சுட்டெரிக்கும் செங்கதிரோன் நிலவு மகளைக் காணக் காத்துக் கிடந்து தோல்வியுற்றுத் திரும்பிக் கொண்டிருந்த பொன் மாலைப் பொழுதில் அந்த ஜீப்பின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த ஸ்டீரியோ சிஸ்டத்தில்…. வித்யாசகர் இசையில், எஸ்.பி.பி மற்றும் ஜானகியின் தேன் குரலில் கர்ணா படப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க… அந்த கருப்பு வண்ண ரேங்லர் ஜீப் திருநெல்வேலியிலிருந்து பூஞ்சோலை கிராமத்தை நோக்கி விரைவாகச் சென்று கொண்டிருந்தது. அந்த மாலைப் பொழுதின் அமைதியையும், அந்த ஜீப்பை ஓட்டிச் சென்றவனின் தனிமையையும் கலைக்கும் வகையில், அருகில் இருந்த அவனுடைய கைப்பேசி ஒலி எழுப்பியும் கூட, ஜீப்பின் வேகத்தைக் குறைக்காமல் ஒரு கையால் ஜீப்பின் ஸ்டியரிங்கை வளைத்து ஓட்டியவாறே மறுகையால் ஸ்டைலாக தன் கைபேசியை எடுத்து காதில் பொருத்தியவன்… அந்தப்புறம் கூறப்பட்ட செய்தியில் அவன் முகத்தில் சிறிதே கவலை ரேகை படற…
“பத்தே நிமிஷத்துல அங்க இருப்பேன்”
எனக்கூறி கைப்பேசியை கீழே வைக்காமலே தங்கள் குடும்ப மருத்துவருக்கு அழைத்தவன்… செல்லும் வழியில் அவரையும் அழைத்துக் கொண்டு அந்த அரண்மனை போன்ற வீட்டின் முன் தன் ஜீப்பை க்ரீச்சிட்டு நிறுத்தினான்.
ஒரே தாவில் தன் ஜீப்பிலிருந்து குதித்து இறங்கிய யுவராஜ்… பூஞ்சோலை கிராமத்து மக்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய வேலுச்சாமி, நாச்சியம்மை தம்பதியின் மகன் வழிப் பேரன்.
சிதம்பரம், மீனாட்சி தம்பதியரின் இரண்டாவது தவப்புதல்வன்… மூத்தவன் தன்ராஜ்… ஒரு தங்கை ஜானவி.
ஆறடி உயரத்தில் தேக்குமர தேகத்தோடும், தேனின் நிறத்தோடும், சற்றே முறுக்கி விட்ட, அடர்ந்த மீசையோடும், கைகளுக்குக் கிட்டாத வசீகர தாடியோடும் ஒரு அரிமாவின் தோரணையில் வலம் வரும் யுவராஜ்… கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் ஆனாலும் தன் கல்லூரிப் படிப்புகளை எல்லாம்…சென்னையின் மிகப்பெரிய பல்கலையில் தங்கிப் படித்து… விவசாயப் படிப்போடு சேர்த்து இன்னும் ஒரு சில தொழிற் பட்டங்களையும் வாங்கி இருக்கிறான்….
எதிலும் தனித்து விளங்க ஆசை கொண்டவன், அவனுடைய அப்பா அண்ணன் போல் விவசாயத்தை மட்டும் பார்க்காது, அத்தோடு சேர்த்து திருநெல்வேலி மாநகரத்தில் சில தொழிற்சாலைகளைத் தொடங்கி, அண்ணனுடனும் நண்பனுடனும் இணைந்து தங்கள் தோட்டத்திலும், பண்ணையிலும் விளையும் பல இயற்கைப் பொருட்களைக் கொண்டு… எண்ணை வகைகள், பால் உணவுப் பொருட்கள், மற்றும் வாசனைத் திரவியங்கள் என்று பல அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை தமிழக அளவில் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் கூட ஏற்றுமதி செய்து வர… நிறைந்த தரமும், குறைந்த விலையும் என்பதால் அவர்களுடைய ராஜ் தயாரிப்புகளுக்கு பொருட்சந்தையில் நல்ல வரவேற்பே கிட்டி உள்ளது.
அவன் எப்பொழுதும் அணியும் ஃபார்மல் உடையான சாதாரண பேண்ட் சட்டையில் கூட காண்போரை வசீகரிக்கச் செய்யும் யுவராஜ், ஒரு கையால் தலையைக் கோதியவாறு மறு கையால் மிடுக்காக ஜீப்பை ஓட்டி வரும் அழகைப்பார்த்து சாலையில் வருபவர்கள் எல்லாம் கையெடுத்துக் கும்பிடுவார்கள் என்றால்…
அவன் எப்பொழுதாவது அரிதாக அணியும் தமிழர் உடையான வேஷ்டி சட்டையில், மயிரடர்ந்த கெண்டைகால் வெளிப்போந்த வேஷ்டியின் ஒரு முனையை, தங்கக் காப்பு அணிந்த கையால் தூக்கிப் பிடித்தவாறு… அவன் வரப்பில் நடந்து வரும் கவர்ச்சியில் மயங்கி… அங்கே வயல்களில் வேலை செய்யும் பெண்கள் மட்டுமல்லாது, அவர்கள் நடும் நாற்று கூட அவனைத் திரும்பிப் பார்த்துத் தலையசைக்கும்.
தொழிற் போட்டிகளால் அவ்வப்பொழுது அரிமா அவதாரம் எடுப்பவன்… தன்னை நம்பி… உதவி என்று வருவோரை தன் பிரஜைகளின் மேல் மிகுந்த அன்பு கொண்ட ஒரு அரசனின் கருணையோடு தான் நோக்குவான். தங்களுடைய தோட்டத்திலும்,பண்ணையிலும், தொழிற்சாலைகளிலும் என்று அந்த கிராமத்தின் ஏழை எளிய மக்களுக்கு பலநூறு வேலைவாய்ப்புகளை வழங்கி இருப்பவன்… அவர்கள் தங்குவதற்கென்று இலவச வீடுகளும் கட்டிக் கொடுத்திருக்க…
அந்த ஊர் மக்கள் அவன் மேல் தனி பாசமும், மரியாதையும் வைத்திருந்தனர்.
யுவராஜ் உருவத்திலும், தோரணையிலும், கம்பீரத்திலும் மறைந்து போன தன் அப்பாவைக் கொண்டிருப்பதால் அந்த அரண்மனை வீட்டிற்கே பெரியவரான வேலுச்சாமி ஐயாவே தன் பேரனை இராஜய்யா என்று மரியாதையாக அழைத்து வர. அந்த குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் அவன் மேல் சிறிது பயம் கலந்த மரியாதையே வைத்திருந்தனர். வயதில் ஒரு வருடம் மூத்தவன் தன்ராஜாக இருந்தாலும்… திறமையிலும், பொறுப்பிலும், கம்பீரத்திலும், ஆளுமையிலும் அனைவரையும் கட்டிப் போடும் யுவராஜின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சுப் பேச அந்த வீட்டில் யாருக்கும் இதுவரை தைரியம் வந்ததில்லை… தன் கண்ணசைவில் நினைத்ததை நடத்தி முடிக்கும், யாருக்கும் அடங்காத அந்த அரிமா தன் பிடிவாத குணத்தை சற்றே ஒதுக்கி வைப்பது அவன் அப்பத்தாவின் அன்புக்கு முன்னால் மட்டும் தான்.
கைபேசியில் அழைத்த தன் நண்பன் கதிரிடம் கூறியது போல் பத்தே நிமிடத்தில் தன் வீட்டை அடைந்த யுவராஜ் தன் அழுத்தமான வேக எட்டுக்களால் உள்ளே விரைய… அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் மருத்துவர் பின்னே ஓடி வர… அங்கே படுக்கையில் மயங்கியது போல் கிடக்கும் நாச்சியம்மையை நெருங்கியவன், அவர் கையை பற்றிக் கொண்டு பதட்டத்தோடு…
“அப்பத்தா” என்றழைக்க, அவர் கை லேசாக அசையவும் மருத்துவரிடம் “பாருங்க” என்பது போல் கண்ணசைத்தான் யுவா.
அவனோடு வந்த அவர்கள் குடும்ப மருத்துவர் அப்பத்தாவின் அருகில் சென்று அவரை சோதித்துப் பார்த்து “மன அழுத்தம் ஜாஸ்தியானதால கொஞ்சம் பிபி கூடிருக்கு… அதா லேசா நெஞ்சு வலி,வேற ஒன்னுமில்ல அவங்க சில நாளா மாத்தர கூட சரியா எடுத்துக்கலன்னு நெனக்கிறேன்…. உணவு, மருந்து எல்லாம் அவங்களுக்கு கரெக்ட் டயத்துக்கு குடுங்க… அப்றம் அவங்க எதுக்கும் கவல படாம பாத்துக்கங்க” என்று தனக்கு எழுதிக் கொடுத்த வசனத்தை பிழையில்லாமல் கூறிய அந்த மருத்துவர், சில மாத்திரைகளையும் கொடுத்துவிட்டுச் சென்றுவிட…
“இத்தன பேர் இருந்தும் அப்பத்தா மாத்தர போட்டுச்சா இல்லையானு கூட பாக்காம இந்த வீட்டுல எல்லாரும் என்ன பண்றீங்க?”
என்று அப்பத்தாவை சுற்றி நின்றிருந்த அனைவரிடமும் கடிந்து கொண்ட யுவா, தன் தங்கையை நோக்கி..
“ஜானு தண்ணி கொண்டுவா!” என்று பணிக்க… அவன் மிரட்டலில் அரண்டு போயிருந்தவள் வேகமாக ஓடிச்சென்று தண்ணீர் கொண்டு வர அதை வாங்கியவன் அப்பத்தாவை எழுப்பி அமர வைத்து அவரிடம் மாத்திரையை நீட்ட… அவரோ அதை வாங்காமல் “ராசா” என்று தன் பேரன் கையைப் பற்றிக்கொண்டவர்…
“இன்னக்கி நீ மாத்தற குடுப்ப, இன்னும் ரெண்டு நாளுக்கப்றோம் யார் குடுப்பா ராசா, நீ தா என்னா ஊரு அது கந்தாவா? ஏ கதிரு?” என்று கதிரிடம் கேட்க…
அவனோ வேகமாக முன்னே வந்து “கனடா அப்பத்தா” எனவும்….
“ஆ அதுதே அங்க போயிருவ அப்றம் இந்தக் கெழவி இருந்தா என்ன, செத்தா என்ன… யப்பா முருகா ஞானபண்டிதா… என் உசுர எடுத்துக்கறதா இருந்தா என் பேரேன் கனடா போறதுக்குள்ள எடுத்துக்க என் உசிரு ராஜய்யா மடிலயே போகட்டும்” என்று அண்ணாந்து பார்த்துக் கூறிய நாச்சியோ….
தன் கண்ணில் வராத கண்ணீரை துடைத்தபடி குடும்பத்தினரைப் பார்க்க… அங்கே பெரியவர்கள் அனைவரும் முகத்தில் பதட்டத்தைப் பூசி இருக்க… சிறியவர்கள் தங்கள் வாயை கரத்தால் மூடி சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்தனர்… ஒருத்தியைத் தவிர.
அப்பத்தாவின் புலம்பலைக் கேட்டிருந்த யுவா… “ஏ அப்பத்தா இப்டிலாம் பேசுற, இப்ப என்ன நா கனடா போகக் கூடாது அவ்ளோ தான… சரி நா போகல இனியாச்சும் ஒழுங்கா மாத்தறய சாப்புடு” என்க.
அப்பொழுதும் மறுத்தவர்… அங்கே பதட்டத்தோடு நின்றிருந்த யுவாவின் மாமன் மகள் மலர்விழியை அழைத்து “சீக்கிரம் உங்க கல்யாணத்த பாக்கணும் ராசா” எனக்கூறவும்…
அவர் கையை மெல்ல உதறியவன்…
“என்ன அப்பத்தா வளாடுறியா.?, என் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம், ஜானுக்கு நல்ல மாப்ளயா பாத்து அவ கல்யாணத்த மொதோ முடிச்சுட்டு அப்றந்தே என் கல்யாணத்த பத்தி யோசிக்கணும். இப்ப நீ மாத்தறய முழுங்கு அப்பத்தா” என்றவன் ‘இது உன் வேலையா.?’ என்பது போல் மலர்விழியை பார்வையாலே எரிக்க… அவள் தலை அவளையும் அறியாமல் இடம் வலமாக அசைந்தது.
நாச்சியோ, “அவள ஏ ராசா மொறக்கிற… பெரியவே கல்யாணத்தோடவே உங்க கல்யாணத்தயும் முடிச்சார்லாண்டு கேட்டோம் ஆனா நீதே வேணான்ட்ட இப்ப அவேன் கல்யாணமும் முடிஞ்சு ஒரு வருசமாகப்போகுது… இப்பயும் தங்கச்சிக்கு கல்யாணம் முடிச்சுட்டு நா பண்ணிக்கிறீங்கற ஆனா அவ படிக்கிறீ, படிக்கிறீன்னு கல்யாணத்த தள்ளி போட்டுகிட்டே போறா… என் உடம்பு முன்ன மாரி இல்ல ராசா எங்க உன் கல்யாணத்த பார்க்காமயே போயிருவண்டு எனக்கு ரொம்ப பயமா இருக்குய்யா” என்ற நாச்சியம்மை வராத இருமலை வம்படியாக வரவைத்து இருமியவாறு கூறவும்…
அதுவரை பாட்டியையும் பேரனையும் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்த யுவாவின் அம்மா அப்பா மற்றும் தாத்தா மூவரும் சேர்ந்து “அம்மா, அத்த, நாச்சி” என்று பதட்டத்தோடு அருகில் வர “அப்பத்தா” என்று கூவிய யுவராஜோ, “உனக்கு ஒன்னும் ஆகாது அப்பத்தா என் புள்ளக கல்யாணம் கூட உன் தலைமையிலதே நடக்கும் சரியா!” என்றவன்.
“சரி கல்யாணத்துக்கு நாள் குறிங்க” எனக் கூறியதுதான் தாமதம் போல் “நாளைக்கே நாள் நல்லா இருக்குப்பு” என்று அவனின் அப்பத்தா வேகமாக உரைத்தார்….
நாட்களை தள்ளிப் போட்டு பேரன் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டால் இந்த வயசான காலத்தில் அவரால் அடிக்கடி நடிக்க முடியுமா? என்ன.
“நாளைக்கேவா ஏன் அப்பத்தா இவ்ளோ அவசரம் கல்யாண வேலைலாம் பார்க்க வேணாமா?” என்ற யுவா அதிர…
“அதுக்குத்தே இந்த தடிப்பசங்க இருக்காங்கல்ல எல்லாம் அவிங்க பாத்துக்குவாய்ங்க” என்ற நாச்சியோ அங்கு நின்றிருந்த யுவாவின் அண்ணன் தனாவையும், யுவாவின் நண்பன் கதிரையும் கை காட்ட…
“சும்மா சொல்லக்கூடாது ஜானு அப்பத்தாக்கு வாய் மட்டும் இல்ல, மூளையும் ஜாஸ்தியாவே இருக்குடி கேமரா இல்ல, டைரக்டர் இல்ல, யாரும் ஆக்சன் சொல்லல, பத்தே நிமிஷ நடிப்புல… அடங்காத காளைய அடக்கி கனடா ட்ரிப்ப
“நம்ம தடிப்பசங்கலாம், தாய்க் கெழவிக்கு கொழுப்பப் பாத்தியாடா” என்று கதிரின் காதைக் கடித்த தனா… தன் தம்பியை நோக்கி வந்தவன்…
“அதெல்லாம் ஜமாய்ச்சர்லாம் யுவா, நீ சரின்னு மட்டும் ஒரு வார்த்த சொல்லு” என்று தம்பியின் தோளில் தட்ட…. அங்கிருந்த அனைவரும் அப்பத்தாவின் கண்ணடிப்பில் ஆமாம் சாமி போட்டனர்…
குடும்பத்தினர் அனைவரையும் ஒரு கூர் பார்வை பார்த்த யுவராஜ் “எல்லாரும் ஒன்னு கூடிட்டீங்க இனி நா சொல்ல என்ன இருக்கு, நடத்துங்க” எனக்கூறிவிட்டு மலர்விழியைத் தாண்டிச் சென்றவனோ…
அவள் விழியின் ஒளிர்வைக் கண்டு பல்லைக் கடித்தவாறு அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் “ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதடி இனிமே தான்டி உனக்கு இருக்கு!” என்று கர்ஜித்துச் சென்றான் அவளின் மாமன் யுவராஜ்.