அதிக காயம் என்றால் நிகிதாவிற்கு, சோபியாவிற்கும் தான். சுபஷ்வினிக்கு தலையில் நல்ல காயம்.
அவர்களை சேர்ந்தோருக்கு, உயிராய் நேசிப்போருக்கு அது தீராத மனக்காயமாகி போனது.
உண்மையில் உயிர் பிழைத்து தப்பித்து வந்திருக்கின்றனர். சிக்கியிருந்தது மனித பிறவிகளிடம் அல்லவே.
நிகிதா, சோபியாவிடம் கேட்டுவிட்டு சுபஷ்வினியிடம் வந்தவன் அவளின் மௌனத்தின் பின்னால் என்னவோ இருப்பதை கண்டுகொண்டான்.
என்ன சொல்வது எப்படி சொல்வதென தெரியாமல் அவளுக்கு பொய்யுரைக்கவும் வராமல், நிகிதா கேட்டுக்கொண்டதற்காக அவள் விருப்பப்படி சொல்ல முடியாமல், உண்மையை பேசவும் முடியாமல் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கத்திற்கு ஆளானாள்.
“எதையோ மறைக்க நினைக்கிறா. ஆனா முடியலை. என்னன்னு தெரியலையே?…” என வாய்விட்டே தவிப்புடன் அவளிடம் சொல்லியவன் வேதாவிடம் வந்தான்.
“சொல்லுங்க மேம், அந்த இடத்துல என்ன நடந்தது?…” என்ற நெடுஞ்செழியனின் கேள்வியில் வேதா அசரவும் இல்லை. தயங்கவும் இல்லை.
சங்கீதாவை திரும்பி பார்த்தார். இப்போதும் அவள் பார்வையில் அவருக்கான தைரியம் மட்டுமே முன் நின்றது.
சுரேந்திரனை பார்த்தவருக்கு உள்ளுக்குள் தடதடவென ரயில் இஞ்சின் வேகத்தில் ஒரு சத்தம்.
‘கடவுளே என் கணவருக்கு எதையும் தாங்க கூடிய சக்தியை கொடு’ என மானசீகமாக வேண்டிக்கொண்டார்.
“என்ன வேதா? என்னம்மா?…” என்றார் அவர் கனிவுடன்.
மகனின் இறப்பில் மனைவி பலமாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என நினைத்தார் சுரேந்திரன்.
குழந்தையின் பிறப்பையும், மனைவி, மருமகள் ஆபத்திலிருந்து தப்பிவிட்டனரே என்ற நிம்மதியையும் முழுதாய் அனுபவிக்க முடியாமல் அவர் மருகிக்கொண்டிருந்தார் மகனின் ஞாபகத்தில்.
‘என் பையனும் திரும்பி நல்லவிதமா வந்திருக்கலாம்?’ என நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
மனைவி, மருமகளுக்காக தானும் தைரியமாய் இருப்பதாக காட்டிக்கொண்டார் சுரேந்திரன்.
இப்போதும் மகனின் இழப்பில் தான் வேதா இறுக்கமாக இருப்பதாக எண்ணியபடி பார்த்து,
“சில நேரங்கள்ல விதி நம்மை கலங்க வச்சிடுது. சங்கீதாவுக்காகவாச்சும் மனசை தேத்திக்கோ…” என உள்ளுக்குள் கண்ணீர் விடும் மனதை அழுத்தியபடி அவர் சொல்ல அதில் இன்னுமே நைந்து போனார் வேதசௌந்தரி.
“ஹ்ம்ம்…” என்று மட்டும் அவரிடம் சொல்லியவர் நெடுஞ்செழியன் பக்கம் திரும்பினார்.
“இந்த குற்றங்களுக்கு காரணிகளான டிஜிபி சாருகேஷ் முத்துகிருஷ்ணனையும், ஜெயதனபாலனையும் என் கையால நான் தான் சுட்டு கொன்னேன் நெடுஞ்செழியன். என் மேல கைது செய்து நடவடிக்கை எடுங்க…” என்றார் அவர்.
நொடியில் மின்னாமல் முழங்காமல் ஒரு இடியொன்று சுரேந்திரனின் தலையில் விழுந்தது.
அவர் கேட்டது நிஜம் தானா என்பதை கிரகிக்கவே அவருக்கு முடியவில்லை. ஒருவித தள்ளாட்டமும், நடுக்கமும் சட்டென்று தோன்ற வேதாவின் கையை பிடித்துக்கொண்டார்.
மகன் குற்றவாளி, அதைவிட மகனை மனைவியே சுட்டு கொன்றிருப்பது. உள்ளுக்குள் பெரும் மின்னல் முழக்கம்.
சில நொடிகள் தேவைப்பட்டது சுரேந்திரனுக்கு மனைவி சொல்லியதை நிஜம் என்று நம்புவதற்கு.
வேதாவின் பார்வை இப்போது கணவரின் முகத்தில் தான். இன்னும் நிதானத்திற்கு வரமுடியாமல் தத்தளித்தவர் மனதினுள் ஆழி பேரலை.
“விமல் டாக்டரை கூப்பிடு…” என சொல்லி அவரை உடனே அங்கிருந்த அட்டண்டர் படுக்கையில் படுக்க வைத்து நெஞ்சை நீவிவிட வேதாவின் விழியில் இத்தனை நேரமில்லாத கண்ணீர்.
கணவரின் முகத்தை மறைக்கும் கண்ணீர். அவரின் உணர்வு போராட்டத்தை காண முடியாத வேதனை.
மருத்துவர் உடனே வந்து அவருக்கு ஒரு ஊசியை போட்டு மாத்திரையை கொடுத்தார்.
சிலமணி துளிகள் அங்கே மௌனமாக கடந்தது. நெடுஞ்செழியனுடன் விமலும் அந்த அறையில் தான் இருந்தான்.
அவர் நிதானத்திற்கு வர எடுத்துக்கொண்ட நிமிடங்களுக்குள் அத்தனை தவிப்புகளை கடந்துவிட்டார் வேதா.
மனைவியின் முகத்தையே கண்ணகற்றாமல் பார்த்தவருக்கு அதில் தெரிந்த நேர்மையும் தெரிந்தது. உண்மையும் புரிந்தது.
தவறி செய்திருந்தால் நிச்சயம் வேதா இவ்வளவு தெளிவுடன் அவ்வார்த்தைகளை உதிர்த்திருக்கமாட்டார் என்றும் நம்பினார்.
இத்தனை வருட தாம்பத்திய வாழ்க்கையின் மனைவியின் பார்வைக்கான அர்த்தம் தெரியாதவரல்லவே நேர்மையான தலைமை நீதிபதி.
தன்னிடம் மன்னிப்பை கோரவில்லை. ஆனால் தான் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் என்ற வேண்டுதலும், தனக்கு எதுவுமாகிவிட கூடாதென்னும் பரிதவிப்புமே அவர் மனைவியின் முகத்தில்.
இதனை ஜீரணிக்க முயன்றார். தன் மகன் குற்றவாளியா என துடிதுடித்தவர், ஒரு குற்றவாளியை மகனாக கொண்டாடியிருக்கிறோமே என மனம் வெதும்பி போனார். மெதுவாக எழுந்தமர முயல,
“இல்லப்பா, இப்ப நான் மேடம் பக்கத்துல இருக்கனும். இப்ப தான் என் துணை அவங்களுக்கு தேவை. எனக்குமே…” என வேதாவை நோக்கி கை நீட்ட அதுவரை தைரியமாக இருந்த சங்கீதாவும், வேதாவும் அழுதேவிட்டனர்.
“வேதா, ப்ச்…” என்ற சுரேந்திரன் சங்கீதாவையும் பார்த்து,
“அழாதம்மா. இப்ப தான் குழந்தை பிறந்திருக்கு. அழாத…” என்றார் ஆறுதலாக.
“செழியன் நீங்க புரசீட் பண்ணுங்க…” என சொல்லி மனைவியின் அருகில் வந்து இன்னொரு இருக்கையில் அமர்ந்துகொண்டு அவரின் கையை பற்றிக்கொண்டார்.
தனாவை நினைக்கையில் அருவருத்து போனது அவருக்கு. நிகிதா தன் வீட்டிற்கு வரும்வரையில் கூட அவருக்கு எதுவும் தெரிவிக்கவில்லை வேதா.
ஆனால் வந்ததும் எல்லாம் சொல்லியிருக்க எத்தனை பெரிய மாபாதக செயலை குற்றவுணர்வு இன்றி செய்திருக்கிறான் என கலங்கி போனார்.
எங்கிருந்து இத்தனை கொடூரமான மனப்பான்மையும், அசிங்கமான எண்ணங்களும் இவனுக்கு வந்தது என ஆற்றாற்று போனார்.
“வேதா அழாத, நீ எந்த தப்பும் பண்ணலை. இந்த முடிவுக்கு நீ வந்திருக்கன்னா எனக்கு புரியுதும்மா…” என்றார் ஆதரவாக.
நெடுஞ்செழியன் முகத்தில் இருவர் மீதான மரியாதை கூடியது. இந்த சூழ்நிலையிலும் எத்தனை தைரியமாய் இதனை சேர்ந்து எதிர்கொள்கிறார்கள் என்று ஆச்சர்யமாய் இருந்தது.
பிறந்திருந்த குழந்தையை பார்த்தான். மனதெல்லாம் பிசைந்தது. தகப்பனை இழந்து வாழும் வாழ்க்கையை அவனும் அனுபவித்திருக்கிறானே.
“உட்காருங்க செழியன்…” என்ற வேதா நடந்ததை எல்லாம் சொல்ல சொல்ல சுரேந்திரனின் நெஞ்சில் பாரம் ஏறிய உணர்வு.
தங்களின் வளர்ப்பு எங்கே தவறாகி போனது? அதிலும் எத்தனை நியாயப்படுத்தி பேசியிருக்கிறான்? என எண்ணுகையில் தாளமுடியவில்லை.
முடிந்தளவு மகனாய் என்று பாராமல் அவ்விடம் தீர்ப்பை அலசி ஆராயும் நீதிபதியாய் தன்னை நிறுத்திக்கொண்டார்.
“என்னால முடியலை. அந்த நிமிஷம் நிகிதா எங்கிட்ட சொல்லி அழுததும், வெங்கட் அண்ணா இறப்பும், தனாவோட பேச்சும் என்னை வேற யோசிக்க விடலை செழியன். அவனுக்கு துளியும் குற்றவுணர்ச்சி இல்லை. அவனை விட்டா நிச்சயம் நாட்டை நாசம் பண்ணிடுவான்…” என்ற வேதா,
“என் கைக்கு துப்பாக்கி வந்ததுமே என் கண்ணுக்கு அவன் குற்றவாளியா மட்டும் தான் தெரிஞ்சான். அப்பவுமே நான் சுடமாட்டேன்னு அவ்வளோ நம்பிக்கை. அதை வச்சு என்னலாம் பண்ணுவான்? என்னால சங்கீதாவை திரும்பி பார்க்க முடியலை. அவனை பேசவும் விடலை. எங்கே எனக்குள்ள இருக்கற உண்மையும், மனுஷதன்மையும் கீழ இறங்கி என் தாய்மை மேலே எழும்பிருமோன்னு பயம்…”
“அதான் அவன் செஞ்ச பாவம் தான் என் கண்ணு முன்னாடி நின்னுச்சு. அவனோட அரக்க குணம் தான் எனக்கு முதல்ல தெரிஞ்சது. அவனால எத்தனை பொண்ணுங்க இன்னும் கண்ணீரோட வாழ்ந்துட்டு இருப்பாங்க? நான் என் கடமையை தான் செஞ்சேன். இதுல எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை…”
“சட்டத்தை பாதுகாக்கற கடமை எனக்கு இருக்கு தானே? அந்த சட்டம் என்ன செய்யுமோ அதை தான் நான் செஞ்சேன். சட்டத்தை நான் கையில எடுத்ததுக்காக இப்ப நான் சரணடையிறேன் செழியன்…” என்றவர் தன் கைகளை கம்பீரமாகவே நீட்டினார் அவனிடம்.
ஆடித்தான் போனான் நெடுஞ்செழியன். இத்தனைக்கும் அவன் உடனடியாக கைது செய்திருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை.
ஒருகணம் அவன் தயங்கி தான் நின்றான் அந்த நீதி தேவதையின் முன்னால். நீதியின் அரசரும் அதனை ஆமோதிப்புடன் ஏற்று நிற்க கடமை அவனுக்கு கண் முன் வந்தது.
“மேம், நிகிதா உங்களை இப்பவே பார்க்கனும்ன்னு சொல்றாங்க. ஆர்பாட்டம் பன்றாங்க. ப்ளீஸ் வாங்க…” என நர்ஸ் ஓடிவந்து சொல்ல சங்கீதாவை தவிர்த்து அனைவருமே அங்கே சென்றனர்.
சங்கீதாவுக்கு துணையாக சோபியா அவளுடன் இருக்க நிகிதாவின் அறைக்குள் நுழைந்ததும் சுபஷ்வினியும் உடன் எழுந்து செல்ல வந்தவர்களை பார்த்த நிகிதா பதட்டத்துடன்,