மலை அன்னையின் மடியில் துயில் கொண்டிருந்த வெய்யோனின் வரவை, எதிர்பார்த்து பறவை இனங்கள் யாவும் இனிய ராகம் இசைக்கத் தொடங்கிய விடிகாலைப் பொழுதில், அந்த அரண்மனை வீட்டின் முன்னால் தெருவை அடைத்துப் போடப்பட்டிருந்த இரண்டாள் உயரப் பந்தலும், அதில் சொருகியிருந்த நொச்சி இலைகளும், அதனோடு தொங்க விடப்பட்டிருந்த பப்ளிமாஸ் எனப்படும் ஒரு வகை பழமும், அந்த பந்தல் முழுக்க ஒட்டப் பட்டிருந்த பல வண்ணக் காகிதங்களும், அந்த வீட்டின் முன் வாசலின் இரு புறமும் கட்டப்பட்டிருந்த குலை தள்ளிய வாழை மரங்களும், வீட்டின் உள்ளே இருந்து ஒலித்த மேள தாள இசைகளும், இன்னும் பல தரப்பட்ட குரல்களும், என்று அந்த ரம்யமான சூழ்நிலையே அவ்வரண்மனை வீட்டில் ஒரு திருமணம் நடக்கவிருப்பதை தவறாமல் எடுத்துரைக்க….
அந்த வீட்டின் நடுக்கூடத்தில் உறவினர்கள் சூழ… பட்டு வேஷ்டி சட்டையில் மணமகன் கோலத்தில்… மணமகனுக்கே உரிய மகிழ்ச்சி முகத்தில் சிறிதும் இல்லாமல் அழுத்தமான மோவாயுடனும் இறுக்க மூடிய இதழுடனும்… ஹோம குண்டத்தின் முன்னால் கம்பீரமாக அமர்ந்திருந்தான் யுவராஜ்.
“கெட்டிமேளம்,கெட்டிமேளம்…
மாங்கல்ய தானம் பண்ணுங்கோ”
என்ற ஐயரின் கூற்றில் நிமிர்ந்த யுவா, அவர் தந்த மாங்கல்யத்தைக் கைகளில் வாங்கி… அருகில் தரை நோக்கும் தாமரையாய், மணப்பெண்ணுக்குரிய அத்தனை அம்சங்களும் ஒருங்கே பெற்று… அமைதியான அழகுடனும் நாணத்திற்கு பதிலாய் கலக்கம் சுமந்த வதனத்துடன் அமர்த்திருந்த மலர்விழியின் சங்குக் கழுத்தில் கட்டப்போனவன் ஒரு நிமிடம் தயங்கி, அவள் முகம் பார்க்க… தன் மாமனின் பார்வையில் இருப்பது கோபமா, வெறுப்பா, குற்றச்சாட்டா அல்லது மகிழ்ச்சியா என்ற இனம் புரியாத மலர்விழி… அந்த விழிகளின் கூர்மை தாங்காது தலை தாழ்ந்து கொள்ள…. அவளைப் பார்த்து பல்லைக் கடித்த யுவா, அனைவரும் அட்சதை தூவ, அந்த மாங்கல்யத்தை மலர்விழியின் சங்குக் கழுத்தில் அணிவித்து…. அவளை தன்னின் சரி பாதியாக ஏற்றுக் கொண்டவனுக்கு… அவனையும் அறியாமல் அவனுள்ளே சிறு நிம்மதி பரவுவதை அவனாலேயே தடுக்க முடியவில்லை.
மாங்கல்யத்தின் மூன்று முடிச்சுக்களையும் அவள் கழுத்தில் தானே கட்டி முடித்தவன் மீண்டும் அவள் முகம் பார்க்க கலக்கத்திற்கு மத்தியிலும் அவள் வதனத்தில் படர்ந்த லேசான நிம்மதியையும்,
மகிழ்ச்சியையும் கண்டு ஏனோ எரிச்சலுற்றவன், மலர்விழியின் நெற்றி வகிட்டில் குங்குமமிடும் சமயம்…
“அப்பத்தாவ கைக்குள்ள போட்டுக்கிட்டு இந்த கல்யாணத்த நடத்திட்டா நா உன்ன ஏத்துக்குவேன்னு தப்பு கணக்குப் போட்றியா.? அன்னிக்கு நீ கொடுத்த எல்லாத்தையும் உனக்குத் திருப்பி கொடுக்காம, நா உன்ன சும்மா விடமாட்டேன் டி” என்று தன் தாடியடர்ந்த கண்ணத்தைத் தடவிய வண்ணம் பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்துத் துப்பியவனோ… இந்த திருமணத்திற்கான விருப்பமின்மையை அவளிடம் அப்பட்டமாக வெளிப்படுத்தினாலும்…
“மலருக்கு இந்த மெட்டிய போட்டு விடு ராசா” என்று அப்பத்தா கொடுத்த மெட்டியை வாங்கி அம்மி மிதித்து நின்ற மலரின் பொற்பாத விரல்களில் போட்டு விட்டு நிமிர்ந்தவனோ, தன் குடும்பத்தினர் மத்தியில் கோபமுகம் மறைத்து, அவர்கள் சொற்ப்படி அவளோடு இணைந்து திருமணச் சடங்குகள் அனைத்தையும் தட்டாமல் தான் செய்து முடித்தான் யுவராஜ்.
அந்த ஊரிலேயே பெரிய தனக்காரர் ஆன வேலுச்சாமி அய்யாவின் இளய பேரன் யுவராஜின் திருமணம்… மிக எளிமையாக அந்த அரண்மனை வீட்டிலேயே நடந்தேறியது, அவன் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது… அந்தக் குடும்பத்தின் மேலும் யுவராஜின் மேலும் மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்திருக்கும் ஊர் மக்களுக்கும் கூட சிறிது வருத்தமாகவே இருந்தாலும்.
இந்த எளிய திருமணத்திற்கான காரணத்தை கேட்டறிந்தவர்கள்….
பேரனின் திருமணம் இனிதே முடிவுற்றதில் உள்ளம் முழுவதும் குதூகலித்தாலும் அதை மறைத்துக்கொண்டு,வரவழைக்கப்பட்ட சோர்வோடு உலா வந்த நாச்சியம்மையை நலம் விசாரித்து விட்டு…
திருமணம் விமரிசையாக நடந்திருந்தால்… தங்களுக்கு புதுத் துணி,போனஸ் என்று என்னவெல்லாம் சலுகைகள் கிடைத்திருக்கக் கூடுமோ அதற்கெல்லாம் சற்றும் குறைவில்லாது இப்பொழுதும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தவர்கள் வாயெல்லாம் பற்களாக “நீடூழி வாழ்க” வென்று மணமக்களை வாழ்த்திவிட்டும் சென்றனர்.
முந்தைய நாள் மாலை நெஞ்சு வலி என்று நாச்சியம்மை செய்த ஆர்ப்பாட்டத்தில், அவருடைய ஆசைப்படி மறுநாளே யுவாவின் திருமணத்தை உறுதி செய்திருந்த அவன் குடும்பத்தினர் கிடைத்த குறைவான நேரத்திலும்… இரவு முழுவதும் உறங்காமல் கூட, திருமண ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து முடிக்க, திருமணச் சடங்குகள் அனைத்தும் ஒரு குறைவும் இல்லாமல் இனிதே நடந்தேறியது….
திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் நன்கு உபசரித்து அனுப்பி வைத்த வீட்டுப் பெரியவர்கள், மணமக்களை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று மலர்விழியை விளக்கேற்றச் சொல்லி விட்டு, அனைவரும் கடவுளையும் வணங்கினர்.
அவள் சிறு பிள்ளையிலிருந்து ஓடியாடி விளையாடிய வீடாக இருந்தாலும், அந்த அரண்மனை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவள் பாதம் பட்டிருந்தாலும் இன்று யுவராஜின் ராணியாக, தன் மனம் நிறைத்த மாமனின் மனையாளாக அவன் வீட்டுப் பூஜை அறையில் விழி மூடி நின்றிருந்த மலருக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக நடக்கவே நடக்காதோ என்றெண்ணிக் கலங்கிய தங்கள் திருமணம் இன்று நடந்தேறியதில்… அவளையும் அறியாமல் அவள் விழிகளிலிருந்து இரு துளிக் கண்ணீர் வெளியேற, ‘தானும் தன் மாமானும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்’ என்று அவள்… கடவுளிடம் மனதார வேண்டிக்கொள்ள… “உன் மாமனைப் பற்றித் தெரிந்திருந்தும் இப்படி ஒரு வேண்டுதலை வைக்கிறாயே பேதைப் பெண்ணே” என்று கடவுள் அவளைப் பார்த்துச் சிரித்தார்.
தன் எதிரில் கண் மூடி நின்றிருந்த மலரையே விழியெடுக்காது பார்த்திருந்த யுவாவுக்கு, அவன் கோபத்தையும் மீறி அவள் விழி நீரை துடைத்து விட கைகள் பரபரத்தாலும் அதை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவன். அதற்கும் அவளையே குற்றவாளியாக்கி அவளை பொசுக்குவது போல் பார்க்க…. அவன் பார்வை தாங்காது தலையை குனிந்து கொண்ட அந்தத் தாமரையாள்… வேறு யாரும் அல்ல…
யுவாவின் சொந்தத் தாய் மாமன் மகள். சிறு வயதிலிருந்தே யுவாவின் மனைவி என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவள். மாமன் மேல் மிகுந்த அன்பும் காதலும் கொண்டுள்ளவள்…
ஐந்தடி உயரத்தில் பாலும் சந்தனமும் கலந்த நிறமும், செதுக்கிய எழில் வளைவுகள் கொண்ட அளவான தேகமும், துறு துறு விழிகளும், கொழு கொழு கன்னங்களும், துடுக்குத் தனமாய் பேசும் அழகிய கொவ்வை இதழ்களும் கொண்டு காண்போர் மனதை கவர்ந்திழுக்கும் பத்தொன்பது வயதுப் பாவையவள். அவளுக்கு ஒரு தமக்கை காயத்ரி.
குழந்தைப் பருவத்திலேயே அன்னையை இழந்தவர்கள் தன் அப்பாவின் கண்டிப்பிலும், யுவாவின் அன்னையான அவர்களுடைய அத்தையின் கவனிப்பிலும், யுவாவுடைய அப்பத்தாவின் பாசத்திலும் வளர்ந்தவர்களில் வயதில் இரண்டு வருடம் மூத்தவளான காயத்ரி கொஞ்சம் பொறுப்போடு வளர்ந்திருக்க…
சிறியவள் அதற்கு நேர்மாறாய் கொஞ்சம் சுட்டியாக வளர்ந்திருந்தாள். படிப்பில் ஆர்வம் இல்லாதவள் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் போனதால் அதையே சாக்கிட்டு பள்ளிப் படிப்பைக்கூட முடித்திராத மலர்விழி பெயருக்கேற்றார் போல் அந்த மலரை விட மிக மெல்லிய மனம் படைத்தவள்…
தோன்றியதை யோசியாமல் பேசிவிட்டு பின் நாக்கை கடித்துக் கொள்ளும் கள்ளம் கபடமில்லா வெகுளிப் பெண்ணவள். அதுவே அவள் புறம் அனைவரையும் ஈர்க்க… அதில் அதிகமாகவே ஈர்கப்பட்டவன் யுவராஜ்… தன் மாமன் மகள் மேல் அளவில்லா நேசம் கொண்டுள்ளவன். ஆனால் அந்த வெகுளித்தனமும், துட்டுக்குத் தனமும் தான் அவர்களின் ஊடலுக்கும் காரணமோ?….
மணமக்கள் பூஜையறையில் இருந்து வெளியேறவும் அவர்களை அழைத்துச் சென்று முன்னறையில் அமர வைத்த நாச்சியம்மையோ…
“மீனாட்சி பிள்ளைங்களுக்கு பால் பழம் கொண்டு வா மா” என்று சற்றே உரத்த குரலில் உரைக்க…
‘நேற்று மாலை நெஞ்சுவலி என்று துடித்திருந்தவர் இவரா.?’ என்று அனைவரும் அவரை ஆச்சரியமாகப் பார்த்திருக்க….
மணமக்களின் அருகே வந்த நாச்சியோ “இந்தா ராசா… இந்த பாலையும் பழத்தயும் நீயும் மலரும் மாத்தி மாத்தி சாப்புடுங்க” என்று மகிழ்ச்சி வழியக் கூறி, தன் கையில் பால் பழத்தை வைத்த அப்பத்தாவை கூர்மையாக நோக்கிய யுவாவின் பார்வையை, எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்து கொண்டவர் லேசாக தன் நெஞ்சை நீவி விட்டுக் கொள்ளவும்…
‘இந்த அப்பத்தாவுக்குத் தன் மேலும் சிறிது நேரத்திற்கு முன்னால் தன் மனையாள் ஆகிப்போன மலர் மேலும் எவ்வளவு பாசம்’ என்று எண்ணிய யுவாவுக்கு… தன் அப்பத்தா நடிக்கிறார் என்பது புரிந்திருந்தாலும் அவர் மேல் சிறிதும் கோபம் எழாமல், அவர் அன்பை உணர்ந்தவனுக்கோ அவன் இதழ்க் கடையோரம் அழகான சிறு புன்னகையே விரிந்தது.
எது எப்படியோ எளிமையாக நடந்திருந்தாலும் தங்கள் வீட்டு யுவராஜனின் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தேறியது மட்டுமில்லாமல் அவன் தங்களை விட்டுத் தூர தேசம் போக மாட்டான் என்ற சந்தோசமும் அவன் குடும்பத்தினர் அனைவருக்கும் குதூகலத்தைத் தர… கலகலப்பாக பேசியபடி இரவு உணவை முடித்தவர்கள் மலரை அலங்காரம் செய்து அவர்களுக்கான சாந்தி முகூர்த்த அறைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த அரண்மனை வீட்டின் முடிசூடா ராணியாக வலம் வரும் நாச்சியம்மை…. மலரின் மேல் உள்ள கோபத்தால் இத்துணை மாதங்களாக அவளிடம் தன் பேரன் காட்டும் பாராமுகத்தையும், குடும்பத்தினர் என்ன முயன்றும் அவனின் திருமணத்திற்கு பிடி கொடுக்கா தன்மையும் கவனித்திருந்தவர், அவன் சில தினங்களுக்கு முன் கனடா செல்லப் போவதாக அறிவிக்கவும்…
‘இதுகல இப்டியே விட்டா சரிப்படாது’ என்றெண்ணி அவர் தகுதியெல்லாம் மறந்து அந்த வீட்டு சிறுசுகளின் உதவியோடு நெஞ்சு வலி என்று ஒரு நாடகத்தைப் போட்டு யுவராஜ் மலர்விழி திருமணத்தை நடத்தி முடித்திருந்தவர்… கலக்கம் சூழ்ந்த முகத்தோடு தன்னிடம் ஆசி பெற வந்த மலர்விழியை உச்சி முகர்ந்து…
“எதுக்குடா மலரு மொகத்த இப்டி வச்சிருக்க, இனிமே எல்லாம் நல்லத்தே நடக்கும், சந்தோசமாப் போத்தா” எனக் கூறி சாந்தி முகூர்த்த அறைக்கு அனுப்பி வைக்க…
அவளோ, ‘அட போ அப்பத்தா நீ இன்னும் உன் பேரன சரியா புரிஞ்சுக்கல… கனடா போகப்போறேன்னு நின்னவகல புடுச்சு வச்சு… நெஞ்சு வலின்னு பொய் சொல்லி அவசரமா கல்யாணத்த முடுச்சு வச்ச நீ விடாக்கண்டினா… உன் பேரன் விடாக்கண்டனுக்கெல்லாம் விடாக்கண்டன் மண மேடைலயே அந்தப் பேச்சு பேசுனாக… ரூமுக்குள்ள என்ன செய்ய காத்திருக்காகலோ?’
என்று மனதிற்குள் புலம்பியவாறு தன் அக்காவும், யுவாவின் அண்ணியுமான காயத்ரியின் கையைப் பற்றிக் கொண்டு, அடி மேல் அடி வைத்து, குனிந்த தலை நிமிராமல் யுவாவின் அறையை நோக்கி நடந்து சென்ற மலருக்கு… புதுமணப் பெண்ணிற்கே உரிய வெட்கமும், நாணமும் தோன்றுவதற்கு பதிலாக அவள் முகம் முழுதும் கலக்கமே சூழ்ந்திருக்க, அந்த கலக்கத்திற்குக் காரணமானவனோ அவன் அறையில் சாவதானமாக அமர்ந்து மடிக்கணினியில் ஆழ்ந்திருந்தான்.
யுவாவுடைய அறையின் அருகில் வந்தும் கூட உள்ளே செல்லும் எண்ணம் இல்லாது காயத்ரியின் கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்ட மலர்விழியோ “அக்கா” என்று தயங்க, தங்கையின் தலையை தடவிய காயத்ரியோ….
“என்னா மலரு.. யாரோ முகம் தெரியாதவர கட்டிக்கிட்ட மாறி உள்ள போக இவ்ளோ தயங்கற… யுவாமாமா உன்னோட மாமாதான இந்தக் கல்யாணம் உங்களோட சின்ன வயசுலயே முடிவு பண்ணதுதான இவ்ளோ நாள் மாமா, மாமான்னு அவுக பின்னாலயே சுத்துனவ இன்னிக்கு கல்யாணமாகவும் புதுசா வெக்கம் வந்துருச்சாக்கும்” என்று தங்கையின் மோவாயில் இடித்தவாறு அவளின் தயக்கத்தை புதுமணப் பெண்ணிற்குரிய வெட்கம் என்று நினைத்து அவள் போக்கில் பேசிக் கொண்டே சென்றவள்…
“ம்ம் உள்ள போடி உன் மாமா உனக்காக காத்துட்ருப்பாரு” என்று யுவாவின் அறைக் கதவை திறந்து மலரைத் தள்ளி விட்டாள்.
இந்தத் திருமணம் தங்களின் சிறுவயதிலிருந்தே பேசப்பட்ட திருமணமானாலும் பருவமெய்திய நாளிலிருந்து இந்த நாளை எண்ணி பல இன்பக் கனவுகள் கண்டிருந்தாலும்… ஒன்றரை வருடத்திற்க்கு முன்னால் நடந்த நிகழ்வால், தங்களுக்குள் இருக்கும் இப்போதய மனஸ்தாபம் இந்த திருமண நாளின் எதிர்பார்ப்பை எல்லாம் தகர்த்தெரிந்திருக்க தன் மாமனைப் பற்றி நன்கு அறிந்தவள்… ஒரு சிங்கத்தின் குகைக்குள் கால் வைக்கும் மனநிலையோடு தங்கள் அறைக்குள் அடி எடுத்து வைத்தாள் மலர்விழி.