“நீ நேத்தே வந்திருந்தா அவளுக்கு ஏன் இந்த மாதிரி ஆக போகுது? உன்னை பார்த்துக்கனும்ன்னு இங்கயும் அங்கயுமா அலைஞ்சதுல அவளுக்கு முடியலை. இதுக்கெலாம் நீ காரணமாகலாமா நிகிதா?…” என்றான் நயமாக.
அவனின் வார்த்தைகளை நிகிதாவால் நம்ப முடியவில்லை. நிச்சயம் அவன் தான் தன்னை பேச வைக்க என்னவோ செய்திருக்கிறான் என புரிந்தது.
“நான் வரேன் மாமா. கண்டிப்பா வரேன். செழியன் அண்ணா வீட்டுல யாருமில்லை. அவங்க வரவும் வரேன். இப்ப போனை குடுங்க கீதாக்காட்ட…” என்று கெஞ்ச,
“அவன்கிட்ட சொல்லிட்டு என்ன கிளம்பவேண்டி இருக்கு? இப்ப நான் அங்க வரேன். என்கூட கிளம்பற நீ…” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவன் உடனே எழுந்துகொண்டான்.
அறையில் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையை மெலிதாய் வருடியவன்,
“ஸாரி கீதா…” என்று சொல்லிவிட்டு மனைவியை பார்த்துக்கொள்ளும்படி வேலையாளிடம் சொல்லிவிட்டு வெளியேறினான்.
வெளியே வந்தவன் முகத்தில் அத்தனை ரௌத்திரம். முதல்நாள் அவனின் அறையில் வேறு சில பத்திரங்களை எடுக்க நினைத்து துழாவ அவனின் பாஸ்போர்ட் அங்கில்லை.
இரவு வந்த மனைவியிடம் இதனை விசாரிக்க அவளுக்கும் எதுவும் தெரியவில்லை.
“வெங்கட் அப்பா இறந்திருந்தப்போ வந்தவங்களுக்கு புது வேஷ்டி எடுத்து குடுக்க, டவல் எடுக்கன்னு நிறைய அவசரத்துல கலைச்சுட்டேன். திரும்ப அடுக்கி வைக்கும் போது எதிலையாச்சும் மாட்டியிருக்கும். நாளைக்கு பார்த்து சொல்றேன்…” என்றிருந்தாள் சங்கீதா.
“உன்னை யார் இதை எல்லாம் செய்ய சொன்னா? கொஞ்சமாவது வயித்துல குழந்தை இருக்குன்னு அக்கறை இருக்கா?…” என அதற்கும் அவன் கத்தியிருக்க,
“நான் என்ன தனியாவா செஞ்சேன்? நிகி உக்கார்ந்துட்டே அவ்வளோ ஹெல்ப் பண்ணா. ரெண்டுபேருமா அடுக்கி வச்சோம். அவளும் ரொம்ப மனசு உடைஞ்சு போயிருந்தா. இந்த வேலை பார்த்த நேரத்துல கொஞ்சம் ரிலாக்ஸா இருந்தா வேற எதையும் நினைக்காம. அதான்…” என்றாள் சங்கீதா.
தனாவின் ஆத்திரம் அளவில்லாமல் பெருக எங்கே மனைவியிடம் அதனை காட்டிவிடுவோமோ என அடக்கிக்கொள்ள படாதபாடுபட்டு போனான்.
அவனுக்கு நெடுஞ்செழியன் தங்களை நெருங்கிவிட்டது தெரிந்துவிட்டது. எந்த நிமிடமும் இந்த நாட்டைவிட்டு செல்லக்கூடிய நிலை வந்துவிட்டால் அதற்கு முன்னேற்பாடுகளை செய்துவைக்க நினைத்திருந்தான்.
இப்போது அதற்கும் முட்டுக்கட்டையாக பாஸ்போர்ட் காணவில்லை. இதற்கெல்லாம் காரணமானவர்களை வெட்டி வீசும் ஆவேசம்.
“நோ நான் மாட்டிக்க கூடாது. என்னைப்பத்தி தெரியவந்தாலும் சரி, நான் மாட்டிக்க கூடாது…” என்று உருவேற்றியபடி இருந்தவன் வேகம் நெடுஞ்செழியனின் வீட்டை அடையும் வரை ஓயவில்லை.
வீட்டிற்குள் வேகமாய் நுழைந்தவன் விழிகள் வேறு யார் இருக்கிறார்கள் என்று தேட கேர்டேக்கர் அவனை பார்த்ததுமே வணக்கம் வைத்தார்.
“நிகிதா எங்க?…” என்றான் கோபத்துடன்.
“இங்க இருக்கேன் மாமா…” என்று வந்தவள் முகத்தில் இப்போது அத்தனை தெளிவு.
அவளுடன் காஞ்சனாவும் சேர்ந்தே வர சட்டென முகபாவனையை மாற்றியவன் மெல்ல தலையசைத்தான்.
“உட்காருங்க தம்பி. என்ன சாப்பிடறீங்க?…” என்று உபசரித்தார் காஞ்சனா.
“உங்களுக்கு சாப்பிட கொண்டுவரேன். உட்காருங்க…” என்றவர் அவன் மறுக்கும்முன் அங்கிருந்து நகரவும்,
“பத்திரமா இருக்கு. ஏசிபி அண்ணா கஸ்டடில…” என்றவள் அவனின் முகத்தில் தெரிந்த தன் மீதான வெறுப்பில் கலங்கிவிட்டாள்.
ஆனாலும் அவனை தைரியமாகவே எதிர்கொள்ள தனாவிற்கு அந்த சூழ்நிலையில் என செய்வதென்றே தெரியவில்லை.
எல்லாம் அவனின் கட்டுப்பாட்டை மீறி சென்றுகொண்டிருப்பதாகவே தோன்றியது.
இதை அவனால் ஏற்க முடியவில்லை. விஷயம் வெளியில் தெரிந்தால் தன் மீதான பிம்பம் எப்படி உடையுமென நினைத்து பார்த்தவன் மூளைக்குள் வெடிச்சத்தம்.
இதற்கா இத்தனை போராட்டம்? இதற்கா இவ்வளவு பாடுபட்டான்? இல்லை, என்னவாகினும் தான் தன்னுடைய வாழ்க்கையை தன் விருப்பப்படி தான் வாழவேண்டும்.
மொத்தமாய் முடிவிற்கு வந்துவிட்டான். இனி பதுங்கி நின்று பார்ப்பதில் பிரயோஜனமில்லை என தெரிந்துவிட்டது.
“நீ தப்பு பண்ணிட்ட நிகிதா…” என சொல்லியவன் எழுந்துகொள்ள காஞ்சனாவும் வந்துவிட்டார்.
“காபி எடுத்துக்கோங்க….” என அவனிடம் நீட்டினார்.
“இல்லை, எனக்கு வேண்டாம். நான் நிகிதாவை அழைச்சிட்டு போறேன்…” என அவரிடம் சொல்ல,
“அது முடியாது. நிகிதா இங்க தான் இருப்பா. அதுவும் என் பிள்ளைங்க வீட்டுல இல்லாத நேரம் நீங்க கூட்டிட்டு போக நானும் அனுமதிக்க முடியாது…” என்று கறாராய் சொல்லிவிட்டார்.
காஞ்சனாவின் முகத்தில் இருந்த சாந்தம் கிஞ்சித்தும் அவரின் குரலில் துளியும் இல்லை. ‘அடுத்து என்ன?’ என்பதை போல காஞ்சனா பார்த்து நிற்க,
“அங்க என் வொய்ப்க்கு முடியலைங்க. அதான் நிகிதாவை கூட்டிட்டு போக வந்திருக்கேன்…” என்றான் மீண்டும்.
“நாங்க வேதா மேம்கிட்ட பேசிட்டோம். அவசியமில்லை. சங்கீதாவும் நல்லாயிருக்கா. அதனால அடுத்த ஹியரிங் வரை நிகிதா இங்க தான் இருப்பா…” என்று சொல்லிவிட்டார்.
“என் வீட்டு பொண்ணை அனுப்பமாட்டேன்னு எப்படி சொல்லலாம் நீங்க?…” என தனா ஆங்காரத்துடன் அவரிடம் கேட்க,
“இப்ப அவ எங்களோட பாதுகாப்பில இருக்கா. அனுப்ப முடியாதுன்னா முடியாது தான். புரிஞ்சதா?…” என்ற குரலில் திடுக்கிட்டு தனா திரும்பி பார்க்க நெடுஞ்செழியன் சுபஷ்வினியுடன் வந்துவிட்டான்.
“செழியா…” என்ற தனாவின் சத்தத்தில்,
“நீயே உன் தலையில இப்பவே மண்ணை போட்டுக்காத தனா. இன்னும் நாள் இருக்கு. அதுவரை நீ என்ஜாய் பண்ணிக்கோ…” என்றான் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
அவனிடம் நெருங்கி நின்று பேசிக்கொண்டிருக்க மனுரஞ்சனும், சோபியாவுடன் வந்துவிட்டான் அந்த நேரம்.
“என்னண்ணா நின்னுட்டு இருக்கீங்க? உட்காருங்க. எதாச்சும் சாப்பிட்டீங்களா? ஆமா எங்க சங்கீதாக்கா? கால் பண்ணேன் காலையில. போனே எடுக்கலை….” என படபடவென பேசிக்கொண்டே செல்ல,
“மாமா உங்ககிட்ட தான் சோபியாக்கா கேட்டுட்டு இருக்காங்க…” என்றாள் நிகிதா தனாவிடம்.
“ஹ்ம்ம், சங்கீதாவுக்கு லேசா தலை சுத்தல். அதான் எடுக்கலை…” என்று சோபியாவிடம் சொல்லியவன்,
“சரி நான் கிளம்பறேன்…” என்றான்.
“அச்சோ என்னாச்சு? இப்ப எப்படி இருக்காங்க?…” என பதறியவள்,
“சுபாக்கா நாம போய் பார்ப்போமா?…” என்றாள் சுபஷ்வினியிடம்.
“போகலாம் சோபி. இப்ப நல்லா இருக்காங்களாம். நான் பேசிட்டேன்…” என்ற சுபஷ்வினி சோபியாவின் தோளில் கையை போட்டுக்கொண்டு சொல்ல,
“ஓகே…” என்றவள் காஞ்சனாவிடம் என்னவோ பேசிக்கொண்டிருக்க தனா அனைவரையும் அழுத்தமாய் ஒரு பார்வை தான் பார்த்தான்.
மறுநாள் அவர்களின் மொத்த உயிரான சோபியாவை காணாமல் குடும்பமே உடைந்து போனது.
“உனக்கு சங்கீதாவை பார்க்கனும்னா கிளம்பி வா. எவிடென்ஸ் எதுவும் மிஸ்ஸாகாம, முக்கியமா என்னோட பாஸ்போர்ட். இனி இங்க நான் இருக்க போறதில்லை நிகிதா…” என்ற தனாவின் பேச்சில் வேரோடிந்த மரமாய் சாய்ந்தாள் நிகிதா.