நீதிமன்றம் முழுவதும் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.
அங்கே மக்கள் அலை ஒருபக்கம், பத்திரிகையாளர்கள், சமூகவலைதள ஆர்வலர்கள் ஒருபுறம், மாதர் சங்கங்கள் ஒருபுறம் என்று தங்களின் இருப்பை காண்பித்துக்கொண்டிருந்தனர்.
வழக்கு ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடங்கள் இருக்க கனுஷாந்த் தீவிரமாக எதை எதையெல்லாமோ ஆராய்ந்தபடி இருந்தார்.
அவரிடம் பயிற்சி பெரும் வழக்கறிஞர்களை அத்தனை பரபரப்புடனும், எரிச்சலுடனும் வைத்திருந்தார்.
“கழுதைக்கு வாக்கப்பட்டா பொதி சுமக்கனும். எத்தனை உண்மை. ச்சை…” என வெறுத்து அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர்.
ஒருவருக்கும் இதில் உடன்பாடில்லை. ஆனால் அவர்களின் எதிர்காலம் ஒன்று உள்ளதே என பல்லை கடித்துக்கொண்டிருந்தனர்.
களஞ்சியம், கதிரவன் அவர்களுடன் கைது செய்யப்பட்ட அடியாட்கள், விடுதியில் கைதானவர்கள் என அந்த வழக்குக்கு சம்பந்தப்பட்ட அத்தனைபேரும் அங்கே ஆஜராகிவிட்டனர்.
இன்னொருபுறம் சுபஷ்வினி, சோபியா, சுரேந்திரன், நிகிதா, சங்கீதா என அவர்களும் இருக்க உடன் மனுரஞ்சனும், வீரவேந்தரும்.
குடும்பத்தினர் வேறு யாரையும் வர நெடுஞ்செழியன் அனுமதிக்கவில்லை. சாட்சி என்று இவர்கள் இருக்க சங்கீதா கையில் குழந்தை சமத்தாய் தாய்முகம் கண்டு மெல்லிய சிரிப்பை உதிர்த்து கை, கால் அசைத்தபடி இருந்தது.
“நீ ஏன் நிகி கலங்கற? என் பொண்ணை சொல்லி சொல்லி வளர்ப்பேன். இப்படி ஒரு அப்பனுக்கு பிறந்தவன்ற அவமானம் உனக்கு அவசியமே இல்லை. பிறக்க காரணமா உயிரை குடுத்த அவனுக்காக நீ அசிங்கமா நினைப்பியா? உணர்வா உன்னை என் வயித்துல சுமந்து என் சரிபாதியை உனக்கு குடுத்திருக்கேன். பிறந்ததுக்கு பெருமைப்படுன்னு சொல்லுவேன்…”
“அவளை பத்தி எதிர்காலத்தை நீ நினைச்சு பயப்படவேக்கூடாது. எந்த சூழ்நிலையிலையும் எதையும் துணிச்சலா சவாலா எதிர்கொண்ட உன்னோட தைரியத்தை அவளுக்கு நீ குடு நிகி. அதை தரமாட்டியா என்ன?…” என்றாள் சங்கீதா நிகிதாவிடம்.
நிகிதாவின் பேச்சுக்களை எல்லாம் சுரேந்திரனும், சுபஷ்வினியும் சங்கீதாவிடம் சொல்லியிருக்க நிகிதாவின் அத்தகைய எண்ணங்களை அப்போதே துடைத்தெறிந்தாள் சங்கீதா.
“ஒரு நேர்மையான மனிதிக்கும், நீதிபதிக்கும் பேத்தி என் பொண்ணு. என் பகுத்தறிவுல கொஞ்சமாவது அவளுக்கும் இருக்கும். தூற்றி பேசறவங்க மத்தில இன்னும் பெருசா கம்பீரமா என் பொண்ணை நான் வளர்ப்பேன்…”
“இப்படி ஒரு அப்பனோட மக இவன்னு ஏளனமா பார்த்தாங்கன்னா அவங்களுக்கு முன்னாடியே இந்த பொண்ணுக்கு அப்பனா இருக்க அவனுக்கு தகுதி இல்லைன்னு சொல்ல வைப்பேன். வளர்ற சூழ்நிலை அவளை பாதிக்கும்ன்னு ஏன் நினைக்கனும் நிகி?…”
“நல்ல சூழ்நிலையில வளர்ந்தவங்க எல்லாமே சரியா தான் இருப்பாங்கன்னு நம்ப முடியாததுக்கு கண்ணுக்கு முன்னாடியே ஒரு பெரிய உதாரணம் தனா. என் பொண்ணு நேர்மைக்கும், உண்மைக்கும் உதாரணமா இருக்கனும். பரிதாபத்துக்கும், ஏளனத்துக்கும் இல்லை…” என சொல்லி,
“உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை நிகி. நாம எல்லாரும் தானே என் பொண்ணுக்கு நிக்கனும். நீயே இப்படி நினைக்கலாமாடா? நீ சொன்ன மாதிரி எனக்கு பொண்ணே பிறந்துட்டா. அவளை எப்படி எல்லாம் வளர்க்கனும்ன்னு நீ சொல்லியிருக்க. அதை எல்லாம் செய்யமாட்டியா?…” என கேட்க,
“யாரோ குழந்தையோட எதிர்காலத்தை பேசிருவாங்கன்னு யோசிக்காத நிகிதா. வன்மையும், வக்கிரமும், துவேஷமும் சூழ்ந்த புத்திசாலிங்க மத்தில நேர்மையான, உண்மையான முட்டாளாவே நாம இருந்துட்டு போவோம். எதுவா இருந்தாலும் அது நம்மோட….” என்ற சுபஷ்வினி,
“பேசறவங்க யாரும் அவங்க முதுகுல இருக்கற அழுக்கை பார்க்க போறதில்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம்ன்னு வாழறவங்களுக்கு இதெல்லாம் புரியாது. அவங்க பேச்சுக்களுக்கு மதிப்பு குடுக்கவேக்கூடாது. புரியுதா? சங்கீதாக்கா சொன்னது தான். நம்ம தைரியத்தை குழந்தைக்கு துணையா குடுப்போம்…” என்றாள் மனதார.
“சுபாக்கா, நான் தான் என்னென்னவோ யோசிச்சுட்டேன். இனி அப்படி யோசிக்கவேமாட்டேன்…” என்று அவளை அணைத்துக்கொண்டாள் நிகிதா.
பேச்சுக்கள் இத்தனையும் சுரேந்திரனின் முன்பும், சங்கீதாவின் தாயின் முன்பும் தான் நடந்துகொண்டிருந்தது.
தங்களோடு வரும்படி அவரின் தாய் அழைக்க நிர்தாட்சண்யமாய் மறுத்துவிட்டாள் சங்கீதா.
“இனி என்னோட மொத்த வாழ்க்கையும் அவங்க கூட தான். வேணும்னா நீங்களும் எங்களோட வந்து இருங்க…” என முடிவாய் சொல்லிவிட்டாள்.
இதோ இன்று வழக்கு. ஏற்கனவே முதற்கட்ட விசாரணை நடந்திருக்க இரண்டே நாளில் அடுத்த விசாரணை.
இந்த வழக்கிற்கென நீதிபதியாக புகழ்பெற்ற வழக்கறிஞரும், பெண்களின் முன்னோடியும் எனப்படும் நீதிபதி மணிமேகலை அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.
வேதசௌந்தரிக்கு அரசாங்க தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். சுரேந்திரன் இறங்கவில்லை.
நீதிபதி வந்தமரவும் அவரின் பார்வையில் அத்தனைபேரும் எழுந்து நின்று மரியாதை தெரிவித்து மீண்டும் அமர்ந்தனர்.
முதல்விசாரணையின் பொழுதே களஞ்சியத்திற்கும், கதிரவனுக்கும் ஜாமீன் எடுக்க கனுஷாந்த் போராடி பார்த்துவிட்டார்.
தோல்வி, திரும்பிய பக்கமெல்லாம் தோல்வி என்பதை போல அவருக்கு மணிமேகலை மறுத்துவிட்டார்.
“இந்த வழக்குக்கு யாருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது…” என சொல்லிவிட சிறுத்துப்போனது அவருக்கு.
மணிமேகலையை பற்றி நன்றாகவே தெரியும். இன்னொரு வேதசௌந்தரி அவர். அதைவிட இன்னுமே தைரியமிக்கவர்.
ஒவ்வொரு பார்வையும் அவரே கேட்கும் கேள்விகளும் என குற்றவாளிகளை குத்தீட்டியாய் கிழித்து செல்லும்.
இதில் அவர் தான் நீதிபதியாக வரவிருக்கிறார் என்றதுமே கனுஷாந்திற்கு அத்தனை உதறல்.
ஆனால் தன்னால் முடியாததா என்று இறுமாப்பாய் இருக்க முதல் அடி அவரின் ஜாமீன் மனு ரத்தானது.
அன்றைய விசாரணை ஆரம்பமாக முதலில் கனுஷாந்த் தான் வாதத்தை துவங்கியது.
வேதசௌந்தரியை நெடுஞ்செழியன் அழைத்து வர எவ்வித குன்றலும், வருத்தமும் இன்றி எப்போதும் போல் நிமிர்ந்த நடையுடனே அவர் குற்றவாளி கூண்டின் அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார்.
சற்று தள்ளி களஞ்சியமும், கதிரவனும் அமர்ந்திருக்க அவர்களால் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொள்ளமுடியாத விதமாய் அமர வைத்திருந்தான் நெடுஞ்செழியன்.
வேதசௌந்தரிக்கு களஞ்சியம் மேல் தீரா வன்மம் என்றும், முதலமைச்சர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு திட்டமிட்டே இதில் அவரை சிக்க வைத்திருப்பதாகவும், அதற்கு தன் மகன் தனாவை கதிரவனுடன் நட்பாக உறவாடவிட்டு அந்த கணினி பொருட்களை எல்லாம் தலைமை செயலகத்தில் பதுக்கி வைத்ததாகவும் பேசினார்.
அதற்காகவே தன்னுடைய நெருங்கிய நண்பரின் மகளை, அந்த விடுதியில் நடந்ததை எல்லாம் அவருக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டதாகவும், வழக்கை அவரே அவரின் மேற்பார்வையில் நடத்தியதாகவும் தன் பக்க வாதத்தை முன் வைத்துவிட்டு தான் நெடுஞ்செழியனை விசாரணைக்கு அழைத்தார்.
“நெடுஞ்செழியன், அன்னைக்கு எப்படி நிகிதாவுக்கு தண்ணீர்ல தான் போதை மருந்து கலந்திருக்குன்னு தெரியாம போச்சு? அப்படி தெரிஞ்சிருந்தா விஷயம் தெரிஞ்ச அன்னைக்கே நீங்க அந்த விடுதியை நேரடியா பரிசோதனை பண்ணி கையும் களவுமா பிடிசிருக்கலாமே?…” என கேட்டு,
“ஏன் நீங்களே அங்க போய் தங்கறது மாதிரி கிரியேட் பண்ணி, உங்க மனைவியை, அப்போ அந்த சமயம் அவங்க உங்க வருங்கால மனைவி இல்லையா? அவங்களை அங்க தங்க வச்சு அவங்களை வச்சு புகார் குடுக்கவச்சு எதுக்கு இந்த மூக்கை சுத்தி தலையை தொடும் வேலை?…” என்றார் கனுஷாந்த்.
“வணக்கம் ஸார். நீங்க தப்பா சொல்லிட்டீங்க. அது தலையை சுத்தி மூக்கை தொடறது. பதட்டத்துல மாத்தி சொல்லிட்டீங்கன்னு நினைக்கறேன்…” என்ற நெடுஞ்செழியன் அலட்டிக்கொள்ளாமல் பேச கனுஷாந்த் ஒருவித யோசனையுடன் பார்த்தார் அவனை.
முதல் விசாரணை அன்று இப்படி இல்லையே அவனின் பேச்சும், பாவனையும். இன்றைக்கு என்ன என எச்சரிக்கையுடன் பார்க்க ‘இருக்குடி உனக்கு’ என்னும் விதமாய் பார்வையாலேயே அவரை அச்சமூட்டினான் நெடுஞ்செழியன்.
கனுஷாந்தின் குழப்ப முகத்தை திருப்தியுடன் பார்த்தவன் நீதிபதிக்கு மரியாதையான வணக்கத்தை வைத்துவிட்டு அவரை பார்த்தே கூற ஆரம்பித்தான்.
“நிகிதாவுக்கு சூடா குடிச்சா நல்லா இருக்குமோன்னு பால் கொண்டுவர சொல்லிட்டு அதுக்கு வெய்ட் பண்ணும் போது குடிச்ச ஜூஸ், ரூம் பெர்ப்யூம்ன்னு வாமிட் சென்ஷேஷனா இருந்திருக்கு. வாமிட் வரவும் எடுத்துட்டு வந்து அங்க பாட்டில்ல இருந்த தண்ணியை கொஞ்சம் குடிச்சிருக்காங்க…”
“அதுக்குள்ள சூடா பால் வர அதை வச்சிட்டு பாலை வாங்கி குடிச்சிருக்காங்க. அதனால நிகிதாவுக்கு தண்ணில தான் மருந்து கலந்திருக்காங்கன்னு கரெக்ட்டா தெரியலை. ஜூஸா, இல்லை ரூம் பெர்ப்யூமா, இல்லை குடிச்ச பாலா, தண்ணியான்னு தெரியலை. ஆனா அவங்க குடிச்ச தண்ணி அவங்களை நிதானத்தை இழக்க வச்சிருக்கு….”
“போதை தண்ணியை குடிச்சதால மட்டும் தான்னு தெரிஞ்சிருந்தா நாங்க நேரடியாவே ஆக்ஷன்ல இறங்கிருப்போம். அதுமட்டுமில்லை. அப்படி எடுத்ததும் அங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்காம ஆக்ஷன் எடுத்திருந்தா குற்றவாளிங்க தப்பிக்கவும் வாய்ப்பிருக்குதே. அதான் ஆதாரத்தோட பிடிக்க நாங்களும் அங்க தங்க வேண்டியதா போச்சு…” நெடுஞ்செழியன் சொல்லவும் நீதிபதி மணிமேகலை ‘புரிந்தது’ என்பதை போல தலையசைத்தார்.
“ஆனா…” என கனுஷாந்த் அடுத்து என்னவோ கேட்க வர,
“நீங்க கேட்டதுக்காக பதிலை எல்லாம் சொல்லி முடிச்சிடறேன். குற்றவாளி ஜெயதனபாலன் இதை எல்லாம் வேணும்னே செஞ்சிருந்தா அந்த கம்ப்யூட்டர் டிவைஸ் எல்லாத்தையும் திறக்க கூடிய சாவியா கதிரவனோட கை ரேகையும், கண்ணும் எப்படி பதியப்பட்டிருக்கும்?…”
“இங்க மூளை ஜெயதனபாலன், செயல்வடிவம் களஞ்சியம் ராஜாங்கமும், கதிரவன் ராஜாங்கமும். சொல்ல போனா பொறியில் சிக்கினது கதிரவன் இல்லை. ஜெயதனபாலன் தான்…” என்ற நெடுஞ்செழியன் கதிரவனை விசாரிக்கும்படி சொல்ல,
“இத்தனை நம்பிக்கையா சொல்றீங்களே? அப்போ நீங்க விசாரணையின் போது கதிரவனை ஏதோ மிரட்டி இருக்கீங்க. அவரை குற்றத்தை ஒப்புக்க சொல்லி அடிச்சிருக்கீங்க…” என்றார் கனுஷாந்த்.
“விசாரணை வேறு எப்படி இருக்கனும்? அதுவும் குற்றவாளியை தடவி கொடுத்து விசாரிச்சா எந்த குற்றவாளி அவனோட குற்றத்தை ஒப்புக்குவான்? எங்களுக்குட்பட்ட அதிகாரத்தோட எல்லையில் தான் எங்க விசாரணை. நீங்க சந்தேகமிருந்தா அவரை விசாரிக்கலாம்ன்னு தான் சொல்றேன்…” என்ற நெடுஞ்செழியன்,
“இவ்வளோ தூரம் ஆதாரங்களை குடுத்தும் அவங்க நிரபராதின்னு எந்த அடிப்படையில் நீங்க சொல்றீங்கன்னு எனக்கு புரியலை லாயர் ஸார். உங்களுக்கும் அவங்களுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கோ? எனக்கு உங்க மேல கூட சந்தேகம்…” என்றவன் நீதிபதியை பார்த்தான்.
“எனக்கா? இந்த வழக்கில் என் கட்சிக்காரர் சார்பா வாதாட வேண்டிய கடமை எனக்கிருக்கு. அவங்க பக்கம் உண்மை இருக்கறதால தான் நான் இந்த வழக்கையே எடுத்திருக்கேன்…” என கனுஷாந்த் கோபமாய் சொல்ல,
“ஓஹ் அப்போ எப்படி சார் சரியா ஒருவருஷம், ரெண்டுமாசத்துக்கு முன்னாடி உங்களோட இரண்டாவது மகனின் மனைவி அவங்க தோழிகளோட அந்த விடுதிக்கு தங்க போனப்போ அடுத்த இரண்டு மணி நேரத்துல அவங்களை அங்க இருந்து ரூமை காலி பண்ணிட்டு எதுக்கு கிளம்ப சொன்னீங்க?…” என தேதியோடு நேரத்தையும் சொல்லி கேட்டான் நெடுஞ்செழியன்.
இதனை அவர் எதிர்பார்க்கவே இல்லை. குப்பென்று வியர்த்துவிட நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டது.