டுக்கொண்டான்.
“ப்ச், நீங்க சொல்லி நான் எதையும் தெரிஞ்சுக்க வேண்டாம் செழியன்…” என்ற சுபஷ்வினி அவனின் தலையை தன் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.
“நான் எப்பவோ உங்கக்கிட்ட வந்துட்டேன். இது இன்னைக்கு தான் நடக்கனுமா என்ன? இப்படி ஒரு பதட்டத்தோட, மனசுல சஞ்சலத்தோட வேண்டாம். நாம தூங்கலாம். இல்லைன்னா…” எனும் முன்,
“பேசாம அந்த தண்ணியை இங்க கொண்டு வந்திருக்கலாம். எதாச்சும் சம்பவமாச்சும் நடந்திருக்கும்…” என குறும்பாய் நெடுஞ்செழியன் சொல்ல,
“போகுது பார் நினைப்பு. ராஸ்கல். முட்டிக்கு முட்டி தட்டிருவேன்…” என்று அவனின் தலையில் லேசாய் கொட்டு வைத்து தன் மேல் சரிந்திருந்தவனை தள்ளிவிட்டவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
“எதாச்சும் பேசினா தண்ணி இல்லாமலே சம்பவமாகிரும்…” என்று வேறு மிரட்ட,
“வெய்ட்டிங்…” என்றான் நெடுஞ்செழியன் இன்னும் தன் அணைப்பை வலுவாக்கி.
மனைவியின் அருகாமையில் அவனின் அலைப்புருதல்கள் எங்கோ சென்றிருக்க நேரம் செல்ல செல்ல அவனின் உறக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்தது.
நிம்மதியாய் இரண்டுமணி நேரம் கூட உறங்கியிருக்கமாட்டான். நெஞ்சமெல்லாம் எரிவதை போலொரு உணர்வு.
மெல்ல கண் விழித்தவன் எழுந்தமரவும் சுபஷ்வினியுமே விழித்துவிட்டாள். ஆனால் அசையாமல் படுத்திருந்தாள் என்ன செய்கிறான் என பார்த்தபடி.
கட்டிலை விட்டு எழுந்த நெடுஞ்செழியன் ஜன்னல் கதவை திறந்து வெளியே பார்த்தான்.
மீண்டும் வந்து தன்னுடைய போனை எடுத்து பார்க்க இரண்டு குறுஞ்செய்திகள் வந்திருந்தது பூபாலனிடமிருந்து.
கதிரும், தனாவும் இரு நிமிடங்கள் கடற்கரை சாலையில் சந்தித்துக்கொண்டதாக அனுப்பியிருந்தான்.
கூடவே அவர்கள் நின்று பேசிக்கொண்ட புகைப்படம் ஒன்று. இருளில் நின்றிருந்தாலும் இருவரின் முகமும் தெளிவாகவே தெரிந்தது.
பூபாலனுக்கு பதில் செய்தி அனுப்பியவன் போனை வைத்துவிட்டு மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்தான்.
சுபஷ்வினியின் முகத்தையே வெகுநேரம் பார்த்திருந்தவன் அவளின் கன்னத்தை மெலிதாய் வருட அவன் அருகில் வரவும் கண்களை மூடியவள் அவ்வருடலில் அவனின் உணர்வுகளை அவளுள் கடத்திக்கொண்டிருப்பதை போல உணர்ந்தாள்.
“அஷ்வினி, ப்ச் ஸாரிடா…” என்றவன் மீண்டும் அவளின் நெற்றியில் முத்தமிட முன்பை விட ஒருவித அழுத்தம் அதில்.
எங்கே முழித்துக்கொள்வாளோ என மீண்டும் அவளிடமிருந்து எழுந்துவிட்டான் நெடுஞ்செழியன்.
இப்படியே பதினைந்து நிமிடங்களுக்கு மேல் அருகில் அமர்வதும், எழுவதும், நடப்பதுமாக இருக்க சுபஷ்வினி எழுந்துவிட்டாள் அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல்.
“என்ன பண்ணிட்டிருக்கீங்க?…” என நடந்துகொண்டிருந்தவனை பார்த்து கேட்க,
“ஹேய் என்ன முழிச்சிட்ட? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா நான்?…” என்றான் வேகமாய் அவளருகில் வந்து.