மலர்விழியின் ஐந்தாம் வயதில், மனைவி இறந்தப் பின்னர் மறுமணம் கூடப் புரிந்து கொல்லாமல் தன் இரு மகள்களுக்காகவே வாழ்ந்து, மூன்று வருடங்களுக்கு முன்னர் தன் தங்கை கையில் அவர்களை மருமகள்களாய் ஒப்படைத்து, மாரடைப்பால் இயற்கை எய்தி… இறந்து போன மனைவியோடு போய் சேர்ந்து கொண்ட யுவாவின் தாய்மாமாவும் மலர்விழியின் அப்பாவுமான கணபதிக்கு மட்டுமல்லாது, இங்கு தன் வீட்டிலும், அனைவருக்கும் மிகவும் செல்லப் பிள்ளையாகவே, தனக்கு நிகரான சொகுசோடு வளர்ந்து வந்தவள், ஒரு நாள் கூட தரையில் படுத்து அறியாதவள், தன்னால் தரையில் புரண்டு கொண்டிருக்கும் மலர்விழியைப் பார்க்க முடியாது, நேற்றிரவே அவளுக்காக புதுக் கட்டில் வாங்க முடிவு செய்திருந்த யுவா….
திருமணம் முடிந்த பின்னர் அவளுக்கென்று வாங்க இருக்கும் முதல் முதல் பொருளாதாதால் அவனே கடைக்கு வந்து எப்படியான கட்டில் வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றிருக்க… புதுமை விரும்பியும் ரசனையாளனுமாகிய யுவாவின் கற்பனைப்படியே அந்த தேக்குக் கட்டிலின் முகப்புப் பகுதியில் சில பல மலர் கூட்டத்திற்கு நடுவே அவனுடைய பெயரின் முதல் எழுத்தும் மலர்விழி என்ற பெயரின் முதல் எழுத்தும் பிணைந்திருப்பது போல் மிக அருமையாக செதுக்கப் பட்டிருந்த அந்தக் கட்டிலை பார்த்த யுவாவின் முகத்திலோ அத்துணை மகிழ்ச்சி.
“நா சொன்னது போலவே ரொம்ப அழகா செஞ்சிருக்கீக” என்று அந்தக் கடையின் உரிமையாளரிடம் கூறிய யுவா சிறு வயதிலிருந்து தன் மாமன் மகள் மலர்விழிக்கு எத்தனையோ பரிசுகளை வாங்கி கொடுத்து இருக்கிறான் தான், சென்னையில் படித்து கொண்டிருக்கும் காலத்தில் கூட விடுமுறைக்கு வரும் பொழுதுகளில் என்னென்னவோ அவளுக்கு வாங்கி வந்து தந்திருக்கிறான் தான், ஆனால் அப்பொழுதெல்லாம் அவனுள் தோன்றாத ஒரு பரவசத்தோடு இன்று அவள் தன்னுடைய மனைவி என்ற உரிமையில் தான் அவளுடைய கணவன் என்ற எண்ணம் மேலோங்க அவளுக்கென்று செய்யச்சொன்ன அந்தக் கட்டிலை மெல்லத் தடவியவனைப் பார்த்து…
“என்ன பையனோட நடவடிக்கை ஒன்னும் இன்னிக்கு சரியில்லையே, ஏதோ மந்திருச்சு விட்டப் போலவே இருக்கேன்”
என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்ட கதிருக்கு மட்டுமல்ல… யுவாவின் குடும்பத்தார் அனைவருக்குமே அவர்கள் இருவருக்கும் இடையில் இவ்வளவு நாளாக ஏதோ ஊடல் என்று தெரியாமல் இல்லை, ஆனால் திருமணம் முடிந்த பிறகு அதெல்லாம் சரியாகி விட்டது என்றே யுவாவின் அப்பத்தாவைத் தவிர அனைவரும் நினைத்திருக்க… ஆனால் பேரனைப் பற்றி நன்கு அறிந்த நாச்சியம்மைக்குக் கூட தன் பேரன் அவன் மனைவியிடம் இப்படி ஒரு விபரீத நிபந்தனை விதித்திருப்பது தெரியாமல் தான் போனது அவர்கள் விதியின் சதியே.
மலர்விழி இப்பொழுது தன் மனைவி என்கின்ற பரவசத்தின் உந்துதலால் மட்டுமே அவளுக்காக இப்படி ஒரு கட்டிலை செய்யச்சொல்லி உத்தரவிட்டவனோ, அவளிடம் அந்த “மனைவி என்கிற உரிமை இல்லாதுதான் தங்கள் முதல் இணைவு” என்ற நிபந்தனையும் இட்டிருப்பவன் , பிடிவாதமாக அதை நிறைவேற்றவும் துடித்திருப்பது விந்தையிலும் விந்தைதான்…
தன் கற்பனைப் படியே உருவாகியிருந்த அந்தக் கட்டிலில் மலர் கூட்டத்திற்கு மத்தியில் செதுக்கப்பட்டிருந்த மலர்விழி என்ற பெயரின் முதல் எழுத்தையே மலர்விழியின் கன்னத்தை வருடுவது போல் மிக மென்மையாக வருடிக் கொண்டிருந்த யுவாவின் தோளைத் தடவிய கதிரோ….
“மாப்ள உன் ரூம்லத்தேன் அந்த காலத்துல செஞ்ச அருமையான சந்தனமரக் கட்டிலே இருக்கேடா அப்புறம் எதுக்குடா இப்ப இது.?” என்று கேட்டவன்….
“என்ன மாப்ள ஓவர் பர்பாமன்ஸ் பண்ணி அந்தக் கட்டில ஒடச்சிட்டியா.?” என்றும் கிசுகிசுத்துக் கண்ணடிக்க…
யுவாவோ, ‘இங்க ஒரு ரிகர்சலுக்கே வழியில்ல, அப்றம் எங்கிட்டு பர்ப்பாமன்ஸ் பண்றது’ என்றென்ணி கதிரைப் பார்த்து பல்லைக் கடித்தவன்…
“டேய்… எங்க ரெண்டு பேருக்கும் அந்த ஒரு கட்டில் போதலைடா” என்று அசட்டையாகக் கூறியவனை அதிர்ச்சியாகப் பார்த்த கதிரோ…
‘அந்தக் காலத்து கிங் சைஸ் கட்டிலு ரெண்டு பேத்துக்கு போதலியா.? இது என்னடா புதுசா இருக்கு, அவ்ளோ பெரிய கட்டிலே பத்தாத அளவுக்கு அப்டி என்ன செய்வாய்ங்க’ என்று தாறுமாறாக ஓடிய அவனின் சிந்தனையை ‘டேய் 90 ஸ் கிட் உனக்கு இந்த ஆராய்ச்சியெல்லாம் தேவையா.? நீலாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட கம்முனு கிட’ என்று ஜானுவின் குரல் அடக்கி வைக்க…
அவனும் “அது சரி… என்னவா இருந்தா நமக்கென்ன, நமக்கு இருக்கவே இருக்கு கைத்துக் கட்டில்” என்று சொல்லிக் கொண்ட கதிரோ, பழசை மறந்து விடக் கூடாதென்ற உறுதி கொண்டவன் வாலிபம் அடைந்த நாளிலிருந்தே யுவா என்ன சொல்லியும் கேளாமல், தனி வீடு எடுத்தே தங்கிக் கொண்டு எளிமையாகவே வாழ்ந்து வருபவன், தினமும் உறங்குவது என்னவோ அவன் கூறியது போலவே கயிற்றுக் கட்டிலில் தான்.
தன் வீட்டின் முன்னே ஜீப்பை க்ரீச்சிட்டு நிறுத்திய யுவா தன் பின்னோடே கட்டிலைச் சுமந்து வந்த கடை ஆட்களிடம் “மேல கொண்டு வாங்க” எனக் கூறிவிட்டு மாடியேற, அதைப் பார்த்திருந்த யுவாவின் குடும்பத்தினருக்கும் கூட கதிருக்குத் தோன்றியது போலவே உள்ளூற கேள்விகள் தோன்றினாலும் அதை யுவாவிடம் கேட்கும் தைரியம் என்னவோ யாருக்கும் இருக்கவில்லை,
அந்த தைரியம் இருக்கப் பெற்ற நாச்சியோ…”புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேத்துக்கு எதுக்கு ரெண்டு கட்டில்?, இந்த ராஜய்யா செய்றது ஒண்ணும் சரியில்லையே” என்ற குழப்பத்தில் இருந்தார் அல்லவா…
யுவாவைத் தொடர்ந்து தங்கள் அறைக்குள் நுழைந்த மலர்விழியோ அவள் தினமும் பாய்விரித்துப் படுக்கும் இடத்தில் போடப் பட்டிருந்த அந்த தேக்கு மரக்கட்டிலைக் கண்டவள்…
யுவாவை நோக்கி “மாமா இந்தக் கட்டில் யாருக்கு மாமா.?” என்று ஆவலாக வினவியவளிடம்…
“உனக்குத்தே” எனக் கூறியவன் மேல்சட்டையை கழற்றி கொண்டியில் மாட்டி விட்டுத் திரும்பியவனின் கரத்தை ஓடி வந்து பற்றிக் கொண்டவளோ…
“நெசமாவாவே எனக்காகத்தே வாங்குனீகளா மாமா.?” என்று மீண்டும் விழி விரித்து வினவியவளின் விழிகளுக்குள் தொலைந்து போகத் துடித்தவன், கையை இறுக்க மூடித் திறந்து…
“ம்ம்ம் ஆமா உனக்காகத்தேன்” என்று புன்னகை முகமாகவே கூறியவன்,
அவன் செய்யச் சொல்லியிருந்த வேலைப்பாடைக் காட்டி “நல்லாயிருக்கா விழி.?” என்று வினவ…
அவனை சிறிதும் கவனியாத மலரோ, யுவாவின் இன்னொரு கரத்தையும் பற்றிக் கொண்டு…
“ரொம்பத் தாங்க்ஸ் மாமா, ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால்ல தெனக்கும் எப்டி தரைலயே படுக்குறதுன்னு நானே கவலையோட இருந்தேன். இனிமே தெனமும் நைட்டு நிம்மதியா தூங்குவேன்” என்று அவன் கட்டிலில் சுட்டிக்காட்டிய இடத்தைக் கூடக் கவனியாத மலர்விழி, அவள் பாட்டில் பேசிக் கொண்டே செல்ல….
அதைக் கேட்டிருந்த யுவாவுக்கோ சிறிது சிறிதாக ஆத்திரம் உச்சிக்கு ஏறியது.
மலர்விழியின் கைப்பற்றுதலில் தன் வசம் இழக்கத் தொடங்கியிருந்தவன் “இனிமே தெனமும் நைட்டு நிம்மதியா தூங்குவேன்” என்றவளின் இறுதி வார்த்தையில் சட்டென்று முகம் கருத்தவனாய் ‘தெனமும் நைட்டு என்னய தூங்க விடாமப் பண்ணிட்டு அவ சந்தோசமா தூங்குவீங்கராளே எவ்ளோ திமிரு இவளுக்கு’ என்று பல்லைக் கடித்தவனை….
‘கல்யாணம் முடிஞ்ச அன்னக்கி அவ்ளோ பெருசா அவள்ட சவால்லா விட்டுட்டு, இப்ப கொஞ்சம் கூட ரோசமில்லாம அவ தனியா படுக்குறதுக்கு கட்டில வாங்கிட்டு வந்துருக்கியே, உன்ன மாறி ஒரு இளிச்சவாயன் கெடச்சா அவளுக்கு ஏன் திமிரு இருக்காது’ என்று அவன் மனசாட்சியே அவனை எள்ளி நகையாடியதில், சற்று முன்னர் இருந்த இலகு மனநிலை முற்றிலும் மாற்றப்பட்டவனோ…
தன் கையைப் பற்றி நின்றிருந்தவளை சுழற்றிக் கொண்டு போய் அங்கிருந்த சுவற்றில் சாற்றிய யுவா “என்னடி திமிரா ஏதோ மாமன் மகளா போய்ட்டியேன்னு நானும் உன்கிட்ட ரொம்பப் பொறுமையா இருக்கேன், நீ என் பொறுமைய அளவுக்கு மீறி சோதிக்கிற மலர், உன்னால தெனமும் நா தூக்கம் வராம அவஸ்தப் படுறேன், ஆனா நீ நிம்மதியாத் தூங்குவியா.?” என்று அவள் இருபக்கக் கன்னக் கதுப்பையும் தன் ஒற்றைக் கையால் அழுந்தப் பற்றியவனின் திடீர் செய்கையில் ஒரு நிமிடம் அதிர்ந்த மலரோ…
அவள் பேச்சில் மேலும் மேலும் சினம் கூடியவனோ, “என் பிரச்சனையே நீ தேண்டி, அப்போ என்ன பொறுக்கின்னு சொல்லி அடிச்சு அவமானப் படுத்துன, இப்ப நா சொன்னத செய்ய மாட்டின்னு என் கூட மல்லுக்கு நிக்குற, சரி பாக்க சின்ன புள்ளையா இருக்கியே கொஞ்சம் விட்டுப் புடிக்கலாம்னு நா பாட்டுக்கு செவனேன்னு இருந்தா அப்பத்தாகூட சேந்துகிட்டு கோவிலு, தோப்புன்னு என்னய நல்லா உசுப்பேத்தி விடுற.?” என்று சீறியவன்…
“இனிமேலயும் என்னால பொறுமையா இருக்க முடியாது, கடைசி கடைசியா உனக்கு ஒரே ஒரு சான்ஸ் தர்றேன், இன்னைலருந்து சரியா முப்பது நாள் உனக்கு டைம், அந்த முப்பது நாளுக்குள்ள நா சொன்னத நீ செய்யலின்னா முப்பத்தி ஓராவது நாள்” என்று சீற்றக் குரலில் நிறுத்திய யுவாவின் விழிகளில் தெரிந்த தகிப்பில் எச்சில் விழுங்கிய பெண்ணவளோ…
சற்றே உள்ளே போன குரலில் “செய்யலின்னா.?” எனக் கேட்க, மலரின் படபடப்பை ரசித்தவாறே…
அவன் கூறப் போகும் வார்த்தையின் வீரியம் புரியாத ஆணவனோ
“டி..வோ..ர்…ஸ்” என்று ஒவ்வொரு வார்த்தையாய் அழுங்காமல் உச்சரித்தான் யுவா.
மலர்விழி என்னதான் பள்ளிப் படிப்பைக் கூட முடித்திராதவள் ஆனாலும் டிவோர்ஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் அவளுக்குப் புரிந்தே இருக்க, அந்த வார்த்தையில் இருந்த செய்தியும், அதை தன் மாமன் வாயால் கேட்டதும் மலர்விழிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத்தான் கொடுக்க…
“விவாகரத்தா” என்று அவளறியாமல் அவள் வாய் உச்சரித்து, அன்னிச்சையாக அவள் கரங்கள் தன் கழுத்தில் கிடந்த தாலியைத்தான் இறுகப் பற்றியது.
“ஆமா விவாகரத்தேதேன், இன்னம் ஒரு மாசத்துல நா சொன்ன கண்டிஷனோட நம்ம முதலிரவு இங்க நடக்கலன்னா அடுத்து ஒரு நாள் கூட தாமதிக்காம, உடனே உன்ன விவாகரத்துப் பண்ணிட்டு, உன்ன விட அழகா, உன்ன விட கலரா, ஏன் ஒரு வெள்ளக்காரப் பொண்ணாக் கூட பாத்துக் கல்யாணம் கட்டிக்குவேன், இல்லயில்ல இப்போலாம் கல்யாணம் கூடத் தேவையே இல்ல, பேஸ்புக் பேஜ்ல, என்னோட போட்டோவ பாத்துட்டே எத்தன பொண்ணுக என்ன லவ் பண்ணுதுக தெரியுமா.? அதுல ஒரு பொண்ணக்கூட கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்துவீன்” என்று தன் கைபேசியை எடுத்துக் காட்டி கொஞ்சம் திமிர் கலந்த குரலிலேயே கூறியவனை ஒரு நொடி வெறித்துப் பார்த்தவளோ…
“இல்ல மாமா நீங்க சும்மா சொல்றீக, நீங்க ரொம்ப நல்லவரு, அப்டிலாம் எந்தத் தப்பும் பண்ணமாட்டீக” என்று சற்றே தைரியத்தை வரவழைத்துக் கூறினாள் பெண்.
மலர்விழியின் கூற்றில் அவளைப் பார்த்து நக்கல் புன்னகையை உதிர்த்தவன்…
‘அந்த தைரியத்துல தானடி நா சொன்னத செய்யமாட்ற’ என்று உள்ளூறக் கறுவியவன்,
“அஹான்… நா நல்லவனா, அப்டின்னு யாரு சொன்னா உனக்கு.? நா ரொம்ப ரொம்ப மோசமானவென், நா நெனச்சது நடக்கலன்னா என்ன வேணா செய்வேன்” என்று தான் கூறிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் நாளை தனக்கெதிராகவே திரும்பப் போவதை அறியாமல், அவள் காதுக்குள் கர்ஜித்தவனைக் கண்டு மலங்க மலங்க விழித்தவள்…
“மாமா வேணாம் மாமா, விவாகரத்துங்கற வார்த்தைலா ரொம்ப தப்பான வார்த்த மாமா, நீங்க அப்டிலாம் சொல்லாதீக, என் செல்ல மாமால்ல, கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாத்தீகன்னா நீங்க போட்ட நிபந்தன எவ்ளோ தப்புன்னு உங்களுக்கே புரியும்” என்று கெஞ்சலும், கொஞ்சலுமாய் பேசினாள் மலர்விழி.
தன் கரங்களிரண்டும் யுவாவின் கரத்தில் சிக்கி இருந்ததில், கெஞ்சலும் கொஞ்சலுமாய் பேசியவள் அவனை சமாதானப் படுத்தும் நோக்கத்தோடு, எக்கி அவன் முரட்டுக் கன்னத்தில் தன் மென்னிதழை ஒற்றி எடுக்க, அவளின் செய்கையிலே ‘கணவன் சொல்வது மெய்யா பொய்யா’ என்றறியா பெண்ணவளின் கலக்கம் அப்பட்டமாக வெளிப்பட, அதைப்பார்த்து….
“இதப்பார்றி இந்த முத்தம் கொடுக்கற வேலையெல்லாம் இங்க வேணாம், நானே உன்ன விவாகரத்துப் பண்ணிட்டு எந்த நாட்டுல பொண்ணப் பாக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன் இப்ப வந்து முத்தம் கொடுத்தா மயங்கிருவனா நானு, மொதல்ல என்னய விட்டுத் தள்ளிப்போடி” என்று வேண்டுமென்றே அவளை தள்ளி விடுபவன் போல் பாவனை செய்தவனின் பேச்சில் மேலும் பீதியாகிய மலரோ,
“நா ஏன் போணும்? நா போ மாட்டேன்” என்று அளவுக்கதிகமாகவே அவனை நெருங்கி ஒட்டிக் கொண்டாள்.
கணவனின் உடலோடு உடை போல் ஒட்டி நின்றவள், “என் செல்ல யுவித்தால்ல, உங்க மொசக்குட்டிய போய் விவாகரத்து பண்ணுவேன்னு சொல்லலாமா நீங்க.?” என்று மேலும் மேலும் ஐஸ்க்ரீமாய்க் குழைந்தவளுக்கு, கணவனின் இந்த அதிரடிப் பேச்சுக்கு எப்படி எதிர்வினை காட்டுவதென்று கூட புரியாமல் தான் இருக்க…
“ப்ளீஸ்த்தான் என்னய தாலிய மட்டும் கழட்ட சொல்லாதீகத்தான்” என்று அவனின் அடுத்த கன்னத்திலும் தன் இதழ் வடிவை அச்சாரம் செய்தவள் இப்பொழுது மொத்தமாக யுவாவின் ஆளுகைக்குள் தான் வந்திருந்தாள்.
என்று மீண்டும் மீண்டும் அவளைத் “தள்ளிப்போ தள்ளிப்போ” என்றே அவளிடம் பல கன்னத்து முத்தங்களை வாங்கிக் கொண்டவனுக்கு, மனைவியுடனான இத்துணை நெருக்கத்தில் அவள் இதழ் தேனை கொய்யவும் பேராவல் கிளம்ப, அதற்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த விரும்பாதவன்.
எங்கே கணவன் தன்னை இன்றே விவாகரத்துச் செய்து விடுவானோ என்று பயந்தவள் போல், கணவனின் பரந்த மார்புக்குள் பதுங்கி இருந்தவளின் குறுகிய இடையை வளைத்துத் தூக்கி, தன் இதழ் நோக்கி அவளிதழை நகர்த்தியவன், அவள் மனக் குழப்பம் எல்லாம் மாயமாகும் வண்ணம், தன் வன்னிதழ்கள் கொண்டு பாவையவளின் பொன் இதழ்களை மூடியவன், தன் இத்துணை நாள் காதலையும், மோகத்தையும், ஏக்கத்தையும், ஏன் கோபத்தையும் கூட அந்த ஒற்றை முத்தத்தில் தான் புதைத்து விடவே எண்ணினானோ…???
மலரை மயக்கி (மடக்கி) ஆள புதிதான வழி கிட்டிய மகிழ்ச்சியில், இனியும் தன் உணர்வுகளை அடக்க விரும்பாதவன் போல் தங்கள் இருவரின் இதழ்களையும் அர்த்தநாரியாய்ப் பிண்ணிப் பிணைய விட்டவனோ பாவையவளின் பஞ்சன்ன இதழ்கள் சிவக்கும் வரை, அவளின் கரு வண்டு விழிகளும் கிறங்கும் வரை, மலரின் வாழைத்தண்டு பாதங்கள் கூட துவலும் வரை, தங்களின் செவ்வதரங்களுக்குள் இருந்த உமிழ் நீரும் கூட வற்றும் வரை முடிவே இல்லாத முத்தச்சுவைக்குள் மூழ்கத் தொடங்கியவனை, அவனின் கைபேசி சத்தம் கலைத்து எழுப்பியதில் மனைவியை விட்டு விலகிய யுவா…
தன் முதல் இதழ் கொய்தலைத் தாளாமல் செடியில் கொய்த மலரைப் போல தரையில் கிறங்கி வீழப் போனவளைத் தாங்கிப் பிடித்து அமர வைத்தவன், அவளின் எதிர்பார்ப்பில் தோய்ந்த ஏக்க விழிகளைச் சந்திக்க விரும்பாமல்…
“நாளையிலிருந்து நம்ம டிவோர்ஸ் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகுது” என்று மட்டும் கூறி, அறையை விட்டு வெளியேற…
அந்த ஈகோ ஈன்றெடுத்தவனின் இரக்கமில்லா வார்த்தையிலே செம்பனியாய் உறைந்து நின்றாள் அவனின் மலரினும் மெல்லிய மலர்விழியாள்.
திடீரென்ற கணவனின் முத்த யுத்தத்தில் தொய்ந்து சரிந்த மலர்விழி ஒரு நாள் ஒரு பொழுதே யுவா கட்டிய தாலியை கழட்ட விழையாது, அவன் நிபந்தனைக்கு சம்மதிக்காது அவனோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருப்பவள், யுவா கூறிச்சென்ற “விவாகரத்து” என்ற வார்த்தையில் மிகுந்த கலக்கத்திற்குத்தான் உள்ளானவளோ.
“கடவுளே… மாமா ஏன் இவ்ளோ புடிவாதம் புடிக்காக, எவ்ளோ ஈஸியா விவாகரத்து பண்ணிருவேன்னு சொல்றாக, அப்டி அவுக சொன்னத செய்யலின்னா உண்மையிலயே என்ன விவாகரத்து பண்ணிட்டு, வேற பொண்ணு கூட” என்று அதற்கு மேல் அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியாமல், அவள் விழிகளில் அவளறியாமல் கண்ணீர் வழிந்தோட, அப்பொழுதும் கூட அவன் கூறிய நிபந்தனைக்கு சம்மதிக்க முடியாமல் தான் தவித்துப் போனாள் பெண்ணவள்.
“நா என்ன செய்வேன் கடவுளே.? மாமாக்கு ஏன் புத்தி இப்டி போகுது, மாமாக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிருச்சுனு இவ்ளோ நாளா நிம்மதியா இருந்தனே, அவக செய்ய சொல்றத என்னால செய்ய முடிலயே, ஏன் என்ன இப்டி சோதிக்கிற மாரியாத்தா, முப்பது நாள் கழிச்சு மாமா என்னய விவாகரத்துப் பண்ணிட்டா அவகள விட்டு நானும், என்ன விட்டு அவுகளும் எப்டி பிரிஞ்சிருப்போம்’ என்று கணவனுக்குமாய்ச் சேர்த்து கவலைப்பட்டவளுக்கு, அந்த நிமிடம் பெருத்த சந்தேகம் ஒன்றும் தோன்ற…
“விவாகரத்து பண்ணப்போற பொண்டாட்டிக்கு யாராவது உதடே வலிக்கிற அளவுக்கு இப்டி முத்தம் கொடுப்பாகளா.?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவள், வேகமாக எழுந்து போய் நிலைக் கண்ணாடியில் தன் உதட்டைத்தான் பார்த்தாள் மலர்விழி.
இத்துணை நேரம் யுவாவின் வல்லிய அதரங்களில் சிக்கியிருந்த மலரின் மென் அதரங்களோ அவன் இதழ் செய்த மாயத்தில் சற்றே தடித்து, கோவைப் பழமாய்ச் சிவந்திருக்க… அதை தன் விரல் கொண்டு மெல்ல வருடியவளுக்கு, அவள் உடல் முழுதும் இனபமா துன்பமா என்று இனம் விளங்கா நடுக்க நிலைதான்.
திருமணம் முடிந்தும் தன்னை விட்டு விலகியே இருந்த கணவனின் முதல் முதல் இதழ் ஒற்றலின் ஆழம் பெண்ணவளுக்கு பாரிய மகிழ்ச்சியை கொடுத்தது என்றால், அவன் கூறிச்சென்ற விவாகரத்து என்ற வார்த்தையோ மலர்விழிக்கு மாபெரும் கலகத்தைத் தான் கொடுத்திருக்க, அடுத்து வந்த நாட்களில் ஒருவித குழப்பத்தோடும், கலக்கத்தோடும் தான் பெண்ணவளும் வளைய வர…
இத்துணை நாட்களாகத் தன்னைக் கண்டு கொள்ளாது ஏங்க வைத்தவளை, “விவாகரத்து, வேற பொண்ணு கூட வாழ்க்கை” என்ற அதே வார்த்தைகளைச் சொல்லி சொல்லியே இப்பொழுது தான் கலங்க வைத்துக் கொண்டிருக்கும் யுவா…
தன் வார்த்தைகள் உருவம் பெற்று விமானத்தில் பறந்து வந்து கொண்டிருப்பதை அறிந்திருக்கவில்லையோ…???