“ம்ஹூம், நாம இதுக்கு ஒன்னும் இவங்களை தூக்கிட்டு வரலை. இப்ப இருக்கற சூழ்நிலையில நாம பாஸ்போர்ட் வச்சு கூட தப்பிக்க முடியாது கதிர். நிலைமை வேற மாதிரி போய்ட்டிருக்கு….” என தனா கதிரை எச்சரிக்க,
“என்னடா திரும்ப பாசமெல்லாம் தலை தூக்குது?…” என்ற கதிர்,
“உனக்கு வேண்டாம்ன்னா போ. என்னை தடுக்காத ஜெய்…” என்று சொல்லவும் தனாவிற்கு அதற்கு மேல் அவனை நிறுத்திவைக்கமுடியும் என்று தெரியவில்லை.
இன்னும் மனைவியை, தாயை, நிகிதாவை நிமிர்ந்து பார்க்கவில்லை அவன். லேசாய் ஒதுங்கி திரும்ப,
“ஏன் மாமா திரும்பிட்டீங்க? நீங்க இந்த பிஸ்னஸ் தானே பன்றீங்க? நல்லா பாருங்க நீங்க. என் டாடியை கொலை செஞ்சவங்களுக்கு என்னை அப்படி பார்க்கறதுல மட்டும் சங்கடம் இருக்குமா மாமா? அதுக்கு தானே வரவழைச்சீங்க?…” என்றாள் நிகிதா வாளென குத்தும் வார்த்தைகளுடன்.
“வாய மூடு நிகி. நான் என்ன செய்யனும்ன்னு நீ சொல்லாத. ஆமா நான் பார்த்திருக்கேன். ஆனா சங்கீதாவை தவிர யாரையும் எந்த பொண்ணையும் நான் தொட்டதில்லை…” என்று சொல்லியவன் வார்த்தையில் இன்னுமே கூசி போனாள் சங்கீதா.
“ஒழுக்கம்ன்றது மனசுல இருக்கனும். எண்ணத்தில இருக்கனும். நீ ஒரு பொண்ணோட மட்டும் வாழ்க்கையை பகிர்ந்துட்டா மட்டும் ஒழுக்கமானவனாகிடுவியா? சுத்தமானவனா இருப்பியா? இல்லவே இல்லை…” என்ற சுபஷ்வினி,
“உன்னால நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க. அவங்களோட ஒவ்வொரு கதறலையும் பார்த்து ரசிச்சவன் தான? பார்வையால, மனசால அனுபவிச்சவன் தானே? நீ ஒழுக்கமானவனா? ஈனப்பிறவிடா…” என்றாள்.
“இனி ஒரு வார்த்தை பேசின…” என்றவன் கையை ஓங்கி அறைய வர தனாவின் கையை கண்ணிமைக்கும் நேரத்தில் பிடித்து திருகியவள் நடுமுதுகில் மிதித்து கீழே தள்ளினாள்.
“எவனாச்சும் கிட்ட வந்தீங்க…” என சுபஷ்வினி நிகிதாவின் முன் நிற்க,
“அடிங்க சுபாக்கா, ஒருத்தனையும் விடாதீங்க. அடிங்க…” என்று அழுகையுடன் கத்தினாள் சோபியா.
“நிகி நீ இங்க வா. அக்காக்கிட்ட வந்துரு…” என்று அவளை சோபியா அழைக்க கீழே விழுந்திருந்த நிகிதாவால் காலை நகட்டவே முடியவில்லை.
சுபஷ்வினிக்கு தன்னெதிரே இருப்பவர்களை சமாளிக்கவும் செய்யவேண்டும், நிகிதாவையும் எழுப்பி பாதுகாப்பாய் அமர வைக்க வேண்டும்.
இங்குமங்குமாய் பார்வையை சுழற்றியவள் முகம் வேதாவை கண்டதும் வேதனையை காட்டியது.
“நீ தைரியமா நில்லும்மா…” என்றார் வேதா.
“சுபா இங்க இருக்கறவங்களாம் மனுஷங்க இல்லை. வாழ தகுதியானவங்களும் இல்லை. என்னால எழுந்துக்க முடியலைடா. நீ சோர்ந்து போய்டாத…” என சங்கீதா கண்ணில் நிறைந்த நீரை உள்ளிழுத்தபடி கூற தனா முதுகில் சுரீரென்ற வலியுடன் மனைவியை பார்த்தான்.
அப்போது தான் வயிற்றை அழுத்தி பிடித்தபடி அமர்ந்திருந்தவள் முகத்தில் ரத்தம் பாய்ந்து வலியை பொறுப்பதை கண்டான்.
“கீதா…” என்றவன் மனதிற்கு தகப்பன் என்னும் உணர்வு துளி வேர்விட அவனின் அழைப்பை கவனித்த சுபஷ்வினி அங்கே திரும்பியதும் கதிரால் தலையில் தாக்கப்பட்டு கீழே விழுந்தாள்.
“பெரிய இவன்னு நினைப்பு. அடிக்கிறா பாருங்க…” என்ற கதிர் நிகிதாவின் அடிபட்ட காலில் இன்னும் அழுத்தமாய் மிதித்தான்.
அவளின் அலறலில் அத்தனை குரூரமான சிரிப்பு படர்ந்தது. மீண்டும் கால் எலும்புகள் உடைப்படுமாறு மிதித்தவன்,
“இந்த காலோட தானே சென்னைக்கு வந்த? போனவ அப்படியே போகாம என்ன பெரிய நீதி ஹேரு வேணும்டி உனக்கு? பெருசா என்ன கெட்டு போச்சு? உன்னை திரும்ப யாராச்சும் தொந்தரவு பண்ணினோமா?…” என சொல்லி அவளை தாக்க சுபஷ்வினி எழுந்துகொள்ள முடியாமல் திணறினாள்.
“இப்ப உங்களுக்கு என்னடா கெட்டு போச்சு? போய் செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு போலீஸ்கிட்ட போக வேண்டியது தானே? ஆமா, எனக்கு எதுவும் கெட்டு போகலை. என்கிட்ட இருந்து அப்படி எதையும் நீ பறிச்சுக்கல….” என்ற நிகிதா,
“ஆனா செஞ்சதோட தப்பை தப்புன்னு உணராம மத்த பொண்ணுங்க எல்லாம் நீ வாழறதுக்குன்னு பொறந்திருக்காங்கன்னு நினைச்சு இருக்க பாரு. இதை நான் எப்படி விட முடியும்? நீ என்னடா என்னை பாவம் பார்த்து விடறது? நீ பாவப்படர அளவுக்கு நான் குறைஞ்சு போயிடலை. நீ என் கால் தூசிக்கும் தகுதியானவன் இல்லை. உனக்கு பாவமே பார்க்க கூடாது…” என்றாள் நிகிதா ஆவேசத்துடன்.
“கைக்கு அடக்கமா இத்துனூண்டு இருந்துட்டு எவ்வளோ பேசுது உன் வாய். அதான் அந்த மணிகண்டன் உன்னை திரும்ப கேட்டான் போல?…” என அசிங்கமாக சொல்லியவன்,
“பேசிக்க, எவ்வளோ நேரம் பேசுவ?…” என மீண்டும் நெருங்க முற்பட நிகிதா தன்னில் நன்றாக இருந்த ஒரு காலை வைத்து அவனை கீழே விழ செய்தவள் கைகளுக்குள் அவனின் தலைமுடி சிக்கிக்கொண்டது.
“ஏய் விடு. விடு…” என கதிருடன், டிஜிபியும் நிகிதாவை பிடித்து நிறுத்த முயன்றனர்.
தனா இதனை பார்த்துக்கொண்டு தான் இருந்தான். தடுக்க நினைக்கவில்லை. அவனின் எண்ணமெல்லாம் முதலில் இவர்களை விட்டு செல்லவேண்டும்.
விஷயம் வேறு பெரிதாகி இருக்க இனி பாஸ்போர்ட் வைத்து தப்பிப்பது என்பதும் சாத்தியமில்லை.
அவனுக்குமே ஏன் நெடுஞ்செழியன் தன்னை பற்றி ஆளுநரிடம் சொல்லவில்லை என்ற கேள்வி இருந்தது தான்.
ஆனால் அதனை யோசிக்கும் நிலையில் அவனில்லை. இத்தனைக்கும் காரணமான நிகிதா, சுபஷ்வினியை இப்படியே விட்டு செல்வதா என ஒருபக்கம் அவனின் மனம் கொந்தளித்தது.
இப்போதைக்கு தன் பாதுகாப்பு தான் முக்கியம், அதன்பின் இவர்களை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்திருந்தான்.
“என்னடா ஜெய் அவ என்னை அடிக்கிறா, நீ பார்த்துட்டு நிக்கிற? தடுக்க கூட வராம?…” என்று வந்த கதிரின் முகமெங்கும் நக கீறல்களும், காயங்களும்.
“இல்ல நான் வேற யோசிச்சிட்டு இருந்தேன்…” என்றவன்,
“கதிர் நான் சொல்றதை கேளு. இவங்கக்கிட்ட வேற எதுவும் வச்சுக்காத. முதல்ல டொப்புன்னு மொத்தமா போட்டு தள்ளிட்டு போய்ட்டே இருப்போம். நீ வேற எதுக்கும் ஆசைப்பட்டு மாட்டிக்காத. இந்த இடத்துலயே கிடந்து அழுகி சாகட்டும்…” என்று தனா எச்சரிக்க,
“என்ன ஜெய், நான் உன் பொண்டாட்டி மேலையும் கை வச்சிருவேன்னு பயந்துட்டியோ?…” என கதிர் வரைமுறையின்றி பேச,
“டேய்…” என அவனின் சட்டையை பிடித்துவிட்டான் தனா.
“உன் புத்தி அப்படித்தான்டா போகும்…” என ஆக்ரோஷப்பட்டு சங்கீதாவை பார்த்தான்.
“ஜெய் நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு உன் பொண்டாட்டியை அப்படி பார்க்கற?…” என்றான் கதிர் நக்கலாக.
கதிரின் பேச்சுக்களின் மாற்றத்தை தனா அப்போது தான் உணர்ந்தான். எப்போதும் தன் உத்தரவின் பெயரில் அதட்டலில் அடங்குபவன் இன்று அப்படி இல்லாமல் தன்னையும் ஏறி மிதிக்கும் அளவிற்கு நிற்க தனாவிற்கு எங்கோ இடறும் சிந்தனை.
“பார்த்தீங்களா இவன் பாசத்தை? நான் சொன்னேன்ல, தப்பிக்க பொண்டாட்டி கழுத்துல கத்தியை வச்சு கூட்டிட்டு வந்துட்டான்னு நம்ப வேண்டாம்ன்னு சொன்னேன்ல….” என்ற கதிர்,
“இந்த செழியன் இவனை விட்டுட்டு நம்மளை மட்டும் காமிச்சு ஆட்சியையே கவுத்து எங்கப்பாவை அரஸ்ட் பண்ண வச்சிருக்கான்னா எனக்கென்னமோ இவன் மேல தான் சந்தேகமா இருக்கு அங்கிள்…” என்றான் டிஜிபியிடம்.
“எல்லாத்துக்கும் முதல்ல அவன் விசாரணையை இவன்கிட்ட இருந்து தான் ஆரம்பிச்சிருக்கான். அப்போ இவனை தானே முதல் குற்றவாளியா காமிச்சிருக்கனும்? ஏன் செய்யலை? இது நம்மளை ஒண்ணா புடிக்கறதுக்கான ப்ளானா இருந்தா?…” என்று அவரிடம் கேட்க தனா திகைத்து போனான்.
பேச்சுக்கள் இப்படியே வளர்ந்து கதிரும், தனாவும் ஒருவரை ஒருவர் எதிர்த்து நின்றனர் அவ்விடம்.
“இதுக்குத்தான் இவனை முதல்ல முடிக்கனும்ன்னு சொன்னேன். இப்ப பார்த்தியா?…” என டிஜிபி அடங்காத ஆக்ரோஷத்துடன் கத்த தனாவிற்கு அந்த நொடி திகைப்பு மறைந்து ஒருவித எள்ளலுடன் பார்த்தான் அவர்களை.
“ஓஹ், கூட்டணி அப்படி போகுதோ?…” என்று சொல்லியவன் இளக்காரமாய் பார்க்க செய்வதறியாமல் நின்றனர் கதிரும், டிஜிபி சாருகேஷும்.
பேச்சுக்கள் கைகலப்பாக நீண்டு செல்ல இருவருக்கிடையில் பலமான அடிதடி. கதிரின் உடல் வலிமையின் முன் தனா குற்றுயிரானான்.
ஆனால் தனாவும் அத்தனை சுலபத்தில் விடவில்லை. அவர்களுக்குள்ளேயே அடித்து சாய்ந்த பின்னர் ஓய்ந்தனர்.
எழுந்துகொள்ள முடியாமல் அடிவாங்கிய தனா கீழே சாயவும் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்த கதிர்,
“இதுக்கு மேல உன்னை விட்டு வைக்க நான் என்ன கேனையனா?…” என சொல்லி,
“டேய் தூக்கி பிடிங்கடா இவனை…” என்றான் இரண்டு தடியன்களை அழைத்து. அவர்கள் தனாவை வந்து பிடித்துக்கொண்டதும்,
“ஹ்ம்ம், இல்லை இப்ப சுடலை. கொஞ்ச நேரம் எல்லாத்தையும் பாரு. இந்த நிகிதா, அடுத்து டெல்லி, போலீஸ்காரன் பொண்டாட்டி, உன் வீட்டம்மா, பெத்தம்மான்னு ஒண்ணொண்ணா அனுப்பிட்டு உன்னை அனுப்பறேன்…” என்ற கதிர் நிகிதாவை நெருங்க சுபஷ்வினி மீண்டும் தலையை பிடித்துக்கொண்டு எழுந்து நின்றாள்.
சட்டென்று இடையிலிருந்து ஒன்றை உருவி எடுத்தவள் மின்னலாய் நொடிநேரத்தில் அத்தனைபேரின் கண்ணிலும் அதனை தூவிவிட,
“ஏய்…” என்ற அலறலுடன் கண்ணை கசக்கியபடி அலறி துடித்தனர்.
“வாட்சையும், போனையும் தூக்கி போட்டுட்டா நீங்க பெரியாளுங்களா? சின்ன துரும்பை கூட நாங்க ஆயுதமா பயன்படுத்துவோம்டா…” என்றவள் சோபியா, வேதாவை கட்டிலிருந்து அவிழ்த்துவிட்டு மற்ற அத்தனைபேரையும் சரமாரியாக அடித்து துவம்சம் செய்துவிட்டாள்.
அத்தனைபேரையும் இழுத்து கட்டு போட்டுவிட்டவள் பதட்டம் இன்னும் குறையவில்லை.
எத்தனை நேரம் இதற்குள் அடங்கி இருப்பார்கள் இவர்கள் என்று மூச்சுவாங்க கட்டுக்களை இறுக்கினாள் சுபஷ்வினி.
“அந்த போனை குடு சுபா…” என்ற வேதா தனாவிடமிருந்த போனில் இருந்து தொடர்புகொள்ள போலீஸை முயல அதன் உள்ளே நுழைய முடியவில்லை.