அவனுக்கு வழக்கு சம்பந்தப்பட்ட வேலைகள் தலைக்கு மேலிருந்தது. கொஞ்சமும் அயர்ந்து ஆறுதலாக அமர்ந்துவிட முடியாது.
நடந்திருப்பது அத்தனை பெரிய குற்றம். அதுவும் பிடிபட்டவர்களிடமிருந்து கைப்பற்றிய அலைபேசியிலும், கணினியிலும் அவன் கண்டுகொண்ட ஆதாரங்கள் இன்னுமே பெரும் கலவரத்தை உண்டு பண்ணியது.
சம்பந்தப்பட்டவர்கள் அத்தனை சுலபத்தில் வழக்கை முடிக்க விடமாட்டார்கள் என்பது வரை அவனுக்கு தெரிந்திருக்க இதன் சூடு ஆறும் முன் இதற்கு முடிவு செய்யவேண்டும் என்று தன்னை தானே துரிதப்படுத்திக்கொண்டிருந்தான்.
அந்த நள்ளிரவே அமைச்சர் வேதசௌந்தரியை தொடர்புகொண்டவன் எக்காரணத்தை கொண்டும் இவ்வழக்கு தன்னை தாண்டி யாருக்கும் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டான்.
“நெடுஞ்செழியன் நான் இதைபத்தி பேசும் போதே உங்ககிட்ட சொன்னது தான். இதுக்கு பின்னாடி இருக்கற ஒவ்வொருத்தரும் தண்டிக்கப்பட வேண்டியவங்க. அது யாரா இருந்தாலும்…” என்றார் உறுதியாக.
“தேங்க் யூ மேம். உங்களை மீட் பண்ண அப்பாயின்மென்ட் வேணுமே…” என்றதும்,
“கண்டிப்பா, எப்போன்னு சொல்லுங்க. நான் ப்ரீ பண்ணிக்கறேன்…” என்றவர் மீது இன்னுமே மரியாதை கூடியது.
“அப்பறம் நெடுஞ்செழியன் அந்த பொண்ணுங்க எல்லாம் எப்படி இருக்காங்க?…” என அவர் விசாரிக்க,
“குட் மேம். இன்னும் ஒரு பொண்ணுக்கு கான்ஷியஸ் வரலை. மத்த ரெண்டுபேரும் சேஃப்…” என்றான்.
“ஓகே, மறக்காம அந்த பொண்ணுங்கக்கிட்ட கம்ப்ளைண்ட் வாங்கி ரிஜிஸ்டர் பண்ணிடுங்க…” வேதசௌந்தரி கூற,
“சூர் மேம்…” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.
மருத்துவமனையிலிருந்து கிளம்பியவன் தன் வீடு வந்து பின் கமிஷனர் அலுவலகம் வந்து சேர காலையாகிவிட்டது.
வந்ததும் கமிஷனர் ஜெயராமனை நேரில் சென்று சந்தித்து பணி நிமித்தம் பேசினான்.
“இந்த கேஸ் அவ்வளவு சுலபத்துல முடியக்கூடியது இல்லை போல செழியன்…” என்றார் அவர் கவலையுடன்.
“அதை பார்த்தா நாம பார்க்கற வேலைக்கு அர்த்தமே இல்லையே ஸார்?…” என அவருக்கு பதில் கூறியவன்,
“எதுவானாலும் பார்ப்போம். அதுக்காக பின்வாங்க முடியாது நான்…” என்றான் நெடுஞ்செழியன்.
“உங்களோட இந்த தைரியம் ரொம்ப நல்லாயிருக்கு. ஆனா அதோட விவேகமும் இருக்கனும். கொஞ்சம் பார்த்து இருங்க…” என்றார் அவனின் நலம் விரும்பியாக.
“சூர் ஸார்…”
“கண்ணுக்கு தெரிஞ்ச எதிரியை விட பதுங்கி இருக்கற கண்ணுக்கு தெரியாத எதிரி ரொம்ப அபாயகரமானவங்களா இருப்பாங்க. நீங்க பின்னடைய இதை சொல்லலை. எச்சரிக்கையா இருக்க சொல்றேன்….” என்றும் கூற அமைதியாக தலையசைத்து ஏற்றுக்கொண்டான்.
“மத்தபடி நீங்க இங்க சார்ஜ் எடுத்துக்கிட்டது தனிப்பட்ட முறையிலையும் எனக்கு ரொம்பவே சந்தோஷம் நெடுஞ்செழியன்….” என எழுந்து நின்று அவனுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
அவரிடமிருந்து விடைபெற்று புறப்பட்டவன் தன்னுடைய அலுவலகம் நோக்கி வந்தான்.
அங்கே விடுதியில் பிடித்து வைத்திருந்தவர்கள் அவனின் கட்டுப்பாட்டில் இருக்க அவர்களின் சொந்தமோ, வழக்கறிஞரோ யாருக்கும் குற்றவாளிகளை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.
மொத்த தமிழகமும் இவ்வழக்கினால் கொந்தளித்து போயிருந்தது. அந்த விடுதியின் இன்னும் இரு கிளைகளும் உடனடியாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு அங்கேயும் சோதனைகள் செய்யப்பட்டனர்.
ஒன்று கடற்கரை சாலையில் இருக்க, மற்றொன்று சென்னையின் முக்கிய மையப்பகுதியில் இருந்தது.
அங்கே தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டு வேலை செய்பவர்கள் விசாரணைக்குள்ளாக்கப்பட்டனர்.
எல்லாம் துரித கதியில் அரங்கேறி இருக்க சம்பந்தப்பட்டவர்களால் மூச்சு கூட விடமுடியவில்லை.
இத்தனைவேகத்தில் வேட்டைக்கு முடுக்கிவிடுவனா என யோசிக்கும் முன் எல்லாம் அங்கே கை நழுவி சென்றுகொண்டிருந்தது.
“என்ன நடக்குது கதிர்? இப்ப நான் என்ன பன்றது?…” என விடுதியின் உரிமையாளர் மணிகண்டன் கதிரிடம் கத்திக்கொண்டிருந்தார்.
“அங்கிள் பொறுமையா இருங்க. இப்ப நாம எந்த மூவ் பண்ணினாலும் நமக்கு தான் பிரச்சனை. முதல்ல உங்களுக்கு முன்ஜாமீன் வாங்கனும். அதுக்கான வேலையை நான் பார்க்கறேன்…” என்றான் கதிர்.
“என் பையன் ரொம்ப டென்ஷனா இருக்கான். யார் மூலமா இது தெரிஞ்சிருக்கும்ன்னு அவ்வளோ கோபமா இருக்கான்…” என்றார் மணிகண்டன்.
“என் மானமே போச்சு. இத்தனை வருஷம் பிஸ்னஸ் பண்ணினதுல இப்படி ஒரு அவமானமும், அசிங்கமும் எனக்கு நடந்ததே இல்லை. இப்ப எந்த சேனலை போட்டாலும் என் முகமும், என் மகன் முகமும் தான்…” என்றவர்,
“பொண்ணு வீட்டுல இருந்து ஒரு போன் கால் கூட வரலை. எதுவுமே பேசலை. நாங்களா காண்டேக்ட் பண்ணவும் யோசனையா இருக்கு. அந்த பொண்ணு சரத் நம்பரை ப்ளாக் பண்ணிருக்கு போல?…” என அவ்வளவு கோபத்தில் பேசினார் மணிகண்டன்.
“ப்ச், இது ஒரு விஷயமா? கேஸை உடைச்சிட்டு இதெல்லாம் தொழில் போட்டியால வேற யாரோ செஞ்சதுன்னு முடிச்சுட்டு போய்ட்டே இருப்போம் அங்கிள். பொண்ணு வீட்டுல தானா தேடி வர போறாங்க…” கதிர் நம்பிக்கையாக சொல்ல,
“எனக்கு அப்படி நடக்குமான்னு தோணலை கதிர்…” என்றார் மணிகண்டன்.
“ஏன் நடக்காம? அப்படியே வேற யாரும் செய்யலைன்னா மேனேஜர் மேல பழியை தூக்கி போடுங்க. அவன் தான் பணத்துக்காக இதை செஞ்சான்னு சொல்லி அவன் ஃபேமிலிக்கு ஒரு செட்டில்மென்ட் குடுத்திருவோம்…” கதிர் கூற,
“பணத்துக்கு ஒத்துக்கலைன்னா குடும்பத்தை தூக்குவோம். என்ன நீங்க ஒன்னொண்ணுக்கும் யோசிக்கறீங்க? நாங்க எதுக்கு இருக்கோம்?…” என அவருக்கு தைரியமூட்டினான்.
“இல்லப்பா வேதசௌந்தரி, அந்தம்மாவை நினைச்சா தான் பயமா இருக்கு. அதுவே அந்த ஏசிபியை இங்க கொண்டுவந்து போஸ்ட்டிங் குடுத்து கேஸை குடுத்திருக்கு. குடைச்சல் குடுக்கன்னே இருக்கறவன் அவன். சும்மா விடுவாங்களா ரெண்டுபேரும்?…”
“அட என்ன அங்கிள் நீங்க? இதுக்கு போய் யோசிச்சிட்டு?…” கதிர் அப்போதும் நம்பிக்கையாய் பேசினான்.
“யோசிக்கனும் கதிர். போலீஸ்ல ரெண்டுவருஷமா இது நடக்குதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. எனக்கு என்னமோ அதுல சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு பொண்ணு மூலமா தான் விஷயம் போயிருக்கனும். யார் என்னன்னு தெரிஞ்சுக்கனும்…” என்றவர்,
“இப்ப வேதசௌந்தரி, அந்த ஏசிபி, கமிஷனர் எல்லாமே நமக்கு வளைஞ்சு குடுக்காதவங்க. நாம ரொம்பவே யோசிக்கத்தான் வேணும். முதல்ல யார் இதை வெளில சொன்னதுன்னு தெரியனும். அது தெரியாம என்னால தூங்க கூட முடியாது. என் குடும்பத்தோட ஒட்டுமொத்த எதிர்காலமும் நாசமா போச்சு. அதுக்கு காரணமானவங்களை சும்மா விடுவேனா?…” என சூளுரைத்தார் மணிகண்டன்.
—————————————————-
இவற்றின் ஆரம்பப்புள்ளியான நிகிதாவின் கண்ணில் கண்ணீர் பொங்கிக்கொண்டே இருந்தது.
உயிர்ப்பில்லா விழிகளுடன் தொலைக்காட்சியின் திரையை வெறித்தபடி இருக்க அருகில் அமர்ந்திருந்த வெங்கடேசன் விழிகள் சிவக்க அதனை தானும் பார்த்திருந்தார்.
“நிகி குட்டி…” என மகளின் தோளில் கைவைக்க,
“டாடி வேதா ஆன்ட்டிட்ட பேசனும்…” என்றாள் அவள்.
“இப்பவா?…” அவருக்கு யோசனையாக இருந்தது.
“ஆமா டாடி. தேங்க்ஸ் சொல்லனும். அதோட இன்னொரு விஷயத்தையும் சொல்லனும்…” என்று கூற,
“இன்னும் என்னடா இருக்கு? அப்பாவால தாங்க முடியாதும்மா…” என கண்ணீர் வந்துவிட்டது.
“ப்ச், நான் தான் லூஸு மாதிரி அழறேன்னா நீங்களும்…” என்றவள் உடனே கண்களை துடைத்துவிட்டு தந்தையின் கண்களையும் துடைத்துவிட்டாள்.
“கால் பண்ணுங்க டாடி பேசிட்டு சாப்பிடனும். ரொம்ப பசிக்குது…” என்று கூற,
“இதோடா தங்கம். அப்பா கூப்பிடறேன்…” என்றவர் உடனே வேதசௌந்தரியின் வீட்டு எண்ணிற்கு அழைத்தார்.
முதல் அழைப்பு முழுதாய் சென்று ஓய நிகிதாவின் முகத்தில் என்னவென கேள்வி எழுந்தது.
“திரும்ப கூப்பிடறேன்…” என்று அழைக்க இப்போது அழைப்பு எடுக்கப்பட்டது.
“ஹலோ வேதா…” என்றதும்,
“நான் தனா பேசறேன் மாமா. எப்படி இருக்கீங்க?…” என்றான் வேதாவின் மகன் தனபாலன்.
“நான் நல்லாயிருக்கேன்ப்பா. அம்மா இல்லையா?…” என்று குரலை சாதாரணமாக வைத்துக்கொண்டு பேச,
“அபிஷியல் கால் வந்தது மாமா. அதான் பேசிட்டிருக்காங்க. எங்க நிகிதா? ரொம்ப நாளாச்சு அந்த வாலுட்ட பேசி. அங்க போனதுல இருந்து வீட்டுக்கும் வரவே இல்லை? ஹைதராபாத் போய்ட்டா எங்களை எல்லாம் மறந்திடனுமா என்ன?…” என கடிந்துகொண்டான் உரிமையாக.
“அப்படியெல்லாம் இல்லைப்பா. எங்க? எங்களுக்கு நேரமே இல்லையே. அதான் வர முடியலை. நிகிக்கு காலேஜ், எனக்கு பவர்க்ரீட்ல வேலைன்னு போய்ட்டிருக்கு…” என்றவர்,
“நிகிம்மா தனா மாமா…” என்று அவர் போனை அவளிடம் நீட்ட, வாங்கியவள் பேசும் முன்,
“மேடம் அவ்வளோ பெரிய மனுஷியாகிட்டீங்க போல? போன் கூட பேச இன்னொருத்தர் சொல்லனும்…” என அவளை அதட்டி கேலி பேச,
“ஏன் நாங்க தான் பேசனுமா? நீங்க பேசுங்களேன்…” என எப்போதும் போல பதிலுக்கு பதில் பேச நினைத்தவளால் அப்படி பேச முடியவில்லை.
“என்னடா நிகி, இன்னும் உடம்பு சரியாகலையா? அம்மா லாஸ்ட்டா உன்னை பார்க்க அங்க வந்திருந்தப்போ உனக்கு முடியலைன்னு சொன்னாங்க. இன்னும் சரியாகலையா? என்ன ப்ராப்ளம்?…” என்றான் தனபாலன்.
“நத்திங் மாமா. டைபாய்ட் தான். ரொம்ப அனீமிக்கா இருக்கேனாம். இம்யூனிட்டி லெவல் வேற ரொம்ப லோவா இருக்கு. அதான் இன்னும் சரியாகலை. சரியாகிடும்…” என்றாள் சோர்வுடன்.
“மாமாவால உன்னை தனியா பார்த்துக்க முடியாதுலடா. பேசாம இங்க வாயேன். கொஞ்ச நாள் இங்க இரு. சரியாகிடும்…” என அவன் கனிவுடன் பேச கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது நிகிதாவிற்கு.
“நிகி அம்மா வந்துட்டாங்க. போனை குடுக்கறேன்…” என்றவன் வேதசௌந்தரி வருவதை கண்டு எழுந்து நின்றான்.
“ம்மா, நிகிதா…” என சொல்ல,
“நான் பேசிக்கறேன் தனா. நீ சங்கீதா ரெடியான்னு போய் பாரு. செக்கப்க்கு நேரமாகுது…” என சொல்லி மகனை அனுப்பி வைத்தார்.
தனபாலனின் மனைவி சங்கீதாவிற்கு எட்டு வருடங்களாக குழந்தை இன்றி இப்போது சிகிச்சையின் முறையில் தான் தாய்மை அடைந்திருக்க அந்த குடும்பமே அவளை கொண்டாடிக்கொண்டிருந்தது.
மகன், மருமகளை அனுப்பி வைத்தவர் நிகிதாவிடம் பேச தனது தனி அறைக்கு வந்துவிட்டார்.
“என்னடா நிகிம்மா, எப்படி இருக்க?…” என்று வேதசௌந்தரி கேட்ட நொடி அப்படி ஒரு அரற்றலுடனான அழுகை நிகிதாவிடம்.
“தேங்க்ஸ் ஆன்ட்டி. தேங்க் யூ ஸோ மச். உண்மையிலையே எனக்கு இப்பத்தான் நிம்மதியா இருக்கு. இப்ப தான் அழுகை வருது. கண்ணீர் வருது. பசிக்குது. என்னோட உடம்புக்கு என்ன பண்ணுதுன்னு என்னால உணர முடியுது…” என சொல்லி சொல்லி அவள் அழ அதனை கேட்கவே முடியவில்லை வேதசௌந்தரிக்கு. கண்கொண்டு பார்க்க முடியவில்லை பெற்றவருக்கு.
வேதசௌந்தரியின் கணவரின் நெருங்கிய நண்பரான வெங்கடேசன் மனைவியை காலனுக்கு பறி கொடுத்து மகள் நிகிதாவுடன் அவளின் நான்கு வயதிலிருந்து தனியே வசித்து வருபவர்.
மகளின் நிலை கண்டு செய்வதறியாமல் யாருக்கு அழைக்கவென தெரியாது தங்களுக்கு இப்போதும் உறுதுணையாக உற்ற துணையாக இருக்கும் நண்பரின் குடும்பத்திற்கு அழைக்க அந்த நேரம் ஹைதராபாத் வந்திருந்த வேதசௌந்தரி நேரில் வந்து நிகிதாவை சந்தித்தார்.
இப்போது வரை அவர்கள் மூவரை தாண்டி இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்படவில்லை.
அதனை வேதசௌந்தரி விரும்பவும் இல்லை. தான் இதனை பார்த்துக்கொள்வதாக சொல்லி இதோ விடுதியின் உண்மை நிலவரம் வெட்டவெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
நிகிதா அழுவதை கேட்டுக்கொண்டிருந்தவர் அமைதியாக இருந்தார். அழட்டும் என்று தான் அவரின் மனம் எடுத்துரைத்தது.
கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் பெண். பாதிப்படைந்த நாளில் இருந்து இன்றுவரை ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கவில்லை. இன்று அத்தனை அழுகை.
“என்னை டாடி அடிச்சு, கண்டிச்சு வளர்த்திருக்கலாம் இல்ல? போக வேண்டாம்ன்னு சொல்லியிருக்கலாம் இல்ல?…” என கேட்டுக்கொண்டே அழுதாள்.
“நீ என்னடா தப்பு பண்ணின நிகி? நீ எதுக்கு அழற? உன்கிட்ட இருந்து எதுவும் போகலை. எல்லாமே உனக்குள்ள, உன் மனசை பொறுத்து தான் இருக்கு. உன் அனுமதியில்லாம நடந்த எதுக்கும் நீ பொறுப்பாக முடியாது. அதே நேரம் உன்னால நிறைய பொண்ணுங்க இப்ப காப்பாத்தப்பட்டிருக்காங்க. நீ நிம்மதியா இருடா…” என்றார் வேதா.
“ம்ஹூம், இன்னொரு விஷயம் சொல்லனும் ஆன்ட்டி. அன்னைக்கு என் ரூம்க்கு வந்தவர் யாருன்னு தெரியலைன்னேன்ல. இன்னைக்கு டிவில காமிக்கிறாங்க…” என்றதும்,