அத்தனை நேரம் பேசாமல் நின்றவர் மகனின் அருகில் சென்றார். கட்டப்பட்டு கீழே கிடந்தவன் முகத்தில் எல்லாம் குருதி.
அதனையும் தாண்டிய அவ்வளவு ஆவேசம் தனாவின் முகத்தில். வேதா அருகில் வர வர அவன் கோபம் எல்லையை கடந்தது.
“லாக் ரிமூவ் பண்ணு தனா…” என்றார் மகனிடம் அந்த கைபேசியை காண்பித்து.
“முடியாது. இங்க இருந்து உங்க ஒருத்தராலையும் வெளில போகமுடியாது. நாங்களா சொல்லாம இந்த இடத்தை யாராலையும் கண்டுபிடிக்கவும் முடியாது….” என்றான் ஆங்காரமான சிரிப்போடு.
“நீ கடைசியா திருந்த ஒரு வாய்ப்பு. போன் ஓபன் பண்ணு…” என்று மீண்டும் அவர் சொல்ல,
“போன்ல பிங்கர் பிரின்ட் எதுவுமில்லை ம்மா. அவன் பாஸ்வேர்ட் சொன்னா தான் உண்டு…” என சுபஷ்வினி சொல்ல சங்கீதாவின் வலி இன்னும் அதிகமானது.
“ம்மா…” என்றவள் மீண்டும் மெத்தையில் சாய்ந்துவிட இரக்கமற்று அதனை பார்த்தான் தனா.
நிகிதா ஒற்றை காலை பிடித்துக்கொண்டே நகர்ந்து சென்று சங்கீதாவை நெருங்கிவிட்டாள்.
“இங்க இருந்து போயிருவோம் கீதாக்கா. கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க….” என்று அழ,
“எனக்கு ஒண்ணுமில்லைடா நிகி….” என அப்போதும் நிகிதாவை தைரியப்படுத்தினாள் சங்கீதா.
கட்டவிழ்க்கப்பட்ட சோபியா அந்த கட்டிடத்தை விட்டு வெளியில் எப்படி செல்வது என்று பார்க்க பாதை எங்கே என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.
அழுகை, அழுகை, அப்படி ஒரு அழுகை. அங்கிருந்து எப்படி செல்ல போகிறோம் என்ற அழுகை.
சங்கீதா இருக்கும் நிலையில் உடனடியாக சென்றாகவேண்டிய கட்டாயம். இங்கிருப்பவர்கள் தெளிந்து எழும் முன் தப்பித்தாகவேண்டும்.
ஆனால் வழி புலப்படாமல் பரிதவித்தவள் மீண்டும் உள்ளே வந்தாள் சுபஷ்வினியிடம்.
“எந்த வழியா போறதுன்னு எதுவும் தெரியலை சுபாக்கா…” என்றாள் கலங்கி போய்.
“அத்தனை சீக்கிரம் உங்க யாரையும் விடமாட்டேன்டி…” என்று உருண்ட டிஜிபியை தான் அமர்ந்திருந்த இருக்கையை கொண்டு அடி அடி என அடித்த சோபியா,
“என்னால முடியலை சுபாக்கா…” என்றவாறு நிற்க முடியாமல் மயங்கி சரிய சங்கீதாவிடமிருந்து அடுத்த அலறல்.
“தனா வழி சொல்லுடா. நீ எக்கேடும் கேட்டு போ. வெளில போக வழியை சொல்லு. முதல்ல சங்கீதாவை காப்பாத்தனும். வழி சொல்லுடா. போனை ஓபன் பண்ணி தா…” என்ற வேதா மகனின் அரக்க பார்வையில் ஆவேசம் கொண்டு அவனை கன்னம் கன்னமாய் அறைந்து தள்ளினார்.
“உன்னையா பெத்து வளர்த்தேன். உன்னையா என்னோட நேர்மைக்கு வாரிசுன்னு நினைச்சு பூரிச்சேன்…” என சொல்லி சொல்லி அடிக்க தனா முகத்தை சுருக்கினானே தவிர கொஞ்சமும் அசரவில்லை.
அவனின் மனதில் எப்போதோ கலக்கப்பட்ட விஷம் உடல் பொருள் ஆவி என முழுதாய் பரவி இருந்தது.
மனைவி மீது சற்று முன்னிருந்த சிறு பரிதவிப்பும் கூட அவனிடமிருந்து விலகி சென்றிருந்தது.
“மாட்டேன். முடியாது…” என்றவன் கண்களில் அவர்களை பலி கொள்ளும் வெறி.
“இப்பவாச்சும் உனக்குள்ள மனுஷத்தன்மை ஒட்டி இருந்தா இதோட பாஸ்வேர்ட் சொல்லு. காப்பாத்த போறது உன் பிள்ளையை தானே? சொல்லுடா…” என்ற சுபஷ்வினியின் கண்ணீருடனான கதறலை கேட்டவன்,
“கத்துங்க. இன்னும் நல்லா கெஞ்சுங்க. பத்தவே இல்லை எனக்கு. என்னால உங்களை எதுவும் செய்ய முடியலையேன்னு நினைச்சு சாகறதை விட இது எவ்வளவோ பெட்டர்….” என்ற தனா,
“ம்மா, என்னை இங்க இருந்து விடு. என் கட்டை கழட்டி விடு. நான் போகனும். உன்னோட கட்டுப்பாடு, கண்ணியம், நேர்மை எதுவுமில்லாத சுதந்திரமான உலகத்துல நான் என் விருப்பப்படி வாழனும். என் கட்டை கழட்டி விடு…” என்றான் வேதாவிடம்.
“மேம் நமக்கு இப்ப சங்கீதா தான் முக்கியம். நிகியோட கால் நிச்சயம் உடைஞ்சிருக்கும். சோபியும் மயங்கிட்டா. நமக்கு அவங்க தான் முக்கியம். இவன் எங்கயும் தப்பிச்சிட முடியாது. ப்ளீஸ் சரின்னு சொல்லுங்க மேம்…” என்றாள் சுபஷ்வினி.
வேதாவின் கண்கள் வேதனையை பிரதிபலித்தது. சுபஷ்வினி சொல்வதை போல இப்போதைக்கு வீரியம் பெரிதா, காரியம் பெரிதா என்ற கையறு நிலை.
மூச்சை இழுத்தவர் திரும்பி அங்கிருந்த தங்களின் பெண்களை பரிதாபமாய் பார்த்தார்.
இப்போதும் முகத்தில் திடத்தை காண்பித்தவாறு அவரை வலுவிழக்க செய்யும் பார்வையை தராமல் கண்களால் தன்னை தைரியமூட்டும் தன் மருமகளை பார்த்தார்.
“கண்டிப்பா கழட்டி விடறேன். முதல்ல போன் பாஸ்வேர்ட் சொல்லு. இங்க இருந்து வெளில போக வழி சொல்லு. கழட்டி விடறேன். எங்கயும் போய்க்கோ…” என்றார் வேதா.
அவரை அழுத்தமாய் பார்த்தவன் கண்கள் வெறுப்பை உமிழ்ந்தது. தாயாய் அப்பார்வையில் பெரிதும் அடிவாங்கினார் வேதா.
“உன்னையா நம்ப சொல்ற? உன்னையா நம்புவேன் நான்? கண்டிப்பா கழட்டி விடமாட்ட நீ. என்னையும் தப்பிக்க விடமாட்ட. எனக்கு தெரியும். நான் செத்தா நீங்களும் சாகுங்க….” என்றவனை பலம்கொண்டமட்டும் ஓங்கி அறைந்தார் வேதா.
“எப்படிடா, எப்படிடா இப்படி மிருகமா மாறின?…” என்றார் ஆற்றமாட்டாமல்.
“மாறாம? அதுக்கு காரணமே நீ, உன் புருஷன் தான. என்ன அனுபவிச்சேன் நான். வசதி இருந்தும் நேர்மையா, எளிமையா இருக்கனும்ன்னு சொல்லி சொல்லி என்னோட ஆசைகள் எது நிறைவேறுச்சு. இதே அரசியல் பின்புலம் இருக்கற பசங்க என் கண்ணு முன்னாடி எப்படியெல்லாம் வாழ்ந்தாங்க. வாழறாங்க…”
“நான் அப்படியா வளந்தேன். எல்லாத்துலையும் கட்டுப்பாடு. எதுக்கெடுத்தாலும் நேர்மை, நேர்மை, நேர்மை. அதனால நான் என்ன சந்தோஷப்பட்டேன். அரசியல்லயாச்சும் எனக்குன்னு ஒரு பதவி கிடைக்க விட்டீங்களா? அரசியலை முழுசா தெரிஞ்சுட்டு களத்துல இறங்கனும். பக்குவம் வேணும்னு என்னை எடுபிடியா மாத்தினதை தவிர என்ன செஞ்சீங்க?…” என்றான் அவன்.
“எனக்கு நான் என் விருப்பப்படி வாழனும். செலவளிக்கிற பைசா ஒன்னொன்னுக்கும் கணக்கு சொல்லாம, உங்ககிட்ட எதிர்பார்க்காம, நிக்காம சந்தோஷமா வாழனும். அதுக்கு தேவை பணம்….”
“களஞ்சியம், கதிருக்கு தேவை முதலமைச்சர் பதவி. அடுத்த எலெக்ஷன்ல கட்சி மேலிடம் உங்களை முதலமைச்சர் வேட்பாளரா அறிவிக்க போறாங்களாம். அதுல அவருக்கு விருப்பமில்லை. ஆனா நான் நிப்பேன். என்னை நிறுத்தி தான் ஆகனும். களஞ்சியம் மறுக்க முடியாது. அதுக்காக நாங்க சேர்ந்துட்டோம்….”
“இதுக்கெல்லாம் இன்னும் பணமும் தேவை. எங்களோட ப்ரென்ட் சரத் மூலமா அவன் அப்பா மணிகண்டனை யூஸ் பண்ணிக்கிட்டோம். ஐடியா களஞ்சியத்தோடது. பாதுகாப்பு டிஜிபியோடது. எக்ஸிக்யூட் பண்ணினது நாங்க. இத்தனை செஞ்சும் என்மேல எந்த தப்பும் வந்திட கூடாதுன்னு புத்திசாலித்தனமா நான் செயல்பட்டேன்…”
“அந்த பிஸ்னஸ் எவிடென்ஸ், வீடியோஸ் ஸ்டோர் பண்ணியிருக்கற டிவைஸ் எல்லாம் கதிர் பிங்கர் பிரிண்ட், அன்ட் ஐ ஐடி வச்சு தான் ஓபன் பண்ண முடியும்படி செஞ்சேன். அவனால தான் அக்ஸஸ் பண்ண முடியும்ன்னு. முதலீடு என்ன தெரியுமா? பொண்ணுங்க இல்லை. அவங்க மேல வயசான பெருசுங்க வைக்கிற பேராசை தான்…” என்றவன்,
“என்னை போய் பக்குவமில்லைன்னு சொல்றியே? நீயெல்லாம் தாயா? அடுத்த எலெக்ஷன்ல உனக்கு பதிலா நான் நிக்கனும்ன்னு இருந்தேன். இந்த நாட்டை என் கைக்குள்ள வச்சு ஆளனும். என் விருப்பப்படி ஆட்டுவிக்கனும். எனக்கு கட்டுப்பாடு விதிக்க எவனும் எனக்கு மேல இருக்கக்கூடாது. அதான் அத்தனைபேர் குடுமியும் என் கையில இருக்கனும்ன்னு நினைச்சேன்…”
“ஆனா,,, ஆனா எல்லாத்துலையும் மண்ணள்ளி போடற மாதிரி வந்தா நிகிதா. இப்ப இந்த இடத்துக்கு கொண்டுவந்துட்ட நீ. ஏன் அவ வந்து சொன்னா நடந்தது நடந்து போச்சு, அதை எல்லாம் மறந்துட்டு படிப்பை பாரு. நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கறேன்னு சொல்லமாட்டியா நீ?…” என்று கத்த விரக்தியாய் சிரித்தார் வேதா.
இதை எல்லாம் கேட்டு அவரின் உயிர் மெல்ல மெல்ல உடலை விட்டு அகன்றுவிடும் போலிருந்தது.
தெரியாமல் செய்பவர்களுக்கு மன்னிப்பும் உண்டு, திருந்தி வாழ வாய்ப்பும் உண்டு.
திட்டமிட்டே தன்னுடைய சுயலாபத்திற்காக மகன் இவை எல்லாம் செய்திருக்க அவன் மனதில் துளியளவும் குற்றவுணர்ச்சி மிச்சமில்லை என்பது புரிந்துபோனது.
“எப்படி வேணா வாழறது தான் சுதந்திரமா? அப்படி ஒரு அசிங்கம் புடிச்ச சுதந்திரம் உனக்கு தேவையும் இல்லை. இப்படி ஒரு புள்ளையும் எனக்கும், இந்த நாட்டுக்கும் தேவையில்லை….” என்றார் வேதா.
“நீ இதை தான் சொல்லுவன்னு தெரியும். நான் தேவையில்லைன்னு முடிவு பண்ண நீ யாரு?…” என்றவன் கைகள் எப்போது அவிழப்பட்டதோ கையிலிருந்த துப்பாக்கியால் சட்டென வேதாவை குறிபார்க்க அவர் அதிர்ந்து விலகும் முன் அவனின் குறி நிகிதாவை அடைந்தது.
“நிகி…” என்ற சங்கீதாவின் அலறலில் கையில் குண்டு பாய்ந்து நிகிதா அவள் மீதே சாய வேதாவும் சுபஷ்வினியும் விக்கித்து பார்த்தனர்.
“இப்ப கூட நாட்டுக்கும்ன்னு சேர்த்து சொல்ற நீயும் எனக்கு அம்மாவா வேண்டாம்…” என வேதாவையும் குறி பார்க்க சுபஷ்வினி அவன் மேல் பாய்ந்துவிட்டாள்.
“சுபா…” என அவளை காப்பாற்ற வேதா நினைக்க தனாவின் கையிலிருந்த துப்பாக்கி கீழே நழுவி விழுந்தது.
ஏற்கனவே கதிர், தனா இருவரின் மோதலினால் பலமிழந்து போயிருந்தான் தனா.
இப்படி திடீரென சுபஷ்வினி தன் மீது வந்து விழுவாள் என நினையாதவன் தடுமாற,
“வேதாம்மா…” என துப்பாக்கியை தூக்கி வேதாவிடம் வீச அதனை பிடித்துக்கொண்டவர் கண்கள் குருதி பாய்ந்தது.
அத்தனைபேரையும் குறி பார்த்தவரிடமிருந்து துப்பாக்கியை பறிக்க நினைத்த டிஜிபி,
“வேண்டாம் மேம்…” என எழுந்து முன்னே வர பார்க்க முதல் குண்டு அவரின் நெஞ்சை துளைத்தது.
அடுத்ததாக தனாவை குறி பார்க்க அப்போதும் அசராது வேதாவை பார்த்தான் தனா.
“உன்னால என்னை சுடவேமுடியாது. எனக்கு தாய்பாசம், எந்த செண்டிமெண்டும் இல்லை. ஆனா உனக்கு இருக்கே. நீ தான் மனுஷியாச்சே? சட்டத்தை காப்பாத்தற சட்ட அமைச்சர் வேற….” என்றவன் கைகள் சுபஷ்வினியின் கையை பின்னால் முறுக்கியது.
“என்னால முடிஞ்சது இவளையாச்சும் முடிக்கிறது…” என சொல்லியவன் கைகள் அவளின் கழுத்தை சுற்றி வளைக்க,
“சுபாவை விடு தனா…” என்று சொல்ல தனாவின் கையை பிரிக்க போராடினாள் சுபஷ்வினி.
எரிந்து முடியும் மெழுகு பிரகாசமாய் எரிவதை போல தனா தன் பலத்தை எல்லாம் திரட்டி கொலைவெறியில் சுபஷ்வினியை இறுக்க அவனின் விரல்களை பிரித்து ஒடித்தவள் அவனின் கையிலிருந்து வெளியே வந்த நொடி அத்தனை தோட்டாக்களும் தனாவை பிரித்து பிய்த்தெறிந்தது.
இதனை கொஞ்சமும் எதிர்பாராதவன் உயிருக்காக கெஞ்சும் அவகாசத்தை கூட வேதா தரவில்லை.
“உன்னை என் மகன்னு சொல்லவே மாட்டேன். உன்னை மாதிரி மிருகங்களுக்கு இந்த உலகத்துல வாழ அருகதை இல்லை தனா…” என உணர்வற்ற குரலில் சொல்லிய வேதா,
“என்ன சொன்ன? சட்ட அமைச்சர் சட்டத்துக்கு புறம்பா செயல்பட மாட்டேனா? மக்களை காப்பாத்தறதுக்கு தான்டா சட்டம். இப்பவும் சட்டத்துக்குட்பட்டு தான் நான் தண்டிச்சேன். உன்னை மாதிரி ஒருத்தன் உருவாக காரணமாவும் இருந்துட்டேனே?…” என சொல்லியவர் ஒரு நொடி சங்கீதாவை நினைத்து பார்த்தார்.
“என் மருமக என்னை புரிஞ்சுப்பா. அவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. அதுல நீ வேண்டாம் தனா….” என்றவர் மடங்கி அங்கேயே சரிந்து அமர அவரை மடிதாங்கினாள் சுபஷ்வினி.
சற்று நேரத்திற்கெல்லாம் நெடுஞ்செழியன் தலைமையிலான காவல்துறை குழு அவர்களின் இடத்தை கண்டுபிடித்து அனைவரையும் மீட்டெடுத்தது.
அங்கே கட்டி வைக்கப்பட்டிருந்த கதிரையும், மற்ற அடியாட்களையும் கைது செய்து அடித்து இழுத்து சென்றனர்.
உயிரை கையில் பிடித்துக்கொண்டு தேடி வந்தவர்களின் மூச்சே அப்போது தான் சீரானதை போலொரு ஆசுவாசம்.
“சினிமா போலீஸ் மாதிரி இப்படியா லாஸ்ட்ல வரது லத்தி? டூ பேட்…” என்ற சுபஷ்வினி நெடுஞ்செழியனை நடுக்கத்துடன் அணைத்த இறுக்கத்தில் அவளின் தவிப்புகளை தேடல்களை அப்பட்டமாய் உணர்ந்து உயிரெல்லாம் மருகிவிட்டான் கணவனவன்.