மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்களின் நிலையை கேட்டுக்கொண்ட நெடுஞ்செழியன் மனதில் அப்போது தான் நிம்மதி பிறந்தது.
அவர்களிடம் பேசி முடித்தவன் மீண்டும் வெளியே வர அத்தனைபேரும் நெடுஞ்செழியன் என்ன சொல்வானோ என பார்த்திருந்தனர்.
“விமல், மேஜர் உமேஷை கூப்பிடு. அப்படியே சுபாஷ் ஸாரையும் வர சொல்லிடு…” என்று சொல்லி அருகிருந்த அறைக்குள் சென்றுவிட்டான்.
அவன் சொல்லியவர்களுடன் விமல், பூச்சி இருவரும் ஐந்து நிமிடத்தில் வந்துவிட்டனர்.
“எஸ் ஸார்…” என சுபாஷ் முன் வந்து நிற்க,
“ப்ரெஸ்க்கு சொல்லிடலாம்ன்னு முடிவு பண்ணியாச்சு ஸார். இதுக்கு மேல டைம் வேஸ்ட் பண்ணவேண்டாம். இங்க இருக்கறவங்களோட டீடெய்ல்ஸ் எல்லாம் வாங்கிட்டு முதல்ல அனுப்பி வைக்க ஏற்பாடு பண்ணனும்…” என அவரிடம் கூற,
“அந்த பொண்ணுங்க…” என்றார் உமேஷ் நெடுஞ்செழியனிடம்.
“அவங்களை தான் முதல்ல யாரும் பார்க்காம, முக்கியமா ப்ரெஸ் பீப்பிள்ஸ் கண்ணுல படாம அனுப்பனும். இங்க யார் இருந்தாங்க என்னன்ற ஒரு விவரமும் யாருக்கும் போக கூடாது….” என்று திட்டவட்டமாக கூறினான் அனைவரிடமும்.
“டிபார்ட்மென்ட் போர்ஸ் வரும் போது எல்லாரும் கிளம்பி இருக்கனும். இந்த கேஸால அவங்க பாதிக்கப்படக்கூடாது. அது நாளைப்பின்ன நமக்கே தலைவலியா முடிஞ்சாலும் சொல்றதுக்கில்லை….” என்று தெளிவாய் எடுத்துரைத்தான்.
அதற்கு முன்பே விஷயம் சேருமிடம் சேர்ந்து நெடுஞ்செழியனுக்கு தேவையான அத்தனையும் தயார் நிலையில் வந்துகொண்டிருந்தது.
தங்கி இருந்தவர்கள் அனைவரையும் பாதுகாப்பாய் அனுப்பி வைத்தான் நெடுஞ்செழியன்.
“தேங்க்ஸ் ஸார். எங்க மார்னிங் வரை எங்களை இருக்க வச்சு பத்திரிக்கைக்காரங்க, போலீஸ் ஸ்டேஷன்ன்னு எங்களை இழுத்தடிப்பீங்களோன்னு பயந்துட்டோம்…” என அங்கே தங்கியிருந்த ஒருவர் கூற மெலிதாய் சிரித்த நெடுஞ்செழியன்,
“இதுவும் ஒரு காரணமாக தான். உங்க பிரைவேஸி எந்தவிதத்துலையும் பாதிக்கப்படாது. அதே நேரம் விசாரணைன்னு வரும் போது உங்க ஒத்துழைப்பு எங்களுக்கு ரொம்ப அவசியம். உங்க பாதுகாப்புக்கு நாங்க உத்திரவாதம்…” என்று சொல்லியே தான் அனுப்பினான்.
வெளியில் அத்தனை கூட்டங்கள். ஊடகத்துறை மொத்தமும் அங்கே தான் குழுமி இருந்தது.
காவல்துறை பணியாளர்கள் உள்ளே நுழைந்ததும் நெடுஞ்செழியனின் முன்னின்று வணக்கத்தை தெரிவிக்க தலையசைத்து ஏற்றுக்கொண்டவன்,
“இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் மாரியப்பன்…” என்றதும்,
“எஸ் ஸார்…” என்றொரு சல்யூட்டுடன் முன் வந்து நின்றார் அவர்.
அவனின் அழைப்பு எதற்கென்றே தெரியாத ஒரு பயத்தில் அவர் திருதிருவென விழித்தார்.
“ஏன் கால் எல்லாம் நடுங்குது மாரியப்பன்?…” என்ற நெடுஞ்செழியன்,
“இங்க இருக்கிறவங்கள்ல உங்களுக்கு ரொம்ப தெரிஞ்சவங்க யார்?…” என்று அவனிடம் கேட்க,
“ஸார்…” என திகைத்தார்.
“சும்மா சொல்லுங்க…” என்றவன் அந்த அறையில் அந்த விடுதியின் பணியாளர்கள், புதிதாய் வந்திருந்த மூன்று தொழிலதிபர்கள், அந்த இரு இளைஞர்கள் என அத்தனை பேரையும் நிறுத்தி வைத்திருந்தான்.
“அது வந்து ஸார்…” மாரிமுத்து வியர்த்து போனார்.
“சும்மா சொல்லுங்க. முழுக்க நனைஞ்சாச்சு. முக்காடு எதுக்கு?…” என்றவனின் பேச்சில்,
“மேனேஜர் மட்டும் தெரியும் ஸார். அப்பறம் இந்த பையனையும்…” என சமையல் மாஸ்டர் எனப்படுபவனையும் காண்பிக்க,
“அவ்வளோ தானா?…” என்றான் நெடுஞ்செழியன்.
“அவங்க ரெண்டுபேரை தான் தெரியும். ஸ்டேஷன் வந்து அப்பப்ப பணம் குடுத்துட்டு போவாங்க ஸார். நட்பு ரீதியா…” என்றார் மாரிமுத்து.
இத்தனை அடிவாங்கி சுருண்டு கிடக்கின்றனர். இதை எல்லாம் சொல்லியிருப்பார்கள் என்று மாரிமுத்துவே வாயை விட,
“ஓஹோ, இதை இப்படியும் சொல்லலாமோ? நட்பு ரீதியில அன்பளிப்பு….” என்ற நெடுஞ்செழியன்,
“ஏன் மேனேஜர் இதை என்கிட்ட சொல்லலை?…” என கேட்க மாரிமுத்து அதிர்ந்து பார்த்தார்.
“பூச்சி அவன் செவில்ல நாலு விடு…” என்று சொல்லவும் பூச்சியப்பன் விட்ட அறையில் யார் என்ன பேசுகிறார்கள் என்பது எதுவுமே கேட்காது போயிற்று மேனேஜருக்கு.
“அப்பறம் மாரியப்பன், உங்களை எந்த லிஸ்ட்ல சேர்க்கறது?…” என கையிலிருந்த பேப்பர் வெய்ட்டை உருட்டியபடி மேஜையில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியன் கேட்க,
“ஸார்…” என நடுங்கினார்.
“இல்ல இந்த ரெஸார்ட்ல நடக்கிறது உங்களுக்கு முன்னவே தெரிஞ்சிருக்கும் போல? அப்போ நீங்களும் அக்யூஸ்ட் லிஸ்ட் தானே?…” என்ற கேள்வியில் தூக்கிவாரிப்போட அவனை பார்த்தார்.
“சத்தியமா இல்லை ஸார். எங்கம்மா சத்தியமா இல்லை ஸார். என்னை நம்புங்க. அப்பப்ப பணம் தருவாங்க. எல்லா இடத்துலையும் நடக்கிறது தானேன்னு நானும் வாங்கிப்பேன். வேற எதுவும் எனக்கு தெரியாது ஸார்…” என்று கிட்டத்தட்ட மாரிமுத்து அவர் உயரத்தில் பாதியாகி குனிந்துவிட்டார்.
“எவ்வளோ அசால்ட்டா சொல்றார் பாரேன் எல்லா இடத்துலையும் நடக்குதுன்னு. அதுக்கும் சேர்த்து வாங்கி கட்ட போறார்…” என்றான் பூபாலன்.
“பார்ரா, எல்லா இடத்துலையுமா? நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கும் போல? வாங்க, வாங்க. இப்படி வந்து உட்காருங்க….” என்ற நெடுஞ்செழியன்,
“விமல் கேமரா ஆன் பண்ணு…” என சொல்லி,
“நீங்க சொல்லுங்க மாரியப்பன். ஒரு கேஸ்க்கு வந்து பல கேஸ் எக்கச்சக்கமா சிக்கும் போல? யார், யார் எவ்வளோ வாங்கறாங்க? மன்த்லி கலெக்ஷனா? வீக்லி கலெக்ஷனா? யாரெல்லாம் கூட்டு?…” என்று அவரை அமர வைத்துவிட்டான்.
பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களுக்கெல்லாம் தொண்டையில் நீர் வற்றி போனது.
“ஒருத்தன் சும்மா வந்து உங்களுக்கு காசு கொண்டுவந்து தருவானா? யோசிக்கமாட்டீங்களா? அப்பவாச்சும் என்ன ஏதுன்னு விசாரிக்கவோ, ஆராயவோ தோணலைன்னா நீங்கலாம் என்னய்யா போலீஸ்?…” என விட்டு விளாசிவிட்டான்.
அவனின் ஆக்ரோஷம் கொஞ்சம் தணிந்த பின்னர் தான் அடுத்து பேசவே ஆரம்பித்தான் கொஞ்சம் நிதானமாக.
“பெண் குழந்தை இருக்கா உங்களுக்கு?…” என்ற கேள்வியில் முகம் கறுக்க மாரிமுத்து ‘ஆமாம்’ என தலையசைத்தார்.
“இன்னைக்கு இந்த ரெஸார்ட்க்குள்ள குடுக்கற இந்த தண்ணி நாளைப்பின்ன பொதுமக்கள் நடமாடற பொது இடத்துக்கே வந்து வியாபாரம் ஆக கூடிய சூழ்நிலையும் வரலாம்…” என கசப்புடன் கூறிய நெடுஞ்செழியன்,
“இப்பலாம் பிஸ்னஸ் பன்றவனுங்களோட மிகப்பெரிய லஞ்சமே பொண்ணுங்கன்னு ஆகி போச்சு. பாதுகாக்க வேண்டிய நாம வேடிக்கை பார்க்கறோம். இதுல பொதுவா நடக்கறதுன்னு சப்பைக்கட்டு. உங்க பொண்ணு இங்க இருந்திருந்தா இதையே பேசுவீங்களா நீங்க?…” என்றதும் தலை குனிந்தார் மாரிமுத்து.
“ஏன் மேனேஜர் காசுன்னா மத்தவங்க எல்லாம் கால் தூசி இல்லையா? இந்தா நிக்கிற இந்த வன்கிழட்டு நாய்ங்க உன் வீட்டு பொண்ணை பேரம் பேசினா என்ன பண்ணுவ? சரின்னு கூட்டிட்டு வந்திருவ போல?…” என கொதிப்புடன் பேசினான்.
நெடுஞ்செழியனின் ஆவேசம் மீண்டும் எல்லை மீறும் போலிருந்தது. இந்த விஷயம் மட்டும் தங்களின் பார்வைக்கு வந்திருக்காவிட்டால் இன்னும் எத்தனை வருடங்களுக்கு இதுவே நீட்டித்திருக்குமோ?
நினைக்கவே பதறிக்கொண்டு வந்தது. எதிர்கால உலகம் நிஜமாய் அவனை அச்சத்திற்குள்ளாக்கியது.
என்னவெல்லாம் செய்கின்றனர்? எதை எல்லாம் கண்டுபிடிக்கின்றனர்? மனித இனத்தை அழிவின் உச்சத்தில் கொண்டுவிட்டு தான் ஓய்வார்களோ?
அவர்கள் உருவாக்குவது அவர்களுக்கே பாதகமாக முடியாதென்ற துணிச்சலை அச்சிட்ட பணமெனும் காகிதம் தான் தீர்மானிக்கிறதோ?
அவ்வளவு கோபம் அவனின் முகத்தில். வெளியே பத்திரிக்கையாளர்களின் கூச்சல் மேலும் அதிகமாகியது.
“விமல் இவங்களை எல்லாம் நான் சொல்லும் போது அந்த டான்ஸிங் ரூம்க்கு அழைச்சிட்டு வா…” என்ற நெடுஞ்செழியன்,
“பூபாலன் ப்ரெஸ் மீட் அந்த ரூம்லயே அரேஞ்ச் பண்ணு…” என்று சொல்லிவிட்டு அங்கே சென்றான்.
நான் நீ என மொதுமொதுவென மொத்த ஊடகத்துறையும் அவ்விடத்தில் வந்து நிரம்பியது.
நெடுஞ்செழியன் வந்து நின்றதும் சரமாரியாக கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றனர் பத்திரிக்கையாளர்கள்.
சில நொடிகள் கை கட்டிக்கொண்டு அத்தனைபேரையும் கூர்மையாக பார்த்தவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
“பூபாலன் அவங்களை அழைச்சிட்டு வர சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு மீண்டும் மௌனமானான்.
“ஸார் நாங்க கேட்டுட்டே இருக்கோம். நீங்க எதுவுமே பேசாம நிக்கறீங்களே?…” என மைக்கை நீட்டியபடி ஒருவர் கேட்க,
“சென்னைக்கு எப்போ ஸார் மாற்றலாகி வந்தீங்க? நீங்க பணி நீக்கம் செய்யப்பட்டிருந்ததா சொன்னாங்களே?…” என மற்றொருவர் கேட்டார்.
இப்படியான கேள்விகள் கேட்டபடி இருக்க அங்கே பிடிபட்டிருந்தவர்கள் முகத்தில் துணியை மூடிக்கொண்டிருந்தார் மாரிமுத்து.
அந்த விடுதியின் பணியாளர்கள் தவிர்த்து மேனேஜர், அந்த மூன்று தொழிலதிபர்கள், இரு இளைஞர் என்று அவர்களுக்கு மட்டும் மாரிமுத்து துணியால் மூடி வைக்க,