“எல்லாம் பெரிய இடம். இது தான்ப்பா வழக்கம். ஸார் சொல்லாம போயிருப்பார். நாங்க எத்தனை கேஸை பார்த்திருப்போம்?…” என மாரிமுத்து சொல்ல,
“ஸார் சொன்னா ரைட்டு. நீ என்ன குறுக்க பேசிக்கிட்டு?…” என்று இடையில் வந்த பூச்சி,
“நீங்க கூட்டிட்டு போங்க ஸார். கரெக்ட்டா செஞ்சிருக்கீங்க. நாங்க தான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு…” என மாரிமுத்துவிடம் சொல்லி அனுப்பினான் பூச்சியப்பன்.
“உனக்கு அதுல ஒரு எண்டெர்டெயின்மெண்ட். வா வா…” என விமல் அவனுடன் செல்ல அந்த நடன அரங்கிற்குள் குற்றவாளிகள் நுழையவும் நெடுஞ்செழியனிடம் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த அத்தனைபேரும் போட்டோ, வீடியோ என எடுத்துக்கொண்டிருந்தனர்.
அவர்களின் கவனம் அங்கே செல்லவும் நெடுஞ்செழியன் திரும்பி பார்த்ததும் முகத்தை மறைத்தபடி வந்தவர்களை கண்டதும் ஏகத்திற்கும் ரத்தங்கள் சூடாகியது.
“வாட் ரப்பிஷ்…” என அவன் இரைந்ததில் அவ்விடமே அடங்கிவிட்டது.
ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு ஒரு நிசப்தம் நிலவ விறுவிறுவென முகத்தை மூடி நின்றவர்கள் அருகே சென்றான் நெடுஞ்செழியன்.
முகத்தை மூடி இருந்த ஒவ்வொருவரின் முகத்திரையையும் பிடுங்கி வீசி எறிந்தவன் அவர்களை கேமராக்களின் முன்னிறுத்தினான்.
“பார்க்கட்டும் இந்த உலகம் மொத்தமும். இவனுங்க குடும்பத்துல இருக்கறவங்க எல்லாம் காறி துப்பட்டும். (rpmtriad.com) செய்யிறது ஈனச்செயல். இவங்களுக்கு முகமூடி வேறையா? இருட்டுக்குள்ள பாதகம் செய்ய நினைச்சப்போ வெட்கப்படாதவங்களா இதுக்கெல்லாம் வெக்கப்பட போறாங்க?…”
“இனி பொண்ணை பெத்தவங்க முன்னாடியும், பொண்ணுங்க முன்னாடியும் இந்த சமூகத்து முன்னாடியும் தலை நிமிர்ந்து நிக்கவே அசிங்கப்படனும். யார் என்ன செஞ்சிடமுடியும்ன்னு நினைச்சு தானே சின்ன பொண்ணுங்க வாழ்க்கையை சீரழிக்க வந்திருக்கானுங்க…” என பேசிய பேச்சில் அத்தனைபேரும் மௌனமாகினர்.
“ஏய், இங்க நிக்கிற ஒருத்தரும் முகத்தை குனியவோ, மறைக்கவோ, வேற பக்கம் திரும்பவோ கூடாது. போட்டோல அத்தனைபேரும் பில்டர் போட்டு எடுக்காமையே பளிச்சுன்னு இருக்கற மாதிரி முகத்தை காமிக்கனும். காட் இட்…” என்றவன்,
“நீங்களும் இவங்களோட போட்டோஸை தெளிவா உங்க சேனல்லையோ, பேப்பர்லையோ போடுங்க. அப்ப தான் யார் எவர்ன்னு எல்லாருக்கும் தெரியும்…” என ஊடகத்திற்கும் கட்டளையிட்டான் நெடுஞ்செழியன்.
அந்த மூவரில் ஒரு தொழிலதிபரான புருஷோத்தமனுக்கு அவ்வளவு பெரிய மகத்தான பெயர் வெளி உலகில். இதனை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை ஊடகத்துறையில் இருந்தவர்கள்.
“இப்ப நான் பேசலாமா?…” என அடுக்கப்பட்டிருந்த மைக்கின் முன்பு வந்து நின்றான் நெடுஞ்செழியன்.
“உங்களுக்கு விஷயம் ஓரளவு தெரியவந்திருக்கும்ன்னு நினைக்கறேன். பெரியமனிதர்கள்ன்ற பேர்ல இந்த சமூகத்துக்கு நிறைய நல்லது செய்யற தொழிலதிபர்களோட இன்னொரு பக்கம் இது தான்…” என்றவனை இடைமறித்த நிருபர் ஒருவர்,
“இப்படி ஒரு சம்பவம் இங்க நடந்திட்டிருக்குன்னு உங்களுக்கு எப்படி ஸார் தெரிய வந்தது?…” என்று கேட்டார்.
“பொறுமையே இல்லைல? பேசறதை கேளுங்க. இல்லையா மொத்த விசாரணை நடந்து முடிஞ்சு தீர்ப்பான பின்னாடி தெரிஞ்சுக்கறதா இருந்தாலும் எனக்கு ஓகே…” என்றுவிட்டான் நெடுஞ்செழியன்.
“சொல்லுங்க ஸார்…” என்று அமைதியாய் சொல்லிவிட்டு நின்றுகொண்டார் அவர்.
“விஷயம் இது தான். இங்க இந்த தப்பு நடந்திடிருந்ததா நம்பகத்தன்மையுடனான ரகசிய தகவல் வந்தது. யார்ன்னு பாதுகாப்பு கருதி வெளில சொல்ல முடியாது. நான் இங்க விசாரிச்ச வரையில் கடந்த இரண்டு வருஷமா இங்க இந்த குற்றம் நடந்திட்டிருக்கு. இப்ப கையும் களவுமா பிடிச்சிருக்கோம்…” என்றான்.
“பாதிக்கப்பட்ட பொண்ணுங்க இப்ப எங்க ஸார்? உள்ள இருக்காங்களா? அவங்களை பார்க்கலாமா? அவங்க மனநிலை இப்போ என்ன?…” ஒருவர் ஆர்வமாக கேட்க நெடுஞ்செழியனின் பார்வை சுட்டெரித்தது.
“மற்ற விவரங்கள் எல்லாம் அடுத்த விசாரணை முடியவும் தெரியவரும். இதற்கு காரணமானவங்களை தேடிட்டிருக்கோம். கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிருவோம். இப்ப எங்க கடமையை செய்யறோம்…” என்று அத்துடன் முடித்தவன்,
“எல்லாரையும் வேன்ல ஏத்துங்க….” என்று உத்தரவிட்டான்.
அதன்பின் எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை நெடுஞ்செழியன். அவனுக்கு தேவை இவ்விஷயம் வெளியே பரவ வேண்டும் என்பது மட்டுமே அவன் நோக்கம்.
யாரும் எந்தவகையிலும் குற்றவாளிகளை காப்பாற்ற முயல கூடாதென்பதில் தெளிவாய் இருந்தான்.
அதற்கு மேலும் குறுக்கிடுபவர்களை ஒரு கை பார்த்துவிடுவது என தீவிரமாக இருந்தான்.
“எல்லாரையும் ஒரே மாதிரி ட்ரீட் பண்ணுங்க. இவனுங்க வயசு, பணம்ன்னு சலுகை குடுத்தீங்கன்னு தெரிஞ்சது அவ்வளோ தான்…” என்று சக காவலர்களையும் எச்சரித்தான்.
“ஸார் எனக்கு பிபி இருக்கு…” என்று தொழிலதிபர் புருஷோத்தமன் சொல்ல,
“பிபியா? உனக்கா?…” என அருகில் வந்தவன்,
“எப்படி, எப்படி? உனக்கு பொண்ணுங்க தானா உன்னை தேடி வரனுமோ? நாடி நரம்பெல்லாம் ஆடி போச்சு. எவ்வளோ வக்கிர புத்திடா உனக்கு? பிபி வந்து நீ சாகனும்ன்னு அந்த ஆண்டவன்கிட்ட வேண்டிக்க. இல்ல இனி தான் நீ பார்க்க போற…” என்றான்.
நெடுஞ்செழியன் பேச்சில் புருஷோத்தமன் மிரட்சியும், பயமுமாக வியர்த்து போய் பார்க்க,
“உங்க ஊர்ல பொண்ணுங்களோட முன்னேற்றத்துக்கு நீ ரொம்ப முக்கியத்துவம் குடுப்பியாமே? விசாரிச்சேன். உன் முக்கியத்துவத்தை நாறடிக்கறேன் பார். போ அவங்களோட…” என அடித்து விரட்டாத குறையாக அத்தனைபேரையும் விரட்டினான்.
பிடிபட்ட அத்தனைபேரையும் கூண்டு வேனில் மொத்தமாக ஏற்றினார்கள் காவலர்கள்.
அங்கே சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் எல்லாம் பத்திரப்படுத்தப்பட்டு பாதுகாப்பாய் எடுத்து சென்றனர்.
விடுதி இயங்க தடை செய்யப்பட்டு அதனை இழுத்து மூடிவிட்டு காவலுக்கு ஆட்களை நிறுத்தி அவ்விடம் விட்டு கிளம்பினார்கள்.
“குட் ஜாப் பாய்ஸ்…” என்று பூபாலன், பூச்சி, விமல் மூவருக்கும் பாராட்டை தெரிவித்தவன்,
“தேங்க் யூ ஸார்…” என்றான் சுபாஷிடமும், உமேஷிடமும்.
“என்ன மேன் நீ? இது என்னோட கடமை…” என்றார் உமேஷ்.
“பாதி கிணறு தான் தாண்டி இருக்கோம் செழியன். இன்னும் இதுக்கு பின்னணில இருக்கறவங்க வெளிச்சத்துக்கு வரலை. அடுத்து எப்போ என்ன உதவினாலும் தயங்காம கூப்பிடு மேன். நாங்க வர தயாரா இருக்கோம்…” என்றார் சுபாஷ்.
இருவருமே ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள். அவர்களையும் வைத்துக்கொண்டு இத்தனை பெரிய கும்பலை பிடித்திருந்தான்.
“ஓகே, நீங்க போய் ஹாஸ்பிட்டல்ல என்னன்னு பாருங்க…” என்று அவர்களை அனுப்பி வைத்தனர் உமேஷ், மற்றும் சுபாஷ் இருவரும்.
விடுதியின் உரிமையாளர் எங்கே என தேடப்பட உரிமையாளர் மணிகண்டன் சென்னையில் இல்லை. தற்போது செய்தி அறிந்து தலைமறைவு வேறு.
மற்றவர்கள் கிளம்ப நெடுஞ்செழியன் விடுதியை விட்டு புறப்பட்டவன் நேராக மருத்துவமனை சென்று சேர சுபஷ்வினியும், அவளை சேர்ந்தவர்களும் இன்னும் மயக்கத்தில் தான் இருந்தனர்.
மருத்துவருடன் அவர்களின் நிலைமை இப்போது எப்படி உள்ளது என விசாரித்துக்கொண்டிருக்க ஸ்ருதியிடமிருந்து அழைப்பு நெடுஞ்செழியனுக்கு.
“எக்ஸ்க்யூஸ் மீ…” என்று சொல்லி தள்ளி வந்து அழைப்பை ஏற்றான்.
“அங்க என்னாச்சு? அஷ் எங்க? அவ நம்பர் ரீச்சாகலை. அந்த ரெஸார்ட் பத்தி நியூஸ்ல என்னென்னவோ சொல்றாங்க. நான் வரேன் இப்பவே….” என படபடத்தாள்.
“ஸ்ருதி இரும்மா. இங்க பயப்படற மாதிரி எதுவும் இல்லை. எல்லாரும் நல்லா இருக்காங்க. இப்ப நீ இங்க வரவேண்டாம்…” என்றான் நெடுஞ்செழியன் பொறுமையாக.
“என்னன்னு சொல்லுங்க. சரி நான் அஷ்கிட்ட பேசனும். அட்லீஸ்ட் பேசவாச்சும் சொல்லுங்க. இல்லைனா நான் வருவேன்…” என்றாள் அவள்.
சுபஷ்வினி ஸ்ருதகீர்த்திக்கு எத்தனை முக்கியம் என அவன் அறியாததா? இதை சற்று முன்னரே அவன் எதிர்பார்த்திருந்தான்.
இப்போது தான் அவள் செய்தியை கவனித்திருப்பாள் என்பது ஸ்ருதியின் தாமதமான அழைப்பில் புரிந்தது.
“ஸ்ருதி இப்ப அஷ்வினிட்ட மட்டுமில்லை, இங்க இருக்கற யார்க்கிட்டயும் பேச முடியாது. அதுக்கு அனுமதி இல்லை. எல்லாரும் விசாரணையில இருக்காங்க. யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. அவ்வளோ தான் சொல்ல முடியும்…” என்றவன்,
“அதே நேரம் நீ இங்க வரவேண்டாம். ஏற்கனவே ப்ரெஸ் இங்க சுத்திலும் இருக்காங்க. தேவையில்லாம இஷ்யூவாக்கிருவாங்க. புரிஞ்சுக்கோ. நான் அஷ்வினிக்கு மட்டும் கால் பண்ணி பேச வைக்கமுடியாது. அதை செய்யவும் மாட்டேன்…” என்று முடித்தான்.
“நிஜமா அஷ் ஓகே தானே?…” என கேட்டவள் குரலில் ஏகத்திற்கும் சஞ்சலம்.
“நான் தான் கூடவே இருக்கேனே ஸ்ருதி. நம்பமாட்டியா?…” என்றதும்,
“அதனால தான் நான் உங்கட்ட பேசிட்டிருக்கேன். வேற எதுவும்ன்னா லத்தி உங்களுக்கு லத்தி தான். ஞாபகம் இருக்கட்டும்…” என்று சொல்லி வைத்துவிட்டாள் ஸ்ருதி.
அந்த அதட்டலில் இருக்கும் இறுக்கமான சூழ்நிலையில் கூட மெல்லிய கீற்றாய் புன்னகை அவனிதழில் நெளிந்தது.
பேசி முடித்து மருத்துவரை நோக்கி செல்ல அங்கே விமல் அவரிடம் பேசிக்கொண்டிருக்க இணைந்துகொண்டான் நெடுஞ்செழியன்.
———————————————
“நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு. எப்படி அந்த செழியன் இந்த கேஸ்க்குள்ள வந்தான்?…” என பல்லை கடித்தான் ஜெய்.
“சஸ்பென்ட் பண்ணினவனை தேடி போய் யார் இந்த கேஸ்ல இன்வால்வ் பண்ணினாங்கன்னு தெரியலை ஜெய். ஆனா இங்க இமீடியட்டா போஸ்ட்டிங் போடவச்சது சட்ட அமைச்சர் வேதசௌந்தரி…” என கதிர் அவனிடம் சொல்ல,
“வாட்?…” என்றான் அதிரும் குரலில்.
“ஆமா, இந்த விஷயத்தை வாங்கறதுக்குள்ள நான் ஒருவழியாகிட்டேன். மணிகண்டன் இப்ப சேஃப். அவரை யாரும் கண்டுபிடிக்க முடியாது. கேஸ் நடக்கட்டும். பார்த்துப்போம். ஆனா ஒருத்தரும் வாயை திறக்க போறதில்லை…” என்றான் கதிர் அத்தனை நம்பிக்கையுடன்.
“திறக்க கூடாது. இல்லைன்னா உன்னை சும்மாவிடமாட்டேன். என்னை பத்தி தெரியும் தானே?…” என்ற ஜெய்யின் மிரட்டலான குரலில் கொலைவெறி தாண்டவமாடியது.