மனதை திடப்படுத்தியவள் அந்த பட்டன் போனிலிருந்து குறுஞ்செய்தியை நெடுஞ்செழியன், மனு, வேதா, வீரவேந்தர் என அனைவருக்கும் அனுப்பியதும் சைலன்ட்டில் போட்டுவிட்டு கீழே இறங்கி சென்றாள்.
“பாஸ்போர்ட் எங்க?…” என அவளிடம் தனா கேட்க,
“இங்க இல்லை. அவங்க எடுத்துட்டு போய்ட்டாங்க போல?…” என்றவள்,
“இப்பவும் ஒண்ணுமாகிடலை. சரணடைஞ்சு செஞ்ச தப்புக்கு தண்டனையை வாங்கிட்டு ஒழுக்கமா வாழ பாரு தனா…” என சுபஷ்வினி எச்சரித்தாள் ஆத்திரத்துடன்.
“என் பாஸ்போர்ட்டை எப்படி வரவழைக்கன்னு எனக்கு தெரியும். நீங்க ரெண்டுபேரும் கிளம்புங்க…” என்றவன்,
“கால் கட் பண்ணாம ப்ளூடூத், இல்ல இயர் போன்ல கனெக்ட் பண்ணி அப்படியே கிளம்பி வாசலுக்கு வாங்க. நான் லைன்ல இருக்கறதை யாருக்காச்சும் காமிச்ச இங்க சங்கீதாவை முடிச்சிருவேன்…” என்று அவளின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தான்.
“வெளிய வா. உன்னை எங்காளுங்க கண்காணிச்சிட்டே தான் இருக்காங்க…”
அருகிலிருக்கும் அறையில் இருந்தவர்களிடமும் எதுவும் சொல்ல முடியவில்லை.
“பாப்பா எங்க போறீங்க?…” என கேர்டேக்கர் கேட்க,
“அவங்க போன் பண்ணி நிகிதாவோட வர சொன்னாங்க க்கா. அத்தைட்ட சொல்லிருங்க. அப்படியே அந்த ரூம்ல என்னோட மொபைல் உடைஞ்சிருச்சு. அதை சுத்தம் பண்ணி ரூமையும் கிளீன் பண்ணிருங்க…” என்றவள் எதையோ குறிப்பு காட்டுவதை போலிருந்தது அவருக்கு.
“பாப்பா…” என அருகில் வரவிருந்தவரை வராதே என்பதை போல தலையசைத்தவள்,
“சொன்ன வேலையை செய்ங்கக்கா. சும்மா எல்லாத்துக்கும் தொணதொணன்னு. நான் வரும்போது ரூம் க்ளீனா இருக்கனும். படுக்கை துணியை மாத்துங்க…” என படபடவென சொல்லிவிட்டு வெளியே வரும்முன் அவர்களின் கேள்விகள் வேறு.
நெடுஞ்செழியன் வர சொல்லியதாகவே சொல்லி வெளியே வந்தவள் முகத்திலிருந்த கலவரத்தில் நால்வரும் அவர்களை பின்தொடர்வது என முடிவுக்கு வந்தனர்.
நிகிதாவுடன் தெருமுனைக்கு வர அவர்களுக்கு தயாராய் வாகனம் நின்றிருந்தது அங்கே.
“போனை குடும்மா…” என அவர்கள் ஏறியதுமே ட்ரைவர் வாங்கிக்கொள்ள சுபஷ்வினிக்கு பதட்டம் இன்னும் கூடியது.
தங்களை பின் தொடர இருப்பவர்களை திரும்பி பார்த்தாள் அவள். அதனை ட்ரைவர் தனாவிடம் கூற,
“உங்களை ஃபாலோ பன்றவங்களை பத்தி நீ கவலைப்படவேண்டாம். அவங்களை எப்படி டைவர்ட் பண்ணனும்ன்னு எனக்கு தெரியும்…” என எள்ளலாக சிரித்தவன்,
நிகிதாவின் முகத்தில் இப்போது எள்ளளவும் பயமில்லை. இனி நடப்பது நடக்கட்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.
வாகனம் போக்குவரத்து நெரிசலில் சாலையில் கலக்க எங்கே எப்படி என்று தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்தவர்கள் கண்ணிலிருந்து மறைந்திருந்தது அவர்களின் வாகனம்.
புறநகர் சாலையில் பயணமாகியதில் இருந்தே திரும்பி திரும்பி யாரும் தங்களை காப்பாற்ற வருகின்றனரா என பரிதவிப்புடன் பார்த்துக்கொண்டே வந்தாள் சுபஷ்வினி.
இல்லை. மக்களின் நடமாட்டத்திலிருந்து வெகு தொலைவிற்கு வந்திருந்தனர். எங்கே செல்கிறோம் என்றே தெரியாமல் ஒரு பயணம்.
கண்கள் ஒருவிதமாய் சுழல ஆரம்பித்தது. மயக்கத்திற்கு செல்வதை போலிருக்க மூச்சை இழுத்து அடக்கினாள் சுபஷ்வினி.
நிகிதா மயங்கியிருக்க தானும் லேசாய் கண்களை மூடுவதை போலிருந்தவள் மனதில் அத்தனை அச்சம்.
கார் ஒரு ஓரமாய் நிறுத்தப்பட அங்கே யாராவது இருப்பார்களா என்று பார்த்தவளின் கண்களுக்குள் தூரத்தில் ஒரு வாகனம்.
தங்களை கடத்தி செல்லும் ட்ரைவர் இறங்கியதும் தானும் இறங்க நினைத்து பார்க்க கதவை திறக்க முடியவில்லை.
கதவை போட்டு உடைக்க பார்த்தாள் சுபஷ்வினி. வீட்டிலிருந்து தங்களை தொடர்பவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று எண்ணியிருந்ததும் ஏமாற்றத்தில் கொண்டு செல்ல இப்போது எல்லாம் இழந்த நிலை.
இடையில் சொருகியிருந்த பட்டன் போன் லேசாய் குறுகுறுக்க மூச்சை இழுத்து பிடித்தபடி அதனை எடுத்து லேசாய் குனிந்தபடி அட்டன் செய்தாள்.
“அஷ்வினி என்ன பண்ணியிருக்க நீ?…” என எடுத்ததும் நெடுஞ்செழியன் பரிதவிக்கும் குரலில் அலண்டு போய் கேட்டான்.
“செழியன், என்னால பேச முடியலை. இனி கான்டெக்ட் பண்ணவும் முடியாது. உங்க வாட்ச், இந்த போன் என்கிட்ட…” என்றவள் மூச்சுக்கு திணறினாள்.
“அஷ்வினி, ஏன்டி இப்படி பண்ணின? நான் வரவரைக்கு இருக்கமாட்டியா?…” என்றவன் அப்போது கோபமும் கொள்ளமுடியாமல் தடுமாறி அலைபாய்ந்தான்.
“சங்கீதா, சோபியாவை பார்க்கனும் செழியன். எனக்கு ஒன்னுமாகாது. இவங்க யாராலையும் எதுவும் பண்ண முடியாது. ஆனா, ப்ளீஸ் சீக்கிரம் வாங்க. வந்திருங்க…” என்றவள் கண்கள் இன்னும் சொருகியது.
“செழியன், முத்துக்கிருஷ்ணன் வரார்…” என்று குரல் உள்ளடைய சொல்ல நெடுஞ்செழியனுக்கு புரியவில்லை.
“என்ன? என்னம்மா, என்ன சொல்ற?…” என தவித்து ச்னஜலத்துடன் கேட்டவன்,
“அஷ்வினி பேசும்மா, என்னாச்சுடி உனக்கு? அஷ்வினி…” என்றவன் அலறலில் பதில் பேச முடியாமல் கைகள் தொய்ந்து விழுந்தது.
அழைப்பு இணைப்பில் இருக்க, யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்க செழியன் அமைதியாகி யார் என அனுமானிக்க ஆரம்பித்தான்.
“ஹெல்ப், ஹெல்ப்…” என சுபஷ்வினி தீனமாய் அவரிடம் கெஞ்சும் குரலில் கேட்பத்தும் கேட்டது துல்லியமாக.
“என்னம்மா நீ இன்னும் முழுசா மயங்காம இருக்கியா? சரி விடு. அதுவும் நல்லதுக்கு தான்…” என உள்ளே எட்டி பார்த்துக்கொண்டே கேட்டு,
“ஹெல்ப்பா? உன்னை பத்திரமா கூட்டிட்டு போக போறதே நான் தானே? இந்த ஹெல்ப் போதுமா?…” என்றவரின் முகம் மாறியது.
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ. அங்க போனதும் இருக்கு கச்சேரி…” என்ற பேராசை குரலில் சொல்லியவர் ட்ரைவர் சீட்டின் பக்கத்தில் ஏறிக்கொண்டார்.
“என்னடா போர்ட் எல்லாம் மாத்திட்டியா? இனி போற வழில நம்மாளுங்க தான். ஒன்னும் பிரச்சனை இல்லை. காரை எடு…” என்று தொண்டையை செருமிக்கொள்ள அடுத்ததாக வேறொரு கைபேசி அழைப்பு சத்தம்.
ஆம், மனுரஞ்சனுடன் உடனடியாக நெடுஞ்செழியன் வந்து சேர்ந்தது ஆளுநர் மாளிகைக்கு.
வேதாவை தொடர்புகொள்ள முடியாதவன் சுரேந்திரனை அவசரம் என்று ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்தவன் முதலமைச்சர் களஞ்சியம் ராஜாங்கத்தின் மீதும், கதிரவன் ராஜாங்கத்தின் மீதும் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் ஒப்படைக்க அவர் அதிர்ந்து பார்த்தார்.
“முதலமைச்சரை கைது செய்யவும், தலைமை செயலகத்தை சோதனை செய்யவும் நீங்க தான் உத்தரவு பிறப்பிக்கனும்…” என நெடுஞ்செழியன் கலங்கி சிவந்து போய் அவரிடம் கேட்க,
“ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை. நீங்களே இதை எல்லாம் பாருங்க…” என்றான் மனுரஞ்சன் ஆதாரங்களை காண்பித்து.
மனுரஞ்சனை அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. முன்பே அவனை சந்தித்திருந்ததனால் அவன் மீது ஆளுநருக்கு அறிமுகமும், நன்மதிப்பும் இருந்தது.
தலைமை நீதிபதியான சுரேந்திரனும் இதனை எல்லாம் பார்த்துவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கலந்து பேசி கையெப்பமிட்டார்.
இன்னும் இதில் தனாவும் இருப்பதை யாரிடமும் சொல்லவில்லை. ஆதாரங்களை தெரியப்படுத்தவும் இல்லை.
“தனாவையும் சேர்த்து சொல்லுவோம் ண்ணா. ஏன் வேண்டாம்ன்னு சொல்றீங்க?…” என்ற மனுரஞ்சனிடம்,
“இந்த சட்டம் நமக்கு தான் நேர்மை, உண்மைன்னு நிக்கும் மனு. நாம குற்றவாளிங்கன்னு அடையாமல் காட்ட போறது தலைமை நீதிபதிக்கிட்ட மட்டுமில்லை. அந்த குற்றவாளியோட பாசமான அப்பாக்கிட்டையும். வேதா மேம் எப்படியோ, ஆனா ஜட்ஜ் அவர் பையன் மேல ரொம்ப பாசம்….” என்றவன்,
“இந்த விஷயத்துல எந்த இடைஞ்சலும் வரக்கூடாது. தமிழ்நாட்டோட தலையெழுத்தே மாறக்கூடிய மாற்றம் நடக்க போகுது. ஆட்சி கவிழ போகுது. அடுத்து இடைத்தேர்தல் வரை ஆளுநர் ஆட்சி….” என்றான் நெடுஞ்செழியன்.
“இது எல்லாத்தையும் விட நமக்கு நம்ம சோபி முக்கியம் மனு. தனாவை எப்ப வேணா தூக்கலாம். இப்ப இந்த விஷயத்தை விட்டா களஞ்சியத்தை பிடிக்க முடியாது. இப்ப வேதா மேம் எங்கன்னும் தெரியலை. எந்த ரிஸ்க்கும் எடுக்க கூடாது நாம…”
“கதிரை பிடிச்சா தனா தானா சிக்குவான். அவங்க ஆட்டம் காண வச்சா தான் அந்த பதட்டத்துல வேற என்னன்னு யோசிக்கும் போது நாம சுதாரிச்சுக்க முடியும். ஆட்சி கையில இருக்குன்ற திமிர்ல தான இத்தனையும் செய்யறானுங்க. அதுவே இல்லைன்னா?…”
“அன்னைக்கு என்ன புடுங்கினன்னு அவன் அப்பன்காரன் கேட்டான். இன்னைக்கு தெரியும் அது என்னன்னு? நம்ம பசங்க அங்க அவன் எஸ்கேப் ஆகாம இருக்க ஏற்கனவே போயாச்சு….” என நெடுஞ்செழியன் சொல்லியதும்,
“அப்போ ஆளுநர் சைன் பண்ணினதும் ப்ரெஸ்க்கு நியூஸை கசியவிட்டுடலாம். அவனுங்க தப்பிக்கவே கூடாது…” என்று மனுவும் சொல்ல அடுத்தடுத்து அதிரடியாய் திட்டங்களை தீட்டி இருந்தான் நெடுஞ்செழியன்.
ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்து அவரை சந்திக்கவேண்டும் என்று சொல்லியவன் இத்தனை நேரமாகியும் வீட்டிலிருந்து எந்த அழைப்பும் வரவில்லையே என அழைக்க செல்ல அப்போது தான் சாலாட்சி எண்ணிலிருந்து அழைப்புகள் வந்திருந்தது.
உடனே எடுத்தவன் கேர்டேக்கர், சாலாட்சி சொல்லியதில் உட்சபட்ச அதிர்ச்சிக்கு ஆளானான்.
சுபஷ்வினி எழுதியதாய் கேர்டேக்கர் சொல்லவும் அதனையும் போட்டோ எடுத்து தனக்கு அனுப்ப சொல்லியவன் மனது மத்தளமாய் அடிவாங்கியது.
“வேதா மேம் நம்பர் நாட் ரீச்சபிள். வேதா மேம், தனா, தனா மனைவி யாருமே தொடர்பு நிலையில் இல்லை. இதுவும் கதிரோட வேலை தான்…” என்றான் நெடுஞ்செழியன்.
சுரேந்திரன் இன்னும் பதட்டமானார். விளைவு தலைமை செயலகத்தில் முதலமைச்சரை அதிகாரப்பூர்வமாய் கைது செய்து அவை நாடெங்கும் ஒளிபரப்பாகியது.
அவசரநிலை பிரகடனம் செய்து ஆளுநர் ஆட்சியாக அவரும் அறிக்கையை வெளியிட்டுவிட்டார்.
களஞ்சியத்தை கைது செய்ததோடு, கதிரவன், அவர்களுக்கு துணை போயிருக்கும் டிஜிபி என்று அனைவரும் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் என்று ஊடகத்துறை மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டனர்.
————————————————–
“இது உன் ப்ளானா ஜெய்? செஞ்சிட்ட இல்ல?…” என்றான் கதிர் ஆத்திரத்துடன் தனாவிடம்.
“கதிர் என்னடா இது?…” என்றான் தனா.
“நான் நினைச்சேன்டா என் பாஸ்போர்ட் வேணும், நான் தப்பிக்கனும்ன்னு நீ ஓயாம சொல்லும் போதே நினைச்சேன்டா. எங்க எல்லாரையும் மாட்டிவிட்டுட்டு நீ மட்டும் தப்பிச்சிருவ. நாங்க கம்பிக்கு பின்னாடி நின்னு நீ குடும்பம், குட்டின்னு சந்தோஷமா இருக்கறதை பார்க்கனும். இல்ல?…” என்றான் கதிர்.
“இதுக்குத்தான் இவனை முதல்ல முடிக்கனும்ன்னு சொன்னேன். இப்ப பார்த்தியா?…” என டிஜிபி அடங்காத ஆக்ரோஷத்துடன் கத்த தனாவிற்கு அந்த நொடி திகைப்பு மறைந்து ஒருவித எள்ளலுடன் பார்த்தான் அவர்களை.
“ஓஹ் கூட்டணி அப்படி போகுதோ?…” என்று சொல்லியவன் இளக்காரமாய் பார்க்க செய்வதறியாமல் நின்றனர் கதிரும், டிஜிபி சாருகேஷும்.
அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு நிற்பவர்களை பார்த்தபடி கைகள் கட்டப்பட்ட நிலையில் நெஞ்சம் வலிக்க பார்த்திருந்தார் வேதசௌந்தரி.
அவர்கள் இருக்குமிடம் கண்டுபிடித்து காவல்துறையினர் நெருங்கும் முன் அங்கு இரு உயிர்கள் பிரிந்திருந்தது.