“எதிர்பார்க்கலையோ? ஆனா ஆதாரம் இருக்கே ஸார். கதிரவன் எப்பவும் மற்ற பெரிய தலைங்களுக்கு அனுப்பி வைக்கிற பொண்ணுங்க போட்டோ லிஸ்ட்ல உங்க மருமக போட்டோவும் இருந்தது. அதோட ஆதாரம், அவர் குரல் பதிவு எல்லாம் குடுத்திருக்கோம்…” என்றான் நெடுஞ்செழியன்.
“அந்த போட்டோ, அன்னிய தேதியை வச்சு தான் அவங்க வந்ததும், உடனே கிளம்பினதும் தெரிய வந்தது. ஆனா அதுக்குள்ள அன்னைக்கு விலை பேச பட்ட பொண்ணுங்க லிஸ்ட்ல உங்க மருமகளும் இருந்தாங்க. இது உங்களுக்கு தெரியாதுல…” என்றான் நெடுஞ்செழியன் கன்னச்சதை துடிக்க.
“ரொம்ப கோபம் வருது போல உங்களுக்கு. அவங்க கூட இருக்கற உங்க வீட்டு பொண்ணுக்கே இந்த நிலைமை. உங்க பொண்ணுன்னா பத்திரம். மத்த பொண்ணுங்கன்னா நீங்க பயன்படுத்தற பாத்திரமா?…” என உணர்ச்சிவசப்பட்டு இரைந்துவிட்டான் அவன்.
கனுஷாந்தின் பார்வை களஞ்சியம், கதிரவன் இருவரையும் வேதனையும், ஆத்திரமுமாய் பார்க்க,
“தாங்க முடியலையோ? கண்ணால பார்த்தா நம்புவீங்களா? ஒவ்வொரு பொண்ணோட கதறலையும் பார்த்து ரசிச்சீங்களே, அப்போ அந்த உணர்வு எப்படி இருந்தது உங்களுக்கு? அதே இடத்துல உங்க மருமகளை பார்த்திருந்தா?…” என்றவனின் கேள்வியில்,
“ஸ்டாப்பிட், ஸ்டாப்பிட்…” என்று கத்தினார் கனுஷாந்த்.
“ஸாரி யூர் ஹானர்…” என தன்னுடைய சத்தத்திற்கு மன்னிப்பையும் கேட்டுக்கொண்டான் நெடுஞ்செழியன்.
அதன் பின்னர் அவரால் வாதாடவே முடியவில்லை. தன் மருமகள் என்று தெரிந்தும் இதனை செய்திருக்கும் அந்த பிணந்திண்ணி கழுகுகளுக்கு வாதாடுவதா என தள்ளாட்டத்துடன் அமர்ந்துவிட்டார்.
‘தான் மட்டும் என்ன பெரிய யோக்கியமா?’ என உண்மை அவரை செருப்பால் அடித்தது.
அரசாங்க வக்கீல் அதன் பின்னர் தன்னுடைய விசாரணையை துவங்கி வைத்து ஒவ்வொருவரையும் விசாரிக்க களஞ்சியத்தின் முகம் அச்சத்தில் இருந்தது.
ஆனால் கதிரவன் எதற்கும் செவி சாய்க்காததை போல ஒருவித குழப்பமான முகபாவனையுடன் தான் இருந்தான்.
அவ்வப்போது நெடுஞ்செழியனை பயத்துடன் பார்க்கவும், தலை குனியவுமாக இருக்க கதிரவன் பார்த்த பொழுது நெடுஞ்செழியன் கண்களால் என்னவோ சொல்ல இன்னுமே அவன் முகம் வெளிறியது.
“என் கஸ்டடிக்கு வர வரைக்கும் தான்டா உன் ராஜ்ஜியம். இங்க என் ராஜ்ஜியம்டா. என்னவோ தொடுவேன், பாருன்னு சொன்னியாம்? இப்ப உன் உதாரை எல்லாம் சொல்லேன்…” என எழ முடியாதபடி நிர்வாணமாய் நிற்கவைத்து அடித்து துவைத்துவிட்டான்.
“அப்பறம் என்ன? என்ன சொன்ன? இந்த காலை வச்சு தான நிகியை மிதிச்ச? எங்க நீ எந்திச்சு நடடா பார்ப்போம்…” என்று பூட்ஸ் காலால் மிதிக்காமல் வெறும் காலாலேயே மிதித்து அவனின் உயிரை வெறுக்க வைத்தான்.
“என்னடா இவ்வளோ அடிலையும் உடம்புல அவ்வளவா காயம் இல்லைன்னு பார்க்கறியா? நாளைக்கு கோர்ட்ல உண்மையை சொல்லலைன்னா திரும்ப கஸ்டடிக்கு எடுப்பேன். இங்க தான் வரனும். ஆம்பளைன்னு சொன்னியாமே. தூக்கி தூக்குல போடறேன்….” என அவன் கண் காட்டியதில் உடல் அதிர பார்த்தான் கதிர்.
“அதுலயே அடுத்த விசாரணை வரை சாவு. நீ துடிதுடிச்சு ஆம்பளையா இல்லாம செத்ததும் அவமானத்துல தற்கொலை செஞ்சிட்டன்னு கேஸை முடிச்சிட்டு நிம்மதியா இருப்பேன். இல்லைன்னாலும் ஒண்ணுமில்லை, தப்பிக்க பார்த்தான்னு சோலியை முடிச்சிட்டு நிம்மதியா இருப்பேன்…”
இப்படியாக அன்னம், தண்ணீர் இன்றி அவசரத்துக்கு கூட செல்லவிடாமல் கதிரை புழுவாய் துடிக்க வைத்துவிட்டான் நெடுஞ்செழியன்.
“பாத்ரூம் பக்கமே போகவிடமாட்டேன். ஆனா இங்க எதாச்சும் அசிங்கம் பண்ணுன…” என்று கத்தரிக்கோலை காண்பித்து சொல்ல மரண அவஸ்தை தான் கதிர் உள்ளே அனுபவித்தது.
வேதாவும் மகனின் கடைசி பேச்சுக்களை சொல்லி, குழந்தை பிறக்கவிருக்கும் சூழ்நிலையில் கூட மனமிரங்காத அரக்கனை கூற மணிமேகலையின் முகத்தில் அத்தனை ஆவேசம்.
அத்துடன் விடுதியின் எடுக்கப்பட்ட சில காணொளிகள், கதிர், தனா, களஞ்சியம் எல்லாம் பேசிக்கொண்ட சில குரல்வழி செய்திகள் என்று எல்லாமே அவர்களுக்கு எதிராக இருந்தது.
இதற்கு மேலும் விசாரிக்க என்ன இருக்கிறது என்று நினைக்கும் பொழுது கதிரவனின் ஒப்புதல் வாக்குமூலம்.
“எல்லாம் நாங்க தான் பண்ணினோம். வேதாவை அடுத்த எலெக்ஷன்ல நிக்க விட கூடாதுன்றதுக்காக பண்ணினோம். நான் ஒத்துக்கறேன். என்னை ஜெயில்ல போடுங்க. திரும்ப விசாரணைக்கு அனுப்பாதீங்க…” என்ற கதிரவன் நெடுஞ்செழியன் தன்னை மிரட்டியதாக சொல்ல விசாரணை முடிந்தது.
“உணவு நேரத்திற்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும்…” என்றார் நீதிபதி மணிமேகலை.
இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. தீர்ப்பு நிச்சயம் களஞ்சியம், கதிரவனுக்கு எதிராக தான் இருக்கும் என்று தெரியும்.
ஆனால் வேதாவை சேர்ந்தோருக்கு வேதாவை இதிலிருந்து விடுவிக்க என்ன செய்வது என்று கவலையானது. சுரேந்திரன் கூட அவருக்காக வாதாட நினைக்கவில்லை.
“கண்டிப்பா நல்லதா தான் நடக்கும். என் மனசுக்கு தோணுது. நிச்சயம் வேதாம்மா வந்திருவாங்க பாருங்க…” என்றாள் சுபஷ்வினி.
“ஆமா, நான் கூட சாமிக்கிட்ட வேண்டியிருக்கேன். அவங்க வந்திருவாங்க…” என்றாள் சோபியாவும்.
உணவு இடைவேளை நேரம் முடிந்து அத்தனைபேரும் அங்கே வந்துவிட்டனர். வெளியில் அன்றே அந்த வழக்கின் தீர்ப்பு என்றது மிகவும் பரபரப்பாக விமர்சிக்கப்பட்டது.
எந்தவித ஒத்திவைப்பு, இழுத்தடிப்பு, கண்துடைப்பும் இன்றி உடனடியாக விசாரணையை முடித்து உடனடியாக வழக்கின் தீர்ப்பு.
வழக்கில் குற்றவாளிகளான களஞ்சியம், கதிரவன் இருவருக்கும் தூக்கு தண்டனையும், அதற்கு துணை போன கனுஷாந்திற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
கனுஷாந்தின் வழக்கறிஞர் பட்டம் பறிமுதல் செய்யப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதோடு, அந்த காணொளிகளில் இருக்கும் பெண்களின் பெயர் வராமல் ஆண்கள் மீது சட்டப்படி கைது நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டது.
மிக நேர்மையாக செயல்பட்டு குற்றவாளிகளை இனம் காண்பித்த நெடுஞ்செழியனுக்கும், காவல்துறைக்கும் சிறப்பு பாராட்டுதல்.
இவற்றுக்கு எல்லாம் மேல் வேதசௌந்தரியை பெருமையாய் பார்த்தார் மணிமேகலை.
“சட்டம் தன் கடமையை செய்தது….” என சொல்லி,
“சூழ்நிலை காரணமாக நீங்க சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டதற்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யறோம்ன்னு சொன்னா அது சட்டத்தையே அவமதிச்சதாகிடும் அப்படின்றது என்னுடைய பார்வை. மன்னிக்கும் விஷயம் இல்லை இது. உங்களை நாங்க கர்வமா நினைக்கவேண்டிய தருணம்…” என்ற நீதிபதி மணிமேகலை,
“இந்த காலத்து வளரும் குழந்தைங்கள் தாங்கள் என்ன செஞ்சாலும் பெத்தவங்க அதிகபட்சம் என்ன செய்திடுவாங்கன்னு நினைக்கிற அலட்சியம் தான் தவறோட ஆரம்பம். கண்டிப்பு இல்லைன்னா தண்டிக்க வேண்டிய அவசியம் வந்திரும்…”
“குற்றவாளி மகனா இருந்தாலும் பிள்ளையை காப்பாத்தனுமேன்னு நினைச்சு வாதாட செலவளிக்கிற தாய்ங்க மத்தியில் தவறே செஞ்சாலும் அதுக்கான தண்டனையை குடுத்த நீங்க போற்றப்படவேண்டிய தாய். பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கும் தாயா உயர்ந்துட்டீங்க வேதசௌந்தரி…” என பாராட்டினார் மணிமேகலை.
“இந்த வழக்கின் தீரப்பு இனி தவறு செய்யற ஒவ்வொருத்தவங்களுக்கும் பயத்தை விதைக்கனும். பாடமா இருக்கனும். இப்படியான வழக்கை இழுத்தடிக்காம தப்புன்னு தெரிஞ்சதும் உடனடி தீர்ப்பையும் வழங்கனும்…”
“அதிகபட்சம் ஜெயில் தானேன்னு உள்ள வர குற்றவாளி வெளில வந்து இன்னும் அதிக குற்றத்தை செய்ய கூடும். உண்மையா மனம் திருந்தி வெளில வாழனும்ன்னு வரவங்களுக்கு இந்த உலகம் உறுதுணையா நிக்கனும். என் விருப்பப்படி, என் சுயநலத்துக்கு தான் வாழ்வேன்ற குற்றவாளிகளுக்கு சுதந்திர உலகில் இடமில்லை…” என்றார் நீதிபதி மணிமேகலை.
சட்டத்தின் சரித்திரத்தில் அவ்வழக்கின் விசாரணையும், தீர்ப்பும் முக்கிய அங்கம் வகித்தது.
துரிதமான நேரத்தில் நேர்மையான விசாரணையின் அடிப்படையில் விசாரிக்கப்பட்ட வழக்காகவும், தீர்ப்பு உண்மைக்கு கிடைத்த வெற்றியாகவும், நீதியின் தேவதையின் கண்கள் திறக்கப்பட்டதாகவும் கொண்டாடிவிட்டனர் மக்கள்.
வேதசௌந்தரியை பாராட்டி விடுவித்ததை குறித்தான நேர்மறை, எதிர்மறை விவாதங்கள் அடுத்து ஆரம்பித்தது.
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தவர்களின் முன்னால் நீட்டப்பட்ட மைக்குகள், ஆயிரமாயிரம் கேள்விகள் கேட்டு மூச்சடைக்க வைத்தனர்.
இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் ஒரு மன நிம்மதியை தரும் என்றால் மிகையில்லை.
இதை எதையும் உணராத நிகிதாவின் விழிகள் எங்கோ ஒரு புள்ளியாய் வானத்தில் தன்னை பார்த்துக்கொண்டு உலவும் தந்தையின் ஆன்மாவில் சென்று நிலைத்தது.
கடந்து சென்ற மேகங்களின் நடுவில் தகப்பனின் அரவணைப்பை தேடியது. அவரின் கைகளுக்குள் சுருண்டுவிட மனம் ஏங்கியது.
“டாடி உங்களை ரொம்ப மிஸ் பன்றேன். உங்க தோள்ல சாய்ஞ்சுக்கனும் போல இருக்கு இப்போ. உங்க கையாள சாப்பிடனும். வருவீங்களா டாடி?…” என்றவளின் தோளில் கைவைத்த சங்கீதா,
“உன்னை தேடறா பாரு…” என தன் குழந்தையை தர நிகிதாவின் விழி நீர் குழந்தையின் கன்னத்தில் பட்டு தெறிக்க, கள்ளமில்லா புன்னகையை ஆசிர்வாதமாய் தந்தது குழந்தை.
அவ்வுணர்வுகள் உன்னதம். அதை அனைவரும் உணர்ந்தனர். குழந்தையை பார்த்துக்கொண்டிருந்தவள் மனதில் தோன்றிய வார்த்தை.
“உன்னதி…” என்று நிகிதா மெல்லிய முறுவலுடன் சொல்ல,
“கிரேட் நேம் நிகிதா. உன்னதி…” என்றாள் சுபஷ்வினி இருவரையும் அணைத்தவாறு.
“ஓகே கிளம்பலாம். அண்ணா வர லேட்டாகும்….” என மனுரஞ்சன் வந்து அனைவரையும் அழைத்து சென்றான்.
அவர்கள் ஒவ்வொருவரும் நிகிதாவிற்கு தாங்கள் இருப்பதை சொல்லால் அல்லாது உணர்வால் உணர்த்தினர்.
ஒவ்வொருவரிடமும் தந்தையின் அருகாமையை அவள் உணர துவங்கினாலும் அவளிடம் அவருக்கான இடம் இப்போது வெற்றிடம் தானே? அது என்றைக்கு நிரம்புமோ?
அது மிச்சமில்லாமல் நிரப்பப்பட கொள்ளை அன்பை வைத்து ஒருவன் காத்திருப்பதை விரைவில் அவளும் உணரும் தருணமும் அழகாய் முகிழ்க்கும்.
———————————————-
அனைத்து பரபரப்புகளும் ஓய்ந்து மிக பிரமாண்ட அளவில் காரைக்காலில் நெடுஞ்செழியன் சுபஷ்வினி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிங்கமுத்துவிற்கு மகளின் இந்த நிகழ்ச்சியில் மனக்குறை எல்லாம் தீர்ந்துவிட்டதை போலிருந்தது.
அதைவிட மருமகனை ஒவ்வொரு பத்திரிக்கையிலும், தொலைகாட்சியிலும், சமூக வலைதளங்களிலும் பாராட்டி தீர்க்க தலையில் வைத்து சுமக்காத குறை தான்.
அவர்களின் உறவினர்கள் ஒவ்வொருவரும் நெடுஞ்செழியன் போல் காவலனாக வேண்டும் என்று சொல்ல பெருமிதத்தில் திக்குமுக்காடி போனார் சிங்கமுத்து.
“ம்க்கும், இப்ப கிழவனுக்கு மீசை துடிக்குதாக்கும்? கொஞ்சநஞ்ச அக்கப்போரா பண்ணுனாரு. என்னமோ இவரே கல்யாணத்த பண்ணி வச்சிட்ட மாதிரி…” என நொடித்துக்கொண்டார் ராதிகா.
“ம்மா விடுங்களேன்…” என சுபஷ்வினி சிரித்தபடி சொல்ல,
“என்னத்த விட? இவர் மட்டும் அப்பவே சரின்றிருந்தா இந்த நேரத்துக்கு உன் கையில ஒரு புள்ளை இருந்திருக்கும். எந்த கெரகம் இந்தாளை புடிச்சு ஆட்டி இன்னைக்கு பெருமையில பீத்திக்கிட்டு சுத்துறாரு…” என பொருமி தள்ளிவிட்டார் ராதிகா.
“அப்படி சொல்லுங்கம்மா, இந்தப்பாவுக்கு நீங்க தான் சரியான ஆள்…” என ஸ்ருதி ராதிகாவை ஏற்றி விடவும்,
“கிளம்பும் போதும் விடமாட்டியே. எங்க என் குட்டி மோளே?…” என்றாள் சுபஷ்வினி.