சுபஷ்வினியின் விழியில் நீர் திரண்டு நிற்க முகமெல்லாம் ஜிவ்வென சிவந்து வியர்த்திருந்தது.
லேசாய் தலை சுற்ற அவள் தள்ளாடவும் தலையை பிடித்திருந்த நெடுஞ்செழியன் அவளின் முகத்தையே பார்த்தபடி இருந்தான்.
“அஷ்வினி, ஓகே வா? இன்னும் எடுக்கனுமா?…” என்று கேட்க ‘இல்லை’ என்று மட்டும் தலையை அசைத்தாள் சுபஷ்வினி.
“சரி வா…” என்றவளை முகம் கழுவ வைத்து தன் கைவளையிலேயே வைத்தபடி மெல்ல நகர்த்தி படுக்கைக்கு அழைத்து வந்தான்.
“உட்கார், உனக்கு குடிக்க வெந்நீர் கொண்டுவரேன்…” என சொல்லிவிட்டு செல்ல சிறிய பூ துவாலையால் முகத்தை துடைத்தவள் சாய்ந்து அமர்ந்தாள்.
இருபத்தைந்து நாட்களாக மசக்கை அவளை படுத்தி எடுத்தது. எதையும் சாப்பிட கூட முடியாமல் மெல்லிய வாசனைக்கே உள்ளிருந்த சிசு அவளை பந்தாடியது.
இந்த சூழ்நிலையில் அங்கேயே அவளுடன் யாரேனும் துணைக்கு இருக்கவேண்டிய அவசியம்.
சாலாட்சி வந்து அவளுடனே தங்கிக்கொண்டார். ராதிகா முதல் ஒருவாரம் இருந்தவர் அதன் பின்னர் கிளம்பி செல்ல சாலாட்சிக்கு இதைவிட எனக்கு என்ன வேலை என பார்த்துக்கொண்டார் சுபஷ்வினியை.
இப்போது சோபியாவின் வளைகாப்பிற்கு உடைகள் எடுக்க அனைவரும் புடவை கடைக்கு சென்றிருக்க நெடுஞ்செழியன் பணி முடிந்து வந்து அவளுடன் இருந்துகொண்டான் அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு.
சோர்வுடன் கண்களை மூடியவளுக்கு தொண்டை எல்லாம் எரிந்தது. உறங்க வேண்டும் என்றாலும் காலி வயிறு கடகடவென உள்ளே உருட்டியது.
“ப்ச், என்னடா இது? சாப்பிட்டா வாமிட், வாமிட் பண்ணா சாப்பாடு. முடியலை. இன்னும் பத்து மாசம் என்ன பண்ணுவ நீ என்னை?…” என வயிற்று பிள்ளையுடன் அப்போதே புலம்பிக்கொண்டிருந்தாள் சுபஷ்வினி.
வெந்நீரை ஆற்றியபடி வந்த நெடுஞ்செழியன் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. சோர்விலும் கூட மனதை அள்ளிக்கொள்ளும் மனைவியின் மீதான நேசம் இன்னுமே பிரவாகம் எடுத்தது.
“அஷ்வினிக்கு என்னவாம், ஒரே புலம்பல் சத்தமா இருக்கு?…” என சிரிப்புடன் அவளின் எதிரில் அமர்ந்து தம்ளரை நீட்ட, அதை வாங்கியவள் மெல்ல மெல்ல பருகினாள்.
தொண்டைக்கு இதமாய் இருந்தது பதமான சூட்டில் இருந்த வெந்நீர். பாதி குடித்து முடித்து பெருமூச்சுடன் பின்னால் சாய்ந்தவள்,
“என்ன என்னவாம்? பார்த்தா எப்படி இருக்கு?…” என சுபஷ்வினி முறைக்க,
“கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கு. உன் ட்ரெஸ் முன்னாடியெல்லாம் ஈரமாகிடுச்சு. மாத்து அஷ்வினி…” என்றான் நெடுஞ்செழியன்.
“ஒரு டூ மினிட்ஸ்…” என்றவள் சோம்பலாய் கண்களை மூட,
“எழும்புடி. இப்படி இருந்துட்டு உனக்கு ஷாப்பிங் வேற கேட்குது. எல்லாரும் கிளம்பினதும் ஆளுக்கு முன்ன கிளம்பி நிக்கிற? என்ன செய்யறது உன்னை?…” என அவளை எழுப்பியவன் கைகளை தட்டி விட்டவள்,
“எனக்கு மாத்திக்க தெரியும். கெட் அவுட்…” என்றாள் அறை வாசலை காண்பித்து.
“எனக்கும் தான் எல்லாம் தெரியும். ரொம்ப பண்ணாதடி…” என்றவன் அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டு,
“இதுக்கு தான் சொன்னேன். கேட்டியா நீ? இன்னும் கூட ஒருவருஷம் போகட்டும்ன்னா என் மண்டையை கழுவிட்ட…” என்று கேலியாய் சொல்ல,
“யாரு நானு? ஏன் சொல்லமாட்டீங்க? இந்தா அந்தான்னு ரெண்டரை வருஷத்தை முழுங்கியாச்சு. எதாச்சும் சொல்லுங்க. அப்பறம் பேசிக்கறேன்…” என்றவளின் முன் வந்து நின்றவன் முகத்தில் அப்பட்டமான கல்மிஷம்.
“இதுக்கொண்ணும் குறைச்சலில்லை. வெளில போங்க…” என்றாள் அவள் முறைப்புடன்.
“பசிக்குதா அஷ்வினி?…” என்று நெடுஞ்செழியன் கேட்க பாவமாய் பார்த்தாள் சுபஷ்வினி.
“சரி நீ வேற ட்ரெஸ் மாத்து. வரேன்…” என சொல்லிவிட்டு சென்றான்.
ஒன்றும் சொல்லாமல் மீண்டும் அமர்ந்தவள் பின் ஒரு குர்தி, ப்ளாசாவை அணிந்துகொண்டு தலைமுடியை தூக்கி கொண்டையிட்டு பத்து நிமிடத்தில் வெளியே வர நெடுஞ்செழியன் அடுக்களையில் இருந்தான் விசிலடித்தபடி.
‘யாருமே இல்லாம இவனுக்கு என்னோட தனியா இருக்கனும். அது மட்டும் எப்பவும் தீரவே தீராது’ என மனதிற்குள் அவனை சில்லாகித்தபடி உள்ளே நுழைந்ததும் அவனின் முதுகோடு சாய்ந்து நின்றவள் கைகள் நெடுஞ்செழியனின் இடையை வளைத்துக்கொண்டது.
“யோவ் லத்தி, என்ன பண்ணிட்டிருக்கீங்க?…” என கேட்டதும் முகம் கொள்ளா புன்னகையோடு தலையை மட்டும் திருப்பியவன் பின்னிருந்தவள் தலையோடு லேசாய் மோதி,
“பார்த்தா தெரியலையா? உனக்கு தான் சாப்பிட ரெடி பன்றேன். தேங்காய் சாதம், தக்காளி தொக்கு…” என சொல்லி,
“வந்து இங்க உட்கார்…” என்று அவளை மேடையில் ஏற்றி அமர வைத்தான்.
“நான் கேட்டேனா சமைச்சு தாங்கன்னு?…” என அவளும் பதிலுக்கு பேச,
“உன்னை…” என்று அவளின் வாயை ஒற்றை கையால் அழுத்தமாய் பிடித்தவன் கரண்டியில் ஒட்டியிருந்த தொக்கை ஒரு விரலால் எடுத்து அவளின் நாக்கில் வைத்து வாயை மூடவும் மெல்ல கண் மூடி சுவைத்தவள்,
“ஹ்ம்ம், அமேஸிங்…” என்றாள் சுவையில் மெய்மறந்து.
“ஓஹ், இஸ் இட்?…” என்று பெருங்காயத்தூள் தூவி அடுப்பை அணைத்துவிட்டு அவளின் அருகே வந்து நெருக்கமாய் நின்றவன்,
“நானும் டேஸ்ட் பார்க்கறேன்…” என அவளோடு சில நொடிகள் உலகை மறந்து இதழாடலில் திளைத்திருக்க வாசலில் காலிங் பெல் சத்தம்.
“நீ இரு, நான் பார்த்துட்டு வரேன்…” என சொல்லி வெளியே வந்தவன் வந்திருந்த கொரியரை வாங்கி வைத்துவிட்டு மீண்டும் அங்கே வந்தான்.
“என்ன இறங்கிட்ட?…” என கீழே இறங்கி நின்று மற்ற பாத்திரங்களை திறந்து பார்த்துக்கொண்டிருந்தவளிடம் கேட்க,
“இல்ல மதியத்துக்கு சமைச்சு வச்சதா அத்தைஸ் ரெண்டுபேரும் சொன்னாங்க. அதான் என்னன்னு பார்த்தேன்…” என்றவள் பச்சை மாங்காய் தாளிப்பில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டதும் உரைப்பும், புளிப்புமாய் சுவை தாலாட்டியது அவளை.
“மோர்க்குழம்பு செஞ்சிருக்காங்க. இஞ்சி புளி துவையல். வாவ்ல…” என ஒவ்வொன்றையும் பார்த்து சில்லாகித்து சொல்ல இடுப்பில் கைவைத்தபடி மனைவியை ஒரு பார்வை பார்த்தான் நெடுஞ்செழியன்.
“இப்ப என்ன இந்த பார்வை? பார்த்தா பயந்திருவோமா?…” என அவள் உதட்டை சுளிக்க,
“ஆமாமா, நீ பயந்துட்டாலும். போடி, மோர்க்குழம்பையே வச்சு சாப்பிடு…” என நகர போக,
“ஓகே…” என்று சுபஷ்வினியும் அலட்டிக்கொள்ளாமல் திரும்பி தட்டை எடுத்தாள்.
“தொலைச்சிருவேன் ராஸ்கல். போ அந்த பக்கம். சொன்னா உடனே சரின்னுவாளாம்…” என்று கத்தியவன் தான் செய்த தேங்காய் சாதத்தையும், தக்காளி தொக்கையும் வைத்து கூடுதலாய் மாங்காய் ஊறுகாயையும் எடுத்துக்கொண்டு அவளை முறைத்தபடி வெளியேற,
“சமத்து லத்தி நீங்க…” என அவனின் கன்னம் கிள்ளி கொஞ்சினாள் சுபஷ்வினி.
திருமணம் முடிந்து இந்த இரண்டரை வருடங்களில் இருவருக்குள்ளுமான ஊடல்கள் எக்கச்சக்கம்.
ஆனால் ஒவ்வொன்றிலும் இருவரின் நெருக்கங்கள் தான் அதிகமானதே தவிர காதல் குறையவில்லை.
கணவனின் வேலை தொடர்பான இடைஞ்சல்கள், இன்னல்களுக்கு மத்தியில் இருவருக்குமான நேரத்தில், குடும்பத்திற்கான சமயங்கள் என்று எப்போதும் ஏமாற்றங்களாக அமைந்ததில்லை.
புரிந்துணர்வும், புன்னகையுமே அவர்களை வழிநடத்தி சென்றுகொண்டிருந்தது இன்றுவரை. அது காலகாலத்திற்கும் தொடரும் என்பதில் அத்தனை ஸ்திரமாக இருந்தனர்.
அன்று நெடுஞ்செழியனின் வீடே கோலாகலமாக இருந்தது. திருவிழா போல அலங்காரத்தில் ஜொலித்தது அந்த இல்லம்.
சோபியாவின் வளைகாப்பு. நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் அழைப்பு. பாதுகாப்பிற்கென சுற்றிலும் காவலுக்கு ஆட்கள்.
பின்னே முதலமைச்சர் வரவிருக்கும் விசேஷம் என்றால் பாதுகாப்பிற்கு குறைவிருக்குமா?
ஆம், முதலமைச்சர் வேதசௌந்தரி. அவரை வேண்டி விரும்பி தேடி வந்திருந்தது அவருக்கான பதவி.
அவரை தவிர அந்த பதவிக்கு வேறு ஒருவரும் அழகல்ல என்று கட்சி மேலிடம் வேதசௌந்தரியை தான் முன்னிருத்தியது.
‘ஒரு கொலையை செய்துவிட்டு மன்னிப்பில் வெளிவந்தவங்களுக்கு முதல்வர் பதவியா?’ என எதிர்கட்சிகள் மட்டுமல்ல, அவர்கள் கட்சியிலேயே உட்பூசல் பெரிதாக இருந்தது.
ஆனால் மக்கள் மத்தியிலும் சரி, கட்சியில் பெருவாரியான உறுப்பினர்கள் மத்தியிலும் சரி வேதசௌந்தரியை முழுமனதாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த பதவிக்கு அவரை விட தகுதியான ஒருவரை தேர்ந்தேடுத்துவிட முடியாதென உறுதியாய் சொல்லிவிட்டார் கட்சி தலைவர்.
“வேதா தான் அந்த பதவிக்கு சரி. அந்தம்மாவோட ஆளுமை நம்ம நாட்டை இன்னும் மேம்படுத்தும்…” என்று சொல்லி தேர்தலில் நிற்க வைக்க தமிழகமே வியந்து போகும் அளவிலான வாக்கு வித்தியாசத்தில் முன்னணி வகுத்து வெற்றிபெற்றார் வேதசௌந்தரி.
சங்கீதா தான் இப்போது அவருக்கு எல்லாம். நிகிதாவும் அவர்களுடனே தான் இருந்தாள்.
படிப்பு சென்னையில் அல்லாது டெல்லியில். டெல்லியில் விடுதியில் தங்கி படித்தாலும் மனுரஞ்சன் அவளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை மனமுவந்து ஏற்றான்.
ஓரிரு விடுமுறை நாட்கள் என்றால் நிகிதாவிற்கு அவர்களுடன் தான் பொழுதுகள் செல்லும்.
கூடுதல் விடுமுறை நாட்களில் வேதாவிடம், சங்கீதாவிடம் வந்துவிடுவாள் நிகிதா.
இப்போது முழுகவனமும் படிப்பு ஒன்றே. எதை நோக்கி செல்கிறோம் என்ற குறிக்கோள் அவளை செலுத்தியது.
இன்னும் சிறிது நேரத்தில் வளைகாப்பு ஆரம்பிக்கவேண்டும். ஒருபுறம் சோபியாவை தயார் செய்ய, இன்னொருபக்கம் ஸ்ருதி சுபஷ்வினியை கவனித்துக்கொள்ள என பரபரப்பாக இருந்தது.
காலை விமானத்தில் தான் நிகிதா வந்திருந்தாள். நேராக நெடுஞ்செழியன் வீட்டிற்கே வந்துவிட்டாள்.
“எப்போக்கா கிளம்பி வருவீங்க? டெல்லில இருந்து நானே வந்துட்டேன்…” என சங்கீதாவிடம் கேட்டுக்கொண்டே வெளியே வர கேட்டிலிருந்து உள்ளே வந்துகொண்டிருந்தான் விமல். உடன் அவனின் தாயும்.
“வாங்க வாங்க…” என்றவளின் அழைப்பில் என்றைக்கும் போல அமைதியான புன்னகை விமல் முகத்தில்.
“எப்படிம்மா இருக்க?…” என நிகிதாவிடம் விமலின் தாய் கேட்க,