“என்னம்மா முழிச்சிட்டியா? எப்படா முழிப்பன்னு இருந்தேன்….” என்றவனின் சத்தம் கூட அவளை எட்டவில்லை.
“அட பேசிட்டே இருக்கேன், என்னன்னு கேட்காம இன்னும் யாரை தேடற…” என்று அவளின் முன்னால் வந்ததும் தான் அதிர்ச்சியில் விதிர்விதிர்த்து போனாள் சோபியா.
கதிரவன் ராஜாங்கம். முதலமைச்சர் மகன் என்று அன்று வேதா அறிமுகப்படுத்திய ஞாபகத்தில் ‘இவனா?’ என பார்த்தவள் வார்த்தையின்றி இருக்க,
“என்ன கனம் கனக்குற? ஆனாலும் பட்டு மாதிரி இருக்க…” என்று இளித்துக்கொண்டு சொல்ல அப்போதும் அவன் என்ன பேசுகிறான் என்று எதுவும் புரியவில்லை.
“ஒஹ், நான் பேசறது கேட்காதுல?…” என எள்ளலாக அவளிடம் கேட்டு சத்தமாய் சிரித்தவன்,
“என்ன காது கேட்கலையா?…” என்றான் அகம்பாவமாக.
அவன் பேசியது காதில் விழவில்லை என்றாலும் வாயசைவை வைத்து புரிந்துகொண்டவள் கண்ணில் உடைப்பெடுத்த கண்ணீர் பெருகி வழிய பயத்தில் மிரண்டு அவனை பார்த்தாள் சோபியா.
“அம்மா, அண்ணாட்ட போகனும். என்னை விடுங்க ண்ணா. ப்ளீஸ்…” என்று மெல்லிய குரலில் இறைஞ்சியவளின் கண்ணீர் கூட அவனின் கண்களுக்கு பேரழகாய் தெரிந்தது.
“அழும் போது கூட நீ இவ்வளோ அழகா இருக்க கூடாது போ. பொறு என் காரியம் முடியட்டும்….” என்று சொல்ல அவனை பரிதாபமாய் பார்த்தவளின் அழுகை மட்டும் நிற்கவே இல்லை.
“அண்ணா, மனும்மா தேடுவாங்க. இங்க இருக்கவே பயமா இருக்கு ண்ணா. விட்டுடுங்க. ப்ளீஸ்….” என சொல்லிக்கொண்டே இருக்க ஒருகட்டத்தில் அவளின் கெஞ்சல் குறைந்து கோபமாய் பேச ஆரம்பித்துவிட்டாள்.
கதிரின் வார்த்தைகள் எதுவும் காதில் விழாமல் போக சோபியா மட்டுமே பேசிக்கொண்டிருக்க எதிர்பாராத விதமாய் பளாரென விழுந்த அறையில் சோபியாவின் உலகமே இருண்டு போனது.
“ராஸ்கல் சொல்லிட்டே இருக்கேன், சாபமா குடுக்க. வாயை மூட மாட்ட…” என்று மீண்டும் அடித்தவனை அவளால் பார்க்கவே முடியவில்லை.
“அடிக்காதீங்க, வலிக்குது. ம்மா, ம்மா…” என அரைமயக்கத்திற்கு தேம்பியபடி சென்றாள்.
மீண்டும் மெல்ல கண்ணை திறந்து பார்த்தவள் தனாவை பார்த்ததும் ஒரு நிமிடம் தன்னை காப்பாற்ற தான் வந்துவிட்டானோ என நினைத்து,
“ண்ணா, இவன்கிட்ட இருந்து என்னை காப்பாத்துங்க. ப்ளீஸ். அண்ணா…” என்று கெஞ்ச,
“ஏய்…” என மீண்டும் அடிக்க கை ஓங்கியவனை உயிரெல்லாம் பதற பார்த்தாள் சோபியா.
தனாவின் தோளில் கையை போட்டபடி தன்னெதிரே நின்ற கதிரையும் அவனையும் பார்த்தவளுக்கு அதனை ஜீரணிக்கவே முடியவில்லை.
“விடுடா ஜெய், சின்ன புள்ளைய எதுக்கு புண்ணாக்குற? பாரு நீ அடிச்சதுல கன்னமெல்லாம் சிவந்து போய் கை தடத்த…” என கதிர் அவளின் கன்னத்தை தடவ,
“சப்போர்ட் பண்ணினா கூட தொட விடமாட்டேன்றா…” என மீண்டும் சோபியாவை தூக்கி நேராய் கதிர் அமர வைக்க,
“கதிர் இப்ப இது முக்கியமா? நான் இங்க இருந்து போகனும். எனக்கு என் பாஸ்போர்ட் வேணும். போன் போடு அந்த செழியனுக்கு. அதோட நிகிதா வரனும். இத்தனைக்கும் காரணமாகி என்னை ஓடி ஒழிய வச்ச அவளும், அந்த செழியன் பொண்டாட்டியும் இங்க வந்து தான் ஆகனும்…” என்றான் தனா வெறிகொண்டு.
————————————————————
“செழியன் என்ன நடக்குது? சோபியாவை பத்தி நியூஸ் வருது. நான் கிளம்பி அங்க தான் வந்திட்டு இருக்கேன்…” என்றார் வேதா.
அப்போது தான் செய்தியை பார்த்துவிட்டு அவர் அழைத்திருக்க அவரிடம் வார்த்தைகளின்றி தொண்டை அடைக்க நின்றவன் குரலை செருமிக்கொண்டு,
“மேம், எல்லாத்துக்கும் தனா தான் காரணம்…” என்று சொல்ல,
“செழியன், என்ன சொல்றீங்க? செழியன்?…” என்ற வேதாவின் குரலும் விட்டு விட்டு கேட்க,
“ஷிட்…” என்றவன் மீண்டும் அழைப்பை துண்டித்துவிட்டு அவருக்கு அழைக்க முற்பட்டான்.
இணைப்பு கிடைக்கவில்லை வேதாவிற்கு. நிகிதா சங்கீதாவிற்கு அழைக்க அவள் வீட்டில் இல்லை என்றார் சுரேந்திரன்.
“என்னாச்சு நிகி? சங்கீதா அம்மாவுக்கு முடியலைன்னு இப்ப தான் ட்ரைவர் வந்து கூட்டிட்டு போறார்…” என்றார் அவர்.
அதற்கு மேல் எதுவும் நிகிதா சொல்லவில்லை. வழக்கறிஞர் கனுஷாந்துடன் சுரேந்திரனை பார்த்திருந்த நெடுஞ்செழியன் அவரின் மேலும் தன் சந்தேக கண்ணை பதித்திருந்தான்.
அதனால் எதுவும் சொல்லவிடவில்லை. மீண்டும் மீண்டும் வேதாவிற்கு அழைக்க முயல தனாவிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது புதிய எண்ணிலிருந்து.
“சோபியா எங்கடா?…” என நெடுஞ்செழியன் கேட்க அருகில் வேகமாய் பரிதவித்து வந்து நின்றான் மனுரஞ்சன்.
“ஒஹ் அந்த செவிட்டு…”
“டேய், பல்லை உடைச்சிருவேன்டா…” என்ற நெடுஞ்செழியன் ஆக்ரோஷம் அலைபேசியில் கேட்ட சோபியாவின் தீனமான முணங்கலில் காணாமல் போக,
“சோபிம்மா…” என அவனின் குரலே நலுங்கிவிட்டது.
“ஏய் இந்தாம்மா, பேசு. செழியன் தான். அந்த போலீஸ்காரன் தான் பேசறான். ஐயோ இவளுக்கு காதும் கேட்காம என்னத்தடா புரியவைக்க ஜெய்?…” என்றான் கதிர் எரிச்சலுடன் சோபியாவை அடிக்க கை ஓங்கியபடி.
“அட அட அட. என்ன ஒரு தவிப்பு, என்னவோ இவ உன் பொண்டாட்டி மாதிரி…” என்ற தனாவின் எள்ளல் குரலில்,
“டேய்….” என ஆத்திரம் தீரமட்டும் கத்தினான் நெடுஞ்செழியன்.
“உன் பொண்டாட்டியை தூக்கிருந்தா கூட இவ்வளோ துடிச்சிருக்கமாட்ட போலடா செழியா? சும்மா தவிக்கிறியே…” என்று இன்னும் அடக்கமாட்டாமல் அவன் சிரிக்க,
“டேய் அவ குழந்தைடா. அசிங்கத்துக்கு பேர் போன உங்களுக்கெல்லாம் உறவுகளோட புனிதம் தெரியுமா? வேண்டாம் தனா. என்னை வெறியேத்தாத. பேசாம சோபியாவை பத்திரமா கூட்டிட்டு வந்து விட்டுடு. இல்ல கொன்னு புதைச்சிடுவேன்….” என்று நெடுஞ்செழியன் எச்சரிக்க,
“என்ன கொண்டுவந்து விடவா? உங்களுக்கு வந்து சிக்குறாங்க பாருங்க. என்ன அழகா இருக்கா? அண்ணனும் தம்பியும் தேடி தேடி கட்டிருக்கீங்கடா…” என்றான் கதிர் தனது அசிங்கமான குரலில்.
“கதிரவா…” என்ற நெடுஞ்செழியன் அடைபட்ட சிங்கமாக கர்ஜிக்க,
“நீ எவ்வளோ வேணும்னாலும் கத்திக்கோ. எனக்கு நிகிதா வேணும். உன்கிட்ட இருக்கற ஆதாரங்கள் வேணும். நீ இதை பன்றதால உன் பொண்டாட்டியை, இந்த பொண்ணை விட்டுடறேன். இல்லைன்னா இங்க என்ன நடக்கும்ன்னு நான் சொல்லனுமா என்ன?…” என்றான் கதிர்.
“இங்க பார் செழியா நாங்க வாழறதுக்கே அவ்வளோ ரிஸ்க் எடுத்தோம். இவ்வளோ நாள் மறைச்சு பண்ணினது எங்க பெயர் வெளில வந்துட கூடாதுன்னு தான். அதையே நீ அம்பலமாக்க நினைச்சா எங்களை யாராலையும் கட்டுப்படுத்த முடியாது. அழிவு உனக்கும், உன்னை சேர்ந்தவங்களுக்கும் தான்…” என்றான் தனா.
கூடவே சோபியாவின் நிலையை புகைப்படம் எடுத்து நெடுஞ்செழியனுக்கு அனுப்ப ‘ஐயோ’ என்று கதறிவிட்டான் அவன்.
“சோபி…” என்ற மனுவின் விழிகள் ரத்தமாய் சிவந்திருக்க நீர் திரண்டு மனைவியின் முகத்தை திரையிட்டு மறைத்தது.
“குட்டிம்மா, டேய்…” என அதையே பார்த்த மனுரஞ்சனின் மனம் விண்டுபோனது.
அதற்கு மேல் யோசித்து நெடுஞ்செழியன் நிற்கவில்லை. யோசிக்கவும் அது நேரமில்லை.
இப்போது இதை செய்யவில்லை என்றால் இதைவிட விபரீதம் நேரும். வேகமாய் தான் சேகரித்த ஆதாரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டான்.
“மனு வா என்கூட…” என்றவன் அழைப்பில் எங்கே என கேட்காமல் உயிரற்ற நடைபிணமாக அண்ணனுடன் கிளம்பினான் மனுரஞ்சன்.